Saturday, 13 June 2020

இசையோடு வாழ்பவன் -2


6,                           வாசனை

வெண்மேகம்
செம்பழுப்பாய் நிறம் மாறும்
இவ்வந்திப் பொழுதில் நிகழ்ந்தபடியிருக்கிறது
உன் சாகசப் பயணம்

அப்பச்சியின் ஊருக்கும்
உனது ஊருக்குமான தூரம்
அதிகமில்லை என்றாலும்
அதுவுன் பிஞ்சு மனதிற்கு ஏழு கடலளவிற்கும்
ஏழு மலையளவிற்கும் ஏழு உலகளவிற்குமான
தூரத்திலும் தூரம்தான்

விடுமுறையைக் கழிக்க சென்றிறங்கியது முதல்
துணை யாரும் வாராது
நீயாகவே ஊர் திரும்பிக் கொண்டிருக்கும்
இப்பேரனுபவப் பிரயாணம் வரை
திகைப்பும் வியப்புமான அனுபவங்கள் அநேனகமுண்டு
அம்மாவிடம் போய் பகிர்ந்துகொள்ள


ஏதேனுமொரு எழுத்தை
விட்டுவிட்டு உச்சரிக்கும் வார்த்தைகளாலும்
இடையிடையேயொரு வார்த்தையினை
மறந்துவிட்டுப் பேசுகின்ற வாக்கியங்களாலும்
நீ சொல்லப் போகும் கதைகளை
கேட்கப்போகும் ஆவலுடன்
காத்துக் கொண்டிருக்கிறாள் உன் அம்மா
நீ வந்துகொண்டிருக்கும் பேருந்தை எதிர்நோக்கி

உடனே போய்விடலாம் சீக்கிரம் வரவும்
எனும் குறுஞ்செய்தியை அவளுக்கு அனுப்பிவிட்டு
எனதறையின் சன்னல்களை சாத்தத் துவங்குகிறேன்

விருப்பமின்மையோடும்
தவிர்க்கமுடியாமையோடும்
தடுமாறும் பாதங்களை இழுத்துக்கொண்டு வருகிறது
நிர்பந்தத்தின் துர்காந்தம்




காற்றும் வெளிச்சமும் குறைந்த அறையினுள்
மோகமும் மூர்க்கமும் மிகுந்த கரங்களால்
பூவும் பொட்டும் அற்ற கைம்மையை
இழுத்தும் அணைத்தும் தடவியும் வருடியும்
இச்சையின் உச்சம்போய் இறப்பையெய்துங் கணம்
சட்டென இருதயத்தில் துடித்தெழுந்து
உன் அம்மாவின் ரத்த நாளங்களிலெல்லாம்
பாய்ந்தோடத் துவங்குகிறாய் நீ

விறத்து நீண்டிருந்த காமம்
அக்கணமே வேரறுந்து வீழ்ந்துவிட
யானும் கண்டுய்ந்தேன்
பரிசுத்தமாம் குழந்தமையை

பின்வரும் ஏதேனுமொரு நாளில்
கொடுங்கனவொன்றிற்கு வீறிட்டலறியோ
இடிமின்னலுக்கு மன மருட்சியுற்றோ
தாய்மடிபோய் அடைக்கலம் புகுகையில்
நீ உணரநேரலாம் உன் அம்மாவின்மேல் படிந்திருக்கும்
எனது வாசனையை

பிறகு நீயும் தேடத் துவங்குவாய்
அப்போதுமுதல் தொலைந்துபோகும் உன் குழந்தமையை
வேறுவேறு பெண்களிடம். 
                                    -கணையாழி 2013.


7,                          காஞ்சிமாநதி

இறந்து கொண்டிருக்கும்
பேருயிர் ஒன்றின்
கண்களென
சலனமற்றுக் கிடக்கிறது
சாயம் அருந்திய நீர்

அனிச்சையாய் கையுயர்ந்து
மூக்கை பிடித்துக் கொள்ள
அவசரமாய் கடக்கின்றனர்
பாதசாரிகள்


மண்பெற்ற மைந்தர்களின்
சொகுசு ஊர்தியெல்லாம்
ஒலியெழுப்பி விரைகின்றன
ரத்தம் உறிஞ்சி பறக்கும் கொசுக்களாய்

இரக்கமற்று சிதைக்கப்பட்ட ஆற்றின்
பாலத்துமேல் ஓர் முடவன்
யாசித்த படியேயிருக்கிறான்
இரக்கத்தை

நதிநடுவே பாறைமுனை
அமர்ந்திருந்த கொக்கு
பறந்து மேலெழும்பி
விண்ணேகிக் கொண்டிருக்கிறது

பிரிந்து செல்லும் உயிர்போல.
                                         -கனவு- 2013





8,                                 ஆனந்த நடனம்

மின்னலும்
இடியும்
திரளும் கருமேகங்களுமாய்
நுண்மைப் பட்டுக் கொண்டிருந்தது
சூழலின் அமைதி

மரணிக்குங்கணம் விழிகளெய்தும்
பிரகாசமாய் மனம் ஊமையாகும்
கனவு ஒளியில் அலைந்த படியிருந்தேன்
கொறங்காடுகளில்

வெளிச்சம்பெற்ற விழியுருட்டி
பறந்த ஆந்தை சென்றமர்ந்தது
ஒற்றைப் பனையில்
மயிலினெச்சங்கள் கண்ட ஓரிடத்தில்
நின்றேன்


எருக்கலம் புதர்விட்டு
வெளிப்பட்டது முயல்
காரைமுள் உள்ளிருந்து
குறுக்கிட்டன காடைகள்

தாழ்ந்த கிளைபற்றி மரம் ஏறி
வேலியைத் தாண்ட
கூச்சலிட்டோய்ந்தன கொன்னவாய்க் குருவிகள்
பட்டி திரும்பிய ஆடுகளின் குளம்படிகளோடு
இட்டேறியின் மெண்மணலில்
மிதியடியையும் பதித்து நடந்த பாதங்கள் விரைவுபட்டன
அகவல் ஒலித்த திசையின் மிசை

அச்சமும் பதட்டமுமாய் தாழப் பறந்தன
குஞ்சுகளோடு பெண்மயில்கள்
மரங்களின் செடிகளின் கொடிகளின்
இலைகளில் ஆடக்கண்டேன்
ஆயிரக்கணக்கில் மயில்கள்
விரிந்த அன்பின் விரல்நுனிப் ஸ்பரிசமாய்
விழுந்திருந்தது ஓர்
ஒற்றைத்துளி.                        –கனவு இலக்கிய வட்டம் -2008.

9,                         வலியின் நிறம்

உயரே வந்துவிட்டது சூரியன்
சாட்சியாய்
கடை வீதியில் கழிகிறது
இம்முற்பகல்

நின்றிருந்த மினிஆட்டோ
செல்கிறது கிளம்பி
வெறிச்சிட்ட இடம் மனதுள்
தருகிறது கணச்சூன்யம்

அலட்சியமாய் கடக்கிறாள்
பெருமித யுவதி
சலூனிலிருந்து கசிகிறது
வானொலியின் பாடல்
மிதித்து நசுக்கிப் போகிறது
லாரியின் இரைச்சல்


ஈக்களாய் மானுடர்
நிணமும் சாணமும்
மிதித்துப் பார்த்திருக்க
அமுக்கிப் பிடித்திருக்கிறது
முரட்டுக் கரங்கள்

அலறவும் துடிக்கவும் ஏலாது
பாதியறுத்த சங்கின் வழி
பொங்கி வழிந்து
கிண்ணம் நிரப்புகிறது ரத்தம்

கண்ணீராய்.                           –கனவு-2008










10,                       பனியன் மாநகரத்தில்

கனவுகளும் தேவைகளும்
சாண்வயிற்றின் பெரும்பசியும்
கொணர்ந்திங்கு சேர்ப்பிக்க
யாவர்க்கும் காத்துள்ளது
ஏதேனும் ஓர் வேலை

தந்தையோடு பிணக்குற்று
படிப்புவரா பால்பாண்டி
ஓடிவந்த மறுநாளே
சேர்ந்திருப்பான் அடுக்கிக் கட்ட
பிசிருவெட்டி கைமடித்து
தீபாவளிப் போனசுக்குப் பின்
டைலர் எனப் பணியமர்வான்
வேறு ஒரு கம்பனியில்




காட்டுவேலை கந்தனுக்கு
சலவப்பட்டறை வாய்ப்பளிக்கும்
உடன்வந்த சம்சாரம்
செங்கல் சுமப்பாள் சித்தாளாய்
வயசான அப்பன்
வாட்ச்மேனாய் கேட்திறக்க
அம்மாக்காரி வீடமர்ந்து
கட்டிங் வேஸ்ட் நூல் பிரிப்பாள்

படித்த இளைஞர்களும்
படைபடையாய் வந்திடுவர்
கணக்குப்பிள்ளை சூபர்வைசர்
டையிங்மாஸ்டர் என்றாய் ஆவர்

டெய்லர் பால்பாண்டி
செல்போன் அடைந்திருப்பான்
நண்பரொடு பார்ஏகி
சனிக்கிழமை சரக்கடிப்பான்
ஒடுங்கிய கன்னங்கள்
உப்பி மினுமினுக்க
சுலபத் தவணை பைக் ஏறி
சொந்த ஊர் சென்றிடுவான்
திரும்புகையில் அவனோடு
கிராமமே கிளம்பி வரும்

இடம்பெயர்ந்து வருவோர்க்கு
லைன்வீடு காத்திருக்கும்
ஒரேயொரு அறையோடு
புறாக்கூடு போலிருக்கும்
ஊர்ப்புறத்து வீடுகளில்
ஆடப்பாட வசித்துவந்த
விறகும் தண்ணீரும்
இலவசமாய் பெற்றுவந்த
குடும்பங்கள் குடியேறும்
சிரமங்கள் அரங்கேறும்

தீபாவளி பொங்கல்வரின்
நகர் ஆகும் காலியாய்
பத்துநாள் இருபதுநாள்
கழித்தபின்னர் திரும்பிடுவர்
பர்ஸ் இருக்கும் காலியாய்

பவர்டேபிள் கான்ராக்ட்டர்
ஆயிருப்பான் பால்பாண்டி
சகடைலர் இளம்பெண்மேல்
காதல்வரும் கைகூடும்
புறநகரில் நிலம்வாங்கி
வீடுகட்ட ஆசைவரும்
சிறுகச்சிறுகச் சேர்ப்பார்கள்
புறநகரின் நிலமதிப்பு
பெருகிப்பெருகிக் கொண்டிருக்கும்

அரிசிக்காரர் சீட்டுக்காரர்
வந்துவந்து பார்த்துப்போவர்
மாரியம்மன் சாட்டுக்காய்ச் சென்ற
கந்தன்வீடு பூட்டிக் கிடக்கும்
பொறுமையிழக்கும் வீட்டுக்காரர்
மாதத்துக்குப்பின் பூட்டை உடைப்பார்
பழையபாய் ஒன்றுமட்டும்
மூலையிலே சுருண்டிருக்கும்
ஆத்திரத்தில் கிழித்தெறிவார்
வாடகைபாக்கி காகிதத்தை


வாகனங்களின் நெரிசலும்
புழுதியும் புகையும்
பரபரப்பு மனிதர்களும்
பகல்பொழுதின் வெம்மையும்
சாக்கடையும் கொசுக்கடியும்
வசிப்பிடத்தின் நெருக்கடியும்
தினம் ஆகும் பெருஞ்செலவும்
சகிக்கமுடியா ஒருவன்
ஊருக்கு கடிதமெழுதினான்

எல்லா நேரமும் வேலை நேரமாய்
எல்லா நாட்களும் வேலை நாட்களாய்
இயங்கிக் கொண்டிருக்கும் இந்நகரத்தில்

நான் பிழைத்துக் கொண்டிருக்கிறேன்
வாழாமல்.                      
                                     -திருப்பூர் மக்கள் அமைப்பு -2007










No comments: