Sunday, 14 June 2020

இசையோடு வாழ்பவன் -4


16,                          காப்பு
நடுநிசி உயிர்க்கும்
புரவிமேல் அமர்ந்து
போகுமாம் வேட்டை
வான்வரை வளர்ந்து
ஊரெல்லை அமர்ந்து
புரியுமாம் காவல்
மாசி அமாவாசை
மயான பூசையில்
கேட்குமாம் காவு
ஆணிகள் பதித்த
குரட்டினிலேறி
வழங்குமாம் ஆசி
பொய்யேயாயினும்
போய் நிற்கின்றேன்
கருப்பன் சந்நிதி
புள்ள தலையெடுக்க
விடியும்போ எனும் வாக்கில்
உயிர்த்து
வீடு சேர்ந்தாளாம் அம்மா
அவ்வரளிச்செடி தாண்டி.                     –மணல் வீடு 2008

17,                                 கொம்பு

சற்றே தயங்கி
நீ கடந்து செல்கையில்
குதூகல காற்றினிசை
கிளைகளுட்புகுந்து வெளிப்படும்
விசும்பலாய்

பெருவிருட்சம் பருத்த கிளையுமென
துக்கித்த மனம் கற்பித்திருக்க
வெடித்தலறும் நெஞ்சினளாய்
ஓடோடி வந்தவள்
சிறுகொம்பும் சின்னஞ்சிறு கிளையுங்கண்டு
மவுனமாகினாய்

அதன்பிறகு நீ அழவேயில்லை

நெடுந்தோளன் பருவுடலை
குழந்தையின் கையொத்த
கிளைதாங்கும் திறன்பற்றி
ஊர்
பச்சாதாபத்தினூடே வியந்து களியெய்த
வெறித்தமர்ந்திருந்தாய்
தொங்கும் கால்களுக்கும் நிலத்துக்குமான
விரலளவே இடைவெளியை

விடமுண்ட தேகம்போல்
நிறமாற்றம் கண்டது அவ்வெயில்
முயல்துரத்தும் நாயாய்
விரந்தோடுகிறது காலம்

நீயும்
உன் மலரும் பருவத்து மகளும்
பனியன் கம்பனி பேருந்துவிட்டு இறங்கி
வீடு திரும்பிக் கொண்டிருக்கும் இவ்விரவில்
நீர்த்திரையிட்ட கண்களென மினுங்கிறது
நிலவொளியில் காயுமதன்
ஆயிரமாயிரம் பசிய இலைகள்.
                                             -மணல்வீடு -2008  


18,         
சுவர்களெங்கும்
பதிக்கப்பட்டுள்ளது
நீள்சதுரக் கண்ணாடிகள்
உள் நுழைந்த
நாய் நான்.

19,                       ஸ்மெல்ட்
அந்த  கழுத்து ரிப்பை
ஜாயிண்ட் செய்கையில்
ஓவர்லாக் டெய்லர் மோகனாவுக்கு
போய் முகம் கழுவிவர
தோன்றியது

அந்த கழுத்து ரிப்பை
ஜாயிண்ட் செய்கையில்
பேட்லாக் டெய்லர் சுப்ரமணிக்கு
தம்மடிக்க நினைப்பு வந்தது

முகம் கழுவிவிட்டும்
தம்மடித்துவிட்டும்
வந்தமர்ந்த
சிங்கர் டெய்லர் செந்தில்
லேபிள் வைப்பதற்காக
அந்த கழுத்து ரிப்பை எடுத்து
மார்க் செய்தான்

ஏனோ அவனுக்கு
மூக்கில் வேர்த்தது.
                                          -மணல் வீடு

20,                       புகைபடுபடலம்

கட்டு நடக்கும் மரத்தடியில்
கட்டு நடக்காத நாளொன்றில்
அமர்ந்திருந்த மேய்ப்பன்
பீடியை பற்ற வைத்தான்

பாவமேபோல ஆடுகள்
மேய்ந்து கொண்டிருந்தன
கூட்டிப் போகும் திருட்டுஆடு
கண்முன்னால் படுத்துக் கிடந்தது

கரையாத பீடிப்புகை
சேவலெனத் தோற்றம் கொண்டது
மேலும் புகை ஊதி
மற்றொன்றை எதிர் நிறுத்தினான்

சண்டையிடத் துடித்த சேவல்களிரண்டும்
கட்டுக்கத்திகளையும் ஜாக்கிகளையும்
பந்தயக்காரர்களையும்
வேடிக்கை பார்ப்போரையும் கோரின
மீண்டும் மீண்டும்
பீடிகளை பற்றவைத்தான்

கட்டுக் காட்டின் புழுதி
சாம்பல் நிறமாய் பறந்தது
கத்திக் காயங்களில் குருதி
கருஞ்சாம்பலாய் வடிந்தது
தோல்வியின் ஓலமும்
வெற்றியின் எக்காளமும்
எல்லை மீறிய கணம்
கடைசி பீடியை உருவினான்

துரத்தி ஓடுகையில்
தடுக்கி விழுந்த ஏட்டய்யாவை
மனதில் இருத்தி புகையை ஊதினான்
கைகால் முகம் வயிறென
உருக்கொண்டுவந்த ஏட்டய்யா
சட்டென நிலை மாறினார்

வெள்ளாமை மேயும் திருட்டாடாய்.
                                                   -மணல் வீடு.






No comments: