26, உதிர்காலம்
அம்மாவின் ஊரிலிருந்து அத்தையின்
ஊருக்கு
கூப்பிடு தூரம்தான்
அப்பச்சியூரில் தூங்கியெழுந்து
அத்தையின் வீடுபோய் உணவு உண்டதும்
அத்தையின் தோட்டக் கிணற்றில் குளித்து
முடித்து
அப்பச்சியின் வீடுவந்து உடை மாற்றியதும்
பள்ளிப்பிராயத்தின் விடுமுறைநாள்
அனுபவங்கள்
நோன்புநொடி நலம்பொலமென
போய்வரக் காரணங்கள் எப்போதுமிருந்தன
சிலநேரங்களில் அப்பச்சியூர் போய்விட்டு
அத்தையூர் போகாமலேயே வந்துவிடும்
அம்மா
ஒருபோதும் அத்தையினூருக்குச் சென்றுவிட்டு
அப்பச்சியினூருக்கும் போகாமல்
திரும்பியதில்லை
அப்பச்சியின் காலத்துக்குப்பின்
மாமன்கள் நகரம் பெயர்ந்துவிட
அம்மாவின் ஊருக்கான வழித்தடங்களில்
புல் முளைக்கத் துவங்கிற்று
என்றாலும் அத்தையின் ஊருக்குப்
போகும் அம்மா
தான்பிறந்த நிலத்தையும்
கண்டுவிட்டே திரும்பிக் கொண்டிருந்தாள்
ஒன்றுவிட்ட அப்புச்சிமார் வீடுகளின்
திண்ணையமர்ந்து
காபி தேநீர் அல்லது மோரோ அருந்தியபடி
சற்றேயமர்ந்துவிட்டு வருவாள்
கூரைசரிந்து காரைபெயர்ந்த அப்புச்சியின்
வீட்டை
கண்கள் வெறித்திருக்க
அதேவேலையாக கடந்துபோகும் சாலையை
கடக்க முடியாமல் தோற்றுப்போன அப்பாவை
எடுத்துக்கொண்டுபோய் எரியூட்டிவந்த
பிற்பாடு
அம்மா எங்குமே போவதில்லை
நேற்று திடீரென கூறினாள்
இந்த ஒரு வருசத்துல அத்தை
எத்தனையோதரம் வந்துட்டுப் போயிட்டா
நாமளும் ஒருநடையாவது
போயிட்டு வந்துரலாம்
விருந்து உபசாரங்கள் முடிந்து
விடைபெற்றுத் திரும்புகையில்
அப்பச்சியின் ஊருக்கான தடம் வந்ததும்
நினைத்தேன்
அம்மாவாகச் சொல்லும் பட்சத்தில்
அங்கேயும் போகலாம்
அம்மா கூறினாள்
நேரா நம்மூருக்கே போ.
27,
யாருமற்றவனின் உலகில்
எல்லோரும் இருக்கிறார்கள்
கொம்புகளோடு
28,
இதுவொன்றும் ராஜபாட்டை
அல்லதான்
அதனாலென்ன
இந்த பாட்டைக்கு
நான்தான் ராஜா.
29,
வெறும் வெளியி சிறு கால்கள்
பிடிமானங்களை
தேடித் தவிக்க
மல்லாந்து கிடந்தது
நிலைதிரும்ப உதவினேன்
சற்று நேரத்தில்
கருகும் வாசனை
30,
உட்சிவந்த பிஞ்சு அலகை
திறப்பதும் பின் மூடுவதுமாய்
எறும்புகள் மொய்க்கக் கிடக்கிறது
சற்று நேரத்தில்
செத்துவிடும்தான்
சற்றுநேரம் ஏன்
யுகநீளம் நீள்கிறது.
31,
மேல் ஏறி சிகரம் தொட
மூட்டுவலி முடியாது
சாய்ந்தமர்ந்து அலங்கரிக்க
நாற்காலி கிடைக்காது
குதிரையில் போய் நின்றாலும்
சம்யுக்தை வரமாட்டாள்
போய்
சேர்ந்து விடலாம்தான்
பிறகிந்த பகலிரவுகளையெல்லாம்
யார் பரிபாலிப்பது.
32,
சிறு செடியின்
கிளையளாவும் ஆகாயமும்
அண்ணாந்து பார்க்கும்
உயரமுடையதுதான்
அண்ணாந்து பார்க்க
தெரிந்திருக்க வேண்டும்.
33,
ரத்தம் உறைந்த தலைக்காயங்களுடன்
உள் அணைய அஞ்சி
கொடாப்பையே சுற்றிச்சுற்றி வரும்
இளஞ்சேவற்குஞ்சை
தனியாகவோர் கூடையில் அடைத்தவன்
கூறினான்
வலிமையும் எளிமையும்
சந்திக்கும் புள்ளியில்
கடவுளும் சாத்தானும்
உற்பத்தியாகின்றனர்.
34,
இழவு வீட்டில்
எதேச்சையாகச் சந்தித்துக்கொண்ட
நம் கண்களில் ஊற்றெடுத்த துயரம்
செத்துப் போனவருக்கானதல்ல.
35,
திருவிழா பதாகையின் பின்புலத்தில்
திடீரென பிரசன்னமாகிய நீ
வலதுபாதம் நிலம் ஊன்றி
பார்வையை சுழல விடுகிறாய்
தலைகிரீடம் இறக்கி வைத்து
தோள்கிளியை பறக்க விடுத்து
உன்போலவே பதாகை மாரியம்மனும்
உருமாறத் துவங்கிய கணத்தில்
சட்டென பிரதானசாலைப் புகுந்து
எதிர்திசை விரைகிறாய்
வந்துகொண்டும் போய்க்கொண்டுமிருக்கும்
வாகனங்களையெல்லாம் மறைக்கிறது
நீல வண்ணத்து ஸ்கூட்டி.
36,
இரவு உணவை உட்கொண்டுவிட்டு
குறுக்கிமொடக்கி படுத்திருக்கும்
நீயும்
புகைத்தபடி அமர்ந்திருக்கும் நானும்
வாசலென அறியுமிந்த நிலம்
இதுபோல எத்தனை இரவுகளை
பார்த்திருக்கும்
இன்றைய பகலேபோல எத்தனை
பகற்பொழுதுகளையும் பார்த்திருக்கும்
ஐம்பது மாசிகளுக்கு முன்
இந்த நிலம் இருந்தது
நீயும் நானும் இல்லை
ஐம்பது மாசிகளுக்குப் பின்னும்
இந்த நிலம் இருக்கும்
நீயும் நானும் இருக்கப் போவதில்லை
இப்போது புரிகிறதா ஜிம்மி
இந்த நிலம் ஏன்
குரைப்பதுமில்லை
கவிதையெழுதுவதுமில்லையென.
37,
எஸ் எஸ் எல் சியை தாண்டமுடியாதவனும்
முப்பத்தியேழு காதலர் தினங்களை
கடந்து விட்டவனுமாகிய உனக்கு
கடைசியாய் வந்த வரனும்
தட்டிப் போயிருக்கும்
பனியன் கம்பனி பஞ்சுமில்
தறிவேலை என
பலதொழில்கள் தெரியுமுனக்கு
ஆனாலும் உன் அப்பா
இன்னமும் ஆடுதான் மேய்க்கிறார்
உன் அம்மாவின் மாங்கல்யம்
இன்னமும் வெறும் கயிற்றில்தான்
கோர்க்கப்பட்டிருக்கிறது
உடன்படித்த சிலர்
வெளிநாடுகளில் சம்பாதிக்கின்றனர்
உடன் பணிபுரிந்த பலர்
முதலாளி ஆகிவிட்டனர்
மற்றவர்களும் குறைந்தபட்சம்
திருமணமாவது செய்திருக்கின்றனர்
மீசை முளைத்த வயதில்
ஆசைப்பட்ட ருக்குமணி
பெற்றெடுத்த பெண்பிள்ளை
பெரியமனுசி ஆகிவிட்டாளாம்
பத்திரிக்கை வரும்
போய்
சாப்பிட்டுவிட்டு வா.
38,
கொண்டையூசி வளைவின்
தடுப்புச்சுவர்மேல் நின்று
பார்த்தபடியேயிருக்கும் அதன் கண்களுக்கு
எவ்விதம்தான் தோற்றம் காட்டுமோ
இப்பள்ளத்தாக்கு எனும்
யோசனையின் முடிவாக எனக்கும்
முளைத்திருந்தது வால்.
39,
பெட்ரோல் தீர்ந்துவிட்ட மொபட்டை
ஓரங்கட்டி நிறுத்திவிட்டு
கிடக்கும் மதுப்புட்டிகளிலொன்றை
பொறுக்கியெடுத்துக் குறுக்காட்ட
நிற்காமல் போன வண்டிகளிடையே
நிற்கும் பல்சரின் பின்சீட்டில்
நீ அமர்ந்திருக்கிறாய்.
40,
வானவில்
புதுவெள்ளம்
பாப்பாத்திப் பூச்சிகள்
மரவட்டை
பொன்வண்டு என
தொடர்புபடுத்திக்கொண்டே வந்த சிறுமி
சற்றே மவுனித்து
இடிந்தவீடு
பரிதாபச்சாவு
பொட்டலஞ்சோறு
என்றெல்லாம் தொடர்புபடுத்தத் துவங்கியதும்
தான்
பெருமின்னல் வெட்ட
அப்பேரிடி இடித்தது
அறம் கூற்றானதேபோல.
No comments:
Post a Comment