11, உயிரருமை
மழைத்துளி மேகமாய்
ஈசல்கள் கரையானாய்
இவையெல்லாம் என்னவாய்
துளிவிழுந்த மறுநாளே
நிலமெங்கும் ஊருமிவற்றின்
உயிர்மூலம் யாது
முளைவிட்ட கேள்விகட்கு
விடைகாணும் ஆவல்
குத்துக்காலிட்டமர வைக்க
கூர்ந்து கவைத்தேன்
ஊர்ந்தபடி நகரும் அதை
விழி இருந்தால் காட்சி இன்பம்
செவி இருந்தால் ஓசை இன்பம்
சிறகிருந்தால் பறத்தல் இன்பம்
எதுவுமே இல்லாமல்
எப்படித்தான் இது
கண் இன்றி மண் தின்று
என்ன பிறவி இது
என்ன கொடுமை இது
விசாரத்திலாழ்ந்த மனம்
எண்ணமற்றுப் போக
வெளிப்பட்டது பெருமூச்சு
எண்ணமிடை சர்ப்பச் சீறலாய்
அதிர்வில் ஆபத்தையுணர்ந்ததுவாய்
மெல்ல உடல் சுருட்டி
சக்கரம் போலாகியது
மரவட்டை
இவ்வுயிரும் வாழ்வும்
தனக்கு அற்பமல்ல
அற்புதம் என்பதாய்.
-வடக்கு வாசல்-2008
12, நெடுஞ்சாலை நதி
அவதானிப்பின் நொடிபிசகி
முட்டிக்கொண்ட ஊர்திகளின்
முகப்புக் கண்ணாடிகள்
தரையெங்கும் சிதறித் தெறிக்க
தேங்கத் துவங்கிற்று
வாகனப் பெருவெள்ளம்
செத்திருப்பின் யுத்தம் ஏது
தப்பியதால் இறங்கிவந்து
நடக்கிறது வார்த்தைச் சமர்
தம்தரப்பு ஒழுங்கினையும்
எதிர் தரப்பின் பிழைகளையும்
நிறுவும் பொருட்டாய்
சாட்டையென நா சுழட்டி
வீசப்படும் சொற்களெல்லாம்
எதிரான பலன்களையே
ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது
வேடிக்கையின் சுவராஸ்யம்
வடிந்துவிட்ட ஓர்கணத்தில்
பீடிக்கும் பெரும் பதட்டம்
அலுவலக நேரம்
ஆரம்பமாகியிருக்கும்
தொழிற்சாலைச் சங்கு
ஊதி ஓய்ந்திருக்கும்
ஊர் செல்லும் பேருந்து
கிளம்பிப் போய்விடலாம்
வாடிக்கையாளரை இந்நேரம்
வேறொருவன் கவர்ந்திருப்பான்
தரமானது விற்றிருக்கும்
அழுகல்களே காத்திருக்கலாம்
அலங்காரம் முடிந்திருக்கும்
ஆராதனைகளும் நடந்திருக்கலாம்
செக்குமாட்டின் புற்கட்டாய்
முன் தொங்கும் அடுத்த கணம்
யாவரையும் ஆட்டுவிக்க
சாக்கடை உணவை
மரத்தடி புசித்து
அமர்ந்திருக்கும் அவனிடம்
நிரம்பி வழிகிறது
இக்கணத்தின் ருசி.
-தூறல்- 2013
13, தருணம்
தோளைத்தொட திரும்பியது
நீ அல்ல
வேறு யாரோ
என்றாலும் இக்கணத்தில்
நீயும் திரும்பிப் பார்த்திருப்பாய்
நான் என்று
வேறு ஒருவரை`.
-தூறல்-2014
14, பிராயசித்தம்
கொறங்காடுகள்
காய்ந்து போனதால்
காசுக்கு தீனி வாங்கி
வேர்பிடிக்கும் வெங்காயம்
காயாகும் முன்னரே
கருகிடுமோ எனும்பயத்தில்
கிணற்றைத் தூர்வாரி
மட்டைதொங்கும் தென்னைகளை
காண மனம் சகியாது
ஆழ்துளை கிணறு தோண்டி
நொடிந்து போனார் அப்பா
கெடுவிதித்துப் போன கடன்காரன்
வருவதாய்ச் சொன்ன நேரம்பார்த்து
பெய்து காக்கிறது மழை.
-தூறல்-2014
15, லாவகம்
துகில் விலக்கி
உறங்கும் குழந்தையை
காணுதலே போல
மும்முறமாய் பசியாறும்
அதன் தலைபற்றித் திருப்பி
ஈ மொய்க்கும் அவ்வுணவை
பார்த்துவிட்டு நகர்கிறாய்
நீ
ஞானியாகத்தான் இருக்கவேண்டும்
அல்லாது போனால்
உனைக் கடிக்காமல் விட்ட அது.
-தூறல்-2014
No comments:
Post a Comment