Saturday, 13 June 2020

இசையோடு வாழ்பவன் -1


1,                                                      குறையொன்றுமில்லை

வழக்கம்போல் இம்முறையும்
வானம் பொய்த்திருக்கும்
இருக்கும் தண்ணிக்கு வெச்சுள்ள கத்தரியில்
இலைச்சுருட்டை விழுந்திருக்கும்

நிலவள வங்கியின் நகைஏல அறிவிப்பு
தபால் கார்டில் வந்து சேரும்
காதுகுத்தும் பிள்ளைக்கு தோடுபோட வேண்டுமென
இளைய தங்கை சொல்லிப்போவாள்

முகம்கண்ட மறுகணமே
அம்மாவென குரலெழுப்பும் காளைகளை
விற்றுவிட்டு ஊர்திரும்புவாய்

நீ விரும்பிய பெண்
தான்விரும்பும் புருசனுடன்
பஸ் ஸ்டேண்டில் எதிர்படுவாள்


திரும்பி நிற்கும் உன்னிடத்தே
வலியவந்து உரையாடி
செளக்கியமா எனக்கேட்பாள்

நல்ல செளக்கியம் என்று சொல்.

                           ஆனந்த விகடன் – 07-07-2002.



2,                      இசையோடு வாழ்பவன்

நாளின் புதிய பொழுது
டிஆரின் பழைய பாடல்களோடு
விடியத் துவங்கும் பூபதிக்கு

வைகைக்கரை காற்றும்
வாசமில்லா மலரும்
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரியும்
நினைவுஅட்டை சமேத கைப்பேசியில் ஒலிக்க

காலைக் கடன் முடித்து
குளித்து உணவருந்தி
வீட்டை விட்டு புறப்படுவான்

வருமானம் தரும் ஊரை வடக்கிலும்
வலிதரும் ஊரை தெற்கிலும்
கண்டடைந்திருக்கும் அவன்

பஸ் நிறுத்தம் போய்ச் சேருகையில்
நூலுமில்லை வாலுமில்லை என
உயிரின் ஓலமேபோல டிஎம்எஸ் கதறத் துவங்குவார்

இனி அவன் வடக்கேகுவதும்
தெற்கேகுவதும்

முதலில் வரும் பேருந்தைப் பொறுத்தது.

                       -ஆனந்த விகடன் - 2014 



 3,                     கடவுளின் காதலி..

ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒற்றையாய் நிற்கும் அவ்வீட்டில்
ஜீவிக்கிறாள் கடவுளின் காதலி
அங்கன்வாடியில் பணிபுரியுமவள்
வீடு திரும்பியபின் மீதிப்பொழுதுகளை
தனிமையிலும் தனிமையுடனும் கழிக்கிறாள்

ஏசுபடமும் ஏற்பாட்டின் வசனங்களும்
காணக் காட்சிதரும் அவளுடைய வீட்டிற்கு
மலங்கிளுவைகள் கொண்டமைத்த
வேலியொன்றும் இருக்கிறது

மாதங்களின் இடைவெளியில்
சிலிண்டர்காரனும் மின் கணக்கீட்டாளனும்
எப்போதாவது கடவுளும்
வந்துபோகும் அவ்வீட்டிற்கு நானும் சென்றிருந்தேன்
மூவரும் வாராத ஒரு மழை நேரத்தில்



நனைந்த மலங்கிளுவையிலைகள்
அந்தியில் ஒளிர்ந்து நீரைச்சொட்ட
பாலில்லாத தேநீரைப் பருகத் தந்தவள்
தன் கதையைக் கூறினாள்

மேனிலை படிக்கையில் காதலில் தோற்றது
அக்காளைக் கொண்டவனே
தன்னையும் கொண்டது
குழந்தை உண்டானதும் நிர்கதி சூழ்ந்தது
என்றெல்லாம் சொல்லிச் சென்றவள்
கூப்பிட்டால் கேட்காத தூரத்தில் ஊரும்
தகவல் தந்தவுடன் வரவியலா
நெடுந்தொலைவில் மகளும் இருக்க
காலத்தின்வேர் தனை முழுதுமாய் உறிஞ்சித் தீர்க்கும்
அத்தருணம் எவ்விதம் அமையுமோ என வினவினாள்
காலிக் கோப்பையை கீழே வைத்தேன்
சிலிண்டர்காரனும்
மின் கணக்கீட்டாளனும்
கடவுளும்

என்ன சொல்லியிருப்பார்கள்?.         –ஆனந்த விகடன் 2014 

4,               கதைசொல்லியின் கதை…

தாயின் ஊருக்கு சென்றுவந்த
முந்தைய நாட்களைப் போலவே
மகளின் ஊருக்குப் போய் திரும்பும்
இன்றைய நாட்களும்
ஒரு கதைசொல்லி ஆக்கிவிடுகிறது
அம்மாவை

சற்றே மிகைப்படுத்தலும் பெருமிதமுமான
வார்த்தைகளில்
பயணானுபவங்கள் கதைபோல் மலர
நேரம் குறித்தான பிரக்ஞையற்றுக் கேட்பார்கள்
உடன் களையெடுக்கும் பெண்கள்

வெகுநேரம் கழித்துவந்த 12ஏ பேருந்தும்
பரமசிவன் படமெடுத்துக் கொடுத்த சோசியக் கிளியும்
ஒரு கண்ணில் பூ விழுந்த நடைபாதை வியபாரியும்
காட்சிகளாய் விரிய தொடர்ந்தபடியேயிருக்கும் கதை
மேலும் சுவராசியமாய்

சீட்டுச் சேர்த்த பணத்தில் அக்கா
மாவரைப்பான் வாங்கியிருப்பாள்
சீதனமாய் போன பசு
கிடாரிக் கன்றை ஈன்றிருக்கும்
சஷ்டி விரதம்பூண்டு பழனிக்குப் போகிறார்கள்
மாமனார் மாமியார் பரவாயில்லை
கொழுந்தனுக்கு மில்வேலை
பெண்தேடி வருகிறார்கள்
என்றெல்லாம் போகும் கதை சட்டென்று நின்றுவிடும்

சூழ்ந்த நிசப்தத்தில்
துணுக்குற்ற பெண்கள் தலைநிமிர்ந்து பார்க்க
அழுது கொண்டிருப்பாள் அம்மா

ஞாபகத்திற்கு வந்திருக்கும்
வரும்வழியில் கண்ட
தலைப்பேரனின்

சின்னஞ்சிறு குழிமேடு.                          –தூறல்-2008


5 ,                மழபேஞ்ச காத்தால….

செந்தண்ணீர் தேங்கிய
ஊர்க்குளத்திலும் பள்ளங்களிலிமிருந்தும்
ஓயாது வரும் தவளைகளின் சத்தம்
சேவல்களையும் முந்திக்கொண்டு
எழுப்பிவிடும்

எச்சரிக்கையாய் எடுத்து வைத்திருந்தும்
சாரல்பட்டு ஈரமான விறகு
எரிய மறுத்து புகையும்
எரிச்சலுறும் அம்மா சீமெண்ணையையூற்றி
பற்ற வைப்பாள் அடுப்பை

விதை மஞ்சட்சோளம் நரிப்பயிரை நனைத்து
மூட்டையாகக் கட்டிக்கொண்டு
தோட்டம் கிளம்புவார் அப்பா
கூடவேபோகும் மூத்தவன் சாணியள்ளிக் கொட்டி
பின் கறந்து தரும் பாலைப் பெற்று
வீடுவந்து சேருவான் பளிச்சென்று விடிந்திருக்க

ஒத்தையேருக்கும் வக்கில்லா நொடிஞ்ச குடியானவனும்
மாடுபூட்டி உழுது மாளா பரவடி பண்ணையகாரனும்
டிராக்டரைத் தேடி பஸ்நிறுத்தம் போவார்கள்
சாப்பாட்டுக் கூடையுடன் விதைப்பு விழும் காட்டிற்கு
அவசரமாய் கிளப்பிச் செல்வாள் அம்மா

தேங்காய் சிரட்டையினுள் மழையீரமண் நிரப்பி
இட்டிலிகள் சுட்டும் கோழிக்கூடு கட்டியும்
உயிரும் உறுப்பும் பெற்ற குங்குமத் திலகமெனத் திரியும்
பாப்பாத்திப் பூச்சிகளை சேகரித்தும்
வேலாமரம் மலிந்த சரளைக் காடுகளில்
செம்பொன்வண்டுகளைத் துரத்தியும்
போனவருடம் காளான்கள் புடைத்திருந்த
புற்றுகளைப் போய் பார்ப்பதுமாய்
நிற்க நேரமிருக்காது பொடியான்களுக்கு
சனி ஞாயிறாகயிருந்து
பள்ளியும் விடுமுறையெனில்




கோடையின் கடைசிப் பகல் முடிந்து
பருவத்தின் முதல்மழையும்
பெய்துவிட்டதற்குப் பின் விடியும்
காலைப்பொழுதில்
வாழ்ந்த சலுப்பில் வாசல்திண்னையுடன்
முடங்கிய பாட்டன்களும் எழுந்து நடமாடியபடி
நடுவீதி ஆட்டுரலில் தேங்கிய நீரைவைத்து
அளவு கணக்கிட்டு ஆருடம் சொல்லிக் கொண்டிருக்க

பற்றவைத்த பீடியை புகைக்கவும் தோணாமல்
வெறுமனே சூனியம் வெறித்துக் கொண்டிருப்பான்
ஊரின் எல்லையில்

சூளைபோட்டு செங்கல் அறுக்கும் அவன்.           –கணையாழி 2005.  
                                               

                     





No comments: