Saturday, 20 June 2020

இசையோடு வாழ்பவன் -7


41,
பூவரசின் நிழல்
நீள்சதுர மரபெஞ்சு
தினத்தந்தி பேப்பர்
எப்போதும் கிடைக்கின்ற
சூடான உளுந்துவடை
வீட்டிலே இருப்பதுபோல்
எவர்சில்வர் டம்ளர்கள்
பார்க்கும் தொலைவில்
இருக்கின்ற ஒயின்ஷாப்
பார்க்கத் திகட்டாத
குடித்தவனின் உடல்மொழிகள்
மட்டுமல்ல காரணங்கள்
அறியாயா என்ன
மறைப்பதுதான் கவிதையென.

42,                          நெட்வொர்க்

ஊஞ்சமரத்தடி கிளுவைவாதில்
பிரஷர்குக்கரின் கேஷ்கட் ரப்பரில்
இருமுனைகளும் கோர்க்கப்பட்டு
ஒரு நுகத்தடி தொங்கியபடியேயிருக்கிறது
காலையிளம்பொழுதில் ஒரு
அணிற்பிள்ளையும் ஓணானும்
கொன்னவாய்க் குருவியொன்றும்
அந்நுகத்தடிமேல் அமர்ந்திருக்க
நான் கேட்டேன்
ஓ அணிலே
ஓ ஓணானே
ஓ கொன்னவாய்க்குருவியே
அந்நுகத்தடியைப்பற்றி
உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்
அது என் அப்பாரைய்யன்
கண்ணாலம் முடிந்து தனிப்பண்ணையம்
போடத் துவங்கிய காலத்தில்
கிழக்குவேலி நடுவேப்பனைவெட்டி
செய்த நுகமாக்கும்
அப்பத்தா அப்போது
என் தந்தையை சூழ்கொண்டிருந்தாள்
இவ்விரவின் இக்கணத்தில்
தறிக்குடோன் பந்தலின்
வெளிவிளக்கு வெளிச்சத்தில்
மெளனமாக மினுங்கும் நுகத்தடி கேட்கிறது
அந்த அணிலும்
அந்த ஓணானும்
அந்த கொன்னவாய்க்குருவியும்
ஏன்
உன் அப்பாரைய்யனாகவும்
உன் அப்பத்தாவாகவும்
உன் அப்பாவாகவும்
இருக்கக் கூடாது.

43,                        கே பி யின் நாயகி
இட்லிதோசை மாவுப்பெட்டியை
மொபட்டின் பின்புறம் வைத்தபடி
மூலை முடுக்கெல்லாம்
இண்டு இடுக்கெல்லாம்
தென்பட்டவண்ணமிருந்த அவளுக்கு
பாலசந்தரின் கதாநாயகி எனப்பெயர் வைத்தான்
அவளுக்கோர் அப்பாவை
கற்பனை செய்தவன் அவரை
பொறுப்பற்ற குடிகாரர் ஆக்கினான்
அம்மாவோ நிரந்தர நோயாளி
கஷ்டம் தெரியாத தம்பி
கல்லூரிக்குப் போக
விபரம் புரியாத தங்கை
பள்ளியிறுதி பயில்கிறாள்
அக்காவின் துறுதுறு குழந்தைதான்
ஒரே ஆறுதல்
எதிர்வரும் போதெல்லாம்
இளையராஜாவின் இசையில்
யேசுதாஸைப் பாடவைத்தவன்
அரிசிக்குருணைகளை சப்ளை செய்யும்
ரைஸ்மில் கணக்குப்பிள்ளைக்கு
அவள்மீது கண் என்றான்
நெகிழியுறைகளைத் தருவித்துத் தரும்
மொத்த வியபாரியின்மீது
அவளுக்கு ஒரு இதுவாம்
சிகரெட் ஊதி பாக்கை மென்று
நின்றபடியிருந்த தெற்குப்பார்த்த கடைக்கு
மாவுப் பொட்டலங்களைப் போட வந்தவள்
ஏதோ தோன்றியவளாக ஒரு கணம் நோக்கினாள்
பிறகுயிவன் யோசிக்கத் துவங்கினான்
கணக்குப்பிள்ளையையும்
மொத்த வியபாரியையும்
யாது செய்யலாமென.

44,                        அக்ரிலோன்

மொளகா மோசமில்ல
ஒரு ஏக்கர் வெச்சுருக்கேன்
வெலையும் நல்ல வெலை
காப்பும் பெருங்காப்பு
அடகு நகையெல்லாம்
அவளுக்கு மீட்கணுமாம்
பையன் புடுங்காளி
பைக் வாங்கி ஓட்டணுமாம்
நகைநட்டு வேணாமாம்
ஸ்கூட்டியும் வேண்டாமாம்
எம்பொண்ணு மவராசி
மேல படிக்கணுமாம்
நாலுநீர்க்கால் குத்தும் மட்டம்
புற்றுப்பக்கம் இருக்கிறது
தோண்டித்தான் பார்ப்போமென
எனக்குமுண்டு உட்கிடக்கை

அப்புறம் பேங் ஆபீஸர்
வேகாத வெயிலில்
வீடுதேடி வந்துட்டீங்க
எளநி போட்டுத்தாரேன்
குடிச்சுப்போட்டு போறீங்களா.

45,                       ஆங்…

எல்லா தலைகளுக்கு மேலும்
வண்ணத்துப்பூச்சிகள் பறக்கிறது
அனைத்து தெருக்களிலும்
வெறிநாய்கள் திரிகின்றன
வண்ணத்துப்பூச்சிகளால் வருடப்படுவதும்
வெறிநாய்களால் குதறப்படுவதும்
யாவருக்கும் நடக்கும்
ஒன்றுபோல இருக்காது
கைரேகையைப்போல.



46,                        s/o நாச்சிமுத்து

கிளுவைவேலிகள் மருங்கமைந்த தார்ச்சாலை
கிழக்கேபோய் வடக்கே திரும்பும் வளைவில்
தென்புறமாய் அவ்விடுகாடு இருக்கிறது
கல்லறைக் கட்டுமானங்கள் மூன்றும்
உற்றுப்பார்த்தால் சில மண்மேடுகளும்
பார்வைக்குப் புலனாகும் அவ்விடத்திற்கு மேபுறமாய்
முன்னொரு காலத்தில் அண்ணாச்சி கடை இருந்தது
மளிகைச்சாமான்களோடு தேநீர் வடை பஜ்ஜிகளும்
கிடைத்த அக்கடையில் இருசக்கர வாகனங்களுக்கு
பஞ்சரும் ஒட்டப்பட்டது
பின்பொருநாள் அங்கே கீற்றுவேய்ந்த
சிகையலங்கார நிலையமும் உதயமாகி
இளையராஜாவின் பாடல்களாகப் பாடியது
மீண்டுமங்கே புல்முளைத்து எருக்குகளும் முளைத்து
சிதந்த சலூன் நாற்காலி மட்டும்
பகலிரவுகளைச் சுமந்தபடி எப்போதும் நிற்கிறது
வளைவில் திரும்பிய கணம்
சுண்ணாம்பு பூசி பளிச்சிட்ட கல்லறையில்
வாசிக்க வாய்த்தது
நாச்சிமுத்து மகன் சின்னச்சாமியின்
தோற்றமும் மறைவும்
சிதைந்த நாற்காலியின் தூசியைத் துடைத்து அதில்
நாச்சிமுத்து மகன் சின்னச்சாமியை அமரவைத்தேன்
பிறகு சின்னச்சாமி கேட்டான்
நீ பாட்டுக்கு உக்கார வெச்சுட்டுப் போறே
இளையராஜா பாட்ட உங்கப்பனா போடுவான்.

47,                    மனமுருட்டி

இதற்குமுன் இவ்விடத்தில் அமர்ந்திருந்தவர்
காசுள்ளவராகவோ காசு பற்றிய கவலையில்லாதவராகவோ
இருக்கவேண்டும்
நசுக்கப்பட்டுக் கிடக்கும் சிகரெட்துண்டு அவ்வளவு நீளம்
பார்க்கத் திகட்டாத இவ்வுதயம்
இதேநிலத்தின் வேறுதிசை ஆளுக்கு
காணக் கண் அவிக்கும்
உச்சிப்பொழுதாகவும் இருக்கலாம்தானே
பொற்குடம்தாங்கி தங்க நாணயங்களைச் சொரியும்
மகாலட்சுமியின்மேல் சிறுநீர்பெய்த பாவம்
என்னைச் சேருமா
சேமியா கம்பனிக்காரனைச் சேருமா
அல்லது சேமியாவைத்தின்றுவிட்டு உறையை
காற்றில் விட்டவனையா
பற்றவைத்த பீடியை புகைத்து முடிப்பதற்குள்
ஏதேதோ யோசனைகள் வந்து போய்விடுகிறது
போலவே ஏதேதோ நிகழவுகளும்
துவங்கி முடிந்து விடுகிறது
குத்தாரிப் பீ முழுதும்
உணவுருண்டைகளாக உருமாறி
உருண்டு உருண்டு நகர்வது உட்பட.

48,                வேற்றுத்தொழில்வைப்பணி

அப்பாவின் இறுதி ஊர்வலத்தில்
தலைவாசலோடு
தடுத்து நிறுத்தப் பட்டவள்
பிறகொரு வெயில்நாளில் கணவனை வேலைக்கும்
பிள்ளைகளை பள்ளிக்கும் அனுப்பி வைத்துவிட்டு
தாய்வீடு வந்திருந்தாள்
பேசியளாவி சமைத்துச்சாப்பிட்டு
உறங்கியெழுந்தவள்
ஆடுகளுக்குப் புல் அறுக்கும்பொருட்டு
இடுகாட்டு கரைவெளிக்குப்
போய்வருவதாகக் கூறினாள்
போய்வா என்றாள் அம்மா
ஆடுகளுக்கான புல் இடுகாட்டுக்கரைவெளியில்
இருக்காது எனத் தெரிந்தும்.

49,
சாய்ந்து அழ
தோள் எதற்கு
விழுந்து புரள
நிலம் இருக்கு

50,

எங்கே போகினும்
இதே நிலம்தான்
யாரைப் பார்ப்பினும்
இதே மனம்தான்

51,
பிறகந்த ஓணான் கூறியது
என் இணையை துரத்திக்கொண்டு வந்தேன்
கண்மண் தெரியாத துரத்தலில்
உன் வாகனத்தின் சக்கரங்களில்
சிக்கிக் கொண்டேன்
சாவதற்குமுன் கட்டக்கடைசியாய்
மேலுமது கூறியது
நாமோ குருடர்
வாழ்வோ யானை

52,
எல்லா வகைகளிலும்
தோற்றுப் போனவன்
தன் ஆசிரியரைக் காணநேர்வது
கொடுமையானது
எல்லா வகைகளிலும்
தோற்ற மனிதனாக
தன் மாணவனொருவனைக்
காண நேருதலேபோல


53,
பருகிய கரும்புச்சாறுக்கு
சுருக்குப்பை அவிழ்த்து
தேடிக் கொடுத்த பணம்
போதாமல் போனது
முதலாளி அறியாமல்
அவசரமாய் வாங்கி
கல்லாவில் போட்டபடி
சீக்கிரமாய் போகச்சொன்னான்
யாரோ ஒருத்தியின் மகன்
யாரோ ஒருவனின் அம்மாவை

54,                  
திருப்புளியோ ஸ்பேனரோ
எடுத்ததை எடுத்தயிடத்தில்
வைக்காவிட்டாலும்
கட்டுத்தரைச் சாணியை
கையிலே அள்ளாமல்
காலால் ஒதுக்கினாலும்
காற்றுக்குறைந்த சைக்கிளை
அப்படியே ஓட்டும்போதும்
சவரம்செய்து குளிக்காமல்
கால்செருப்பைக் கழட்டாமல்
தறிக்குடோனுக்குள் வந்துவிட்டாலும்
சின்னச்சின்ன விஷயங்கள்தான்
போதுமானதாயிருந்தது
தோளுக்குமேலே வளர்ந்துவிட்டவனை
அடக்கமுடியாத இயலாமையில்
குமுறுவாய்
எனக்கப்பறம் என்ன கதிக்கு
ஆளாகறேனு பார்ரா
எப்படியோ நீயும்
போய்ச் சேர்ந்துவிட்டாய்
இனி நான்
என்ன கதிக்கு ஆளானால்தான் என்ன
என் அப்பாவே


55,
கிடாய்களும் ஈத்தாடுகளும் பிரவைகளும்
வரிசைகட்டி
நிறுத்தப் பட்டிருக்கும் ஆட்டுச் சந்தையில்
வாயெல்லாம் ஈமொய்க்க ஊட்டக்குட்டியொன்று
செத்துக் கிடக்கிறது இந்த நிலத்தால்
தாங்கவே முடியாத பாரமாய்


56,

கொக்காணி காட்டுகிறது எனும்
நம்பிக்கையிலிருந்து
அதன் இரையைக் கவ்வ ஆயத்தமாகிறது
எனும் உண்மைக்கு வருவதற்குள்
கொன்றே விடுகிறோம்
ஓணானை


57,

கீகாத்து வீசுகிறது
மின்னுற்பத்திக் காற்றாடி
கிழக்கே திரும்பிச்
சுற்றுகிறது
வேப்பங் கிளையமர்ந்திருக்கும்
ஒற்றைக் காகம்
கரைகிறது
தட்டுப்போர்ப்பட்டறையின்
கிடைமரமொட்டி வளர்ந்திருக்கும்
குப்பைமேனிச்செடி
வெயிலில் மகிழ்கிறது
பூலான்மார் கொடாப்பினுள்
கருங்கோழி
அடைகிடக்கிறது
யாரும் பாடவில்லை
என்றாலும் யாரோ
பாடுவது போலவே இருக்கிறது
கனவுகளும் துக்கம்
நினைவுகளும் துக்கம்
நிகழ்வதுவே சொர்க்கம்


58,


போர்வைக்குச் சிக்காத வலதுகாலின் பெருவிரல்மேல்
கவிழ்ந்திருக்கிறது வானம்
அடிநின்று அண்ணாந்து நோக்கின்
விரலுச்சி மேவியிருப்பது
ஆகாயமல்லாது வேறென்ன
நெய்யில் ஒட்டியிருந்ததோ
பிய்யில் ஒட்டியிருந்ததோ
இப்பொழுது விரல்முனை ஒட்டுவதும் பறப்பதுமாக இருக்கிறது ஈ
விசிலொலிக்கு கட்டுப்பட்ட பேருந்து
நகரத் தொடங்கிய கணத்தில்
ஈ யின் சுற்றுக்கொப்ப அசையத் துவங்கியிருந்தது விரல்
உடுக்கைக்கு அசைந்தாடும்
பரமசிவமே போல.


59,

கொழுக்கட்டாம் புற்களின்
தூர்களுக்கு நடுவே
கருஈரமாகவும் பாசி படர்ந்துமிருந்தது
மழைக்காலத்தின் நிலம்
வேப்பங்கொத்தை இணுங்கி
பல்லுக்குச்சியை ஒடித்து
துத்திச்செடிகள் மண்டிய மண்மேட்டைக் கடக்கையில்
பற்குச்சி நழுவி வங்கிற்குள் போய் விழுந்தது
கண்ணுக்கெட்டிய ஆழத்தே
சிக்கியிருந்த அதனை குனிந்தெடுக்க முயற்சிக்க
அதற்கும்கீழாழத்தே
மண்டலம்போட்டு படுத்திருந்தது அது
பின் கொத்தத் துவங்கிற்று
பாம்பின் தனிமை


60,

மும்முறை அழைக்கப்பட்ட அவள்
அசோகமரத்து நிழலிலிருந்து வெளிப்பட்டாள்
வெள்ளை வேடிகளையும்
கருப்புச் சட்டைகளையும்
காக்கித் தொப்பிகளையும்
கடந்து உள்ளேபோய் சுவரோரமாக நின்றாள்
பெயரை உறுதிப்படுத்திக்கொண்ட மாஜிஸ்திரேட்
வாய்தாவை அறிவித்து ஆஜராக ஆணையிட்டார்
கையெழுத்திட்டுத் திரும்பியவள் மேல் பார்வைகள் மொய்த்து
பொதுமையானதொரு கேள்வியை வினவ
என்னவாக இருக்கும்
கண்டுபிடியுங்களேன் எனும் விதமாய்
நடை நடந்து போன அவள்
பூவரசுவின் நிழல் நிற்கும் மகிழுந்துவில் அமர்ந்து
அறைந்து சாத்தினாள்
கதவை.


61,

ஐந்தே நிமிடங்களில்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் கிடைக்குமென
எழுதப்பட்ட வாசகங்களுக்குக் கீழே
நான்கு புகைப்படங்களிலும் இருக்கின்ற பெண்
உன்னைப் போலவே இருக்கின்றாள்
நீயேதானோ என்னவோ


62,

இளையராஜாவின் பாடல்களைக் கேட்பது
இடையழகி சிம்ரனின் நடனங்களைப் பார்ப்பது
ஏகாந்த வேளைகளில் சோமரசமுண்டாடுவது என
இயற்கை உனக்களித்த வாய்ப்புகளும்
செளகரியங்களும் அதற்கில்லை
ஆனபோதிலும் நீ மகிழ்ச்சிமிகு உயிரல்ல
அவ்வோணானை விடவும்


63,

விபூதியும் சந்தனமும்
குங்குமமும் துலங்க
மஞ்சள் சட்டையும் பச்சை வேட்டியுமாய் வந்து
நோட்டுப் புத்தகம் விரித்து பேனாவை நீட்ட
நினைவு படுத்தினேன்
முன்பொருகாலை இதே விதமாய்
வந்த அன்று மதியம் பிராந்திக் கடையில் சந்தித்துக் கொண்டதை
நோட்டுப் புத்தகம் மூடி
பேனாவை உள்ளிழுத்து பேசாது திரும்புகிறான்
பத்து ரூபாய்க்கும்கூட
ஏமாற்றத் தெரியாத அப்பாவியாய்.


64,

திருமண மண்டபமெங்கும் ஜொலிக்கும்
பகட்டான விளக்குகளின்
வெளிச்சங்களெட்டாத இருளிலே நின்று
புகைத்தாற்றும் பொருட்டு ஐந்து சிகரெட்டுகளோடு
அமர்ந்திருக்கிறான்
வலிய நுரையீரல்களும் எளிய இதயமும்
கொண்ட ஒருவன்
வரவேண்டிய நீ
வந்துபோவதுதான்
பாக்கி.

65,

கேஆர் விஜயாவுக்கும் சிவாஜிக்கும் பின்னால்
மேகக் கூட்டங்கள் மிதக்கின்றன
கரிய பறவையொன்று பறந்து போகிறது
அவர்களின் கால்களைத் தழுவியபடி
சிற்றோடையொன்று நெளிந்து போகிறது
முற்பகலோ பிற்பகலோ
நிழல்கள் நீளமானதாக இருக்கின்றன

அந்த மேகக்கூட்டம்
எங்கே பொழிந்திருக்கும்
கரிய பறவை
எப்படிச் செத்திருக்கும்
நெளிந்தோடிய தண்ணீரின் கதி

அதே நிலத்தின்மிசை
அதே வடிவங்கொண்ட நிழல்களினி
சாத்தியம்தானா
இப்போது ஏன் அழுகை வருகிறது
பெருங்கொண்ட மகிழ்ச்சியோடு.

No comments: