Tuesday, 22 October 2019

மூன்றாவது ஒன்று


                                      


தேநீர்க்கடை முன்புறமிருக்கும் வெள்ளை வேலாமரத்தடி சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். தறிகளை நிறுத்திவிட்டு அப்போதுதான் வந்திருந்தேன்.  அம்மாவிடம் சொன்னால் கருப்புத் தேநீர் தயாரித்துத் தறிக்குடோனுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுவாள்தான். சாயுங்கால டீயை மட்டும் வீட்டிலே குடிப்பதில்லை. தறிக்குடோனின் நான்கு சுவர்களுக்குள் தன்னந்தனியாக சுற்றிவந்து கொண்டிருப்பதில் உண்டாகும் வெறுமை இப்படிக் காற்றாட வெளியேவந்து யாரோ நாலுபேரிடம் பேச்சுக்கொடுத்துவிட்டுத் திரும்புவதன்மூலம் இட்டு நிரப்பப்பட்டு புத்துணர்ச்சியாக மாறிக் கொண்டிருந்தது.    

அந்த நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்துவிடும் தங்கானும் எனக்கு முன்னரேவந்து அமர்ந்திருந்தான். அதே நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்துவிடும் மற்றும் சிலரும் முன்னரே வந்துசேர்ந்து டீக்கடையை ஒட்டிய வடபுறத்து ஓலைச் சாய்ப்பினுள் நம்பர் விளையாட்டு விளையாடியபடி இருந்தார்கள். தங்கம் தனியார் பள்ளியில் வாகன ஓட்டியாக பணிபுரிகிறான். பணிமுடிந்து  வீடு திரும்புகிறவழியில் ஒரு டீயையும் தம்மையும் போட்டுவிட்டுச் செல்வது அவன் வழக்கம்.     

டீ டம்ளரைக் கீழே வைத்துவிட்டு சிகரெட்டைப் புகைத்தபடி தங்கானுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். டீக்கடைச் செய்தித் தாள்களில் பெரிதும் இடம் பிடித்திருப்பது சினிமாச் செய்திகளும் கள்ளக்காதல் விவகாரங்களும்தானே? அதன் வாசகர்கள் பேசுகிற பேச்சுக்களும் பெரும்பாலும் அவைகளைப் பற்றியதாகத்தானே இருக்கும்?  எங்களின் உரையாடலும் அப்படியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பேச்சிலிருந்து சட்டெனத் திசைமாறிய தங்கான் என் தோளைத் தொட்டுத் திருப்பி ‘அங்க பாருங்க…’ என எங்கள் வீடு இருக்கும் திசையை கை காட்டினான்.

நிறுத்தத்திற்குச் சற்று தூரம் முன்பாகவே நாகர்கோயில் வண்டி நின்றுகொண்டிருந்தது. ஒரு இளவயதுப் பெண்ணும் ஆணும் இறங்கியபடியிருந்தார்கள். அந்த இளைஞன் தனது தோளில் குழந்தையொன்றை ஏந்தியிருந்தான். கனமான பயணப் பை அவனது முதுகிலே தொங்கிக் கொண்டிருந்தது. ‘என்னண்ணா ஆச்சர்யமா இருக்கு… நாகர்கோயில் வண்டியெல்லாம் நம்ம ஸ்டாப்புல நிக்குது.. நம்பவே முடியலையே..என தங்கான் கூறினான்.

திருப்பூரிலிருந்து தெற்கேயும் தெற்கிலிருந்து வடக்கே திருப்பூருக்கும் வந்துபோகின்ற வண்டிகள் யாவும் எங்களின் ஊர் வழியாகத்தான் போயாகவேண்டுமென்றாலும் பழனியைத் தாண்டி அந்தப்பக்கம் போகிற பேருந்துகள் எதுவும் எங்கள் ஸ்டாப்பில் நிற்பது கிடையாது. தொலைதூரப் பேருந்துகள் நின்றுபோகக் கூடிய ஸ்டேஜ்களின் பட்டியலில் எங்களின் சிற்றூர்ப் பேருந்து நிறுத்தம் இல்லை என்பதுதான் காரணம். ஏதாவது பழுதுண்டாகியபோதும் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் குறுக்காட்டி ஏறும்போதும்  வேறு வழியேயில்லாமல் நின்று போகும் என்பது விதிவிலக்கு. நேரங்கெட்ட நேரத்தில் எங்காவது மாட்டிக்கொண்டு வஞ்சிபாளையம்பிரிவு வழியாத்தானே போறீங்க..? கடைசி பஸ்ஸையும் விட்டுட்டோம் உங்களையுட்டா வேற கதியே இல்ல… வேணும்னா அடுத்த ஸ்டேஜுக்கே டிக்கெட் வாங்கிக்கிறோம் எங்களை எறக்கிவுட்ருங்கண்ணா…  என கெஞ்சி ஏறிவந்து இறங்கிய அனுபவங்கள் எனக்கு உண்டு. இங்கே பலருக்கும் இருக்கிறது. எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. மஞ்சள் வெயிலை பளீரென வீசிக்கொண்டிருக்கும் பொன்மாலைப் பொழுது என்பது ஒன்றும் நேரங்கெட்ட நேரம் அல்லவே.    

நான் தங்கானிடம் கூறினேன். ‘ஒரு வேளை டிரைவருக்கோ கண்டக்டெருக்கோ தெரிஞ்சவங்களா இருப்பாங்களோ..?

“அப்படி இருக்கறதுக்கு வாய்ப்பில்லைன்னுதான் தோணுது. ஆளுகளைப் பார்த்தா தெம்பக்கம் மில்லுல வேலை செய்யிற இந்திக்காரனுகளாட்ட இருக்குது. வேலை செய்யற எடத்திலியெல்லாமேகூட இந்திக்காரனுகன்னா நம்மாளுக பட்டும்படாம ஓரமா ஒதுக்கியேதான் வெச்சிருக்கிறானுக.. இந்த லட்சணத்துல எந்த  இந்திக்காரன் டிரைவரையெல்லாம் பிரெண்டு புடிச்சு வெச்சிருக்கப் போறான்? இந்த வண்டி இங்க நிக்காதுங்கிற வெவரம் தெரியாம ஏறீருப்பான். பாதிதூரம் வந்தபிற்பாடு குழந்தையோட இருக்குறாங்களே என்ன பண்ணித் தொலையிறதுன்னு கண்டக்டரும் எரக்கம் காட்டி சீட்டுக் கொடுத்திருக்கலாம்

இப்படியாக நாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் இன்னொரு ஆச்சர்யமும் உண்டானது. அவர்கள் வடக்காகவோ தெற்காகவோ நகராமல் ரோட்டைத் தாண்டி கிழபுறமிருக்கும் எங்கள் வீட்டை நோக்கி நடந்தார்கள். முன்பின் பழக்கமில்லாதவர்களான அவர்களுக்கு எங்கள் வீட்டிற்கு என்ன வேலை? ‘நேரா எறங்கி சொல்லிவெச்ச மாதிரி சரசரன்னு போறதப் பார்த்தா நிச்சயம் தெரிஞ்சவங்களாத்தான் இருப்பாங்கன்னு தோணுது.. இங்க தூரத்துலயிருந்து பார்க்கறதுனால அடையாளம் மாறிப்போச்சோ என்னவோ…  எதுக்கும்  ஒரு எட்டு போய்ப் பார்த்துட்டு வாங்கஎன்று தங்கான் கூறினான்.


எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அந்நியர்களாக இருக்கும் பட்சத்தில் சாத்தியிருக்கும் கடவுப் படலடியே நின்று சத்தமிடுவார்களே தவிர இப்படி உரிமையோடு திறந்து உள்நுழைய மாட்டார்கள். தேநீருக்கும் சிகரெட்டுக்கும் காசைக் கொடுத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பினேன்.


வாசற்பந்தலின் வடகோட்டுத் தூண்காலோரமாக அவ்விளைஞன் நின்று கொண்டிருந்தான். குழந்தை அவன் தோளோடு உறக்கத்திலிருந்தது. கனமான முதுகுப்பை திண்ணையில் வைக்கப் பட்டிருந்தது. அந்தப் பெண் பந்தலுக்கு அப்பாலிருக்கும் வெளிவாசலில் பாத்திரங்கள் கழுவும் சலதாரையையொட்டி வளர்ந்து நிற்கும் பெரிய நந்தியாவட்டை மரத்தினருகே நின்றிருந்தாள். அந்தப் பெண்ணின் முகம் சுவாதீனமில்லாததுவாய் இருந்தது. இங்கே இன்னொரு ஆச்சர்யமும் உண்டானது. அந்த இளைஞன்தான் வட இந்தியனைபோலே இருந்தான். அந்தப் பெண்ணிற்கு அச்சுஅசலான தமிழ் முகம்.  தமிழ் கண்கள். விசாரித்துப் பார்த்தால் இங்கே அக்கம்பக்கத்து ஊர்களில் யாருடைய பெண்ணாகவாவது இருக்கலாம் என்பது மாதிரியான பக்கத்துவீட்டு அழகிய இளம்பெண்ணின் தோற்றம்.

வீட்டிற்குள்ளிருந்து எட்டிப் பார்ப்பதுபோல நிலைப்படியைப் பிடித்தவாக்கில் நின்றுகொண்டிருந்த அம்மா என்னைக் கண்டதும் ஒரு எட்டு வெளியேவந்து ‘யாருன்னுந் தெரியல.. எவருன்னுந் தெரியல.. கக்கூசுக்குப் போகோணமாமா… போய்க்கறம்ன்னு வந்து நிக்கறாங்க.’ என்றாள். ‘ ஊருலகத்ல போறவங்க வாரவங்கெல்லாம் பேழறதுக்குத்தான் இங்க கக்கூஸ் கட்டி வெச்சுருக்கறாங்களாக்கும் ? அதெல்லாம் முடியாது.. வந்த வழியப்பார்த்துட்டுப் போய்ச் சேருங்கறேன்.. ஒரு சாமார்த்தியம் .. காதிலயே போட்டுக்காம வுடுவனா ரவுடின்னு அப்படியே நின்னுட்டிருக்கறாங்க’ என்றும் முறையிட்டாள்.

தனது ஆதீனத்தில் தனக்குச் சொந்தமான இடத்தில் சம்பந்தமில்லாத யாரோ வந்து நின்றுகொண்டு தான் சொல்லுவதைப் பொருட்படுத்தாமல் தன்னைத் தூக்கிக் கனம்பார்க்கிறார்களே எனும் ஆத்திரம் அவளின் குரலில் இருந்தது. என் அம்மாவின் சத்தத்தில் அந்தக் குழந்தை விழித்துக் கொண்டது. அதன் தலைதிருப்பி  குறுக்கான இடதுகை மடிப்பின்மேல் ஒருக்களித்து உட்காரவைத்த நிலையில் நின்றுகொண்டிருந்த அவ்விளைஞனை ஏறிட்டேன். சின்ன வயதுதான். சிவந்த நிறங்கொண்ட பலகை போன்ற உடல்வாகு. மனதிலோடும் உணர்ச்சிகளைக் கண்டறிய முடியாத சிறிய மணிக் கண்கள். என்னாச்சு? உங்களுக்கு என்ன வேணும்? என வினவிய என்னிடம் ஆங்கிலக் கலப்போடு திணறித்திணறி வெளிப்பட்ட தமிழில் விபரத்தைக் கூறினான்.

அவன் வந்துநிற்கும் விசயம் இதுதான். இளைஞனுப் பூர்வீகம் நேபாளம். அவனும்  மனைவியும் திருப்பூரிலிருக்கும் ஒரு நகை மாளிகையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நாகர்கோயிலிலிருக்கும் உறவினரொருவர் வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வரும் வழியில் மனைவிக்கு வயிறு சரியில்லாமல் போய்விட்டது. சமாளிக்கவே முடியாத அளவுக்குத் தொந்தரவு அதிகமானதும் நடத்துனரிடம் சொல்லி நடுவழியில் இறங்கி இங்கேவந்து இப்படி நிற்கவேண்டியதாகிவிட்டது. ‘உங்க டாய்லெட்டை அலொவ் பண்ணாட்டியும் பரவாயில்ல… பக்கத்துல எங்காச்சும் பப்ளிக் டாய்லெட்டாவது இருக்குமா?’ என வினவினான்.

கூடுதலாக ஒரு ஐந்துநிமிடம் தாக்குப்பிடித்து நான்கு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கொடுவாய் போய் இறங்கியிருந்திருப்பின் பொதுக் கழிப்பறைக்கே போயிருக்கலாம்தான். இப்படி இறைஞ்சி நிற்கும் அவலத்திற்கு ஆளாகியிருக்க வேண்டியதில்லை. பேருந்தின் நடத்துனராவது இம்மாதிரியான இடத்தில் இவர்கள் எங்கே போவார்கள் என ஒரு கணம் யோசித்துப் பார்த்து சற்றே தாக்குப் பிடிக்கச் சொல்லிவிட்டு கொடுவாயில் கொண்டுபோய் இறக்கி விட்டிருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். பூர்வீகம் நேபாள்ங்கிறான்.. அந்தப் புள்ளையப் பார்த்தா அசல் நம்ம புள்ளைகளாட்டவே இருக்குது.. காந்தர்வ விவாகமாக இருக்கலாமோ என்னும் நினைப்பும் ஓடியபடியிருந்தது. 

திண்ணையில் அமர்ந்திருந்த என்னையே அவ்விளைஞன் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். அந்தப் பெண்ணுக்கு அவஸ்தை அதிகமாகிவிட்டதுபோலத் தோன்றியது. இரண்டு கைகளும் அடிவயிற்றை அழுத்திப் பிடித்திருக்க அவளின் ஒட்டுமொத்த உணர்வும் அந்த உபாதையிலேயே மையங் கொண்டிருப்பது தெரிந்தது. தாங்கமுடியாத வலியைத் தாங்கிக் கொண்டிருப்பதேபோல கூனிக்குறுகி தலையை அண்ணாந்து கண்களை இறுக்கமூடி இறுகிய தாடைக்குள் பற்களை நெறித்தபடி தவித்துக் கொண்டிருந்தாள். சுற்றுப்புறம் சூழல் குறித்தான பிரக்ஞையையெல்லாம் அவள் இழந்து கொண்டிருக்கிறாள் எனவும் தோன்றியது.  

‘இவனொரு ஆகாவழி… ஒரே வார்த்தையில ஆகாதுபோன்னு சொல்லி முடிக்கியுடறத வுட்டுப்போட்டு ஊறென்ன உறவென்னன்னு மொறமயிறு நாயம் பேசீட்டு..’ என்ற அம்மா அவர்களைப் பார்த்துக் கத்தத் துவங்கினாள். ‘சொன்னாக் கேட்கமாண்டீங்களா..? அந்தப் பக்கம் காடு இருக்குது பாரு… வேணும்னா அங்க போயிக்கிங்க… எவ்வளவு நேரம் நின்னாலும் நின்னுக்க வேண்டீதுதான்.. இங்கீல்லாம் போறதுக்கில்லை.'

கடந்துசெல்பவர்கள் திரும்பிப் பார்க்கும்படியான ரூபலாவண்யத்தைக் கொண்டிருக்கும் ஒரு இளம்பெண்,  முன்பின் பரிச்சியமில்லாத யாரோ ஒருவரின் வீட்டு வாசலில்  நளினமும் கர்வமுமான தன் உடல் மொழியை இழந்து வெறும் உடலாக ஆகிநிற்கிறாளே என்னும் பச்சாதாபம் உண்டானது. அந்த வெறும் உடலுமேகூட அற்றுப்போய் வெறும் உயிரொன்று அதன் உச்சபட்ச அவஸ்தையில் துடித்துக் கொண்டிருப்பதேபோலவும் ஒரு கணம் மனமாகியது. துடித்துக் கொண்டிருக்கும் ஒரு உயிர். வெறும் உயிர்.

‘ஒழுங்கு மரியாதையா வாசலவுட்டு அக்கட்டால போகப்போறீங்களா இல்ல சீவக்கட்டையில ரண்டு சாத்துனாத்தான் போவீங்களா?’ ஆவேசமாகப் பேசியபடியே அம்மா நிலைப்படியைவிட்டு வெளிப்பட்டாள். வெளிவந்த வேகத்தைப் பார்த்தால் திண்ணையின் தெற்குமூலையில் கிடக்கும் கட்டைச் சீமாத்தையெடுத்து அவர்களை அடித்தும் விடுவாள்போல இருந்தது. அவளின்  கடுங்கோபம் என்னையும் தொற்றிக்கொண்டது. நிதானத்தை இழக்கவும் வைத்தது. ‘கெழுட்டுக் கண்டாரோலி முண்ட… மூடீட்டு உள்ள போகப் போறியா? இல்லியா?’ என்றேன்.

விக்கித்துப்போய் அப்படியே நின்றுவிட்ட தாய்க்கிழவி அதற்குப்பின்  ஒரு வார்த்தையும் பேசவில்லை. இனி இந்த பாழாப்போனவங்கிட்ட பேசிப் புண்ணியமில்ல என்னும் புரிதலுடன் ஒரு கணம் எரிப்பதுபோலப் பார்த்துவிட்டு  திரும்பி உள்ளே போனாள்.

துடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை, அவ்வுயிர்ச் சக்தியைப் பார்த்துக் கூறினேன். கூவினேன் என்றும் சொல்லலாம். ‘அந்தக் கேட்தாம்மா டாய்லெட்டு.. போங்க.. போயிட்டு வாங்க’

பந்தற்காலையொட்டி நின்றபடியிருந்த அவ்விளைஞனை ‘எவ்வளவு நேரம்தான் நின்னுட்டே இருப்பீங்க..? வாங்க.. வந்து திண்ணையிலேவந்து உட்காருங்க’ என்றேன். மனைவிக்கு கழிப்பிடம் கிடைத்ததில் ஆசுவாசம் அடைந்திருந்தாலும் அதன்பொருட்டு எனக்கும் என் அம்மாவுக்கும் உண்டான சச்சரவு அவனுக்கு ஒரு விதமான பதட்டத்தையும் தர்ம சங்கடத்தையும் உண்டாக்கி விட்டதையும் உணர முடிந்தது. ‘பரவால்லை சார்.. இப்படியே நின்னுக்கிறேன்’ என்றான். அவன் மார்பில் ஏந்தியிருந்த குழந்தைக்கு இப்படியான பிரச்சனைகள் ஏதுமில்லை. அந்தக் கண்களில்தான் என்ன ஒரு புத்தொளி?   


‘அந்தளவுக்கு ஆகிப்போச்சா..? இந்தக் கெழுட்டுமுண்டையில்லீன்னா சோத்துக்கு சட்டியெடுத்துட்டுத்தான் போகோணம். ஏம் பறக்கறே… எனக்கப்பறம் நீ என்ன கதிக்கு ஆளாகப்போறேன்னு பாரு…’ உள்ளேயிருந்து அம்மாவின் ஆங்காரம் வெளிப்பட்ட படியிருந்தது. இந்தக் கோபம் குறைந்தது இரண்டு நாட்களுக்காவது நீடிக்கும் என்றும் தோன்றியது. இதற்குமுன்பும் சில நேரங்களில் இவ்விதம் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் அநாகரீகமாகப் பேசியிருக்கிறேன். என்றாலும் இப்படி பிறத்தியார்முன் பேசியதில்லை.

திண்ணையில்வந்து உட்காரவும் மாட்டாமல் என் அம்மாவின் வசவுகள் காறித்துப்பப்படும் எச்சில்தெறிப்புகளென வந்துவந்து விழுந்தபடியிருக்கும் வாசலில் நிற்கவும் முடியாமல் அவ்விளைஞன் தவித்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகப் போகிறது எனும் வாக்கியத்தை நேபாளியில் எப்படிச் சொல்வார்களோ? அவன் அந்த வாக்கியத்தின் உருப்பெற்ற சாட்சியாக நின்றபடியிருந்தான். எனக்குமேகூட ஒரு மனோவவஸ்தை உண்டாகத் துவங்கியிருந்தது. நல்லவேளையாக அவனுடைய செல்போன் ஒலிக்கத் துவங்கியது. கெட்டநேரத்தில் ஒரு நல்லநேரத்தைக் கண்டுவிட்ட கிளர்த்தியுடன் கைப்பேசியைக் காதிலே வைத்தபடி சற்று தூரமாக கிளுவைவேலியை ஒட்டியிருந்த வேப்பமரத்தடியேபோய் நின்றபடி பேசத் துவங்கினான்.

வீட்டிற்குள்ளிருந்து வரும் அம்மாவின் வசவுகளை காதில் வாங்கியபடி திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தேன். வழக்கமாக மாலை நேரம் டீக்கடையிலிருந்து திரும்பும்போது கிட்டியிருக்கும் புத்துணர்ச்சியை இழந்திருந்தேன். இனி மேற்கொண்டு தறிகளை இரவு பத்துமணி வரைக்கும் தெம்பாக ஓட்ட முடியுமா என்றும் தெரியவில்லை. ஏதோ ஆத்திரத்தில் பேசிவிட்டேனென்றாலும் அம்மாவை அப்படிப் பேசியது குறித்து குற்றவுணர்ச்சி உண்டாகி துன்புறுத்தத் துவங்கிற்று. மாட்டுக்கன்று ஆட்டுக்குட்டிகளுக்கு சிறு நோக்காடு என்றாலுமேகூட பொறுக்கமாட்டாது கண்ணீர் உகுக்கும் ஏழை மனதுக்காரிதான் என் அம்மாவும். இவர்கள் விசயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு ஈவு இரக்கமில்லாதவளாக நடந்து கொண்டாள் என்பதுதான் புரியவில்லை.

முன்பொருமுறை இது விசயமாகக் கிடைத்த அனுபவம்தான் காரணமாக இருக்குமோ எனத் தோன்றியது. அது அந்த வருடத்தின் தைப்பூசம் நெருங்கிக்கொண்டிருந்த காலம். அன்று அதிகாலை மணி ஐந்து இருக்கும். தறியோட்டிக் கொண்டிருந்தேன். தறிக்குடோனுக்கு வெளியே நின்றபடி சன்னல் வழியாக எட்டிப் பார்த்த இரண்டுபேர் வெளியே வருமாறு சைகை காட்டினார்கள்.

‘நாங்க பழனிக்கு பாதயாத்திரை போயிட்டிருக்கோம். எங்களுக்கெல்லாம் ஓபன்லபோயிப் பழக்கமில்ல… சித்தே உங்க டாய்லெட்டை யூஸ் பண்ணிக்கலாமா?’ எனக் கேட்டனர். எங்களுக்கெல்லாம் என்ற சொல்லை அவர்கள் பிரயோகித்த தொனி பிடிக்காமல் போனதால் இவர்களை அனுமதிப்பதா வேண்டாமா எனும் யோசனை உண்டாகியிருந்தது. ‘ என்ன யோசிக்கறேள்.. பாதயாத்திரா போறவாளுக்கு ஒரு உபகாரம் பண்றதுங்கிறது புண்ணியந்தானே.. பக்தாளுக்குப் பண்ற உதவிங்கிறது அந்த பகவானுக்கே பண்ற உதவியாக்கும்னு சாஸ்திரம் சொல்றது’ என்றார்கள். இது மேலும் கடுப்பைக் கிளப்ப ‘ இங்க தண்ணிச் செளகரியம் அவ்வளா கிடையாதுங் சாமி… பக்கத்துல வேற ஏதாச்சும் வீட்ல கேட்டுப் பாருங்க’ என்றேன்.

சாணி தெளித்து வாசல் கூட்டிக்கொண்டிருந்த அம்மாவின் நினைப்பு இது விசயத்தில் வேறு மாதிரியாக இருந்தது. ஐயருமாருகள் தன் வீட்டின் கக்கூஸில் போவதென்பது மிகப்பெரிய பாக்கியம் மிகப்பெரிய புண்ணியம் என்று அவளின் ஏழை மனது  நினைத்திருக்கலாம். சீமாரை வாசலிலேயே போட்டுவிட்டு ஓடிவந்தவள் ‘நீங்க போயிக்கங்க சாமி.. வேணுங்கிற தண்ணிய நாங்கொண்டாந்து தாறேன்’ என்றாள். கழிவறையிலிருந்த பக்கெட்டை எடுத்துக் கொண்டுபோய் குளியலறைச் சிமெண்ட் தொட்டியிலிருந்து தண்ணீரை நிரப்பிக்கொண்டும் வந்து வைத்தாள். மேலும் இரண்டு பிளாஸ்டிக் குடங்களிலும் கொண்டுவந்து வைத்தாள்.

இரண்டுபேர் மட்டும் இல்லை. குழந்தைகள் பெண்கள் ஆண்களென ஒரு கும்பலே அவர்களுடன் வந்திருப்பது பிறகே தெரிந்தது. அந்த ஒட்டுமொத்த கும்பலும் போனதில் குளியலறைத் தொட்டிபோக மாட்டுத்தாழிகளிலிருந்த தண்ணீரும் காலியானது. கடைசியில் போனவர்கள் சரியாக நீர் ஊற்றாமல் வெறுமனே போய்விட்டுப் போய்விட்டனர். கக்கூஸே நாறிப்போனது. அது தண்ணீருக்குத் தட்டுப்பாடு நிலவிய காலமென்பதால் போர்வெல்லிலிருந்து கிடைத்துக் கொண்டிருந்த சிறிதளவு நீரை பிற பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தியது போக மிச்சம்பிடித்து மிச்சம்பிடித்து கழிப்பறையை பழைய நிலமைக்குக் கொண்டுவருவதற்குள் அந்தப் புண்ணியகாரியம் அம்மாவின் ஏழை மனதை புண்படுத்தும் காரியமாக மாறிவிட்டிருந்தது. அந்த மோசமான அனுபவத்தில் கிடைத்த பாடம்தான் இந்தப் பெண்ணிடம் இப்படிக் கடினமாக நடக்க வைத்திருக்குமோ எனத் தோன்றியது.




இன்னொன்றையும் இங்கே சொல்லியாக வேண்டும். அகவை நாற்பத்தியிரண்டாகிறது. எனக்கு இன்னும் திருமணமில்லை. வீடு தொழில் என அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளும் அளவுக்கு வசதிகள் இருக்கிறது.  இருந்தும் பெண் கிடைக்கவில்லை. எனது ஜாதகம் எந்தெந்த பெண் வீடுகளுக்குப் போகிறதோ அந்த பெண் வீட்டார் எங்களைவிடவும் வசதி வாய்ப்புகளில் குறைவானவர்களாக இருந்தபோதிலும் அவர்களைத்தேடி என்னைவிடவும் அழகு அந்தஸ்து கல்வி மிக்கவர்கள் வந்து பெண்கேட்டு நின்றால் அவர்கள்தான் பாவம் என்ன செய்வார்கள் ?. அந்த தகுதிமிக்க மாப்பிள்ளைக்குத் தன் பிள்ளையை குடுக்கத்தானே செய்வார்கள்?.

இந்த பதினைந்து வருடங்களாக நான் பார்த்த பெண்களெல்லாம் என்னை விடவும் வசதி மிக்கவர்களாலேயே கபளீகரம் செய்யப்பட்டிருகிறார்கள். என் போன்றவர்கள் ஊருக்குப் பத்துப் பேர்களாவது இருக்கிறார்கள். ஏன் இவ்விதமென்று ஆராய்ந்தால் எண்பதுகளில் ஒரு பத்து வருடங்கள்போல முக்கால்வாசிப்பேர்கள் வயிற்றில் வளரும் குழந்தையை ஸ்கேன் பண்ணிப் பார்த்து பெண்ணாக இருந்தால் வயிற்றிலேயே அழித்துவிட்டதுதான்  அடிப்படையான காரணம் என்பது விளங்கும்.  ஆனால், என் அம்மாவைப் போன்ற பெண்களிடம் பேச்சுக் கொடுத்தால் இந்தக் காலத்துக் கொமுரிகளெல்லாம் ஊடடங்காம ஊருலகமெல்லாம் போயி படிச்ச திமிர்ல கண்ட சாதிக்காரனுகளையும் கல்யாணம் பண்ணிக்கிறாளுக… இதுதான் எங்க பசங்களுக்கெல்லாம் பொண்ணுக் கெடைக்காமப் போய்விட்டதுக்கு முக்கியமான காரணம் என்பார்கள்.

பாக்கறதுக்கு நம்ம சனத்துப் புள்ளையாட்ட இருக்குது.. வூட்டுக்காரனப் பார்த்தா எங்கியோ வடநாட்டுக் காரனாட்ட இருக்குது.. இங்க ஒவ்வொரு ஊருக்கும் எத்தன பசங்க வெட்டி முண்டமாத் திரியுறானுக? இந்த ஓடுகாலி முண்டைக்கு அதுல ஒரு பையன் கண்ணுக்கு தெரியலையாக்கும் என்கிற ரீதியில் இந்தப் பெண்ணைப் பார்த்ததும் எண்ணங்கள் உண்டாகி என் அம்மாவின் மனதில் வெறுப்பு ஊற்றெடுத்திருக்கலாம் என்றும் தோன்றியது.

கழிப்பறையிலிருந்து அந்தப் பெண் வெளிப்பட்டாள். இருந்திருந்தாற்போல திடீரென்று ஒரு அவமானத்திற்கு ஆளாகிவிட்டவர்களை நிமிர்ந்து நேர்கொண்டு பார்ப்பதற்கே ஒரு சங்கடம் உண்டாகுமல்லவா? அப்படியான சங்கடத்தில் நான் இருந்தேன்.



அலைபேசி உரையாடலை முடித்துக்கொண்ட அவ்விளைஞன் திண்ணையின் மீதிருந்த பயணப்பையை எடுத்து முதுகுக்கு கொடுத்தபடி  ‘வர்றங் சார்… ரொம்பரொம்ப தேங்க்ஸ்…’ எனச் சொல்லிக்கொண்டு கிளம்பினான். இருந்திருந்தாற்போல  திடீரென்று ஒரு அவமானத்திற்குள்ளானவர்கள் அந்த அவமானம் வடியும்வரை யார்முகத்திலும் விழிக்கவிரும்பாத யாருடனும் பேசவிரும்பாத குறுகி இறுகிய நிலைக்கு ஆளாவார்கள் அல்லவா? அப்படியான நிலையில் அந்தப் பெண் இருக்கிறாள் எனத் தோன்றியது. நன்றியும் சொல்லவில்லை. ‘கிளம்பறோம் சார்’ என்றுணர்த்தும் விதமான சிறு தலையாட்டலும்கூட இல்லை. மவுனமாக கணவனைப் பின் தொடந்தாள்.

சத்தம் மட்டும் சற்றே மெலிதாகியிருந்தது. மற்றபடி அம்மாவின் வசவுகளும் சாபங்களும் தன் ஸ்திதியை நொந்து தானே பரிதாபப்பட்டுக்கொள்ளும் ஒப்பாரிகளும் வெளிப்பட்டபடியே இருந்தன. ‘நீ இருந்திருந்தா எனக்கு இந்த நிலமை உண்டாகியிருக்குமா’ எனும்படியான பாடலை, செத்து சில ஆண்டுகளாகிவிட்ட அப்பாவை நினைத்து பாடிக்கொண்டிருப்பது கேட்டது.    கூடவே, குக்கரின் விசில் சத்தமும் காதில் விழுந்தது. தாளிக்கும் வாசனையும் வந்தபடியிருந்தது. சற்று நேரம் பிரமை பிடித்தவனைப்போல அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

இந்தப் பெண் ஒழுங்காகத் தண்ணீர் ஊற்றியிருப்பாளா? அந்த பாதயாத்திரை கோஷ்டியினரைப்போல அப்படியே விட்டுவிட்டுப் போயிருப்பாளோ? எனும் சந்தேகம் திடீரென உண்டானது.

கழிப்பறைக்குள் குழாய் வசதி இல்லை. வெளியிலிருந்துதான் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். உள்ளேயிருக்கும் பக்கெட்டில் போதுமான தண்ணீர் இருந்ததா என்றும் தெரியவில்லை. அந்தப் பெண் வெளியே பக்கெட்டைக் கொண்டுவந்து தண்ணீர் பிடித்துப்போனது மாதிரியும் தெரியவில்லை.  தண்ணீர் ஊற்றாமல் இருப்பின் நாமாவது ஊற்றி சுத்தம் செய்துவிடுவோம் நமக்கும் முன்னால் அம்மா பார்க்கநேர்ந்து அது அப்படியே கிடக்கும்பட்சத்தில் நிலமை இன்னும் மோசமாகிவிடும் என்று தோன்றியது.

இப்படியொரு எண்ணம் உண்டாகி அந்தக்கணமே நான் கழிப்பறைக்குப்போய் கதவைத் திறக்காமல் இருந்திருந்தால் இந்த அனுபவத்தை எழுதியிருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.  


கழிப்பறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் சிவப்புநிற பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் நிரம்பிக் கிடந்தது. தண்ணீரை டப்பாவில் முகர்ந்த மாதிரியோ கைகளில் அள்ளியமாதிரியோ எந்த அறிகுறிகளும் இல்லை. ஆச்சர்யமும் கேள்வியுமாக தரையோடு பதிக்கப்பட்ட கழிவு கோப்பையை உற்று நோக்கினேன்.   சற்று நேரத்திற்குமுன்பு அதில் யாரும்  ஒன்றுக்கோ இரண்டுக்கோ போனமாதிரியும் தெரியவில்லை. போய்விட்டுத்  தண்ணீர் ஊற்றியமாதிரியும் தெரியவில்லை. அரைவெள்ளை நிறத்து கழிவு கோப்பை சுத்தமாக காட்சியளித்தது.  ஒன்றுக்கும் இரண்டுக்கும் அப்பாற்பட்ட மூன்றாவது ஒன்றை மூடி மறைத்தபடி.

   





சிறுகையளாவிய வாழ்வு…


                                                                            
                                          
                             1
குழந்தைகளின் எடை போதுமான அளவு கூடியிருந்தது. பெரியவள் இரண்டு கிலோ எழுநூற்றியம்பது கிராமும் சின்னவள் இரண்டு முன்னூறு என்கிற அளவுக்கும் உடல் ஊக்கம் பெற்றிருந்தனர். இருவருக்குமான ஜனனநேர வித்தியாசம் வெறும் ஒரு நிமிடம்தான். பிறந்தபோது பெரியவளின் எடை ஒண்ணு எழுநூற்றியம்பதாகவும் சின்னவளின் எடை ஒண்ணு முந்நூறாகவும் இருந்தது. அடுத்த அரைமணி நேரத்துக்குள் பச்சிளஞ்சிசுக்களுக்கென்றே செயல்படும் இந்த மருத்துவமனைக்கு குழந்தைகள் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். மயக்கம் தெளிந்து உடல்தேறி அடுத்த நான்கு நாட்களுக்குப் பிறகே அக்காவையும் இங்கே அனுப்பி வைத்தனர். மருந்துண்டு மாத்திரைகளுண்டு இருமாமல் தும்மாமல் குனியாமல் நிமிராமல் புரண்டு படுக்காமல் குத்தவைத்து உட்காராமல் குலுங்கிக்குலுக்கிச் சிரிக்காமல் குலுங்கிக்குலுங்கி அழாமல், மருத்துவர்கள் சொன்னபடியெல்லாம் பாங்காக இருந்து பெற்றெடுத்த பிள்ளைகளை ஐந்து நாட்களுக்குப் பிறகே முதன்முதலாகவும் கண்குளிரவும் அக்காவுக்குப் பார்க்க வாய்த்தது. அவளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த தனி அறையில் இருந்தபடி சிஸ்டர்கள் வந்து கூப்பிட்ட நேரத்தில் ஓடிப்போய் தாய்ப்பாலைக் கறந்து கிண்ணத்தில் வைத்துவிட்டு வந்தபடியிருந்தாள்.  இருபத்தியெட்டு நாட்களாக வைத்து பராமரித்து வந்த பிரத்தியேக அரங்கிலிருந்து நேற்று மாலையில்தான் அக்காவின் அறைக்கு குழந்தைகளை மாற்றியிருந்தனர்.

சற்று முன்னர் செவிலியர்கள் புடைசூழ ரவுண்ட்ஸ் வந்த பெரிய டாக்டர் குழந்தைகளைப் பரிசோதித்துவிட்டு ‘இனியொண்ணும் பிரச்சனையில்லை.. இன்னிக்கே வேணும்னாலும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போகலாம்’ எனக் கூறினார். அதற்கு முன்பாக அவர் குழந்தைகளைப் பரிசோதிக்கும்போது ‘அக்காளும் தங்கச்சியும் என்ன பண்றீங்க..? சமர்த்தா பால் குடிச்சீங்களா? நல்லா தூங்கினீங்களா..?’ என பெரியவளின் கன்னத்தைத் லேசாகத் தட்டியும், சின்னவளின் கீழுதடை மென்மையாக பிடித்திழுத்தபடியும் செல்லம் கொஞ்சினார். அச்செய்கை எனக்கு மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. என் அக்காவின் முகத்தில் பெருமிதமும் பூரிப்பும் இழையோடிய வண்ணமிருந்தது. இந்தக் காட்சியை என் அம்மா மட்டும் பார்த்திருக்கும் பட்சத்தில் டாக்டரையும் அவரின் ஏழேழு தலைமுறையையும் வாழ்த்தியபடி காலத்துக்கும் பெருமையாகச் சொல்லிக்கொண்டே இருந்திருப்பாள் எனத் தோன்றியது.

மருத்துவரும் செவிலியர்களும் வெளியேறியபின் மச்சானுக்குப் போன் பண்ணினேன். ‘இன்னிக்கே போகலாம்னு சொல்லீட்டாங்களா… ரொம்ப சந்தோசம்.. ஆனா, இனிமே நான் கெளம்பி வாடகைக்கு காரு எதையாச்சும் புடிச்சிட்டு வந்து சேர்றதுக்கு எப்படியும் சாயுங்காலம் ஆயிருமே.. மொதமொதல்ல குழந்தைகளை வீட்டுக்குக் கூட்டீட்டு வாரது எறங்கு பொழுதுலயா கூட்டீட்டு வர்றது..? இன்னிக்கு ஒரு பொழுதும் இருக்கட்டும் .நாளைக்கு காலையில் நேரமே வந்துடறேன்’ என்றார். ’டிஸ்சார்ஜ் பண்ணும்போது எப்படியும் இருபது இருபத்தஞ்சாவது கட்டவேண்டீது வரும்.. ஒரு எடத்துல சொல்லி வெச்சுருக்கேன்.. நைட்டுத்தான் ஆகும்னாங்க.. அதையும் ரெடி பண்ணீட்டு நாளைக்கு காலைலயே வந்தர்றேன்..’ என்றும் கூறினார்.

கைகளையும் கால்களையும் உதறியபடி அர்த்தத்தினால் களங்கமுறாத சிறிய பளிங்கு விழிகளால் வெறும் பார்வை பார்த்தபடியிருந்த குழந்தைகள் இருவரும் தூங்கிப் போயிருந்தனர். மச்சான் சொன்னதை அக்காவிடம் தெரிவித்துவிட்டு ’செல்வி அக்கா வந்துவிடுவார்கள்.. போய்க் கூட்டி வருகிறேன் ‘ என்றபடி அறையைவிட்டு வெளியேறினேன். காரிடாரில் நடந்துவந்து கைப்பிடிச்சுவரில் வலது உள்ளங்கையை வைத்து வைத்து எடுத்தபடி படிக்கட்டுகளில் இறங்குகையில் பக்கவாட்டுக் காலியிடத்தின் வேப்பமரமும் வாழைமரங்களின் அகன்ற பசிய இலைகளும் வழக்கம்போலவே பார்வையில் விழுந்தன.



இரண்டு நாட்கள்.. அதாவது, நாற்பத்தியெட்டு மணி நேரம் ஒரு இடத்தில் சேர்ந்தார்ப்போல தங்கிவிட்டால் அவ்விடம் குறித்த ஏதேனும் ஒரு வகைப் பற்று மனதிலே உண்டாகிவிடும் என்று சொல்வார்கள். இருபத்தியெட்டு நாட்கள் தங்கி இரவு பகல் எல்லா நேரமும் இந்த காரிடாரில் நடந்து இந்த மரங்களையெல்லாம் வேடிக்கை பார்த்தவாறே இப்படிக்கட்டுகளின் வழியாக ஏறியுமிறங்கியுமிருக்கிறேன். நாளையிலிருந்து இவற்றையெல்லாம் பார்க்கவே போவதில்லை என்கிறரீதியிலான பிரிவுணர்வு மெல்லிய அளவில் உண்டாகியது.ரயில்நிலையத்தையொட்டி ரயில்வே ஊழியர்களின் குடியிருப்புகளுக்குப் பின்னால் இருக்கும் சிறு மைதானம்போன்ற இடமும்­ நினைவுக்கு வந்தது. புல்பூடுகள் மண்டிய நிலப்பரப்பும், மேயும் வெள்ளாடுகளும், விளையாடும் சிறுவர்களும், கொன்றை புங்கன் புளிய மரங்களின் நிழலும், அடுக்கப்பட்டுக் கிடக்கும் இருப்புப்பாதைத் தளவாடங்களுமாக அவ்விடம் இருக்கும். அங்கேதான் வீட்டிலிருந்து மதியச் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு பனிரண்டுமணி வண்டியிலே வரும் செல்வியக்காவை அழத்துவரும் பொருட்டு பைக்குடன் தினமும் காத்திருப்பேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறத்தில் விடிய விடிய செயல்படும் டீக்கடையும் , ஒட்டியே பக்கவாட்டில் இருக்கும் மெடிக்கல் ஸ்டோர்சின் இறக்கிவிடப்பட்ட ஷட்டரும் குளிர்ச்சியான வாசற்படியும் ஞாபகம் வந்தன. தினமும் நள்ளிரவையொட்டி அந்த டீக்கடைக்குப் போவதும் பூட்டப்பட்டிருக்கும் மருந்துக்கடை ஷட்டரில் முதுகு சாய்த்தபடி குளிர்ச்சியான வாசற்படியமர்ந்து நள்ளிரவின் நிசப்தம் சுமந்த தார்ச்சாலையையும் , அரசு மருத்துவமனையையும் வேடிக்கை பார்த்தவண்ணம் தேநீரை உறுஞ்சியவாறும் சிகரெட்டைப் புகைத்தபடியும் அமர்ந்திருப்பதும் இந்த இருபத்தியெட்டு நாளில் தவிர்க்க முடியாத ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டிருந்தது. இன்றே கடைசி. நாளை முதல் அந்த இடத்தையும் அது கொடுக்கும் அனுபவத்தையும் பிரியப் போகிறேன் .

மணி பதினொன்று முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. சூரியன் உச்சிக்கு வந்து கொண்டிருந்தது. செல்வியக்கா வருவதற்கு இன்னும் அரைமணி நேரம்போல இருக்கிறது. மச்சானின் உடன்பிறந்த மூத்த சகோதரி. அக்காவுக்கு அண்ணி. எனக்கும் அண்ணி முறைதான் என்றாலும் ஆரம்பத்திலிருந்தே அக்கா என்றே கூப்பிட்டுப் பழகிவிட்டது. செல்வியக்காவின் கணவர் ரயில்வேயில் பணிபுரிகிறார். அவர்களின் வீட்டிலிருந்து இங்கே வர ஏகப்பட்ட பேருந்துகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒன்று என இருக்கிறது. ரயிலில் இலவசமாகவே பயணித்துக் கொள்ளலாம் என்பதால் அந்த சலுகையைப் பயன்படுத்தும் பொருட்டு தினமும் காத்திருந்து இந்த பனிரெண்டுமணி வண்டியைப் பிடித்து  மதிய உணவைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறார்.
சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். வெள்ளாடுகளும் குட்டிகளும் மேய்ந்தபடியிருந்தன. கடந்துபோய் மோட்டார் சைக்கிளை அடுத்திருந்த கொன்றை மரத்தின் நிழலில் நிறுத்தினேன். அடுக்கப்பட்டிருந்த அடுக்கிலிருந்து பிரிந்துகிடந்த தண்டவாளக் குறுக்குக் கட்டையின்மேல் அமர்ந்து கொண்டேன். ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.பொழுது போகாமல் வேடிக்கை பார்க்க வந்திருப்பார்போல. வயசான ஒரு பெரியவர் சற்று தள்ளி இன்னொரு குறுக்குக் கட்டையின் மேல் அமர்ந்திருந்தார். கிழக்காகவோ மேற்காகவோ கொஞ்ச நேரத்திற்கு முன்பாக நின்று போயிருந்த வண்டியிலிருந்து இறங்கியவர்களில் சிலர் புல்பரப்பின் நடுவே வரும் ஓற்றையடிப் பாதையின் வழியாக வந்து கொண்டிருந்தனர். செல்வியக்கா வருகின்ற பாதையும் இதுதான். அவர் வருவதற்கு இன்னும் இருபது நிமிடங்களுக்குமேல் இருக்கிறது.

அப்பாவுடைய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அநேகமாக அம்மாதான் எதிர்முனையில் இருப்பாள் எனத் தோன்றியது. அம்மாவேதான். ‘ஏஞ்சாமி… புள்ளைகளெல்லாம் நல்லாருக்காங்கள்ளோ.. டாக்டர் வந்தாங்களா? என்ன சொன்னாங்க?’ என்றாள்.

“அதெல்லாம் நல்லாருக்கிறாங்க.. டாக்டரு இன்னிக்கே வேணாலும் வூட்டுக்குக் கூட்டீட்டுப் போலாம்னு சொல்லீட்டாரு.. மச்சானுக்குப் போன் பண்ணுனேன். இனிமேல் கிளம்பி வந்து சேர்றதுக்கு சாயந்தரம் ஆகீரும்.. எறங்கு பொழுதுல எதுக்கு? நாளைக்கு காலைல நேரமே வந்தர்றேன். கூட்டீட்டுப் போயிக்கலாம்னுட்டாங்க..” 
“ஆமாஞ்சாமி.. மொதமொதல்ல வார்றது எறங்கு பொழுதுல எதுக்கு கூட்டியாறது? நாளைக்கே வாங்க.. அண்ணனக்கீது வரச்சொல்றதா..?”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நாங்களே வந்தர்றோம்..”
“நாளைக்கு பணம் எவ்வளவு கட்ட வேண்டீதிருக்கும்னு ஏதாச்சும் சொன்னாங்ளா..?”
“இன்னும் ஒண்ணும் சொல்லக் காணோம். எப்படியும் இருபதாவது கட்டவேண்டீது இருக்கும்னு நெனைக்கறேன்..”
“ இந்த ஆஸ்பத்திரீலயும் செலவு ஒரு லட்சத்தைத் தாண்டீருமாட்டத்தான் இருக்குது..”
“ஆமாமாம். தாண்டீரும்னுதான் நெனைக்கறேன்..”
“ஆனா ஆவுது.. நாளைக்கு எல்லாருமாச் சேர்ந்து பாடுபட்டுக் கட்டுனாப் போவுதுபோ.. ஆண்டவன் மாணிக்கமாட்ட ஒண்ணுக்கு ரண்டு புள்ளைகளைக் குடுத்தானே.. அதச்சொல்லு..”
“ஆமாமாம்..”
“செல்வி வந்துட்டாளா..?”
“அவீயள எதிர்பார்த்துத்தான் நின்னுட்டிருக்கேன்..”
“செரி.. வந்தா பர்த்து பத்தரமா கூட்டீட்டுப்போ.. நாளைக்கு எல்லாரும் பார்த்து பத்திரமா வந்து சேருங்க.. அப்ப போன வெச்சுருட்டா..” 
“ம்.. வெச்சுரு..”
                                                   2 
           
மாவட்ட ஆட்சியர் அலுவலக நிறுத்தத்தில் இறங்கி , பேருந்து போன திசையிலேயே நடக்கத் துவங்கினேன். மதியநேரத்தின் வெயில் உக்கிரமாக இறங்கிக் கொண்டிருந்தது. வலது கரம் பற்றிக்கொண்டிருந்த குச்சிக்கைப்பிடிப் பையில், பெட்சீட்டும், மாற்றுடைகளும், காபி பிளாஸ்க்கும் சில்வர் டம்ளர் உணவுத் தட்டு உள்ளிட்ட பொருட்களும் இருந்தன. சட்டைப் பையில் மாகாளியாத்தா கோவில் திருநீறு பொட்டலம் இருந்தது. திருநீறை அக்காவின் நெற்றியில் பூசிவிட்டு பொட்டலத்தை அவள் தலையணைக்கு அடியிலேயே வைத்துவிடவேண்டுமென அம்மா கூறியிருந்தாள். புதன் வெள்ளிக் கிழமைகள்தோறும் மாகாளியாத்தா கோவிலுக்கு அவள் நடையாக நடந்து கொண்டிருந்தாள். 

வளைவில் திரும்பியதும் நான்கு மாடிகளைக் கொண்ட அந்த மருத்துவமனை தென்பட்டது. நாலாவது மாடியின் உச்சியில் கருப்பையில் குழந்தை இருக்கின்ற படத்துடன் கூடிய பெரிய அளவிலான பெயர்ப்பலகை நிறுவப்பட்டிருந்தது. மருத்துவமனை வரவேற்பு வளாகமெங்கும் தம்பதிகளின் கூட்டமாக இருந்தது. பெரும்பாலும் மத்திம வயதுகளைக் கடந்த கணவன் மனைவிகள். நாற்காலிகளில் அழைப்பை எதிர்நோக்கி அமர்ந்து கொண்டிருந்தனர். மாடிகளுக்கான பாதை துவங்கும் இடத்தின் பக்கச்சுவரினில் சோதனைக் குழாய்மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகள் டாக்டரம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மாட்டப் பட்டிருந்தன. ஐம்பத்தி மூன்று வயதுப் பெண்ணொருவர் தன் அறுபது வயதுக் கணவரோடும்  சோதனைக் குழாய் சிகிச்சைவழி தான் பெற்றெடுத்த குழந்தையோடும் முகமெல்லாம் சிரிப்பாக டாக்டரம்மாவோடு நிற்கும் புகைப்படம் பெரிய அளவில் தனித்து மாட்டப்பட்டிருந்தது. அருகிலேயே அது பற்றிய நாளிதழ் செய்திகள் வெட்டி ஒட்டப்பட்டிருந்தது. அறை எண் நானூத்தியேழு நான்காவது மாடியிலிருப்பதாகக் கூறினார்கள்.   

நானூற்றியேழாவது அறையில் அக்காவைத் தவிர வேறொரு பெண்ணும்  மருத்துவமனை கொடுத்திருந்த பிரத்யேக உடையுடன் தனக்கான கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள்.  இருவருக்கும் குளுக்கோஸ் இறங்கியபடியிருந்தது. இருவருமே சற்றே வாய்பிளந்த நிலையில் அரை உறக்கத்தில் இருந்தார்கள். அக்காவுடைய முகத்தில் இருப்பது போலவே அந்த பெண்ணினுடைய முகத்திலும் தனியாக ஊர்வந்து சேரத் தெரியாத ஒரு பட்டிக்காட்டுத்தன்மை படிந்திருந்தது. மச்சானைத் தவிர வயதான பெண் ஒருவரும் அந்த அறையில் இருந்தார்.

சற்று நேரத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிவிட்டிருந்தோம்.  அக்காவைப் போலவே தாய்மைப் பேறுக்காக வந்திருக்கும் அந்த இன்னொரு பெண் கோபியைச் சேர்ந்தவர் என்றும் பெயர் பாலாமணி என்றும் கூறினார்கள். துணையாக வந்திருக்கும் அந்த வயசான பெண் அவருடைய மூத்த சகோதரியாம். பெயர் பார்வதியம்மாள். அக்காவின் நெற்றியில் மாகாளியாத்தாவின் விபூதியை வைத்துவிட்டு பாலாமணியக்காவிடமும் நீட்டினேன். எந்தச் சாமியுடையதோ? கோவிலுடையதோ? அவருடைய நெற்றியில் ஏற்கனவே திருநீறு வைக்கப் பட்டிருந்தது. இருப்பினும் நான் கொடுத்ததையும் ஆர்வமாக இட்டுக்கொண்டார். வேறு வழியே இல்லாதபோது நம்புவதைத் தவிர வேறுவழியே இல்லைதானே?

சோதனைக் குழாயினுள் வளர்க்கப்பட்ட கருமுட்டைகளை கர்ப்பப்பையினுள் வைக்கும் நிகழ்வு மாலை நான்கு மணிக்கு ஆரம்பமானது. அக்கா உட்பட தாயாகும் சிகிச்சைக்கு வந்திருக்கும் பெண்கள் அனைவரையும் செவிலியர்கள் புடைசூழ வந்த பணியாளர்கள் ஸ்ட்ரெச்சரிலே படுக்கவைத்து ஒருவர்பின் ஒருவராக கூட்டிக்கொண்டு போனார்கள். இந்த பேட்ச்சில் மொத்தம் நாற்பது பெண்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என பேசிக் கொண்டார்கள். நான்கு மாதங்களுக்கு முந்தைய போன பேட்சில் மொத்தம் இருபத்தி ஐந்து பெண்களுக்கு கருமுட்டைகள் வைக்கப்பட்டதில் இருபத்தியிரண்டு பேருக்கு குழந்தைப் பேறு கிடைத்துவிட்டதாம். தவறிப்போன மூன்று பேருக்கும் இந்த முறை பாதிக் கட்டணத்தில் சிகிச்சை கொடுக்கப்படுகிறது என்றும் பேசிக் கொண்டார்கள்.
       
கருப்பையினுள் கருமுட்டைகளை வைத்தபின் மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பிலேயே இருக்கவேண்டியதன் பொருட்டு நான்கு நாட்களுக்கு மருத்துவ மனையிலேயே இருக்கச் சொல்லியிருந்தனர். அந்த நான்கு நாட்களும் நான் ஆஸ்பத்திரியிலேயே தங்கிக் கொண்டேன். மச்சான் ஊருக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். டாக்டர்கள் அடிக்கடி வந்து ரத்த அழுத்தம் டெம்பரேச்சரெல்லாம் பரிசோதித்துவிட்டு  மருந்து மத்திரைகளை எழுதிக்கொடுத்தபடியே இருந்தனர். முக்கியமாக இந்த பெண்களுக்கு குறிப்பிடத் தகுந்தஅளவு கரு வளர்ச்சியடையும் வரை சளியோ காய்ச்சலோ வந்துவிடக்கூடாதாம்.  அதிகமான தொடர் தும்மலினாலும் இருமலினாலும்  கலைந்துவிடும் அபாயம் இருக்கிறதாம். மருந்துக் கடையும் கேண்டீனும் தரை தளத்தில் இருந்தது.   பார்வதியம்மாவினால் அடிக்கடி நான்கு மாடிகள் இறங்கியேறுவது முடியாத காரியமென்பதால்,தேவையான பணத்தைக் கொடுத்து பாலாமணியக்காவிற்கான மருந்து மாத்திரைகளையும் உணவையும் என்னையே வாங்கிவந்துவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.   

இரவு எட்டு மணிக்குப் பிறகு மெடிக்கலுக்கும் கேண்டீனுக்கும் போய்வரவேண்டிய வேலை மிகவும் குறைவாகத்தான் இருந்தது. ஆஸ்பத்திரி சூழலில் தூக்கமும் வருவதில்லை. அக்காவுக்கும் பாலாமணியக்காவுக்கும் அட்டெண்டர்களாகிய நானும் பார்வதியம்மாளும் அறைக்கு வெளியே வராண்டாவில் இரவு வெகுநேரம் வரை அமர்ந்து பேசியபடி இருப்போம். மற்ற அறைகளின் அட்டெண்டர்களும் உரையாடலில் கலந்துகொள்வதுண்டு.  தாய்மைபேறுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் பட்டிக்காட்டுத்தன்மை பிரதிபலிக்கும் முகத்தையுடைய அக்காவுக்கும் பாலாமணியக்காவுக்கும் தலா ஒரு புத்திரசோகக் கதை இருந்தது, அதனை பகிர்ந்துகொண்டோம்.


பார்வதியம்மாள் சொன்ன பாலாமணியக்காவின் கதை..

 “ நாங்க அக்கா தங்கச்சிக மொத்தம் மூணுபேரு அப்புனு.. பாலாமணிதான் கடைசி. எனக்கு நேர் எளையவளுக்கு அப்புறம் ரண்டு ஆம்பிளைப் பிள்ளைக பொறந்து ரண்டுமே நெலைக்கல.. அஞ்சு வருசம் ஆறுவருசம்ங்கிற அளவுல வெவ்வேற காயலுக வந்து போயிருச்சுக. அதுக்கெல்லாம் வெகுநாளைக்கப்பறம் பொறந்தவதான் இவ. எம்பட கல்யாணத்தப்போ இவ வயசுக்குங்கூட வராத சின்னப் புள்ளை. நாங்க ரண்டுபேரும் பெரிய பொம்பளைக ஆனதுக்கப்பறம் பொறந்ததால தங்கச்சிங்கிற நெனப்பே வந்ததில்லே.. புள்ளமாதிரித்தான் வளர்த்துணோம்.

நாங்க மூத்தவளுக ரண்டுபேரும் வாக்கப்பட்டுப் போனது பார்த்தீனா வரக்காடுக. அங்க பெருசா வசதி வாய்ப்புன்னு ஒண்ணுமில்ல.. ஏதோ வெள்ளாடு குட்டீனு மேச்சு காலத்த ஓட்ற கஷ்ட சீவனம்தான். ஆனா, பாலாயாளக் கட்டிக் குடுத்தது நல்ல எடம். முப்போகமும் நெல்லு கரும்பு வாழைனு வெளையிற வயக்காடு. பண்ணையமும் பரவடிதான். என்ன..? மாப்பிள்ளைக்கு அப்பவே கொஞ்சம் வயசு அதிகம். எப்படியும் இவளவிட ஒரு இருபது வருசத்துக்காவது மூத்திருப்பாங்கன்னு நெனைக்கறேன். இருந்தா இருந்துட்டுப் போச்சாது.. புள்ள அக்காமாருகளப் போல ஆடு கறக்கவும் பூன நக்கவும்ங்கிற மாதிரி தருத்துனம்புடிச்ச பொழைப்பு பொழைக்காம நல்ல முறையா இருப்பான்னு அய்யன் ஒரே மனசா கட்டிக் குடுத்தாங்க. கட்டிக் குடுத்ததிலியும் தப்பே இல்லை. தலநாள்ல ஆம்பிளைப் பையனப் பெத்துக்கிட்டு அப்படிப் பொழச்சா. வயசுதான் கொஞ்சம் எச்சாப் போச்சேதவிர மாப்பிள்ளை தங்கமான மனுசன். வெத்தல பொகையில பீடி சாரயம்னு ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. தோட்டமுண்டு ஊடுண்டு தானுண்டு தன்னோட வேலையுண்டுன்னு இருக்குற மசச்சாமி. சங்காத பாட்டாளி. இந்த ரண்டு வருசமாத்தான் கொஞ்சம் ஒடம்புக்கு செரியில்லாமப் போயிருச்சு. இங்க ஆசுபத்திரிக்கெல்லாம்வந்து ராப்பகலாத் தூக்கங்கெட்டா எச்சாக்கீது செரியில்லாமப் போயிட்டா என்ன பண்றதுனுதான் ‘செரி.. நீங்க பொட்டாட்ட அங்கியே வூட்டோட தோட்டத்தோடயே இருங்க.. நாங்க பார்த்துக்கிறோம்னு எம் மவனுக என்னையத் தாட்டியுட்டுட்டாங்க..  எனக்கும் இந்த ஆசுபத்திரிக்காத்து ஒத்துக்காதுதான். இருந்தாலும் ஏன் வந்து உக்காந்துக்கிட்டு இருக்கறேன்னா அந்தளவுக்கு பாலாயாளுக்கும் அந்த மசமனுசனுக்கும் கடன் பட்டிருக்கிறேன். அந்தளவுக்கு வாங்கித் தின்னுருக்கிறேன்.

இவ கால்வெச்சதுக்கு அப்பறம் அங்க யோகம் மீறுன வேலையாப் போயிருச்சு.. இந்த வருசம் ஒண்ணு நாளவருசம் ஒண்ணுன்னு சொல்லிச்சொல்லி ரண்டுமூணு கிரையம் பண்ணுனாங்க. கட்டுத்தாரையப் போயி பார்த்தா மாடு எருமைனு ஆனைக கணக்கா சும்மா வைக்கப்போரு மாதிரி நின்னுட்டிருக்கும். ஊட்டுக்குள்ள போயிப்பார்த்தா பாலு தயிறு நெய்யின்னு அப்படியொரு செல்வாக்கு. பையனும் நல்லா சொழுசொழுனு மூங்கக்குச்சிமாதிரி வாட்டசாட்டமாத்தான் வளர்ந்தான். கையி காலு மேலெல்லாம் பார்த்தீனா சும்மா எண்ணையப் போட்டு உருவிட்ட மாதிரி அப்படி நெகுநெகுனு இருக்கும். என்ன..? படிப்புத்தான் ஏறலை. பன்னெண்டாவது பெயிலாப் போனவுடனே பள்ளிக்கூடத்துக்குப் போக மாண்டேன்டான். செரி.. படிக்காட்டிப் போவுது.. ஏவாரத்தப் பழகுனா தனியா ஒரு கடை வெச்சுக் குடுத்துரலாம்னு ஒரக்கடையொண்ணுக்குத் தாட்டியுட்டாங்க. ஒருவாரம்போல பஸ்ஸுல போயிட்டு பஸ்ஸுல வந்துட்டிருந்தவன் கடை முதலாளி வெச்சிருக்கிறாப்லயே தனக்கும் ஒரு புல்லட்டுப் பைக்கு வாங்கிக் குடுத்தாத்தான் வேலைக்குப் போவேன்னுட்டான். இங்கதான் அப்பாவுஞ்செரி.. அம்மாளுஞ்செரி.. மகம்பேச்சுக்கு மறுபேச்சு பேசறதில்லையே..? எத்தனையோ ஆயிரத்துக்கு புல்லட்டுப்  பைக்கு.. அதுவும் புதுசாவே வாங்கிக் குடுத்தாங்க. அதுக்குப் பிறகு ஒண்ணும் பிரச்சினையில்லை. ஒரு ரண்டு வருசமாட்ட அவம்பாட்டுக்கு வேலைக்குப் போயிட்டிருந்தான்.

அன்னிக்கு கடையிலிருந்து மத்தியானமே வந்துருக்கிறான். கட்டுத்தாரயில வேலையா இருந்தவ பைக்குச் சத்தங்கேட்டு எட்டிப் பார்த்துட்டு ‘ஏஞ்சாமி… இன்னேரத்துக்கே வந்துட்டே..? மேலுக்குக்கீது சுகமில்லையான்னு’ கேட்ருக்கிறாள். அதெல்லாமொண்ணுமில்லைனு கதவ நீக்கீட்டு ஊட்டுக்குள்ள போயிருக்கிறான். இவ மேற்கொண்டு ஒண்ணுங் கேட்டுக்கில.. நெனைச்சுக்கவுமில்ல..

நெனைக்கறதுக்கு என்ன இருக்குது? முன்னப்பின்ன ஏதாச்சும் அறிகுறிக தெரிஞ்சிருந்தா நெனைச்சிருக்கலாம். அப்படித்தான் எந்த அறிகுறியுமே இல்லையே..? இவபாட்டுக்கு வேலைய முடிச்சுட்டுப் போயிருக்கிறா. ஊட்டுக் கதவு சும்மா சாத்திக் கெடந்துருக்குது. மாடிக்குப் போற படிக்கட்டுக்குக் கீழ செருப்புக் கெடந்துருக்குது. போயி எட்டிப் பார்த்தா ரண்டு கையையும் தலைக்கு வெச்சுக்கிட்டு படிக்கட்டுமேல உக்காந்துட்டிருந்திருக்கானாம். ‘அட.. ஏன்..? இங்க வந்து இப்படி உக்காந்துக்கிட்டு இருக்கேனு ‘ கேட்டிருக்கிறாள். எந்தப் பதிலுமே இல்லையாமா. மறுபடியும் கேட்கவும் ‘என்னைய எதுவுங் கேக்காத.. என்ற சோலி முடிஞ்சுதுபோன்னு..’ கையை ரண்டையும் ஒதறீட்டு எந்திரிச்சவன் நிக்கமுடியாம அப்படியே படிக்கட்டுலயே உழுந்துட்டானாம்.

தோட்டத்தில வேல செஞ்சிட்டிருந்த ஆளுக கொழுந்தனாரு எல்லாம் இவ போட்ட கூப்பாட்டக் கேட்டு ஒடியாந்து பார்த்தா.. அப்பவே கண்டிசன் மீறிப்போயிருச்சாம். அன்னிக்கு ராத்திரி பன்னெண்டு மணியிருக்கும். இதே ஈரோடு பெரியாஸ்பத்திரியிலதான் நாங்கெல்லாம் வாய்வறண்டு நாவறண்டு மனசு வறண்டு உக்காந்துட்டிருக்கறோம். ஐசீ ரூம்லயிருந்து கூப்புட்டு பையன் போயிருச்சின்ட்டாங்க.

அந்த வேதனையிலயே பத்து வருசம் போயிருச்சு. ஒடம்புக்குச் செரியில்லாமப் போனதுக்கப்பறம்தான் நாமளும் போயிட்டா இவ அனாதையாப் போயிருவாளேனு கொழுந்தனாருக்கு செரியான வெசனமாப் போச்சு. செரி.. ஒரு கதவை அடச்ச ஆண்டவன் இன்னொரு கதவை திறக்காமயா போயிருவாங்கிற நம்பிக்கைல இந்த வைத்தியத்துக்கு ஏற்பாடு பண்ணி நடந்துக்கிட்டிருக்குது.”      

நான் கூறிய என் அக்காவின் கதை…
“அக்காவுக்கு அவளோட இருபத்தியொண்ணாவது வயசுல கல்யாணம் பண்ணி வெச்சோம். எங்க அப்பா அம்மாவுக்கு ரண்டு பையன் ஒரு பொண்ணுன்னு மொத்தம் மூணு பிள்ளைகள். அக்கா அண்ணனுக்கு இளையவள். எனக்கு மூத்தவள்.  மச்சான் அப்போது நூல் மில்லுக்குப் போய்ட்டிருந்தாரு. கல்யாணத்தின்போது வேலை பர்மிட் ஆகாமல் இருந்தது. கூடிய சீக்கிரமே ஆயிரும் என்றார்கள். அன்னிக்கெல்லாம் மில்லு வேலைங்கிறது பர்மிட்டாயிட்டா கவர்மெண்ட் வேலைக்கு சமம்ங்கிறதால நம்பிக்கையோட இருந்தோம். எங்க நம்பிக்கை வீண் போகலை. கல்யாணமாகி ஆறே மாசத்துல வேலை பர்மிட் ஆயிருச்சு. ஒரே வருசத்துல பையனும் கெடச்சுட்டான். அக்காவுக்கு யோகம்தான். ஆண்டவன் மொகம் முழிச்சிட்டான்னு சந்தோசமா இருந்தோம்.

மொத நாலு வருசம் எந்தப் பிரச்சனையுமில்லை. எல்லாம் நல்லபடியாத்தான் போய்க் கொண்டிருந்தது. அப்புறம் மில்லுல ஏதோ காரணத்துக்காக் ஸ்ட்ரைக் பண்ணினாங்க.  போராட்டம் மீட்டிங் பேரணி என எல்லாம் நடந்தது. இதோ முடிஞ்சுரும் அதோ முடிஞ்சுரும்னு ஒரு வருசம் போல வீட்டு வாடகையைக் கட்டீட்டு கைக்காசையோ கடன்வாங்கியோ எப்படியோ சமாளிச்சிட்டிருந்தாங்க. ஒரு கட்டத்தில்  எதா இருந்தாலும் கோர்ட்ல போய் பார்த்துக்குங்கன்னு மில்லை இழுத்துப் பூட்டீட்டாங்க. அதுக்கப்புறம் சொந்த ஊருக்கே வந்து தறிநெசவு பால் கறவைன்னு ஏதோ அவுங்களால முடிஞ்சதச் செஞ்சுட்டு காலத்தை ஓட்டீட்டிருந்தாங்க. பையன் உள்ளூர் அரசாங்கப் பள்ளிக்கு போய்ட்டிருந்தான்.




அப்போதெல்லாம் செல்போன் வீட்டுப்போன் என எங்ககிட்ட எதுவும் கிடையாது. முக்கியப்பட்ட உறவுகளிடம் பக்கத்துல இருக்கற மளிகைக் கடை நெம்பரைத்தான் குடுத்து வெச்சிருந்தோம். அந்த நெம்பருக்கு ஒரு நாள் சாயுங்கால நேரம் மச்சானிடமிருந்து போன் வந்தது. பையனுக்கு உடம்பு செரியில்லன்னு காங்கயம் கூட்டீட்டு வந்தோம். டைபாய்டு காய்ச்சல்னு சொல்லி பெட்ல அட்மிட் பண்ணீட்டாங்கன்னு கூறினார். நான் உடனே கிளம்பிப் போனேன். நான் போய்ச் சேரும்போது மணி நைட்டு எட்டுக்குப் பக்கமா இருக்கும். அப்போ பையன் நல்லா உணர்த்தியாத்தான் இருந்தான்.

மஞ்சள் நிறத்தில் மருந்து கலக்கிய குளுக்கோஸ் இறங்கிக்கிட்டிருந்தது. என்னைப் பார்த்ததும் முதலில் வெட்கப்பட்டமாதிரி ஒரு சிரிப்பு சிரிப்பான். பிறகு கொஞ்ச நேரம் கழிச்சுத்தான் வெட்கமெல்லாம்போயி பேசவே ஆரம்பிப்பான். அப்பவும் சிரித்தான். கொஞ்ச நேரம் கழிச்சு பேசுவான்னு நெனைச்சுக்கிட்டேன். கிளம்பிய அவசரத்தில பையனுக்கு மாற்றுத்துணிகூட எடுக்காமல் வந்துவிட்டதால் நானும் மச்சானும் கடைவீதிக்கு வந்து பனியனும் டிராயரும் எடுத்துக்கொண்டு, ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு அக்காவுக்கும் வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குத் திரும்பினோம். சூழ்நிலையே தலைகீழாக மாறிப் போயிருந்தது.

அக்காவின் பதட்டமும் அழுகையும் பீதியை உண்டாக்கியது. பையன் கண்ணே முழிக்க முடியாமல் படுத்திருந்தான். இமைகளை வலுக்கட்டாயமாக பிரித்துப் பார்க்க வெள்ளைவிழி மேலெ ஏறியிருந்தது. வந்து பரிசோதித்துப் பார்த்த டாக்டர் ‘காய்ச்சல் மூளைக்குப் போயிருச்சு. இங்க அந்த அளவுக்கு வசதியில்ல… உடனே கோயமுத்தூருக்கு கூட்டிப் போங்க என்று கூட்டிப்போகவேண்டிய மருத்துவ மனையின் பெயரைச் சொல்லி , கையில் குடுத்துவிட அவசர அவசரமாக ஒரு கடிதமும் எழுதத் துவங்கினார். நான் டாக்ஸி ஸ்டேண்டுக்கு ஓட்டமெடுத்தேன்.

ஒண்ணும் பிரச்சனையில்லை பையன் நன்றாக இருக்கிறான் எனச் சொல்லியபடியே இருந்தார்கள். நாங்கள் நம்பிக்கையும் அவநம்பிக்கையுமாக பிழைத்துப் பிழத்து செத்தபடியிருந்தோம். எல்லா உறவினர்களும் கோயமுத்தூரிலிருக்கும் அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த பிற்பாடு, மறுநாள் காலை ஒன்பது மணியளவில் ஐசீ ரூமிலிருந்து வந்து பையன் போய்விட்டான் என கூறினார்கள்.

அதற்குப் பிறகு அக்காவையும் மச்சானையும் கண்ணிலேயே பார்க்க சகிக்கவில்லை. சிலவருடங்கள்போல பெருந்துக்கத்தில் இருந்தவர்கள் ஒருவழியாகத் தேறி , கோயில் குளம் சாமியார் சோசியர் என அலையத் துவங்கினார்கள். பாகப்பிரச்சினையில் கிடந்த தாய்வழிச் சொத்து ஒண்ணை வித்ததில் , மச்சானின் கைக்கு அவருடைய பங்குப் பணம் வந்து சேர்ந்தது. கோவில் கோவிலாக அலைந்தவர்கள் பிறகு ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாகவும் அலையத் துவங்கினார்கள். ஒரு கதவை அடைத்த ஆண்டவன் இன்னொரு கதவை கட்டாயம் திறப்பான் எனும் நம்பிக்கையில் இந்த வைத்தியத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.   

அக்காவுக்கும் பாலாமணியக்காவுக்கும் மட்டும்தான் என்றில்லை. அங்கே தங்கியிருந்த பெண்கள் பலருக்கும் இப்படியான புத்திரசோகக் கதை ஒன்று இருந்தது. ஒரு பெண்ணின் அதீத நம்பிக்கை என்பது அவள் குழந்தைதான்.அதீத ஏமாற்றமென்பதும் அந்தக் குழந்தையை அவள் இழக்க நேருவதுதான். பொதுவாக ஒன்றின் மீதான அதீத நம்பிக்கை பொய்த்துப்போகும் பட்சத்தில் பிறகு காலத்துக்கும் அதன்மீது நம்பிக்கையோ விருப்பமோ உண்டாகாமல் இருப்பதுதான் மனித மனதின் இயல்பான குணம். ஆனால், தாய்-சேய் விசயத்தில் மட்டும் நேரெதிர். ஒரு குழந்தையிழப்பினால் விளைந்த சோகத்தை இன்னொரு குழந்தையை பெறுவதின் மூலமாக மட்டுமே தாய்மனம் அதை கடக்க நினைக்கிறது.                                                    
                                                   
                                                     3 
பெருகியோடும் வாகனங்களின் ஓட்டத்தில் இரைச்சலும் நெரிசலும் வெக்கையும் புகையுமாய் பரபரப்பாய் இருக்கும் சாலை மெளனித்துக் கிடந்தது. ஒன்றிரண்டு வண்டிகள் மட்டும் அவ்வப்போது போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தன. அவைகளின் சத்தம் ஓய்ந்தபின் முன்னிலும் அதிக அடர்த்தியோடு மெளனம் கெட்டிப்பட்டபடியிருந்தது.  எரிந்துகொண்டிருந்த தெரு விளக்குகளின் வெளிச்சத்தைப் பூசியபடி இருள் தேங்கியிருந்தது. பூட்டப்பட்டிருந்த மெடிக்கல் ஸ்டோர்சின் ஷட்டரில் முதுகு சாய்த்தபடி வாசற்படியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். நேரம் நள்ளிரவு பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. மெல்லிய ஒலியில் டீக்கடை வானொலி பழைய பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தது.

தேநீர் டம்ளரைக் கொண்டுபோய் மாஸ்டரின் கழுவு களனில் வைத்துவிட்டு வந்து சிகரெட்டைப் பற்றவைத்தேன். பெரும்பாலான அறைகளின்  சன்னல்கள் யாவும் சாத்தப்பட்டு விளக்குகளும் அணைக்கப்பட்டு எதிர்புறமிருந்த அரசு தலைமை மருத்துவமனை தனது எண்ணிலா பிணிகளின் உபாதைகளிலிருந்து சற்றே விடுபட்டு உறக்கத்தில் கண்களை மூடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. இப்படியான ஏதோவொரு நடுநிசியில்தான் பாலாமணியக்காவும் பார்வதியம்மாளும் இந்த மருத்துவமனையின் ஏதோவொரு இடத்தில் எதிர்கொள்ளவே முடியாத அந்த துக்கத்தை எதிர்கொண்டிருந்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன்.


அந்த நான்கு நாள் மருத்துவமனை வாசம் முடிந்து அக்காவைக் கூட்டிப்போய் ஊரில் விட்டுவிட்டு நானும் வீடுவந்து சேர்ந்தேன். மூன்று வாரங்களுக்குப்பிறகு செக்கப்புக்கு கூட்டிக்கொண்டுபோன மச்சானிடமிருந்து சந்தோசமான தகவலைத் தாங்கியவாறு அந்த மகத்துவம் மிக்க போன் வந்தது. கர்ப்பப்பையில் வைக்கப்பட்ட கருமுட்டைகள் வளரத் துவங்கிவிட்டனவாம். ‘பாலாமணியக்காவுக்கு என்னாச்சு?’ என்றேன். ‘அவங்களுக்கும் ரிசல்ட்டு பாஸ்தானாமா.. நேத்தே வந்துட்டுப் போயிட்டாங்களாமா.. சிஸ்டர் சொன்னாங்க.. எதுத்தாப்ல நானூத்தியொண்ணுல சேலத்து டிரைவரு ஒருத்தரு இருந்தாருல்ல.. அவுருஞ் சொன்னாரு.’ என்று மச்சான் கூறினார்.

மாதமொருமுறை அக்காவும் மச்சானும் செக்கப்புக்குப் போய்வந்து கொண்டிருந்தார்கள். நான்காவது மாதத்தில் மறுபடியும் ஒரு மூன்றுநாள் மருத்துவமனையில் பெட்டிலே இருக்கவேண்டி வந்தது. உடனிருப்பதற்காக நானும் போயிருந்தேன். இம்முறை கர்ப்பப்பையின் வாயைத் தைக்கும் நிகழ்வு. ஏதாவது காரணத்தினால் வளரும் கரு வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக இவ்விதம் செய்வதாகக் கூறினார்கள். அக்காவோடு அந்த பேட்ச்சில் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டவர்களில் சக்ஸஸ் ஆன அனைத்துப் பெண்களுமே வந்திருந்தனர். பாலாமணியக்காவைக் காணவில்லை. அவருக்கும் சக்ஸஸ் என்றுதானே சொன்னார்கள்? ஏன் வரவில்லை என விசாரிக்கையில் அவருக்கு நல்லபடியாக வளர்ந்துகொண்டிருந்த கரு ஒரு வாரம் சளி இருமல் காய்ச்சல் வந்து அவதிப்பட்டதன் காரணமாக தானாகவே அபார்ஷன் ஆகிவிட்டதாகக் கூறினார்கள். ஐயோ.. பாவமே என்றிருந்தது. சரி , அடுத்த முறையாவது இம்மாதிரியான எந்தத் தொந்தரவுகளுக்கும் ஆளாகாமல் நல்லவிதமாக கரு வளர்ச்சியடைந்து நல்ல படியாகக் குழந்தை பிறக்கட்டும் என நினைத்துக் கொண்டேன். அதற்குப் பிறகு பாலாமணியக்காவைப் பார்க்கவே வாய்க்கவில்லை. இன்றைக்கு மதியம்வரை.    
  
கொசுவலை கூண்டுக்குள் பிளாஸ்டிக் தொட்டிலின் மெல்லிய பஞ்சணைமேல் சிறு அதரங்களில் பீறிடும் உமிழ்நீர் சின்னஞ்சிறு மொட்டிலிகளை இட்டபடியிருக்க, குழந்தைகள் இருவரும் கைகளை ஆட்டியபடியும் கால்களை காற்றுவெளியில் உந்தியபடியும் படுத்துக் கொண்டிருந்தனர்.  


சுவரோரமாக மருந்து மாத்திரை குளுக்கோஸ் பாட்டில்களை வைப்பதற்குப் பயன்படுத்தும் சிறு இரும்பு பீரோ இருந்தது. மதிய உணவைக் கொண்டுவரும் செல்வியக்கா உள்ளே நுழைந்ததும் அந்த பீரோவின் மீதுதான் உணவுக்கூடையை வைப்பது வழக்கம். வைத்துவிட்டு பாத்ரூமுக்குப்போய் கைகால்களை கழுவிக்கொண்டு வந்த பிற்பாடே எனக்கும் அக்காவுக்கும் தட்டுகளை எடுத்துவைத்து உணவைப் பரிமாற ஆரம்பிப்பார். இன்றும் உள்ளே நுழைந்ததும் உணவுக்கூடையை பீரோவின்மேல் வைப்பதற்குப் போனவர் அங்கு பாலிதீன் பையோடு வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் ஆரஞ்சுப் பழங்களைப் பார்த்துவிட்டு  “இதென்ன இன்னிக்கும் யாரோ அம்மிணிக ரண்டுபேரையும் பார்க்க வந்துருப்பாங்களாட்டயிருக்குதே.. பழமெல்லாம் இருக்குது.. இத்தனை நாள் கழிச்சு இன்னிக்கு வந்தது யாரு? உங்க வகையறாவா? எங்க வகையறாவா?” என்றார். குழந்தைகளை ஐசீ வார்டில் கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்திருக்கிறார்கள் போனாலும் பார்க்க முடியாது என்றபோதிலும், உறவினர்களெல்லாம் பழங்கள் பிஸ்கட்டுகள் சகிதம் வந்து அக்காவைப் பார்த்துவிட்டுப் போய்க்கொண்டுதான் இருந்தார்கள்.


“உங்க வகையறாவும் இல்ல.. எங்க வகையறாவும் இல்ல..” என்ற அக்கா ஒருகணம் குழந்தைகளை திரும்பிப் பார்த்து விட்டுக் கூறினாள் “ உங்க மருமகளுக வகையறா..” 


“ஓ.. மருமகமாருக ரண்டு பேருக்கும் இன்னும் வெளிக்காத்து எப்படியிருக்கும்னே தெரியாது. சூரியன் எந்தமின்னா உதிச்சு எந்தமின்னா மறையும்னும் தெரியாது. அதுக்குள்ள சொந்தம் புடிச்சுட்டாங்களா..” 


“ம்.. புடிக்காம? உங்களையெல்லாமாட்டமா? ஆஸ்பத்திரில எங்ககூட கோபிக்கு பக்கத்தால ஊர்லயிருந்து வந்து பாலாமணியக்கான்னு ஒரு அக்கா இருந்தாங்க.. போனவாட்டி ரண்டுமூணு வாரம் வளர்ந்து அப்புறம் கலஞ்சுபோச்சு.. அடுத்த பேட்ச்சுக்கு சேர்ந்துருக்காங்களாமா.. அதுக்கு முன்னால வாரம் ஒண்ணுனு ஏழு வாரத்துக்கு சத்தூசி போடவேணும்னு சொல்லீட்டாங்களாமா.. அதுக்கு வந்தவங்க என்னைய விசாரிச்சிருக்கறாங்க.. கொழந்தைக எடை கம்மியா இருக்குதுனு இந்த ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு வந்திட்டதைச் சொல்லீருக்கிறாங்க.. உடனே எத்தனாநெம்பர் பஸ்ல ஏறோணம் எங்க எறங்கோணம்கிறதையெல்லாம் வெசாரிச்சுப் புடிச்சு வந்து பார்த்துட்டுப் போறாங்க..” என்றபடியே தலையணைக்கு அடியே கைகளால் துழாவிய அக்கா அந்த இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து என்னிடம் நீட்டினாள் “ இந்தா.. பாலாமணியக்கா புள்ளைகளுக்கு எந்தக் காலத்துலியும் காசுக்கஷ்டமே வந்துரக்கூடாதுனு வாழ்த்துச் சொல்லி வெச்சுட்டுப் போன மொய்யி..” 

“இத்தன பாடுபட்டு பார்க்கறதுக்கு வந்துருக்கிறாங்க.. ஒரு அஞ்சு நிமிஷம் நான் வர்றவரைக்குமாவது இருக்கச் சொல்லீருக்கலாமல்லோ.. ஒரு காபியோ டீயோ வாங்கிக்குடுத்தாவது தாட்டி உட்ருக்கலாமே.. வந்துட்டுச் சும்மா போயிட்டாங்களே..” என்று அங்கலாய்த்தேன்.

“ இருக்கச் சொல்லாம இருப்பனா..? மூணுமணிப் பஸ்ஸுக்கு போயாகோணம். வுட்டுட்டா அஞ்சு மணி வரைக்கும் நின்னுட்டுக் கிடக்கோணம்னு ஒரே புடிவாதமா கெளம்பீட்டாங்க.. அநேகமா அவங்க போன நேரத்துக்கு இப்பதான் பஸ் ஸ்டாப்பு போயிச் சேர்ந்துருப்பாங்க.. பைக்க எடுத்துட்டுப் போனீனா பார்த்துரலாம்னு நினைக்கிறேன். போயிப் பார்த்து ஏதாச்சும் சாப்பிடவெச்சு தாட்டியுட்டுட்டுவா போ..”



பாலாமணியக்கா பஸ் நிறுத்தத்தில்தான் நின்றுகொண்டிருந்தார். சிக்னலில் பச்சை விழுந்த பிறகு ரவுண்டானாவைத் தாண்டி மறுமுனையிலிருக்கும் பஸ் ஸ்டாப்பிற்குப் போவதற்கு தாமதமாகுமென்பதால் வண்டியை இந்த டீக்கடையின் முன்னாலேயே பார்க் பண்ணிவிட்டு, வாகனங்களினூடாகப் புகுந்து நடந்து வளைந்து நெளிந்து ஓடி மறுமுனைக்குப் போய்ச் சேர்ந்தேன். எதோவொரு வேகத்தில் ஆர்வத்தில் போய்விட்டேனென்றாலும் பாலாமணியக்காவை சமீபத்ததும், ஸ்தம்பித்த நிலையில் அப்படியே நின்றுவிட்டேன். என்ன பேசுவதென்றே தெரியவில்லை. வாயைத் திறந்தால் அழுகை வந்துவிடும் எனத் தோன்றியது.

பாலாமணியக்காவின் பார்வை தனக்குத் தெற்குத் திசையில் மேற்குப் பார்த்தாற்போல் நின்று கொண்டிருந்த, இந்த அரசு மருத்துவமனையையே வெறித்தபடியிருந்தது.     













   
         


                                    

வெறுங்கால்நடை..


                                                                                   

ஈஸ்வரன்கோவில் வீதியில் மேற்கே வந்துகொண்டிருந்தேன். ஆலாமரத்துக்கு அருகாமையில் வடிவேலு எதிர்பட்டார். அவர் கிழக்கே வந்து கொண்டிருந்தார். நிற்கக்கூட இல்லை. நின்று பேசுமளவுக்கு எங்களுக்குள் நெருங்கிய பழக்கமும் கிடையாது. வெறுமனே தலையை மட்டும் ஆட்டிவிட்டு கடந்துவிட்டேன். அவரும் பதிலுக்கு தலையசைத்தார். இப்படியான சூழ்நிலைகளில் இம்மாதிரியான தலையாட்டல்களுக்கு, நல்லது, செளக்கியமா, கெளம்பட்டுமா என்றெல்லாம் அர்த்தம்.  ஒரு காலத்தில் பூபதியின் சலூனில் எந்தநேரமும் வடிவேலுவைப் பார்க்கலாம். நானும் பூபதியைத்தேடி போவதும் வருவதுமாக இருப்பேன். அந்த அளவில் எங்களுக்குள் ஒரு பரிச்சியம் உண்டாகியிருந்தது. அவ்விதம்  பரிச்சியமாகிய பலர் இப்போது நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். ஏனோ வடிவேலுவுடனான உறவு மட்டும் அந்த அளவிலேயே நின்றுபோய் விட்டிருந்தது. இப்போது பூபதி தனது சிகையலங்கார நிலையத்தை வீட்டிற்கே மாற்றிக்கொண்டுவிட்டான்.  வடிவேலு மாதிரியான நண்பர்களை சந்திப்பதற்கே வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எங்கேயாவது கடைவீதிகளில் எதிர்முட்டு போட்டுக்கொள்ள நேர்ந்தால் மட்டும் இதுபோல தலையாட்டிக்கொள்வதுண்டு.


நாங்கள் எதிர்பட்டுக்கொண்ட இடத்திலிருந்து கூப்பிடுதூரத்தில் தபால் அலுவலகம் இருந்தது. பைக்கை நிறுத்திவிட்டு போஸ்ட் ஆபிசுக்குள் நுழைந்தேன். மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மின்விசிறி சுழன்றபடியிருந்தது. தன் நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஆபீசர் கணிணித்திரையில் மூழ்கியிருந்தார். கரண்டுபில் கட்டவேணுங்க சார்என்றேன். “நானும் காலைலயிருந்து போராடிட்டிருக்கேன். நெட்டு சுலோ. வொர்க்கே ஆகமாட்டேங்குது.. எதுக்கும் அரைமணி நேரம் கழிச்சு வந்து பாருங்க..என்றார். மின்வாரிய அலுவலகத்தில் சொன்ன அதே பதில். அங்கேயே அரைமணிநேரம் உட்கார்ந்து சலித்துவிட்டுத்தான் வருகிறேன். இனி என்ன செய்யலாம் என்று யோசித்தேன். கமிசனுக்கு ஈபி பில் கட்டிவிடும் கம்பியூட்டர் சென்டர்களுக்குப் போகலாம் எனத் தோன்றியது. வெளியே வந்தேன். எனது பைக்கின் இடப்பக்க ஹேண்டிலைப் பிடித்தபடி வடிவேலு நின்றுகொண்டிருந்தார்.

“உங்கபாட்டுக்கு நிக்காமயே வந்துட்டீங்க..?

நீங்க வெக்குவெக்குனு  வேகவேகமா நடந்து போயிட்டிருந்தீங்க.. சரி, ஏதோ அவசர வேலையிருக்குமாட்டயிருக்குதுனு நானும் எம்பாட்டுக்கு வந்துட்டேன்.. அதையுந்தவிர நிக்கச்சொல்லி கை காட்டீருந்தீங்கன்னா நின்றிருப்பேன். எப்பவும்போல் தலையொவச்சீங்க.. நானும் தலையாட்டீட்டு வந்துட்டேன்.


இல்லே.. நிக்காமயே உங்கபாட்டுக்கு சர்ருனு வந்துட்டீங்ளா.. அதான் மனசுக்கு கஷ்டமாயிருச்சு. நாம ஒரு தப்பும் பண்ணுலயே.. அப்புறம் எதுக்கு நிக்காமப் போறாருனு நம்மமேல அப்படியென்ன கோவம்னு ஒரே கொழப்பம். ஒருவேளை நம்முளுக்கு தெரியாமக்கீது ஏதாவது உங்களுக்கு கெடுதல் பண்ணீருப்பனோன்னும் யோசனை. அதான் எதா இருந்தாலும் மன்னிப்புக் கேட்ருலாம்னு வந்தேன். எதாயிருந்தாலும் மன்னிச்சிருங்க..




சம்பந்தமில்லாமல் பேசுகிறாரே.. ஒருவேளை குடிச்சிருப்பாரோ என தோன்றியது. வேண்டுமென்றே நக்கலுக்கோ கிண்டலுக்கோ பேசுகிறமாதிரியும் தெரியவில்லை. அந்தக்குரலில் உண்மையாகவே வருத்தம் வெளிப்படுகிற ஒரு தொனி இருந்தது. என்னிடம் ஒருநாளும் அவர் இப்படியெல்லாம் பேசியதுமில்லை. ‘என்ன வடிவேலு.. இன்னிக்கு வொர்க்கு இல்லியா.. ப்ரீயாட்டயிருக்குது?என பூபதி சலூனில் அமர்ந்திருக்கும் அவரிடம் சம்பிரதாயமான கேள்வியொன்றை கேட்பதுண்டு. ஆமாங்க.. இல்லீங்க என அவரும் ஒற்றை வார்த்தையில் ஒரு பதிலைச் சொல்லுவார். அதற்குமேல் எங்கள் உரையாடல் நகர்ந்ததில்லை. சலூன் சந்திப்புகள் அற்றுப்போன பிறகு அதற்கும்கூட வாய்ப்பில்லை. வெறும் தலையாட்டல் மட்டும்தான்.

“சேச்சே.. உங்கமேல எனக்கென்ன கோபம் வடிவேலு? நம்ம ரண்டுபேருக்குள்ள வாய்க்காத் தகராறா வரப்புத் தகராறா.. நீங்க எங்கியோ உங்கபாட்டுக்கு இருக்கிறீங்க நான் எங்கியோ எம்பாட்டுக்கு இருக்குறேன். உங்கமேல வருத்தப்படறதுக்கு என்ன இருக்குது வடிவேலு?

சரி, அத வுடுங்க.. நல்லாருக்கீங்களா..?
நல்லாருக்கேன் வடிவேலு. நீங்க எப்படி இருக்கீங்க?
பார்த்தா எப்படித் தெரியுது?
என்னது?
இல்லே.. என்னைப் பார்த்தா எப்படி இருக்கற மாதிரி தெரியுதுனு கேட்டேன்?

வடிவேலு கோடுபோட்ட முழுக்கைச் சட்டையும் லுங்கி வேட்டியுமாக இருந்தார். முழுக்கையை முழங்கைகளுக்குமேலே மடித்துவிட்டிருந்தார். வேட்டியை முழங்கால் மூட்டுகளை மறைக்கும்படி மடித்துக் கட்டியிருந்தார். செருப்பில்லாத பாதங்களிலும் புறங்கால்களிலும் புழுதி படிந்திருந்தது. சட்டைப்பையில் மஞ்சள் மற்றும் வெளிர்பச்சை நிறமுடைய இரண்டு டெஸ்டர்கள் பேனாவைப்போல் குத்தப் பட்டிருந்தன. தலைமுடியும் தாடியும் பாதிக்கும் அதிகமாக நரைத்திருந்தது. முன்பு எப்போதும் இளந்தாடியிலிருப்பார். இப்போது அது முதிர்ந்து அடர்த்தி கூடியிருந்தது. பின்நவீன ஓவியர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள், நெரிசலான நகரங்களின் ஆளரவமற்ற பகுதிகளில் கஞ்சாவைப் புகைத்தபடி மரத்துநிழலில் படுத்துக் கிடப்பவர்கள் ஆகியோரின் சித்திரமெல்லாம் ஏதோவொருவகையில் வந்து போயிற்று.

“உங்களுக்கென்ன வடிவேலு? ஜம்முனு இருக்கீங்க. சாமியார் மாதிரி. ஞானி மாதிரி
அப்போ செரைக்க வேண்டாம். இந்த தாடியை அப்படியே வுட்ருலாம்கிறீங்ளா?
வுட்ருங்க.. தாடிதான் உங்களுக்கு பவரே
அப்போ வண்டிய எடுங்க
என்னது?
எனக்காக ஒரு பத்துநிமிஷம். எடுத்துட்டு வாங்க. வூட்டுக்குப் போயிட்டு வந்துரலாம்

இல்லெ வடிவேலு.. எனக்கு நெறைய வேலைகள் இருக்குது. அவசரமாப் போயாகோணம்

போய்க்கலாம். ஆதார்க் கார்டக் கொண்டா பாஸ்புக்கக் கொண்டா சிலிண்டர்புக்கக் கொண்டான்னு ஒரே டார்ச்சர்.. எனக்காக வீடு வரைக்கும் வாங்க.. பத்தே நிமிஷம்.

சிலிண்டர் ஏதாச்சும் எடுக்கிறதுக்குப் போனீங்களா..? அங்க இதெல்லாம் வேணும்ன்னுட்டாங்களா?
அதெல்லாம் ஒண்ணுமில்ல.. பூபதி எப்படியிருக்காப்டி? நல்லாருக்காப்டியா?
என்னது?
ஒண்ணுமில்ல.. பத்தே நிமிஷம் எனக்காக வண்டிய எடுங்க. வூட்டுக்குப் போயிட்டு வந்திரலாம்
குடிச்சிருக்கீங்ளா..?
என்னப் பார்த்தா குடிச்சிருக்கற மாதிரியா தெரியுது?
இல்லே எனக்கு டவுட்டாத்தான் இருக்குது. வாயை ஊதுங்க

வாயை ஊதினார். லேசான பீடி வாசனை. உணவெடுக்காமல் வெறும் குடலாக இருக்கும்போது அந்தக் குடல் புண்ணாகாத ஆரோக்கியமான குடலாக இருக்கும்பட்சத்தில், துர்நாற்றமில்லாத ஒர் ஆரோக்கியத்தின் வாசனை வருமல்லவா? அந்த வாசனை. இப்போது குடித்திருக்கவில்லையெனினும் வடிவேலு குடிக்கிற ஆள்தான். ‘அவருக்கென்னங்க.. கைவசம் நல்ல தொழில் இருக்குது. ஒருவாரம் வேலைக்குப் போனாலே ஒருமாசத்திக்கு உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சம்பாதிச்சிருவாரு.. ஆனா என்ன, அந்த ஒரு மாசத்திக்கும் சாப்பிடறாரோ இல்லியோ உட்கார்ந்து குடிச்சிட்டேயிருப்பாரு.. அதான் பிரச்சனை.என ஒருசமயம் பூபதி இவர்குறித்து சொல்லியிருக்கிறான். வடிவேலுவின் கண்களை சில விநாடிகள் உற்றுப் பார்த்தேன். போய்த்தான் பார்ப்போமே எனத் தோன்றியது. “சரி, உக்காருங்க போலாம்”. என்றேன்.

ஈஸ்வரன் கோவிலைத் தாண்டி வடக்கே போய்க்கொண்டிருந்தோம். ஆளரவமும் வாகனரவமும் அற்றுப்போயிருந்த தார்ச்சாலையில் நசுங்கிக்கிடந்த ஓணானை இரண்டு காக்கைகள் கொத்திக் கொண்டிருந்தன. இறுக்கம் தளர்ந்து மிதமான வேகத்தில் கீகாத்து அடிக்க ஆரம்பித்திருந்தது. சாலையின் வலப்புறம் வரிசைகட்டி வளர்ந்திருந்த வேலி மரங்களின் நிழல் சாலையைவிட்டு விலகி பக்கவாட்டு மண்பாதையையும் கடந்து கீழே ரோட்டுக்குழிக்குள் இறங்கியிருந்தது. ரோட்டுக் குழியெங்கும் பார்த்தீனியமும் துத்தியும் மண்டிக்கிடந்தன. துத்திச்செடிகளின் மஞ்சற்பூக்கள் கருப்பண்ணசாமி சிலைக்கு வைத்திருக்கும் சந்தனப் பொட்டுகளை நினைவூட்டின. காயும் துத்திச்செடிகளின் வாசனையும், வேலிக்கு அப்பாலிருக்கும் தோட்டத்தில் அறுத்து குச்சுக்குச்சாக ஊன்றப்பட்டிருக்கும் சோளத்தட்டுகள் வாசனையும் கீகாத்தில் கலந்திருந்தது. “இப்போ எங்க வேலைக்குப் போயிட்டிருக்கீங்க வடிவேலு..? என்றேன்.

“எங்கீன்னு இல்லே… எங்கவேணாலும் போறதுதான்

இன்னும் ஒயரிங் வேலைக்குத்தானே போயிட்டிருக்கீங்க?

அதே வேலைதான். இருந்தாச் சொல்லுங்க. வந்து செஞ்சு குடுக்கறேன்

வலப்புறமாகப் பிரிந்த மற்றொரு தார்ச்சாலையில் வண்டியைக் கிழக்கே விடச் சொன்னார். சற்று தூரத்தில் வீடுகள் தென்பட்டன. பெரிய அரசமரமும் அதனடியில் சிறு விநாயகர் கோவிலுமாக ஊர் ஆரம்பித்தது. சிலர் கோவில் திண்ணையில் பதினைந்தாங்கரம் ஆடிக்கொண்டிருந்தனர். எதிர்ப்புறம் கொட்டகை மாதிரியான அமைப்பில் ஒரு கடை இருந்தது. டீக்கடையாக இருப்பின் வடையோ பஜ்ஜியோ சாப்பிட்டு தேநீரும் அருந்திவிட்டுப் போகலாம் என வண்டியை நிறுத்தினேன். ஆனால் அது மளிகைக் கடை. சிகரெட்டாவது பற்றவைத்து இழுத்துவிட்டுப் போகலாம் என இறங்க முயற்சிக்க, “ஏனுங்.. என்னாச்சு.. இங்கயே எறக்கி வுடறீங்க.. வூட்டுவரைக்கும் கொண்டாந்து வுடுங்க.என்ற வடிவேலுவிடம் “ஒரு சிகரெட் இழுத்துட்டுப் போயிரலாமே..என்றேன். “ வூட்டுக்கே போயிரலாம்போங்க.. அங்கயே இருக்குதுஎன்றார்.
விநாயகர் கோயிலிலிருந்து மூன்று சிமெண்ட் சாலைகள் ஊருக்குள் போயின. இடது புறமாக வடக்கே போனதில் வண்டியை விடச்சொன்னார். “கொஞ்ச தூரம் போனீங்ன்னா ஒரு கரண்டுமரம் வரும். பக்கத்துலயே ஒரு குடிபைப்பு இருக்கும். பக்கத்துலயே ஒரு மஞ்சரளி பூத்துக் கிடக்கும். அதையொட்டியே இன்னொரு சிமெண்ட்ரோடு கிழக்கே பிரிஞ்சு போகும். அதுல விடுங்க என்றார்.

மஞ்சரளிச்செடிப் பிரிவில் கிழக்கே திரும்பினேன்.  வெள்ளைவேலா மரத்தின் நிழல்   கூடாராமாய்க் கவிழ்ந்திருந்த இடம் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொன்னார். பனியன் வேஸ்டுகளில் நூல் பிரித்தபடி சில பெண்கள் அவர் நிறுத்தச் சொன்ன வீட்டின்முன் சிமெண்ட் சாலையில் அமர்ந்திருந்தனர். வண்டியை மதிற்சுவரின் ஓரமாக நிறுத்தினேன். அந்தக் காலத்தைய சுவர். ஆளுயரத்துக்கும்மேலே இருந்தது. நூல் பிரிப்பதையும் பேச்சையும் நிறுத்திவிட்டு, ஒரு கணம் என்னை கவனித்த பெண்கள் மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தனர். அவ்வளவு பெரிய மதிற்சுவருக்கு அந்த நடையும் , நடைக்குண்டான தகரக்கதவும் ரொம்பவும் சிறியதாகத் தோன்றியது. கதவு திறந்து உள்ளேபோன வடிவேலுவைப் பின்தொடர்ந்தேன்.

கிழக்குப்பார்த்த இரு அறைகளுடைய ஒற்றைக்கோம்பை ஓட்டுவீடு. வீட்டைவிடவும் வாசல் விஸ்தாரமாக இருந்தது. வாசலின் வடக்கு கிழக்கு எல்லைகளாக மற்ற வீடுகளின் பின்பக்கச் சுவர்கள் அமைந்திருந்தன. வீட்டிற்கு நேர் வடபுறத்தில் வாசலின் வடமேற்குப் பகுதியில் தென்னந்தடுக்கு மறைப்பாலான பொடக்காலி இருந்தது. சலதாரை தண்ணிக்கு முருங்கைமரம் வைக்கப்பட்டு வளர்ந்திருந்தது. வடிவேலு வீட்டின் நிழல் அதன் முன் சுவரிலிருந்து தரையிறங்கத் துவங்கியிருந்தது. கிழபுற வீட்டின் நிழல் தரையிலிருந்து அதன் பின் சுவரேற ஆரம்பித்திருந்தது. தென்புறத்திலிருக்கும் அறையின் கதவைத் திறந்த வடிவேலு ‘உள்ளே வாங்கஎன்றார். உள்ளே போனேன். பத்துக்கு பதினொன்று அளவுள்ள சிறிய அறை .
இந்த வீட்ல நீங்க மட்டும்தான் இருக்கீங்ளா?
ஆமா.
அப்பா அம்மாவெல்லாம்..?
உங்களுக்குத் தெரியாதா? எங்கப்பன் செத்து பதினாலு வருசமாச்சே
அம்மா..?
அவ இன்னும் உசுரோடதான் இருக்கறா. இங்கில்ல.. மேக்கால ஊர்ல இருக்கிறா..
வடபுறத்து வீட்ல யாரு இருக்காங்க..?
அதை வாடகைக்கு வுட்ருக்கேன். மாசம் ஐநூறு ரூவா.. அதையும் கொஞ்ச நாளா குடுக்கறதக் காணோம்
வாடகை குடுக்காட்டி காலிபண்ணச் சொல்லவேண்டீதுதானே
ஆளே கொஞ்சநாளா வாரதக்காணோம். வரட்டும் . காலிபண்ணச்சொல்லணும்

கிழிந்த கோரைப்பாயொன்று நடு அறையில் கோணல்மாணலாக விரிக்கப்பட்டுக் கிடந்தது. எரிந்த தீக்குச்சிகளும் துண்டுப்பீடிகளும் தரைமுழுதும் பரவிக் கிடந்தன. கொஞ்சம் தண்ணீரோடு பச்சைநிற ரப்பர் குடமொன்று இருந்தது. அதன்மேலே ஒரு தட்டும் சொம்பும் வைக்கப்பட்டிருந்தது.   பாதி தின்றநிலையில் பார்சல்பொட்டல வாழையிலையினாலேயே மூடியும் மூடாமலும் புரோட்டா வைக்கப்பட்டிருந்தது.வடக்குச்சுவரின் மேற்கு மூலையில் மூன்றடுக்கு அலமாரி இருந்தது. பலதையும் போட்டு ஒரே குப்பைக்காடாக காட்சியளித்தது.  555 சீட்டுக்கட்டுப் பெட்டிகள் கிடந்தன. நடு ஷெல்பில் ஒரு கோல்டுபில்டர் சிகரெட் பெட்டியும் கிடந்தது. திறந்து பார்த்தேன். உள்ளே ஒன்றுமில்லை. பட்டைப் பின் செல்போன் சார்ஜர் ஒன்றும் கிடந்தது.
“இந்த சார்ஜர் வொர்க் ஆகுமா வடிவேலுஎன்றேன்..”புதுசுங்க. என்றபடியே  பிளக்பாய்ண்டில் சார்ஜரைப் பொருத்தி, என் செல்போனை வாங்கி பின்னைக் குத்தி சுவிட்சை ஆன் செய்து , சார்ஜ் ஏறுவதைக் காட்டினார். “நல்லது. சுவிட்ச்சுப் பொட்டிமேலேயே வச்சுருங்க.. போகும்போது எடுத்துக்கிறேன்என்றேன். 
அறையின் வடமேற்கு மூலையில் பழைய காலத்திய நீள்சதுரவடிவ டிரங்குப் பெட்டி இருந்தது. அதன் மேலே விலையில்லா மின்விசிறி , விலையில்லா மாவரைப்பான், விலையில்லா சட்னி அரைப்பான் ஆகிய வீட்டு உபயோகப்பொருட்கள் அட்டைப்பெட்டியோடு அடுக்கப்பட்டிருந்தன. “ஏன் வடிவேலு இதையெல்லாம் யூஸ் பண்றதில்லையா? பேக்கிங்கே உடைக்காம வெச்சுருப்பீங்களாட்ட இருக்குதே” என்றேன். “நல்லாப் பாருங்க.. பெட்டி மட்டும்தான் இருக்குது. அதெல்லாம் கொடுத்தப்பவே யூஸ் பண்ணியாச்சு. மொத்தம் நாலாயிரத்தி எரநூறு ஆச்சு” என்றார்.
தென்கிழக்கு மூலையில் புகைபோக்கியுடன் கூடிய, நின்றுகொண்டே சமைக்கும்படியான மேடை விறகடுப்பு இருந்தது. சமைத்துத்தான் பலகாலம் ஆகிவிட்டதுபோல. முனைகள் இடிந்த அந்த அடுப்பினுள் கசக்கியெறியப்பட்ட காகிதக் குப்பைகளாகக் கிடந்தது. அடுப்பு மேடைக்குக் கீழே கவனித்தேன். காய்ந்த சுள்ளிகளும் சில பாத்திரங்களும் மட்டுமே இருந்தன. சிலிண்டரைக் காணோம். “எங்க வடிவேலு.. சிலிண்டரையே காணமாட்டயிருக்குதே ?என்றேன். சிலிண்டர்தான் இல்லையேஎன்றார்.

“என்னமோ சிலிண்டர்புக் எடுக்கோணம் ஆதார் கார்டு எடுக்கோணம் அது இதுன்னீங்க?

கேஎம் தெரியுமில்ல.. அவுருதான் சொன்னாரு. போயி கேஸ்புக்கு ஆதார்கார்டெல்லாம் கொண்டுட்டுவாடா.. சிலிண்டர் எடுத்துக்கலாம்னாரு

எனக்கு என்னத்தையோ புரிந்துகொண்டதைப்போல இருந்தது. பேச்சை மாற்றினேன். “அப்போ இந்த வீட்ல நீங்க மட்டும்தான் தனியா இருக்கிறீங்களா
ஆமா.. நான் மட்டும்தான் இருக்கேன்
சமையல் சொந்தமாவே பண்ணிக்கிறதா?
சமையல்லாம் அவ வந்ததுக்கு அப்புறம்தான் பண்ணனும். இப்போதைக்கு கடைல வாங்கியாந்து சாப்பிட்டுக்கிறதுதான்
என்னது? அவளா? உங்களுக்கு கல்யாணம் ஆகீருச்சா.. சம்சாரம் பிள்ளைபேறுக்கு அவங்க அம்மாவீட்டுக்குக்கீது போயிருக்கிறாங்ளா?

அவள்னா சம்சாரம் அல்ல. சம்சாரம் ஆகப்போறவ..

மறுபடியும் என்னத்தையோ புரிந்துகொண்டதைப்போல் இருந்தது. பேச்சை மாற்றினேன். சீட்டுக்கட்டெல்லாம் கெடக்குது. துண்டுப்பீடிக கெடக்கறதையெல்லாம் பார்த்தா தினமும் சீட்டாட்டம் பட்டையக் கெளப்பும் போலிருக்குதே..

தினமுமெல்லாம் நடக்காது. எப்பாச்சு ஒரு நாளைக்கு மூடுவந்தா ஆடறதுதான்.

ஓ… சோடிக உள்ளூர்லயே இருக்காங்ளா? வெளிய இருந்து வருவாங்களா?

சோடியெல்லாம் யாருமில்ல.. நானே ஆடிக்கிறதுதான்

என்னது?

ஆமாம். நானே ஆடிக்குவேன். ரெண்டு பக்கமும் ரண்டு கையி. எதுத்தால ஒரு கையி. எனக்கொரு கையி. நாலுகைக்கும் சர்சர்னு சீட்டப் போட்டுட்டு நாலு கைக்கும் சேர்த்து நானே ஆடிக்குவேன். செம இன்ட்ரெஸ்ட்டா இருக்கும்

எனக்கு உள்ளுக்குள் சிரிப்பாக இருந்தது. இருக்கற வேலையையெல்லாம் விட்டுவிட்டு இந்த கிறுக்கனோடு வந்து உளறிக் கொண்டிருக்கிறோமே என கொஞ்சம் சலுப்பாகவும் இருந்தது. வடிவேலுவின் கண்களையே உற்றுநோக்கினேன். அந்த கண்களையே எத்தனை தரம்தான் உற்றுநோக்குவது?  உள்ளே என்ன இருக்கிறது என்பதையெல்லாம் என்னால் எதுவும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதிலே கண்டுபிடிக்க என்ன இருக்கிறது? அதீதமான குடி. கொடிய தனிமை. மனம் பிறழ்ந்துகொண்டிருக்கிறது. கொஞ்சநாளில் வடிவேலு சட்டை வேட்டியெல்லாம் கிழித்துவிட்டுக்கொண்டு ரோடுரோடாக திரிந்தாலும் திரியலாம் எனத் தோன்றியது. அவர் கண்களை உற்று நோக்கினேன் எனச் சொன்னேனல்லவா? அதுவரைக்கும் அவரும் இமைக்காமல் விலக்காமல் என் கண்களையே பார்த்தபடியிருந்தார். அந்த விழிகள் கயமையோ தந்திரமோ இல்லாததுவாய் வெறுமனே இருந்தன என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நான் பார்வையை விலக்கிக்கொண்ட பிறகு அவரும் விலக்கிக்கொண்டு குடத்திலிருந்த தண்ணீரை சொம்பில் மோந்து நீட்டினார். “இந்தாங்க.. குடிங்க.

வெள்ளையாக செதில்செதிலாக மிதந்தபடி தண்ணீர் குழம்பிக் கிடந்தது. கடுமையான தோல்நோயுள்ளவன் உடல் தலையெல்லாம் சொறிந்து சொறிந்து உதிர்ந்த நோய்த் துணுக்குகளையெல்லாம் தண்ணீரிலேபோட்டு நன்றாக கலக்கிக் குடுப்பதுபோல இருந்தது. இத்தனைக்கும் வடிவேலுவுக்கு ஆரோக்கியமான சருமம்தான். ஆள் அழுக்காகவும் குளிக்காமலும் சிரைக்காமலும் இருந்தாலுமேகூட அவருக்கு சொரியாஸிஸின் எந்தவொரு வகைமையும் இருப்பதாகத் தெரியவில்லை. “என்ன வடிவேலு தண்ணி இந்தக் கண்டிசன்ல இருக்குது. இதை எப்படிக் குடிக்கறது?என்றேன்.

“ஏனுங்க இந்தத் தண்ணிக்கு என்னங்க..?

கருமம். நீங்களே பாருங்க.. என்ன லட்சணத்துல இருக்குதுன்னு”.

சொம்பை வாங்கிய வடிவேலு ஒரே மூச்சில் குடித்துமுடித்துவிட்டு மீண்டும் அதையே கூறினார் “ஏனுங்க  இந்தத் தண்ணிக்கு என்னங்க..?

சரி, அதை வுடுங்க. நான் கெளம்பறேன். நீங்க வர்றீங்ளா வர்லியா?

ஏனுங் போகோணமா..? அப்பறமா வெய்யத்தாழப் போனாப் போவுது..

அப்ப நீங்க வர்லியா? என்னமோ சிலிண்டர்புக்கு எடுத்துட்டுப் போகோணம் அது இதுன்னீங்க..

சிலிண்டர்புக்குதான் இல்லையே..

ஓ.. அப்பவே சொன்னீங்களே.. நாந்தான் மறந்துட்டேன். சரி வடிவேலு, ஒடம்பப் பார்த்துக்குங்க.. நல்லா ரெஸ்ட் எடுங்க.. நான் கெளம்பறேன்.

நீளமான துண்டுப்பீடியொன்றை பற்றவைத்துக்கொண்ட வடிவேலு புகைவழியும் வாயோடு சின்னப்பையன்களைபோல் கையை இடம்வலமாக ஆட்டியபடி டாட்டாகாட்டினார். “நல்லது. போயிட்டு வாங்க.

மரத்துநிழல் கிழக்கே போயிருந்தது. உட்கார்ந்திருந்தவர்கள் யாரையும் காணோம். சிமெண்ட் ரோடு வெறிச்சோடிக் கிடந்தது.  சீட்டின்மேல் உதிர்ந்துகிடந்த வேலாயிலைகளை தட்டிவிட்டுவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

தாகமாக இருந்தது. தம்மடிக்கவும் தோன்றியது. விநாயகர் கோவில் மளிகைக்கடையில் பச்சைநிற பொடாரன் 200மில்லி பாட்டிலொன்று வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்தேன். கேஸ் அடைத்த குளிர்பானம் உள்ளே போனதும் , குடலுக்குள்ளிருந்த வாயுவெல்லாம் ஏப்பமாக வெளிப்பட ஆரம்பித்தன. ஒவ்வொரு ஏப்பமும் ஒரு இலகுவான வயிற்றுநிலையை உருவாக்கியபடியிருந்தது.  கோல்டு பில்டர் ஒன்றை வாங்கி பற்றவைத்தேன். பதினைந்தாங்கரம் ஆடிக்கொண்டிருந்தவர்கள் ஒருவரையும் காணவில்லை. கோயில் திண்ணையில் செம்மிநாயொன்று ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நெட்டு வேலைசெய்ய ஆரம்பித்திருந்தால் பரவாயில்லை போனவுடன் கரண்டுபில்லை கட்டிவிட்டு வீட்டுக்கு போய்விடலாம் என நினைத்துக்கொண்டேன். பலரையும் போல அதற்கென இருக்கும் ஆப்பை டவுன்லோடுசெய்து செல்போனிலேயே கரண்டுபில்லை கட்டிப்பழகிக்கொள்ளவேணும் எனும் எண்ணம் ஓட, அனிச்சையாக சட்டைப் பாக்கெட்டுக்குப்போன வலதுகை செல்போனைத் தேடியது. ஒரு கணம் பக்கென்று இருந்தது. அடுத்த விநாடியே வடிவேலு வீட்டில் சார்ஜ் போட வைத்தது ஞாபகம் வர, நல்லவேளை இங்கயே பார்த்துக்கிட்டமே.. ஊடுபோயி பார்த்திருந்தா பெரும்சிரமமாப் போயிருக்கும்என நினைத்துக்கொண்டபடியே வண்டியை திருப்பினேன்.

சற்றுமுன்னர் வெளியேவரும்போது திறந்தநிலையிலேயே விட்டுவிட்டு வந்திருந்த வடிவேலுவுடைய வீட்டு வெளிமதிற்சுவரின் தகரக்கதவு  சாத்தப்பட்டிருந்தது. ஆள் எங்கேயாவது கிளம்பிப்போயிருப்பாரோ.. அப்படிப் போயிருந்தா இந்தக் கிறுக்கன எங்கீனு போயித் தொளாவறது.. ச்சை.. சிக்கல்புடிச்ச வேலை. என மனசுக்குள் புலம்பியவண்ணம் ,என்ன செய்வதென தெரியாமல் பைக்கில் உட்கார்ந்தபடியே மறுபடியும் கதவைப் கவனித்தவனுக்கு அப்போதுதான் அது புலப்பட்டது. கதவு  பூட்டப்படவில்லை. வெறுமனேதான் சாத்தப்பட்டிருக்கிறது. சட்டென்று உண்டான சோர்வு சட்டென்று அகன்று மீண்டும் உற்சாகம் ஊற்றெடுக்க பைக்கிலிருந்து இறங்கிவந்து கதவைத் தள்ளினேன். திறந்துகொண்டது. தென்புறத்துவீட்டின் கதவும் சாத்தப் பட்டிருந்தது. பூட்டப்படவில்லை. நாதாங்கியும் போடப்படவில்லை. நாதாங்கி போடப்படாது வெறுமனே சாத்தியிருந்தால் கதவுக்கும் நிலைப்படிக்கும் சிறு சந்தாவது இருக்குமல்லவா? அப்படியான சந்தும் இல்லை. கதவு நிலைப்படியோடு இறுக்கமாக ஒட்டியிருந்தது. அப்படியென்றால் உள்தாழ் வைக்கப்பட்டிருக்கிறது. அட பாங்கிறுக்கா.. இந்த மத்தியானத்துல தாழ்போட்டுட்டு படுத்திருக்கிறானே என நினைத்தபடி கதவைத் தட்டுவதற்குப் போனவன் வெடுக்கென கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டேன்.

உள்ளிருந்து ஏதோ சத்தம் வருவதுபோலத் தோன்றியது. காதைத் தீட்டிக்கொண்டேன்.  வடிவேலு யாருடனோ மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார். யாரோ அவருடைய பேச்சுக்கு ம் போட்டு கேட்டுக்கொண்டிருப்பதும் செவிப்புலனாகியது. நம்பவேமுடியாத ஆச்சர்யத்துடன் மேலும் காதை தீட்டிக் கொண்டு கூர்ந்து கேட்கத் துவங்கினேன்.
அந்த ‘ம்ஒரு பெண்ணினுடையதாக இருந்தது.