Thursday, 27 May 2021

 

                                                                                           எருமை நாயகம்

 

கால்வட்டம் அரைவட்டம் முக்கால்வட்டமென வளர்ந்து  முழுவட்டமுமாக சூரியன் வெளிப்பட்டபோது சாமிநாதன் தார்ச்சாலையில் தெற்கே போய்க் கொண்டிருந்தான்.  இன்றைக்குக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. வழக்கமாக இந்தநேரத்திற்கு வாய்க்கால்ப் பாதையில்  சென்றுகொண்டிருப்பான்.    

 

உதய கணத்தின் கதிரொளியை ஏதோவொரு  பெயரை வைத்து சாமிநாதனின் அப்பிச்சி அழைப்பதுண்டு.  இதுபோலவே காலை முதல் மாலை வரை அவர் ஒவ்வொரு நேரத்து வெயிலுக்கும் ஒரு பெயரைச் சொல்லுவார். அந்த ஒவ்வொருவிதமான வெயிலுக்கும் ஒவ்வொருவிதமான பெயருடைய தேவதை அதிபதியாக இருக்கிறாள் என்றும் சொல்லுவார்.   எல்லாமே வாயில் நுழையாத நினைவில் வைத்திருக்க முடியாத பெயர்கள். அந்தப் பெயர்களெல்லாம் சாமிநாதனுக்கு மறந்துவிட்டது. ஆனால்,உதயகணத்தின் கதிரொளியில் நின்று அதன் தேவதையை வணங்கிவர பிரிந்து போனவர்கள் திரும்ப வந்து சேருவார்கள் என்று அப்பிச்சி சொல்லிக் கொண்டிருந்தது மட்டும் மறக்கவேயில்லை.

 

போன புரட்டாசியோடு சாமிநாதனுக்கு இருபத்தியொன்பது முடிந்து விட்டிருந்தது. கடந்த ஆறு நாட்களை நீக்கிவிட்டுப் கணக்கிட்டால்  இந்த முப்பது வருட வாழ்க்கையில் சாமிநாதன் புலரிக்கு முன்பே துயிலெழுந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கடைசியாக போன மாசி மாதம் பதிமூணாம் தேதியன்று அதிகாலையிலேயே எழுந்திருந்தான். அன்றுதான் அவனுக்குக்  கல்யாணம் நடந்தது. காலை ஆறு முதல் ஏழு மணி வரையிலான முகூர்த்தத்தில் தாலி கட்டும் நிகழ்வை வைத்திருந்தார்கள். அதற்குமுன்பு தன்னுடைய இருபத்தியொன்றாவது பிராயத்தின் வைகாசி மாத அதிகாலையொன்றிலும் சாமிநாதன் நேரமே கண் விழித்திருக்கிறான். அன்றைக்குத்தான் தங்களின் ஏகபுத்திரனான சாமிநாதனுக்கென்றே அவனுடைய பெற்றோர்கள் பார்த்துப் பார்த்து இழைத்து இழைத்துக் கட்டிய இரண்டு தளங்களையுடைய பங்களாவின் கிரகப் பிரவேசம் நிகழ்ந்தது.

 

புலரியின் ஒளி எங்கும் பரவியிருந்தது. சற்று நேரத்தில் இந்த பொன்னிறம் மாறிவிடும். பிறகு வேறொரு தேவதை அந்த வெயிலை ஆளத் துவங்கிவிடுவாள். கிழபுறமிருந்த காட்டுக்குள் வெள்ளைவேலாமர உச்சியெங்கும் நிறைந்திருந்த சிறுசிறு உருண்டைகளான மஞ்சள்பூக்களின்மேல்  பரவியிருந்த காலையொளியின் பொன்னிறம் துலக்கமாக தெரிந்தது. நடப்பதை நிறுத்திய சாமிநாதன் அந்த பொன்னிறத்தை பார்த்துக்கொண்டே நந்தினியை நினைத்தபடி பெயர்தெரியாத அந்த பொன்னொளிக்கு அதிபதியான தேவதையிடம் வேண்டிக்கொள்ளத் துவங்கினான்.  பொன்வெயிலின் தேவதையே.. நந்தினியை என்னுடன் சேர்த்துவைத்துவிடு..என திரும்பத் திரும்ப மூன்றுமுறை சொல்லிவிட்டு மறுபடியும் நடக்க ஆரம்பித்தான்.

 

நந்தினியை நினைக்கும்போதெல்லாம் ­– அவளை நினைக்காத பொழுதென்று இந்த நான்கு மாதங்களில் எதுவுமில்லை – ஆளுயரத்திற்கு எழும்பி படமெடுத்து நிற்கும் மஞ்சள் நிறமான ராஜநாகத்தின் சித்திரம்தான் மனதில் தோன்றுகிறது. உண்மையில் மஞ்சள்வண்ணம்கொழிக்கும் ராஜநாகமெதையும் சாமிநாதன் நேரிலோ ஒளியொலிக்காட்சிப் படங்கள் எதிலுமோகூடப் பார்த்ததில்லை. ஆனாலுமேகூட நந்தினியைப் பற்றி நினைக்கும்பொழுது அப்படியான ராஜநாகம்தான் ஆளுயரத்திற்கு எழும்பி படமெடுக்கிறது.

 

சாமிநாதனுடைய பெற்றோர் அவனுடைய இருபத்தி மூன்றாவது வயதிலிருந்து தங்களுக்கான மருமகளை வலைவீசித் தேடத்துவங்கியிருந்தனர். ஆரம்பத்தில் அந்த வலை பெரியபெரிய ஓட்டைகளை உடையதாகயிருந்தது.  

 

ஏழைக்குடும்பத்தின் பெண்பிள்ளைகளெல்லாம் அவ்வோட்டைகளினூடே ஒழுகியொழுகிப் போனபடியிருந்தனர். நிகர்வசதியுடைய குடும்பத்தின் பெண்களுக்கோ சாமிநாதனின் தோற்றம் எந்தவிதமான உளக்கிளர்ச்சிகளையும் உண்டாக்கவில்லை. தலையெது காலெது என்று கண்டுபிடிக்க முடியாதவண்ணம் அடிக்கும் உச்சிக்கும் ஒரேமாதிரி இருப்பவனைக் கண்டால் எப்படித்தான் இளம்-உளங்கள் கிளர்ச்சியாகும்? நேரிடையாகச் சொல்லாமல் தடம்வழி சகுனம் சரியில்லையென்றும் ஜாதகப் பொருத்தங்கள் போதவில்லையென்றும் ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தவிர்த்தனர். இப்படி அந்தஸ்துக்குத் தகுந்தமாதிரியே தேடிக்கொண்டிருந்தால் பையனுக்கு கல்யாணமே பண்ணமுடியாது என பயந்துபோன சாமிநாதனின் பெற்றோர்கள் ஒரு கட்டத்தில் வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை பெண்ணுக்கு படிப்பும் அழகும் இருந்தால்கூட போதும் என வலையை வீசத் துவங்கினர். பெரியபெரிய ஓட்டைகள் அத்தனையும் முற்றிலுமாக அடைக்கப்பட்ட வலையாக அது இருந்தது. 

 

இந்தப் பொண்ணுக்கு இன்னும் ஒரு வருசம் படிப்பு பாக்கியிருக்குது. உங்க வசதி வாய்ப்புகளைப் பத்திச் சொன்னதுமே புள்ளையோட அப்பா அம்மாவுக்கு ஆசை வந்திருச்சு. படிப்பை பாதியிலேயே நிறுத்திபோட்டு கல்யாணம் பண்ணிக்கொடுக்கவும் தயார்தான். ஆனா புள்ளைதான் ஒரு டிகிரியாவது முடிக்காமக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அடம்புடிச்சிட்டிருக்குது. கல்யாணத்துக்கு அப்புறமும் பாக்கியிருக்கற படிப்பை நீங்க படிக்க வெக்கறதா இருந்தா பேசிப் பார்க்கலாம் என  நந்தினியின் ஜாதகத்தைக் கொடுத்த புரோக்கர் கூறியிருந்தார்.  

 

ஜாதகம் பொருந்தியிருந்தது. அதைவிட நந்தினியின் அழகு எல்லோருக்கும் பிடித்துப் போயிருந்தது.  மகாலட்சுமி மாதிரி இருக்கா.. அதேசமயம் தான் மகாலட்சுமி மாதிரிங்கிற உண்மையை அறியாத அப்பாவியாகவும் இருக்கா.. இப்படி இருக்கிறதுதான் நல்லது..  தானொரு அழகிங்றத அறிஞ்ச பொண்ணுகளெல்லாம் பயங்கர ஆணவத்தோட இருப்பாளுக…  ஊட்டுக்காரன் மாமியாரு மாமனாரு சொல்றதையெல்லாம் கேட்கமாட்டாளுக.. நமக்கு இப்படிப்பட்ட பொண்ணுதான் வேணும். தாராளமா கல்யாணத்துக்கு அப்புறமும் டிகிரி முடிக்கிற வரைக்கும் காலேஜ்க்குப் போய்க்கட்டும் என சாமிநாதனின் அம்மா கூறினாள்.  

 

ஒரு மகாலட்சுமி தானொரு மகாலட்சுமியென்பதை உணர்வதற்கு எவ்வளவு நேரமாகிவிடப் போகிறது? அது எப்போது வேண்டுமானாலும் நிகழ்ந்துவிடலாமே? என்றெல்லாம் யாருக்கும் கேள்விகள் உண்டாகவில்லை. என்ன இருந்தாலும் சாமிநாதனின் அம்மா ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி அல்லவா? அவரது பணிக்காலத்தில் குடியிருக்கும் மனைக்கு பட்டா கேட்டுவரும் சாமானியனிலிருந்து குளம் கண்மாய்களை ஆக்கிரமித்து பிளாட்டுகள் போட்டு விற்கும் அரசியல்வாதிகள்வரை எத்தனைபேரை பார்த்திருப்பார்? அத்தனை பேர்களையும் திறம்படக் கையாண்டு அவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகள்தான் என்ன கொஞ்சமா? நஞ்சமா?  அவரே சொல்லிவிட்டாரெனில் பிறகதில் மாற்றுக் கருத்துக்கு இடமேது? ‘அப்படியே ஆகட்டும்என்றார் சாமிநாதனின் அப்பா. அவர் ஒரு மேநிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற உடற்பயிற்சி ஆசிரியர்.     

     

திருமணத்தன்று காலையில் முகூர்த்தம் முடிந்ததும் பொண்ணும் மாப்பிள்ளையும் உண்டான வழக்கத்தின்படி மாப்பிள்ளையின் ஊருக்குப்போய் அங்கிருந்த பிள்ளையார் கோவிலில் கும்பிட்டுவிட்டு, பிறகு மாப்பிள்ளையின் வீட்டுக்குப்போய் நல்லநேரம் முடிவதற்குள்ளாகவே பால்பழமெல்லாம் சாப்பிட்டுவிட்டு மண்டபத்திற்குத் திரும்பியிருந்தனர். மதியம் வரவேற்பு முடிந்ததும் பெண்வீட்டார்களும் உண்டான வழக்கத்தின்படி மணமக்களை தங்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்தப் பிரச்சனை வெடித்தது.

 

 

 

‘உங்களுக்கெதுக்கு சிரமமுங்க சம்பந்தி..? பொண்ணுமாப்பிளையை எங்க வீட்டுக்கே கூட்டீட்டுப் போயிக்கறோமே..? என்று சாமிநாதனின் அம்மா கூறினாள். இது பெண் வீட்டு உறவினர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது. ‘இதிலென்ன சிரமமுங்.. அப்படியெல்லா ஒன்ணுமில்லீங்..என்று நந்தினியின் அப்பா மெல்லிய தயக்கத்துடன் மறுத்துரைத்தார்.

 

முன்தினம் மதியத்திலிருந்து கப்பல் போன்ற கார்களில் வந்துவந்து இறங்கிய மாப்பிள்ளை வீட்டு உறவினர்களையும் அவர்தம் செழிப்புகளையும் பார்த்துப்பார்த்து ரைஸ்மில் கூலியான அந்த எளிய மனிதர் மிரண்டுபோய்க் கிடக்கிறார் என்பது அவரது உடல்மொழிகளில் தெரிந்தது.  ‘அதெப்படீங்க..? கல்யாணத்தன்னிக்கு ராத்தங்கல் பொண்ணூட்லதானுங்ளே..? சாந்திமுகூர்த்தம் பொண்ணூட்ல நடக்கிறதுதானுங்ளே மொறை..?என்று நந்தினிக்கு அத்தை முறையாகும் ஒரு உறவினர் கூறினார். அவரது குரல் உயர்ந்திருந்தது. மாப்பிள்ளை தரப்பாரையும் அவர்தம் பவிசுகளையும் பார்த்துப்பார்த்து அந்த அத்தைக்காரி மனம்வெம்பிக் கிடக்கிறாள் என்பது அவளது உடல் மொழிகளில் தெரிந்தது.

 

‘அதுக்கில்லீங்க… அங்க வீடு ரொம்ப சிறுசா இருக்கு.. நம்ம பையன் சின்ன வயசிலயிருந்தே தனி ஏசி ரூம்ல கட்டில் மெத்தைலயே தூங்கிப் பழகீட்டான்.. அங்க தங்கறதுக்கு சிரமப்படுவானேனு பார்த்தேன்..என்று சாமிநாதனின் அம்மா கொடுத்த விளக்கம் பெண்வீட்டு உறவு வகையறாக்களை –குறிப்பாக அந்த அத்தைக்காரப் பெண்மணியை மூக்கைச் சொறிந்து விட்டதுபோல் ஆகிவிட்டது. ஓஹோ… வூடு சிறுசாப் போச்சா..? ஊடு சிறுசு குடும்பம் சிறுசுங்கிறதெல்லாம் தெரிஞ்சுதானே பொண்ணுக் குடுன்னு வந்து நின்னீங்க..?என்று குதிக்கத் துவங்கினாள். பிரச்சனை பெருசாகிக் கொண்டிருப்பதையுணர்ந்த அந்த அத்தையின் கணவர்  அவளை அதட்டி வெளியே இழுத்துக் கொண்டு போனார். இருதரப்பிலுமிருந்த வயதில் மூத்தவர்கள் தலையிட்டு மத்தியஸ்தம் பேச நிலமை ஒருவழியாக அப்போதைக்கு சீரானது.               

 

சாமிநாதன் வாய்க்கால்ப்பாதையில் மேற்கே நடந்து கொண்டிருந்தான். தென்புறம் கிழமேலாக நீண்டுகிடந்த கிளுவை வேலிக்கு அப்பாலிருந்த கொறங்காட்டு மரங்களுக்குள்ளிலிருந்து செம்போத்துகளும் கொன்னவாய்க் குருவிகளும் உற்சாகக் குரலெழுப்பியபடியிருந்தன. காரைப் புதர்களடர்ந்த பள்ளத்துக்குள்ளிருந்து மயில்கள் அகவுவதும் கேட்டது. வேலிவேப்பனிலிருந்து இறங்கிய அணிற்பிள்ளையொன்று ஜீப்ரோட்டிலேயே கிழக்கே வந்தது இவனைப் பார்த்ததும் சட்டென திரும்பி வாய்க்காலுக்குள் இறங்கி ஏறி மறுபுறமிருந்த கிளுவை வேலிக்குள் புகுந்து மறைந்தது. காலையிளவெயிலின் செம்பொன் நிறம் வெண்பொன் நிறமாக மாறியிருந்தது. பார்த்தபடி இருக்க இருக்கவே பார்வைக்குப் புலப்படாமல் வெயிலின் நிறம் மாறிவிட்டதாகத் தோன்றியது. நந்தினியின் உறவுமேகூட இப்படித்தான். மனசுக்கும் புத்திக்கும் புலப்படாமலேயே வண்ணங்கள் திரிபடைந்து திரிபடைந்து கடைசியில் பிரிவென மாறி நிற்கிறது என நினைத்துக் கொண்டான். தலையைக் குனிந்தபடியே பலதையும் யோசித்தவாறு  நடந்து கொண்டிருந்தவன் அந்த சத்தங்களைக் கேட்டு திடுக்கிட்டான். எருமையொன்று கத்தும் சத்தம். மனிதனொருவர் அதட்டும் சத்தம்.

 

ரகு அண்ணனின் குரலைப்போலத்  தோன்றியது. ரகு அண்ணன் உள்ளூரைச் சேர்ந்தவர்தான். பங்காளி முறையாகிறது. சாமிநாதனிடம் சொந்த அண்ணனைப் போலவே பாசமும் உரிமையும் பாராட்டுபவர். பெரிய காட்டுமுருங்கை மரத்தையொட்டி தெற்கே போகும் இட்டேறிக்குள்ளிருந்துதான் அந்த மகிஷமானுட கூச்சல் வந்தபடியிருந்தது. வாய்க்கால்ப் பாதையில் போவதைத் தவிர்த்துவிட்டு இட்டேறிக்குள் இறங்கி தெற்கே நடக்கத் துவங்கினான். சற்று தூரம் போனதும் எதிர்படும் வளைவில் மேற்கே திரும்பினான். ரகு அண்ணனேதான்.  கண்டமேனிக்குத் திட்டியபடியே வேரோடு பிடுங்கியெடுத்த ஆவாரஞ்செடியைக் கொண்டு எருமையைப் போட்டு அடி வெளுப்பிக் கொண்டிருந்தார். மூக்கணாங்கயிறை அவரது இடதுகை கெட்டியாகப் பற்றியிருந்ததால் எருமையின் தப்பியோடும் முயற்சிகள் எடுபடவில்லை.

 

‘ஙொய்க்.. ஙொய்க்என்று கத்தியபடிக்கெ உடலின் பின்புறத்தை மட்டும் இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பி தப்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

 

சாமிநாதனைப் பார்த்ததும் அடிப்பதையும் திட்டுவதையும் நிப்பாட்டியவர் ஆவாரஞ்செடியைக் கீழே வீசியெறிந்தார். அடி விழுவது நின்றதும் எருமை கத்துவதையும் நிறுத்தியிருந்தது. கறுத்த அதன் முதுகெல்லாம் அடிவாங்கி உண்டாகியிருந்த வெள்ளைத் தடங்களின்மேல் ஆவாரையின் மென்மஞ்சள் பூக்களும் சிறுபச்சையிலைகளும் உதிர்ந்து கிடந்தன. அடிவாங்கிய எருமையைவிட அடித்த ரகுஅண்ணன் களைத்துப் போயிருந்தார். மேல்மூச்சுகீழ்மூச்சுவாங்க செல்போனை எடுத்து எண்களை அமுக்கி காதுக்குக் கொண்டுபோனவர் ‘ டேய் பழனிச்சாமி… நீ வரவேண்டா… அங்கியே வேலையப் பாரு.. தம்பியொருத்தன் வந்துருக்கிறான்.. நான் அவனையே கூட்டீட்டுப் போய்க்கிறேன்என்றார்.  

 

“என்னாச்சுங்ண்ணா… எருமையப்போட்டு இந்த அடி அடிச்சிட்டிருக்கீங்க..?

 

கெடாவுக்குக் கத்துதேன்னு புடிச்சிட்டு வந்தன்டா தம்பி.. இதுவரக்கும் ஒழுக்கமாத்தான் வந்துது.. இவ்வடத்தால வந்ததும் மொசலொண்ணு வேலிக்குள்ளிருந்து குபீர்னு முட்டீட்டு ஓடுச்சா.. பயிந்துபோயி அப்படியே நின்னுக்குச்சு.. முடுக்குனாலும் போகமாட்டீங்குது இழுத்தாலும் வரமாண்டீங்குது.. அப்புறம் புடிச்சு சாத்தாம என்ன பண்றது? நம்ம பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குதல்ல..? செரிசெரி.. அந்த ஆவாரமாத்தை எடுத்துக்கோ.. நான் மின்னுக்கு இழுத்துட்டுப் போறேன் நீ பொறவுக்கு முடுக்கீட்டு வா..

 

அண்ணா.. நான் வாக்கிங் வந்தனுங்ண்ணா..

 

இதுவும் வாக்கிங்குதான்டா தம்பி…  உன்னைய எருமையை முடுக்கிட்டு பின்னாலயே நடந்துட்டுவாடான்னுதான் சொல்றேன்.. எருமைமேல உக்காந்துட்டுவாடான்னு சொல்லல.. புரியுதா?

 

 

அதுக்கில்லீங்ண்ணா.. திரும்பி வாரதுக்கு ரொம்ப லேட்டாயிருமோன்னு யோசிச்சேன்

 

அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.. வழக்கமா நீ வூடு போய்ச்சேர்ற நேரத்துக்கே போயிரலாம்.. அப்படியே கொஞ்சம் லேட்டானாத்தான் இப்ப என்ன?  கரக்டா எட்டு முப்பதுக்கு கடைய தொறந்து வெக்கவேண்டிய நானே  இன்னும் இங்க இருக்கேன். உனக்கென்ன? போயி மூக்குமுட்ட சாப்புட்டுட்டு விட்டத்தையோ டிவியையோ செல்போனையோ பார்த்துட்டு படுத்திருக்கிறவந்தானே? பேசாம பின்னாலயே வா.. எருமைகால்ல நடந்தாலாச்சும் இந்த உடம்பு குறையுதான்னு பார்ப்போம்

 

அடிதின்னதில் எருமைக்குப் புத்தி வந்துவிட்டதுபோல. தலைக்கயிற்றைப் பிடித்தபடி முன்னால் நடந்து கொண்டிருந்த ரகுஅண்ணனை சாதுவாக பசுபோல பின்தொடர்ந்தது. கையில் வைத்திருந்த ஆவாரஞ்செடிக்கு எந்த வேலையுமில்லை. சாமிநாதன் எருமையைப் பின்தொடர்ந்தான்.

 

“ஏனுங்ண்ணா… வழக்கமா ஊசிதானே போடுவீங்க? கெடா சேத்தறதுக்கெல்லாம் போகமாட்டீங்ளே..

 

 

 

 

ஆமாந்தம்பி… ஊசி போடறதுதான் வழக்கம். மிந்தியெல்லாம் ஒரே ஊசீல செனைப் புடிச்சிக்கும். இப்பல்லாம் அப்படியில்லே.. இந்த எருமைக்கே இந்த நாலு மாசத்துல மூணு ஊசி போட்டாச்சு.. நேத்து சாயந்திரத்திலயிருந்து மறுபடியும் காளைக்கு கத்த ஆரம்பிச்சிருச்சு.. செரி.. இந்தக் கெட்டாப்பு கெடா சேத்திப் பார்ப்போமேனு புடிச்சிட்டு வந்தேன்.. கெரகம்.. மொசல்வேற குறுக்க போயிருக்குது.. கெடாவுக்காவது செனை நிக்குமா என்னனு தெரியல.. பார்ப்போம்.

 

இங்க யார்ங்ண்ணா எருமைக்கெடா வளர்த்துறா? ரொம்ப தூரப் போகோணங்ளா..?

 

அம்மாபாளையத்துல ஒரு தோட்டத்துல வளர்த்துறாங்க.. எப்படியும் இன்னும் மூணு கிலோமீட்டர் வரும்

 

இட்டேறி அகலமான மண்பாதை ஒன்றிற்கு வந்து சேர்ந்தது. எருக்கிலைகளும் ஆவாரைகளும் நாய்த்துளசிகளும்  வெட்டைச் செடிகளும் இரு மருங்கிலும் பூத்துக் கிடந்த மண்பாதையில் ரகுஅண்ணன் மேற்கே திரும்பி நடக்கத் துவங்கினார். பயம் முற்றிலும் போய்விட்டதுபோல. எருமை இயல்பான நடைவேகத்திற்கு வந்திருந்தது. முன்னால் செல்லும் ரகுஅண்ணன் இழுக்கவேண்டிய அவசியமில்லாத அளவுக்கு அவர் கையில் பிடித்திருந்த எருமையின் தலைக்கயிறு தொங்கல் விழுந்து இடம்வலமாகத் ஆடத் துவங்கியிருந்தது. காலையிளவெயில் ஏறுவெயிலாக மாறி வெப்பத்துடன் தாக்க ஆரம்பித்தது. சாமிநாதனின் டிசர்ட்டும் பெர்முடாசும் வியர்வையில் நனைந்து நிறம்மாற ஆரம்பித்தன. மண்பாதையின் இரண்டு புறமும் வெறும் நிலமாக விரிந்து கிடந்த காடுகளில் உயர உயரமான காற்றாலைக் காற்றாடிகள் தென்மேற்கு முகமாகத் திரும்பி சுழன்றபடியிருந்தன.

 

“அப்புறம் தம்பி… கொழுந்தியா என்னங்கிறா? குடும்பம் நடத்த வாரம்ங்கிறாளா? இல்லே.. டைவர்சே பண்ணிக்கிலாம்கிறாளா..?

 

வர்றம்னுதான் சொல்றாளாமாண்ணா.. சில கண்டிசன்ஸ் போடறாளாமா.. அதுக்கெல்லா ஓக்கேன்னா டிகிரியை கம்பிளீட் பண்ணீட்டு வாரம்ங்கிறாளாமா..

 

என்னது சொல்றாளாமா போடறாளாமாவா..? அப்ப உங்கூடயுமே பேச்சில்லையா..? ரண்டுபேரும் போன்லயாவது பேசீட்டிருப்பீங்கன்னல்லொ நெனச்சுட்டிருக்கேன்..

 

 என்னட நெம்பரைப் பார்த்ததும்தான் டக்குன்னு கட் பண்ணியுட்டர்றாளே..? அப்புறமெங்கபோயி போன்லபேச..? ஒருதடவை நேர்லயேபோயி பார்த்துப் பேசுவோம்னு மெடிக்கல்மூர்த்தியைக் கூட்டீட்டு காலேஜுக்கே போனேன். சந்திக்கவே விருப்பமில்லை.. எதாயிருந்தாலும் ஊட்லபோயி பேசிக்கங்கனு வாட்ச்மேனுகிட்ட சொல்லியுட்டுட்டா.. இப்போதைக்கு பைசூல்பண்ண போயிட்டிருக்கிற மூணாவது மனுசங்கமூலமாத்தான் பேச்சுவார்த்தை நடந்துட்டிருக்குதுங்ண்ணா..

 

ஓ..

 

எங்கம்மாகூட இருக்கமுடியாதாமா.. தனிக்குடித்தனம்தான் போகணுமாமா..

 

ம்ம்..

 

“அவ தம்பிக்காரன் படிச்சிமுடிச்சி வேலைக்குப் போகறவரைக்கும் இவளை வேலைக்குப் போக அலோவ் பண்ணனுமாம்.. சம்பளத்தைக் கேட்கக் கூடாதாம். அந்த சம்பளத்துலதான் தம்பியை படிக்கவெக்கப் போறாளாம்

 

அவ வேலைக்குப்போயி அந்த சம்பளக்காசுலதான் படிக்கவெக்கோணமா என்ன? காலேஜ் பீஸ்தானே..? நீயே கட்டியுட்டுட்டுட்டீன்னாப் போச்சு… இங்க உங்கிட்டயென்ன இல்லாமயா கெடக்குது?

 

அது ஆகாதாம்ண்ணா.. எங்கம்மா காலத்துக்கும் சொல்லிக் காட்டீட்டே இருப்பாளாம்.. அதையெல்லாம் அவளால கேட்க முடியாதாம்..

 

அது வாஸ்தவந்தான்.. சித்தி அப்படியெல்லாம் சொல்லக் கூடிய ஆளுதான்…. ஒண்ணுமில்லாத வூட்ல பொண்ணு எடுக்கப்போறாங்னப்பவே ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க… வேலைக்குப் போன காலத்திலிருந்து ரண்டுகையிலயும் சம்பாதிச்சு நாலாப்பக்கமும் சொத்துச்சேத்தி வெச்சிருக்கிற மணியாரம்மாகிட்ட  இல்லாதவனூட்டுப்  புள்ளைவந்து காலத்துக்கும் குப்பை கொட்ட முடியுமான்னு? கல்யாணத்தன்னிக்கு பொண்ணுமாப்பிள்ளை மண்டபத்தைவிட்டுக் கிளம்பும்போது எம்பையன் ஏசீலதான் படுப்பான் தனி ரூம்ல கட்டில் மெத்தைலதான் படுப்பான் பொண்ணு வீட்டுக்கெல்லாம் அனுப்ப முடியாதுனு ஆர்ப்பாட்டம் பண்ணுனப்பவே நானும் நெனச்சேன்.. சித்திக்காரி மகனையும் மருமகளையும் நல்லபடியா பொழைக்க வுடமாட்டான்னு.. உன் சம்சாரத்தோட அவ அப்பன் ஆத்தாவோட அவ சொந்தக்காரங்களோட மனநிலையவெல்லாம் கொஞ்சங்கூடப் புரிஞ்சிக்காம நீயும் உங்கம்மாவை எதுவும் எதுத்துப் பேசாம  மண்பூதங்கணக்கா நிக்கும்போதே நெனச்சேன்.. அந்தப் புள்ளை உன்னை சீக்கிரமே காறித்துப்பீட்டுப் போகப்போறான்னு… எல்லாமே நடந்துருச்சு.. ஆனா இவ்வளவு சீக்கிரம் கட்டி ஆறே நாள்ல காறித் துப்பீருவான்னு நான் நெனைக்கவே இல்லடா தம்பி… எப்படியும்  ஆறுமாசம் ஒரு வருசமாவது தாக்குப் பிடிப்பான்னு நெனச்சேன்…

 

அண்ணா…

 

என்ன நொண்ணா..? நேத்து உங்கப்பா… அதாவது எங்க சித்தப்பன் கடைக்கு வந்துருந்தாரு.. கெழக்காலத் தோட்டத்துல புதுசாப்போட்ட போர்க்குழிக்கு குழிமோட்டார் வேணும்னு சொல்லீட்டுப் போக வந்துருந்தாரு.. அவரப்பார்த்தாத்தான்டா எனக்கு பாவமா இருக்குது… இந்த எடம் வந்தப்பவே உங்க அம்மாகிட்டே அவரு சொன்னாராமா.. ‘வேணாம் விசாலாட்சி.. கொஞ்சம் முன்னபின்ன லேட்டானாலும் நம்ம தகுதிக்குத் தகுந்தமாதிரியே பார்த்துக்கலாம்.. இல்லாதவனூட்டுச் சம்பந்தம் உன்னட சுபாவத்துக்குச் செட்டாகதுன்னு..’ ‘பையனுக்குப் புடிச்சுப்போச்சு.. கட்டுனா இந்தப் புள்ளையத்தான் கட்டுவேனு புடிவாதமா இருக்கான் பேசாம கட்டிவெச்சிருவோம் விடுங்கன்னு உங்கம்மா சொல்லுச்சாம். பேசாமக் கட்டிவெச்சிருவோம்னு சொல்லுச்சே… கல்யாணத்துக்கப்பறம் பேசாம இருந்திருந்தா இத்தனை பிரச்சனை வந்திருக்குமா? இல்லே.. நீதான் நொட்டுனா அந்தப் புள்ளையவேதான் நொட்டோனம்னு உறுதியா இருந்தியே… அதே உறுதியோட கல்யாணத்துகப்பறமும் அந்த புள்ளையோட சைடு நியாயத்துக்கெல்லாம் சப்போர்ட் பண்ணீருந்தீனா இத்தன பிரச்சனை வந்துருக்குமா..

 

அண்ணா..    

 

என்ன நொண்ணா.. நீ எதுவும் பேசப்படாது. நாந்தான் பேசுவேன்.. எப்படா தனியா சிக்குவான் புடிச்சு காய்ச்சியுடலாம்னு நெனச்சிட்டேயிருந்தேன். இன்னிக்குச் சிக்கீட்டே.. நான் சொல்லப் போறதெல்லாம் உன் நல்லதுக்குத்தான்டா தம்பி.. எல்லாத்தையும் பொறுமையாக் கேட்டுட்டுப்போயி ஆற அமர உக்காந்து யோசனை பண்ணிப் பாரு.. அர்த்தம் புரியும். அந்தப் புள்ளை வரமாட்டேனு அடம்புடிக்கிறதுக்கு உங்கம்மாவோட உருட்டு மெரட்டெல்லாம் ஒரு காரணமேயில்லை. இந்த உலகத்துல எந்த மாமியாருக்காரிதான் தன் மருமகளை நல்லமொறையா வெச்சிருக்கிறா..? உங்கம்மா மட்டும் வெச்சுக்கிறதுக்கு..? அவ வராம இருக்கறதுக்கு முக்கியக் காரணமே உன்னைப் புடிக்கலீங்கிறதுதான். உன்னை ஏன் அவுளுக்குப் புடிக்காமப் போச்சு தெரியுமா?

 

அண்ணா…

 

சொல்றங் கேளு.. தலையெது காலெதுன்னு தெரியாத அளவுக்கு நீ பீப்பாய் மாதிரி பீத்தச்சொரக்காயி மாதிரி இருக்கிறதுனாலயெல்லாம் அவுளுக்குப் புடிக்காமப் போகல.. அதையெல்லாம் ஏற்கனவே தெரிஞ்சுதானே கல்யாணம் பண்ணுனா..? அப்புறமெப்படி புடிக்காமப் போகும்?

 

நீ நெனைக்கறமாதிரி பர்ஸ்ட்நைட் அன்னைக்குப் முழுசாச் செய்யாம பாதீலயே ஒழுக்கீட்டுப் திரும்பிப் படுத்துக்கிட்டயே.. அதுனாலயும் அவளுக்கு உன்னைப் புடிக்காமப் போகலே.. இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னு தோணுதா..? தெரியும்டா.. எல்லாம் தெரியும். இந்த விசயத்தை மெடிக்கல் மூர்த்திகிட்டச் சொல்லி தண்ணி ரொம்ப நேரம் வராம இருக்கறதுக்கான மாத்திரையை வாங்கீட்டுப் போனதும் தெரியும்.  ஏற்கனவே சளிபுடிச்சு மூக்கடச்சுக்கிட்டு இருந்ததால  இன்னிக்கு வேண்டாமேனு சொன்னதையெல்லாம் கேக்காம மாத்திரயைப் முழுங்கீட்டு அந்த புள்ளையப் போட்டு நசுக்கு நசுக்குனு நசுக்கி எடுத்து ஒரேயடியா மூச்சப்புடிக்கப் பார்த்ததும் தெரியும்..

 

அண்ணா.. அந்தக் கருமம்புடிச்ச நாயத்தையெல்லாம் வுட்டுத் தொலைங்ண்ணா.. நம்ம காம்ப்ளக்சுல வாடகைக்கு இருக்கறவனாச்சே நம்மாளாச்சேன்னு எதார்த்தமா நம்பி அந்த மெடிக்கல்காரங்கிட்டப் போயி யோசனை கேட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். ஒருத்தர் பாக்கியில்லாம ஊருக்குள்ள எல்லாருகிட்டயுமே சொல்லிப் போட்டானாட்ட இருக்குது… இருக்கட்டுங்க… இன்னிக்குப்போயி அவனை தூக்கிப்போட்டு மிதிக்கறன் பாருங்க..

 

 எதுக்கு..? தெரியாம இருக்கற பாக்கி ஒண்ணுரெண்டு பேருக்கும் இந்த விசயம் தெரிஞ்சுபோயி அவுங்களும் பொச்சுல சிரிக்கிறதுக்கா.. தூக்கிப்போட்டு மிதிக்கறதும் வேண்டாம்.. பொழுதானா அவுங்கூட சேர்ந்து தண்ணியடிச்சிட்டு மப்புல நேருநெதானமில்லாம எல்லாத்தையும் உளறிக் கொட்றதும் வேண்டாம்.. புரியுதா..?

 

செரிங்ண்ணா..

 

அண்ணியோட சொந்தக்காரப் பொண்ணு ஒண்ணு காலேஜ்ல நந்தினிகூடத்தான் படிச்சிட்டிருக்குது. நாலு நாளைக்கு முன்னால ஒரு விஷேசத்துக்காக ஊருக்குப்போன அண்ணிகிட்ட அந்தப் பொண்ணு உங்க ரெண்டுபேரு சம்பந்தமாவும் பேசுச்சாம். அதுலயிருந்து என்ன தெரியவருதுனா நீ நெனைச்சிக்கிட்டு இருக்கிறமாதிரியான விசயங்கள் எதுவுமே காரணம் கிடையாது. சம்பந்தி விருந்தன்னிக்கு தன்னோட அப்பா அம்மா சொந்தக்காரங்களோட ஊருக்குப்போன நந்தினி அங்கியே தங்கிக்கிட்டதுக்குக் காரணம் அந்த  விருந்துல நடந்த சில விசயங்கள்தான். அதிலும் குறிப்பா அன்னிக்கு நீ நடந்துக்கிட்ட விதம்தான். அவளுக்கு இவ்வளவு பெரிய மனவிலகலை உண்டாக்கிருச்சு..

 

அன்னிக்கு அந்தளவுக்கு அப்படியெல்லா பெருசா எதுவும் நடக்கலியேங்ண்ணா… விருந்தெல்லாம் முடிஞ்சு கெளம்பும்போது பிரியஞ்சந்தோசமாத்தான் எல்லோரும் கிளம்பிப் போனாங்க. என்னையும் கிளம்பச் சொன்னாங்க.. ஏசி கட்டில் மெத்தையெல்லாம் இல்லாம அங்கபோயி நைட்டுத் தங்கறதுங்கிறது எனக்கும் சிரமம்தான். இருந்தாலும் எப்படியோ சமாளிச்சுக்கலாம்னு நானும் புறப்படறதுக்குத் தயாரானேன். ஆனா எங்கம்மாதான் ஆகாதுன்ட்ருச்சு. எங்கபையன் அங்கவந்து தங்கறதுக்கு செளகரியப்படாது வேணும்ன்னா உங்க பொண்ணை மட்டும் கூட்டீட்டுப் போங்க. இல்லீன்னா இங்கியே வுட்டுட்டுப் போங்க.. நாளைக்கு மதியவிருந்துக்கு வரும்போது பொண்ணுமாப்பிள்ளையைக் கூட்டீட்டு வந்துடறோம்னு சொல்லுச்சு…

 

செரி.. அதுக்கு நீயென்ன சொன்னே..?

 

நானென்ன சொன்னேன்? எங்கம்மா சொல்ல எதுத்து எங்கூட்ல யாரு பேசீடமுடியும்? காலைலயே போய்க்கலாம் நீயும் இரு நந்தினின்னு சொல்லிப் பார்த்தேன்.. அவ கேக்கல.. போயேதான் ஆகோணம்னு ஒரே புடிவாதமாப் போயிட்டா..

 

நீ என்ன சொல்லீருக்கோணம்னு தெரியுமா? உன்ற எடத்துல நான் இருந்திருந்தா என்ன சொல்லீருப்பேன் தெரியுமா? போய் பொண்ணு கேட்டு நிக்கும்போது அதெல்லாம் தெரியலையாக்கும்? பேசாமா வாயை மூடீட்டுக்கெடன்னு அம்மாவை அடக்கீட்டு நந்தினியோட அவ தாய்புள்ளையோட கெளம்பிப் போயிருப்பேன். செரி அதைவுடு.. அடுத்த நாள் பொண்ணு வீட்ல நடந்த சம்பந்தி விருந்துக்கு இங்கிருந்து எல்லாரும் கெளம்பிப் போனீங்களே.. அன்னிக்கு என்ன நடந்தது?

 

அன்னிக்கு விருந்தெல்லாம் முடிஞ்சு எல்லாரும் கெளம்ப ஆயத்தமாகும்போது நந்தினி வரமுடியாதுன்ட்டா… வேணும்னா உங்க பையன இங்க வுட்டுட்டுப் போங்க.. அத்தாப்பெரிய மாளிகைலயெல்லாம் வந்து வாழறதுக்கு தனக்கு செளரீயப்படாதுன்னு ஒரே போடா போட்டுட்டு உள்ளாறபோயி கதவைச் சாத்திக்கிட்டா.. அப்பறம் என்ன நடந்துதுன்னுதான் உங்களுக்கும் தெரியுமே.. உங்கவூட்லயிருந்து அண்ணியும் அந்த சம்பந்தி விருந்துக்கு வந்திருந்தாங்ளே..  

 

“ஆமாமாம்.. நடந்ததையெல்லாம் அண்ணி எங்கிட்ட சொன்னாதான். அந்தப் புள்ளை அன்னிக்கு அப்படிப் பேசுனதுல தப்பெதுவும் இல்லைன்னுதான் எனக்குத் தோணுது. மானமுள்ள எந்தப் பொண்ணா இருந்தாலும் அப்படித்தான் பேசீருப்பா.. கல்யாணம் பண்ணிவெச்சேதான் ஆகோணம்னு அந்தப் புள்ள சொன்னாளா? ஊருலகமெல்லாம் தேடியும் கெடைக்காம புள்ளைய மட்டும் கொடுத்தாப் போதும் வேறெதுவும் வேண்டாம்னு போயி ஒத்தக்கால்ல நின்னீங்க.. அந்தாளும் சொத்துக்கு ஆசப்பட்டு செரீன்னு பொண்ணக் குடுத்துட்டான். கட்டீட்டுவந்தா ஒழுக்கமா வெச்சுருக்கோணம். கொஞ்சம் பொறுத்திருந்தா தகுதிக்குத் தகுந்த எடமே அமஞ்சிருக்கும் அதுக்குள்ள அவசரப்பட்டு இல்லாதவனூட்டுக்குப் போயிட்டீங்களேன்னு குறுக்கால இருக்கற ஆளுக பேசறதையெல்லாம் காதுலயே வாங்கீருக்கக்கூடாது. எவனோ போறவன்வாரவன் சொன்னதையெல்லாம் நம்பீட்டு இங்க பொழப்பு பெருசு அங்க ஒண்ணுமில்லைங்கற மாதிரி இல்லாத லொள்ளு நாயமெல்லாம் பேசுனா கடைசில இப்படித்தான் ஆகும். நான் நெனச்சா எம்பையனுக்கு எண்ணி எட்டே நாள்ல உன்னையப்போல அம்பதுபேரக் கட்டிவெப்பேன்டின்னு உங்கம்மா சவால் வுட்டுட்டு வந்துதாமே..? இன்னிக்கு மாசம் மூணாகுது.. அம்பதுல இதுவரைக்கும் எத்தன கல்யாணம் பண்ணிவெச்சிருக்குது.?

 

அண்ணா..

 

இன்னிக்கு இந்தக் காலத்துல அதெல்லாம் அவ்வளவு சுலபமில்ல தம்பி. என்னிக்கு அந்தப் பொண்ணு உனக்குப் பொண்டாட்டியா ஆனாளோ அன்னிக்கே உன் பேருலயிருக்கற சொத்துக்கெல்லாம் வாரிசாவும் ஆகீட்டா.. உங்கம்மா நெனைக்கறமாதிரி நாலு பெரிய மனுசனுகளவெச்சுப்பேசி கொஞ்சம் பணத்தக்குடுத்து ஒதுக்கியுட்ரலாம்னா நடக்குமா என்ன? சட்டப்படி கோர்ட்லபோயி உண்டான நஷ்ட ஈடு கொடுத்துட்டு டைவர்ஸ் பண்ணிக்கட்டும்னு உன்ற மாமனாரு இப்ப தெம்பா சவால்வுட ஆரம்பிச்சிட்டாராம். அப்படி ஒருவேளை டைவர்ஸ் ஆச்சுனா அடுத்த நாளே நந்தினியைக் கட்டிக்கிறதுக்கு வாட்டசாட்டமான சூப்பருசூப்பரான மாப்பிள்ளைகளும் ரெடியா இருக்கானுங்களாம். புள்ளையும் நல்ல புள்ளை. அதுவும்போக முதல்புருசன் நஷ்டஈடாக் கொடுக்கப்போற பெரிய அமெளண்டோடவும் வருதுன்னா ஊருக்குப் பத்துப் பசங்க முப்பதைத் தாண்டியும் கல்யாணமில்லாம முண்டக் கட்டையாத் திரியற இந்தக் காலத்துல மாப்பிள்ளைங்க நீ நான்னு போட்டி போட்டுட்டு வரத்தானே செய்வாங்க..?

 

“அண்ணா.. என்னுங்ண்ணா என்னென்னெமோ சொல்றீங்க..? அப்படியெல்லா எதுவும் நடந்துச்சுன்னா என்னால தாங்கவே முடியாதுங்ண்ணா.. அப்புறம் எதுனாச்சும் பண்ணுனாலும் பண்ணிக்குவேன்..

 

“சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன் தம்பி..  நிலமை இந்தக் காலத்துல பெண்களுக்கு எப்படி சாதகமா இருக்குதுங்கிறதை நீ உங்கம்மாவுக்கு எடுத்துச்சொல்லி புரியவெக்கோணங்கிறதுக்காகச் சொன்னேன். மத்தபடி அப்படியெல்லாம் எதுவும் நடக்காது.. நீ மனச வுட்றாத.. அப்படி நடக்கிறதுக்குத்தான் நாங்கள்லா வுட்ருவமா என்ன?...

 

மிந்துன வீரமெல்லாம் எங்கம்மாகிட்ட இப்ப இல்லீங்ண்ணா.. அன்னிக்கு வீடுவந்து சேர்ந்ததிலிருந்து ஒரு பத்துநாள்போல வக்கீலாபீசு வக்கீலாபீசா அலஞ்சிட்டெ இருந்தது. எல்லா வக்கீலுகளும் நீங்க அப்பழையா சொன்னீங்களே… அப்படித்தான் சொல்லீருப்பாங்க போலிருக்குது. இப்ப ஆந்துக்குச்சிங்ண்ணா.. குறுக்கிருக்கறவங்க பேச்சக் கேட்டு ரொம்ப ஓவரா ஆடீட்டமோ..? நம்ம பையன் வாழக்கையை நாமளே கெடுத்துட்டமோன்னெல்லம் யோசனை பண்றாப்ல தோணுதுங்ண்ணா..

 

அருமைடா தம்பி.. நல்லா உக்காந்து யோசனை பண்ணட்டும். ஒரு ஆறுமாசத்திக்கு விட்டுப் புடிப்போம். பிறகு நானே அண்ணியோட சொந்தக்காரப்பொண்ணுமூலமா நேரா நந்தினிகிட்டயே பேசி பைசூல் பண்ணியுடறேன். டைவர்ஸ் ஆனாத்தானே இன்னொருத்தன் வந்து கட்டமுடியும்? நீங்கதான் டைவர்ஸ்கேட்டு கோர்ட்டுக்கே போகலியே… இனி அவுங்களா டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்குப் போயி அத்துக்கிட்டாத்தான் உண்டு. அவுங்களுக்கு அந்தளவுக்கெல்லாம் வெவரமும் பத்தாது. வக்கீலுக்குச் செலவு பண்றளவுக்கு அங்க சூழ்நிலையும் இல்லே. நீ கவலைப்படாத தம்பி ஒரு ஆறு மாசத்திக்குப் பொறுமையா இரு.. எல்லாம் சரியாயிடும்..

 

உயரஉயரமான காற்றாலைக் காற்றாடிகள் சுற்றிக் கொண்டிருந்த வெற்று நிலங்களையெல்லாம் கடந்து அந்த அகலமான மண்பாதை சுற்றிலும் கம்பிவேலியிடப்பட்ட தோட்டத்தின் மூங்கில் படல்களாலான நுழைவு வாயிலுக்கு வந்து சேர்ந்திருந்தது. ரகு அண்ணனின் கைபேசி ஒலித்தது. காதில் வைத்தபடியே ‘சொல்லுங்க சண்முகம்..என்றார்.

 

சற்று நேரத்திற்குப் பிறகு ‘வெலைகிலையெல்லாம் பையங்கிட்டச் சொல்லீருந்தனுங்ளே.. அதுதான் பைனலுங் சண்முகம் அதுக்குக் கம்மியாக் குடுத்தாக் கட்டுபடியாகது.என்றார்.

 

இன்னிக்கு எருமைப்பாலு லிட்டரு அம்பதுரூவாய்க்கு சர்வசாதாரணமாப் போகுது.. ஆறுமாசமா நேரம் ரண்டுபுடி பாலுக்கு குடிச்சிருக்குதுனு கணக்குப் போட்டீங்னாக்கூட நான் சொல்றவெலை அந்த பால்காசுக்கே கம்மியாத்தான் இருக்கும்கிறது உங்களுக்கே தெரியும். ஒடச்செல்லாம் கேட்காதீங்க சண்முகம்.. அந்த வெலைக்கு கட்டும்னா அட்வான்ஸ் குடுத்துட்டுப் போங்க காலைலவந்து கன்னுக்குட்டியை ஆட்டோவுல ஏத்திக்கங்க..என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த ரகு அண்ணன் பேசப்பேசவே தொடர்பை சட்டெனத் துண்டித்தார். மேலும் போனை சுவிட்ச் ஆப்பும் செய்து டவுசர்சோப்புக்குள் போட்டுக்கொண்டார்.

 

“இந்தமாதிரி ஆளுககிட்டயெல்லாம் இப்படித்தான் டெக்னிக்கா நடந்துக்கோணம்.. தொடர்ந்து பேசீட்டேயிருந்தோம்னு வெய்யி… அவுனுக நம்மவிடவும் டெக்னிக்காப் பேசி வெலையை ஒடச்சு கீழே அதாளபாதாளத்துக்கு கொண்டுட்டு வந்துருவானுக.. எமகாதனுக..என்றார்.

 

“கன்னுக்குட்டியை எதுக்குங்ண்ணா விக்கறீங்க..? வளர்த்துலாமுங்ளே..என சாமிநாதன் ஆலோசனை நல்கினான்.

 

“அட ஏண்டாநீவேறெ.. கெடாரிக் கன்னா இருந்து வளர்த்துனாலும் ஆதாயமுண்டு.. கெடாக் கன்னை வளர்த்தி என்ன பண்றது..? பெருசானா இந்தமாதிரி எருமை சேர்றதுக்கு வுட்டு காசு பார்க்கலாம்னு வெய்யி.. ஆனா பூச்சிகெடாய்களை பராமரிக்கறதுக்கு நல்ல வலுவான ஆம்பிளையாளுகளா வேணுமே..? பண்ணையில இருக்கிற பையனொரு பொசுக்குட்டி.. அவுனுக்கு அந்தளவுக்கெல்லாம் சாமார்த்தியம் பத்தாது.. நானும் தோட்டத்துல எந்தநேரமும் இருக்கமுடியாது,கடைக்குப் போயாகோணம்.. அதனால இந்தக் கெடா வளர்த்துற பிசுனஸெல்லா நமக்கு ஒத்து வராதுடா..என்றபடியே  கேட்டாகப் போடப்பட்டிருந்த இரண்டு மூங்கில் படல்களில் இடப்புறமாக இருந்த படலை மட்டும் அகலத் திறந்து எருமையும் சாமிநாதனும் பின்தொடர ரகு அண்ணன் உள்ளே நுழைந்தார். தன்னை தணிவிக்கப்போகும் இணையின் இருப்பை எருமை முகர்ந்துவிட்டதுபோல. முக்கால்வாசி பெருமூச்சுக்காற்றும் கால்வாசி சப்தமும் கலந்த குரலொன்றை அடிவயிற்றிலிருந்து சீரான இடைவெளியில் வெளிப்படுத்த ஆரம்பித்தது.

 

“காலைல கொஞ்சம் நேரமே வந்திருந்தீங்கனா மொத ஆளா சேர்த்தீட்டுப் போயிருக்கலாம்.. ஏற்கனவே ரெண்டு எருமையைச் சேர்ந்துருச்சு.. இப்ப பாருங்க யோசனை பண்றதை..எனக் தோட்டத்துக்காரர் கூறினார். ரகு அண்ணனின் எருமை முதுகை நெளித்துக் கொடுத்தவாறு கண்கள்மின்ன நின்றபடியிருந்தது. நசியநீர் ஒழுகியபடியிருக்கும் அரையை முகர்ந்துவிட்டு தலையை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித்திருப்பி  சில வாய்சேஷ்டைகளைச் செய்த எருமைக்கிடா மேற்கொண்டு எதுவும் செய்யாததாக நேரத்தைக் கடத்தியபடியிருந்தது. திரண்டுகறுத்த ஆண்குறிக்குள்ளிருந்து விரைத்த நிலையில் வெளிப்படும் சிவந்த உட்கொடி போதுமான அளவு வெளிப்படவில்லை என்று தோன்றியது. எப்படியும் இன்னும் ஒரு நாழிகையாவது ஆகும்னு நெனைக்கிறேன் என்ற தோட்டத்துக்காரர் எருமை சேர்ந்தானதும் சத்தம்கொடு என ஆள்காரரிடம் சொல்லிவிட்டு ‘வாங்க.. வூட்டுக்குப்போயி ஒரு கிளாஸ் காபித்தண்ணியாவது குடிச்சிட்டு வருவோம்.. இங்கியே ஏன் நின்னுக்கிட்டுக் கிடக்காட்டி..?என்றார்.

 

தோட்டத்துக்காரரின் வீடு எருமைக்கட்டுத்தாரையிலிருந்து சற்று தள்ளி இருந்தது. வீட்டில் தோட்டத்துக்காரரின் மனைவியும் மகனும் மருமகளும் பேரனும் இருந்தனர். பேரனுக்கு இன்னும் ஒரு வயதுகூட முழுமையடைந்திருக்காது எனத் தோன்றியது. உள்வாசலின் இந்தமுனைக்கும் அந்த முனைக்குமாக நடைவண்டியை உருட்டிக் கொண்டிருந்தான். பேரனுக்கு நடைபழக்கிக் கொண்டிருந்த தோட்டத்துக்காரரின் மனைவி “வாங்கப்பனு வாங்க வாங்க.. அந்த திண்ணைல சித்த உக்காருங்க.. மருமகளைக் காப்பி கொண்டாரச்சொல்றேன்.. என்றாள்.

 

சத்தம்கேட்டு  வீட்டிற்குள்ளிருந்து வெற்றுடம்பும் கைலியுமாக எட்டிப்பார்த்த தோட்டத்துக்காரரின் மகனைக் கண்டதும் சாமிநாதன் திடுக்கிட்டான். அந்தப் பையன் சாமிநாதனின் சரீரத்தைவிடவும் பருத்ததும் திரண்டதும் கருத்ததுமான பெரிய தேகத்தைக் கொண்டிருந்தான். சற்று நேரத்திற்குப் பிறகு வீட்டிற்குள்ளிருந்து நீள்சதுரமான எவர்சில்வர் தட்டொன்றில் காபி டம்ளர்களை வைத்தபடி வெளிப்பட்ட அவன் மனைவியைக் கண்டதும் சாமிநாதன் மேலும் திடுக்கிட்டான். ரதியென்றால் ரதி அப்பேர்ப்பட்ட ரதியாக்கும் என யாரும் தன்னை மறந்து சொல்வார்கள் என்பதுபோல அந்தப்பெண் அவ்வளவு அழகாக இருந்தாள்.

 

டீசர்ட் ஒன்றை அணிந்தபடி வெளிப்பட்ட தோட்டத்துக்காரரின் மகன் நாற்காலியொன்றை எடுத்து உள்வாசலில் போட்டு அமர்ந்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்த இவர்களிடம் மழைபற்றி வெயில்பற்றி இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது பற்றியெல்லாம் சகஜமாகப் பேசத் துவங்கினான்.

 

எலக்ட்ரிக்கல் கடைபோக ரகு அண்ணன் அரிசிக்கடையும் வைத்திருக்கிறார் என்பதைப்பற்றி அறிந்ததும் ‘எங்க பாப்பாவோட சொந்தக்காரரு ஒருத்தருகூட காங்கயத்துல ரைஸ்மில்லு ஒண்ணை லீசுக்குப் புடிச்சு நடத்தீட்டிருக்கறாரு.. அஞ்சுகிலோ பையிலயிருந்து எழுபத்தியஞ்சுகிலோ மூட்டை வரைக்கும் எந்தெந்த ரகத்துல என்னென்ன அளவுல வேணும்னாலும் மொத்தமா வேணும்னாலுஞ்செரி சில்லறையா வேணும்னாலுஞ்செரி… டாண்ணு சொன்னநேரத்திக்கு கடைக்கே கொண்டாந்து எறக்கீருவாரு.. ஐடியா இருந்தாச் சொல்லுங்க.. ஜாய்ன் பண்ணிவுடறேன்..என்றபடியே பாப்பா.. பாப்பா.. என்று சத்தமாகக் கூப்பிடத்துவங்கினான். ஏனுங் மச்சா.. கூப்பிட்டீங்ளாக்கு..?என்றபடியே வீட்டிற்குள்ளிருந்து வெளியேவந்த மனைவியிடம் ‘உங்க காங்கியத்து ரைஸ்மில்லு மாமனோட விசிட்டிங் கார்ட எடுத்துட்டு வா.. அண்ணனுக்கு வேணுமாமா..என்றான்.

 

விசிட்டிங்கார்டை பர்த்த ரகு அண்ணன் ‘அட.. இவுரு எனக்கும் நல்லா தெரிஞ்சவுருதானுங்க.. ஐஆர் இருவதுல குருணையும் டீலக்ஸபொன்னில இட்லி அரிசியும் கிட்டத்தட்ட பத்துவருசமா இவுருகிட்டத்தான் எடுத்துக்கிட்டு இருக்கேன்என்றார். இதைக்கேட்டதும் அந்தப் பெண்ணுக்கு சந்தோசம் தாங்கவில்லை. அந்த பையனுக்கும்தான். புருசன் பொண்டாட்டி இருவருமாக போட்டிபோட்டுக்கொண்டு அந்த ரைஸ்மில்காரரைப் பற்றிய மேலதிகத் தகவல்களை ரகுஅண்ணனிடம் பிரஸ்தாபிக்கத் துவங்கியிருந்தனர். அந்தப் பெண் நாற்காலியில் அமர்ந்திருந்த தன் புருசனுக்குப் பின்புறமாக அவளுடைய மார்புகள் அவனுடைய பின்னந்தலையில் உரசியும் உரசாத நிலையில் நின்றபடி வெகுசுவராசியமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கப் பார்க்க சாமிநாதனுக்கு ஏக்கஏக்கமாக வந்தது. தானும் இதுபோல அமர்ந்திருக்க தனக்குப் பின்னால் உரசியும் உரசாத நிலையில் நந்தினியும் நின்றிருக்க வந்திருக்கும் விருந்தினர்களிடம் உற்சாகம் கொப்பளிக்கப் பேசுவதுபோன்ற காட்சியை கற்பனை செய்யத் துவங்கினான்.

 

கற்பனைத்தேரில் உலாப்போய்க் கொண்டிருந்த சாமிநாதனை வாசலில்வந்து நின்றபடி சத்தமிட்ட ஆள்காரரின் சத்தமான குரல் கீழே இறக்கி நிலத்திற்குக் கொண்டுவந்தது. “ஏனுங்.. கெடா சேர்ந்துருச்சுங்கோவ்.. நீங்க எருமையைப் புடிச்சிட்டுப் போலாமுங்..”.

 

வெயில் ஏறிவிட்டிருந்தது. உடல்வேட்கை தணிந்துவிட்டிருந்த எருமை எந்தவிதமான முரண்டும் பண்ணாமல்ஒரு நாய்க்குட்டியைப் போல ரகு அண்ணனைப் பின் தொடர்ந்தபடியிருந்தது. அடித்து முடுக்க வேண்டிய அவசியமெல்லாம் எதுவுமில்லாமல் ஆவாரங்குச்சியை கீழே எறிந்துவிட்டிருந்த சாமிநாதன் வெறுங்கைகளை வீசியபடி எருமைக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்தான். தோட்டத்துக்காரரின் மகனுக்கும் மருமகளுக்கும் இடையே நிலவிய அன்பும் அன்னியோன்யமும் மனசுக்குள் வந்துவந்து போனது. “இந்த பொம்பளைங்க மனசை மட்டும் யாராலும் புரிஞ்சிக்கவே முடியாதுங்ண்ணா..என்றான்.

 

என்னடா தம்பி சொல்றே..?

 

இல்லே.. அந்தப் பையனும்கூட தொந்தியும் தொப்பையுமா என்னையவிடவுமே பீத்தச்சொரக்காயி மாதிரித்தானே இருக்கான். ஆனாலும், அவம் பொண்டாட்டியப் பாருங்க..எவ்வளவு பிரியமா சந்தோசமா அவங்கூட குடும்பம் நடத்தீட்டிருக்கறான்னு.. இத்தனைக்கும் அந்தப் பொண்ணுக்கு என்னட பொண்டாட்டியவிடவுமே கொஞ்சம் நெறமும் அழகும் கூடுதல்னே சொல்லோணம்..

 

செரி.. இருந்துட்டுப் போச்சாறா வுடு… அவ புருசங்கூட சந்தோசமா பொழச்சிட்டும்தான் போச்சாறா வுடு.. இப்ப அதுக்கு என்ன?

 

 

 

இல்லீங்ண்ணா.. அந்தப் பையனைப் போலத்தான் நானும் இருக்கறேன். நந்தினியைப் போலத்தான் அந்தப் பொண்ணும் இருக்கறா.. நந்தினிக்கு என்னைப் புடிக்காமப்போயிருச்சு.. ஆனா, நந்தினி மாதிரியேயிருக்கிற அந்தப் பொண்ணுக்கு என்னை மாதிரியேருக்கிற அந்தப் பையனை ரொம்பப் புடிச்சிப் போச்சு.. இதையெல்லாம் எப்படீங்ண்ணா புரிஞ்சிக்கிறது..?

 

நந்தினிக்கு முக்கியமா உங்கம்மாகூடத்தானே தம்பி பிரச்சனை.. உங்கம்மாவத்தானே அவுளுக்குப் புடிக்காமப் போயிருச்சு.. உன்னைய இல்லையே..?

 

இல்லீங்ண்ணா.. ரெண்டுபேரும் ஒண்ணா இருக்கும்போதெல்லாம் சில சமயங்களில் நான் பீல் பண்ணீருக்கேன்.. என் பாடி அன்பிட்டா இருக்கறதுபத்தி அவ மனசுக்குள்ள ஓரமா கொஞ்சம் ஒரு ஒவ்வாமையும் இருக்கத்தான் செய்யிதுனு..

 

மனசும் மனசும் ஒண்ணாயிட்டா ஒடம்பு அழகெல்லாம் ஒரு மேட்டரே இல்ல தம்பி.. அதையுந்தவிர நீதான் வாக்கிங் ஜாக்கிங்ன்னு பாடிய பிட் பண்ண ஆரம்பிச்சிட்டியே..அப்புறம் என்ன? இனிமே எல்லாம் செரியாயிடும்

 

சின்ன வயசிலயிருந்தே வேணுங்கிற அளவுக்கு பாலும்தயிரும்நெய்யுமா குடிச்சிக்குடிச்சி வளர்ந்த ஒடம்புங்ண்ணா நம்முளுது. இந்த வாக்கிங் ஜாக்கிங்குக்கெல்லாம் நம்ம பாடி எந்த அளவுக்கு பிட்டாகும்னு தெரியலை.. அதையுந்தவிர வேறசில விசயங்களும் பண்ணுனாத்தான் இந்தப் பிரச்சனைகளெல்லாம் சரியாகும்னு திடீர்னு தோண ஆரம்பிச்சிருச்சுங்ண்ணா..

 

வேறசில விசயங்கள்னா..? ஏதாவது நந்தினிக்கு வசியம்கிசியம் வைக்கப் போறியா..?

 

இதுவும் ஒருவகைல வசியம்தானுங்ண்ணா.. வைக்கற வசியம் அல்ல.. வளர்த்துற வசியம். அந்த எருமைக்கெடா கன்னுக்குட்டியை ஏவாரிக்கு விக்கவேண்டாம். எனக்குக் குடுங்க.. நானே வளர்த்துக்கறேன்..

 

என்னடா தம்பி சொல்றே..?

 

அதாவதுங்ண்ணா.. நமக்கு எந்த மாதிரியான சந்தோசங்கள் வேணும்னாலுஞ்செரி.. அந்த சந்தோசங்களை அடையோணம்னா  மொதல்ல நம்மைச் சுத்தியிருக்கிற மத்தவங்கெல்லாம்  மத்த உசுருகளெல்லாம் அந்த சந்தோசங்களை அனுபவிக்கிறதுக்கு நம்மாலான ஏற்பாடுகளைப் பண்ணனும். சிம்பிளான லாஜிக்குதான். சின்ன வயசுல அப்பிச்சி சொன்னது. ஆனாப் பாருங்க.. இத்தனை நாளா இதுவொரு பெரிய விசயமாப் படலை.. எம்புத்திக்கு உறைக்கலை.. ஆனா, இன்னிக்கு எருமைக்கெடாக்காரர்  வீட்டுல அவுரு மகனும் மருமகனும் சந்தோசமா இருக்கறதைப் பார்த்ததும்தான் அப்பிச்சி சொன்னது எவ்வளவு பெரிய உண்மைன்னு பளிச்சுனு மனசிலாச்சு.. அதுனால..அந்த எருமைக்கெடாயை ஏவாரிக்கு விக்கவேண்டாம்ண்ணா… நானே வாங்கிக்கிறேன். நானே வளர்த்திக்கிறேன்.   

 

வெயிலைக் கும்புட்டா பொண்டாட்டி வந்துருவான்னு நம்புவது.. எருமைக் கெடாயை வளர்த்தால் குடும்பம் ஒன்றாகிவிடும் என கணக்குப் போடுவது.. எப்படித்தான் இவனுக்கு மட்டும் இப்படியெல்லாம் டிசைன்டிசைனாக நம்பிக்கைகள் உண்டாகிறதோ என ரகு அண்ணனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சாமிநாதனை உற்சாகப் படுத்தும் தொனியில் ரகு அண்ணன் கூறினார். “அதுக்கென்னடா தம்பி.. இப்பவே வேணும்னாலும் வா.. எருமைக் கன்னைப் புடிச்சிக்கலாம்..

 

                                     

Friday, 18 September 2020

 

                                                                                         வாஸ்தவம்

 

கிழபுறத்து ஜன்னலின் கதவுகள் சாத்தப்பட்டிருந்தன. மேபுறத்து ஜன்னலின் வழியாக உள்நுழைந்த மேகாத்து கிழக்குச்சுவரில் மோதி அரைவட்டமாக சுழன்று கொஞ்சமாகத் திறந்து வைக்கப்பட்டிருந்த அந்த அறையின் வடக்குப் பார்த்த கண்ணாடிக் கதவின் வழியாக வெளியேறியபடியிருந்தது. காற்றின் வேகம் சற்றே அதிகரித்தது. மேஜைமேல் அடுக்கப்பட்டிருந்த வெள்ளைத் தாள்கள் மெல்லிய ஓசையுடன் படபடத்தன. ஒயர் நாற்காலிக்கு முழுவதுமாக முதுகைக் கொடுத்து அரைத் தூக்கத்திலிருந்த மிஸ்டிக் சுப்ரமணிக்கு சட்டென்று விழிப்பு வந்தது. எதிர்ப்பக்கம் மாட்டப்பட்டிருந்த ராஜ அலங்கார முருகனின் கண்களும் மிஸ்டிக் சுப்ரமணியத்தின் கண்களும் ஒரு கணம் சந்தித்துக் கொண்டன.  ‘இன்னிக்கு ஒரு கிராக்கியும் வராமப் பண்ணிப்போட்டியே.. காலைலயிருந்து வெறுங்காத்தா ஆடுதே..’ என்னும் நினைப்பு உள்ளே ஓடியது.

 

’இருக்கிறதுதான்.. அதனாலென்ன?’ என பதிலுக்கு முருகனின் கண்கள் சமாதானப்படுத்துவதுபோல நோக்கின. அந்த அலங்கார முருகனின் கண்கள் எப்போதுமே இப்படித்தான். உட்கிடக்கையை நன்கு அறிந்தவை. மன அந்தரங்கத்தின் குறிப்பறிந்து அதற்குத் தகுந்த மாதிரியான ஆசீர்வாதங்களை நல்கியருளும் ஞானத்தின் ஒளி அந்தக் கண்களில் எப்போதும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

 

மணி நான்கு முப்பதை தாண்டிக்கொண்டிருந்தது. பொழுது சாய்ந்துவிட்டால் பெரும்பாலும் யாரும் ஜாதகம் பார்க்க மாட்டார்கள். இனி இன்றைக்கு யாரும் வருவதற்கு வாய்ப்பில்லை. மேஜை டிராயரைத் திறந்த மிஸ்டிக் சுப்ரமணி நேற்றைய சம்பாத்தியத்திலிருந்து ரூபாய் ஐநூறை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். நாற்காலியைவிட்டு எழுந்து மேகாத்தையும் அந்திவெயிலையும் உள்ளே அனுப்பியபடியிருந்த சன்னல் கதவுகளை சாத்திவிட்டு தனது பிரத்யேக ஆலோசனை அறையை விட்டு வெளியே அலுவலகத்தின் வரவேற்பு அறைக்கு வந்தார். வாடிக்கையாளர்கள் காத்திருப்பதெல்லாம்  இந்த அறையில்தான் . ஞாயிறு மாதிரியான விடுமுறை நாள் வெள்ளி புதன் மாதிரியான சுபநாட்களிலெல்லாம் காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து மூன்று நான்கு பேர்களாவது உட்கார்ந்திருப்பார்கள். இன்றைக்கும் புதன்கிழமைதான். ஆனால் இன்றைய புதன்கிழமைக்கு என்ன வந்ததோ? ஒரு ஈ காக்கையைக் கூட காணவில்லை.

 

கதவைச்சாத்தி நாதாங்கியைப் போட்டுவிட்டு வாசற்படியிலமர்ந்தபடி சிகரெட்டைப் பற்றவைத்தார். இடப்புறமிருந்த பெரிய வேப்பமரத்தின் இலைகளடர்ந்த கிளைகளுக்குள் புகுந்தபடியிருந்த மேகாத்து ஆராவாரமான சப்தங்களை உண்டாக்கியபடி வெளியேறி கிழக்காகப் போனபடியிருந்தது. நதியின் ஓட்டம் போலத்தான் காற்றின் ஓட்டமும். இறங்கும்கணத்தில் கால்களை நனைக்கும் தண்ணீரும் முங்கியெழுகையில் உடலைத் தழுவிச்செல்லும் தண்ணீரும்  ஒரே நதியின் தண்ணீர்தான் என்றாலும்  ஒரே தண்ணீரல்ல. சற்றுமுன் வேப்பமரத்துக்குள் புகுந்து புறப்பட்ட காற்று தற்சமயம் கிழக்கு வேலியையொட்டியிருக்கும் தென்னைமரத்தின் மட்டைகளை ஆட்டிக்கொண்டிருப்பதாக இருக்கலாம்  அல்லது அதற்குப் பக்கத்திலேயே வளர்ந்து நிற்கும் ஆனைமசால் புற்களின்மேற்பரப்பில் அலைகளை எழுப்பியபடி நகர்வதாகவும் இருக்கலாம் என்னும் உணர்வு மிஸ்டிக் சுப்ரமணிக்கு உண்டானது.

 

அந்த தென்னை மரத்தை ஒட்டியேயெயிருக்கும் கிளுவை வேலியில் அவரது அம்மா அவளின் வெள்ளாட்டுக்கும் அதன் குட்டிகளுக்கும் படர்ந்திருக்கும் மிஷ்டைக் கொடிகளை சள்ளைக் கத்தியில் இணுங்கி இணுங்கிப் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. சேலையை மடக்கி இடுப்பில் சொருகியபடி குனிந்த முதுகு நிமிராதவளாக அவரது மனைவி மகாலட்சுமி ஆனைமசாலை வேகவேகமாக அறுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. உள்ளூருக் கான்வென்டில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் அவரது பையன் நாட்ராயசாமி பள்ளிக்கூடம் விட்டதும் வழக்கம்போலவே யாரோடும் சோடி சேர்ந்துகொண்டு விளையாடவெல்லாம் போகாமல் அவன் அம்மா சொல்லிவிட்டது போலவே நேராக வீட்டுக்கு வந்துவிட்டான்போல. அறுபட்டுக் கிடக்கும் ஆனைமசால் புற்களை சிறுசிறு தாவுகளாக தாவிக்கொண்டுபோய் மாட்டுக்கட்டுத்தரைச் சாளையில் போட்டபடியிருப்பதும் தெரிந்தது.

 

நட்சத்திரம் பார்த்து பொறந்ததேதி பார்த்து நேமாலஜி நியூமராலஜியெல்லாம் பார்த்து நீங்களே புதுசுபுதுசா டிசைன்டிசைனா எத்தனையோ குழந்தைகளுக்கு பேருவெச்சுக் குடுக்கிறீங்க.. ஆனா உங்க பையனுக்கு இந்தக்காலத்துல போயி அந்தக் காலத்துப்பேரா வெச்சிருக்கீங்ளே..?என்று யாராவது கேட்பதும் உண்டு. என்ன செய்வது ? அந்த விசயத்தில் மிஸ்டிக்கின் நேமாலஜி நியூமராலஜி எதுவும் அவரது மனைவியின் லாஜிக்காலஜிக்கு முன்னால் எடுபடவில்லை.  வள்ளுவலுசலுகளே  எத்தனையோபேரு ஒரு கொழந்தை கெடைக்காம ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா கோயில்கோயிலா ஏறியெறங்குறாங்க. இந்த நெலமைல காலம்போன காலத்துல கல்யாணம் ஆனாலும் நம்ம ரண்டுபேருக்கு மட்டும் கல்யாணமாகிப் பத்தே மாசத்துல தலநாள்ல ஆம்பளப் புள்ள கெடச்சிருக்குதுனா என்ன காரணம் ? எங்கப்பிச்சி நாட்ராயசாமி கொகைல நான் வெசாழக்கெழம வெசாழக்கெழம நெய்த்தீபம் போட்டு வேண்டிக்கிட்டு வந்ததுதான் காரணம். அதனால உங்க நேமாலஜி கீமாலஜியெல்லாம் வேற யாருகிட்டயாவது வெச்சுக்குங்க… எம்பையனுக்கு நான் எங்கப்பிச்சி நாட்ராயசாமி பேரத்தான் வெப்பேன்’.

 

லாஜிக்கே இல்லாமல் பேசினாலும்கூட மகாலட்சுமி பேசினால் மறுவார்த்தை பேசுவதில்லையென்பதை மிஸ்டிக் சுப்பு கொள்கையாகவே வைத்திருந்தார். இந்த தள்ளாத வயதிலும் வெள்ளாடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும் அவருடைய அம்மாவின் கொள்கையும்கூட அதுவாகத்தான் இருந்தது. மகாலட்சுமியை பெண்பார்க்கப் போனபோது சுப்புவுக்கு முப்பத்தியொன்பது வருடங்களும் மூன்று மாதங்களும் ஆகியிருந்தது. உருப்படியாக எந்த வேலையுமில்லை. வருமானமுமில்லை. ஆறாம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டு எந்தச் சூழ்நிலை மாற்றத்திலும் அந்தப் பழக்கம் மட்டும் மாறாமல் தொடந்த படியேயிருந்தது. சாண்டில்யன் கல்கியிலிருந்து சுஜாதா பாலகுமாரன் வரைக்கும் ஊர்ப்புறத்து கிளை நூலகத்திலிருந்த முக்கால்வாசிப் புத்தகங்கள் அத்துப்படியாகியிருந்தது. ஏனோ  தமிழின் பின்நவீன தளத்துக்கெல்லாம் சுப்பு போகவேயில்லை. ஜோதிடமாமணி பழனிச்சாமியின் தொடர்பு கிடைத்த பிற்பாடு சுப்புவின் வாசக மனம் சோதிட நூல்களின்மேல் மையலுறத் துவங்கியது.

 

ஊராட்சியொன்றிய தொடக்கப் பள்ளியொன்றில் தலைமையாசிரியராக பணிசெய்துவந்த பழனிச்சாமி வேலை நாட்களில் ஆசிரியராகவும் விடுமுறை நாட்களில் சோசியராகவும் இரட்டை பாத்திரங்களில் பரிணமித்துக் கொண்டிருந்தார். பணி ஓய்வுக்குப் பிறகு வாத்தியார் பழனிச்சாமி  ஜோதிடமாமணி பழனிச்சாமியாக விஸ்வஉரு எடுத்திருந்தார். எந்த வேலைக்கும் ஒழுங்காகப் போகாமல் வெள்ளாடுகளை மேய்த்து தன் அம்மா போடும் சோத்தைத் தின்றபடி வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்த சுப்பு ஒருநாள் ஒருபொழுதில் தன் ஜாதகத்தை எடுத்துகொண்டு போயிருந்தான். இந்திரா செளந்தர்ராஜனின் கதைகளையும் வாசித்திருந்ததால்  சித்தர்களைப் பற்றியும் கதைகளில் படித்திருந்த ஜோதிட சமாச்சாரங்களைப் பற்றியும் பேசத் துவங்க ஜோதிடமாமணிக்கு சுப்புவை மிகவும் பிடித்துப் போயிற்று. ஜாதகம் பார்க்க மட்டுமின்றி ஜாதகம் எழுதித்தரவும் நிறைய கிராக்கிகள் வந்தபடியேயிருந்ததால் தனக்கு உதவியாளாக  மணிமணியான கையெழுத்தாளனாகிய எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த சுப்புவை சேர்த்துக் கொண்டார்.

 

வாத்தியாரிடம் சேர்ந்த பிற்பாடுதான் வாழ்க்கை ஒரு தினுசாக  சொகுசாக மாறத் துவங்கியது. மகாலட்சுமியைக் கல்யாணம் பண்ணுவதற்குக்கூட அவருடைய சிபாரிசுதான் பேருதவியாக இருந்தது. தான் படிக்காத படிப்பையெல்லாம் தன் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்கிறமாதிரியான கனவுகள் படிப்பறிவில்லாத நிறைய பெற்றோர்களுக்கு இருக்கிறது அல்லவா?. அதுபோலவே ஆறாம்  வகுப்பில் பெயிலான கையோடு அய்யனின் செம்பிளியாடுகளை மேய்க்கத் துவங்கியிருந்த மகாலட்சுமிக்கும் ஒரு கனவு இருந்தது.  தான் படிக்காத படிப்பையெல்லாம் தனக்கு புருசனாக வரப்போகிறவன் படித்திருக்க வேண்டும்.

 

என்னதான் பெண்பிள்ளைகளுக்கு தட்டுப்பாடான காலம் என்றாலும், சரியான படிப்பும் வருமானமுமில்லாமல் கல்யாணத்துக்கு பெண்கிடைக்காமல் முதிர்கன்னர்கள் ஊருக்கு பத்துபதினைந்துபேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், நன்கு படித்து நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெண்கிடைப்பதில் எந்த தட்டுப்பாடும் இல்லாமல்தான் இருந்தது. தான் கனவு கண்டதுபோல எந்த பேங்க் மேனேஜரும் எந்த பள்ளிக்கூட வாத்தியாரும் தன்னைத் தேடி வரப்போவதில்லை என்னும் உண்மையை உணரத்துவங்கியபோது மகாலட்சுமிக்கு நாற்பது வருடங்களும் ஏழு மாதங்களும் ஆகிவிட்டிருந்தது.

 

அந்த வயதிலும்கூட படிப்பும் உத்தியோகமுமில்லாத மாப்பிள்ளைகளின் மத்தியில் அவளுக்கு கிராக்கி இருக்கவே செய்தது. பெரிதாக எந்த வசதியும் வருமானமுமற்ற சுப்புவின் ஜாதகத்தோடு பிராயம் நாற்பதைத் தாண்டிவிட்ட ஒரு வசதியான தென்னந்தோப்பு முதிர்கன்னனின் ஜாதகமும் போட்டிபோட, தங்கள் குடும்ப சோசியரான பழனிச்சாமியின் அறிவுரைப்படி மகாலட்சுமியின் கரங்கள் சுப்புவுக்கு மாலையிட்டன. ஒரேயொரு பையனைப் பெற்று அவனுக்கும் கல்யாணமில்லாமல் தலைமுறை தலைமுறையாக மூன்று வெள்ளாடுகளையும் இரண்டு கன்றுக் குட்டிகளையும் வளர்த்து வயிற்றைக் கழுவிவரும் தங்கள் வம்சமே வாரிசில்லாமல் அழிந்துவிடுமோ என நித்தமும் நினைத்து நினைத்து மருகிக்கொண்டிருந்த  அம்மாவுக்கு சுப்புவைக் கட்டிக்கொள்ளச் சம்மதித்த மகாலட்சுமி உண்மையாகவுமே அந்த மஹாமஹா லட்சுமியாகவே மாறியும் போயிருந்தாள்.     

 

காலையிலிருந்து ஒருவர்கூட வரவில்லையே என்னும் நினைப்பு மிஸ்டிக் சுப்புவிற்கு மறுபடியும் உண்டானது. தொந்தரவு தரும் நினைப்பு. விடிந்தும் விடியாததுமாக வாஸ்து பார்ப்பதற்கு  வரவேண்டுமென வந்து நின்ற மொட்ரப்பாளையத்து முத்துக்குட்டியை தட்டிக் கழிப்பது தெரியாத வண்ணம் சாக்குப்போக்காகப் பேசி  அனுப்பி வைத்திருந்தார். அதுதான் இன்றைய நாள் வெறும் நாளாகப் போய்விட்டதற்குக் காரணமோ என்றும் தோன்றியது. அப்படியொன்றும் முற்றாக மூஞ்சியிலடிப்பது மாதிரியும் பேசிவிடவில்லை. வாயை வைத்து வயிறு வளர்ப்போர்க்கு வாய் நீண்டுவிடக் கூடாதல்லவா?  இன்னிக்கு புதன்கிழமைங்கிறதால நெறைய புக்கிங் இருக்குது..இப்போ வரமுடியாது.. நாளைப்பின்னெ வாங்க.. இல்லாட்டி சாயந்தரமாக் கூப்பிடுங்க..என்று கொஞ்சம் கோளாறாகத்தான் பேசி அனுப்பி வைத்திருந்தார்.  

 

வாஸ்து குறித்தான ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு அதிகாலையிலேயே போய் சொல்லிவிட்டு வருவது வழக்கம்தான். வீடு  கடை கட்டிடம் கிணறு கோழிப்பண்ணை தேங்காய்க்களம் என்றிருந்தால் உடனே கிளம்பியிருக்கலாம். ஏதோ ஆளுக்குத் தகுந்தமாதிரி ஆலோசனைக்குத் தகுந்தமாதிரி ஐநூறோ ஆயிரமோ ரண்டாயிரமோ மூவாயிரமோ கொடுப்பார்கள்.

 

மாட்டுச்சாளை என்றால்கூட பரவாயில்லை. ஆஸ்பெஸ்ட்டாஸ் ஓடுவேய்ந்த கூரையும் ஆறடி உயரத்திற்கு ஹாலோபிளாக் கல்லினால் மூன்றுபக்கங்களில் சுவரும் என வேலைகள் இருக்கும். அதற்குத் தகுந்த செலவுகளும் இருக்கும். அந்தச் செலவோடு செலவாக இந்தச் செலவும்தான் சேரட்டுமே என வாஸ்து ஆலோசகருக்கும் ஆயிரமோ ஐநூறோ எடுத்து நீட்டுவார்கள். ஆனால், முத்துக்குட்டி வந்து நின்றது மாட்டுக்கட்டுத்தரைக்கான ஒதுக்குப் படல்களை எங்கே கொண்டுபோய் வைப்பது என்பதை பார்த்துச் சொல்வதற்காக. இப்போது ஒதுக்குப்படல்களை வைத்திருக்கும் இடத்தில் மாடுகளை கட்ட ஆரம்பித்ததிலிருந்து ஒன்றுமே சரியில்லையாம். ‘ஒண்ணு செனை நிக்கமாண்டீங்குது இல்லாட்டி கன்னுப்போட்டா காய்ச்சல் வந்துருது இல்லாட்டி கன்னுக்குட்டி செத்துப்போயிடுது இல்லாட்டி மடிவீக்கம் வந்து பாலே கறக்க முடியாமப் போயிருது.. ஒண்ணுமே செரியில்லை.. அந்த எடத்துலதான் ஏதோ மிஸ்டேக்குனு நினைக்கறேன்.. சித்த வந்து மிஸ்டேக்கில்லாத நல்ல எடமா பார்த்துச் சொல்லுங்கஎன்றார்.  

 

 

எதுவெதுக்கோ ஆலோசனைகள் சொல்பவர்க்கு  ஒதுக்குப்படல்களை வைப்பதற்கு ஆலோசனை நல்குவது பெரிய விசயமில்லை. சொல்லிவிடலாம்தான். ஆனால், இந்த மாதிரியான ஆலோசனைகளுக்கெல்லாம் என்னவென்று காசு கேட்பது? பைசா பெயராது. நிச்சயம் ஒரு டம்ளர் காபியோ டீயோ கிடைக்கும். குடித்துவிட்டு வாயைத் துடைத்துக் கொண்டு வந்துவிடவேண்டியதுதான். நாளின் முதல் ஆலோசனையே வெறும் ஆலோசனையாகப் போனால் நாள்முழுதும் அப்படித்தான் போய்விடும் எனத் தோன்றியது. எப்படியாவது அந்த ஒதுக்குப்படல் புராஜக்ட்டை மாட்டுச்சாளைப் புராஜக்ட்டாக மாற்றிவிடுவது என முடிவெடுத்தார்.  நான் வேணும்னா வந்து  வாஸ்துப்பிரகாரம் நல்ல எடமாப் பார்த்து சொல்றேன். சுத்தியும் செவுருவெச்சு மேலயும் சிமெண்ட் சீட்டோ ஓடோ போட்டு சாளையாவே கட்டிப்போடுங்க.. அதான் நல்லது. என்னதான் வாஸ்துப்படி நல்ல எடமா இருந்தாலும் மாடுகளை மழைலயும் பனிலயும் நனையவுட்டா சீக்கு வரத்தான் செய்யும். இப்பத்த காலாச்சி மாடுகளுக்கெல்லாம் நோய் எதிர்ப்பு சக்திங்றதே ரொம்பரொம்பக் கம்மிதான்    

 

அட ஏனுங்ண்ணா… அந்தளவுக்கு என் நெலமை இருந்தா அப்புறமென்ன..? நானே ஊருவிட்டு ஊருவந்து இருவது வருசமா ஓலையூட்ல உக்காந்திட்டிருக்கேன். இந்த லட்சணத்துல மாட்டுக்கெல்லாம் எங்க சாளை கட்றது? பெருசாவெல்லாம் ஆசைப்படாம எது இருக்குதோ அதைய வெச்சு ஒப்பேத்திக்க வேண்டியதுதான்..உண்டான நிலமையை தேங்காயை உடைப்பதுபோல உடைத்த முத்துக்குட்டி “எப்படியாச்சும் வந்து பார்த்துச் சொல்லிப்போடுங்ண்ணா.. ரொம்ப உதவியா இருக்கும்என்றார்.

 

இருக்கிற இருப்பைப் பார்த்தால் ஒரு கிளாஸ் காபித்தண்ணியும்கூட இல்லாமல்தான் திரும்பி வரவேண்டியிருக்கும்போல என சுப்புவின் மூளை கணக்குப் போட்டது. “செரிங்ண்ணா… சூழ்நிலை ஒத்துழைக்கலைன்னா யாருதான்  என்ன பண்றது? இப்ப பாருங்க காலைல ஏழு மணிக்கெ ஒருத்தர வரச்சொல்லீட்டேன். இப்ப உங்ககூட வந்துட்டு திரும்பிவர்ரதுக்கு ரொம்ப லேட்டாயிடும். இன்னிக்கு பொழுதுக்குமே புக்கிங் இருக்குது. எதுக்கும் சாயந்திரமாக் கூப்பிடுங்க.. அவகாசம் கிடைச்சுதுன்னா வந்தர்றேன்.. இல்லாட்டி நாளைப்பின்னே பார்க்கலாம்

       

காலையில் முத்துக்குட்டியிடம் அப்படியெல்லாம் பேசியிருக்கக்கூடாதோ என சுப்புவின் மனசுக்குள் ஒரு சந்தேகம் தோன்றியது. இத்தனைக்கும் முத்துக்குட்டி முன்பின் அறிமுகமற்றவரோ தெரியாத மனிதரோ அல்ல. இருபது வருடங்களுக்கு முன்பு தறியோட்டப் போவதைவிட்டுவிட்டு பேப்ரிகேஷன் மிசின் ஓட்டிப் பழகுவதற்காக திருப்பூர் போன காலத்திலிருந்தே அறிமுகம். சுப்புவின் பேப்ரிகேஷன் குருவான பக்கத்து ஊரைச்சேர்ந்த ராமசாமியண்ணனின் தோட்டத்திற்குப் பக்கத்தில்தான் முத்துக்குட்டியும் இருந்தார். என்ன காரணத்தினாலோ சொந்த ஊரிலிருந்த பூர்விக நிலத்தை விற்றுவிட்டு இங்குவந்து மிகவும் கம்மியான விலைக்கு ஒரு வறண்ட நிலத்தை வாங்கி கிணறு வெட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவ்வப்போது ராமசாமியண்ணன் குடுக்கும் முயல்கறி விருந்தில் கலந்துகொள்ளப் போகும்போது அங்கே முத்துக்குட்டியும் இருப்பார். வயது வித்தியாசமில்லாமல் சிறியவர் பெரியவர் என அனைவரையும் அண்ணா..போட்டு விளிக்கும் முத்துக்குட்டிதான் அந்த விருந்துக்கறியை பக்குவமாக சமைத்துத்தரும் சமையல்காரராகவும் விருந்துக்கான முயல்களை கண்ணிவைத்துப் பிடித்துக் கொண்டுவரும் வேட்டைக்காரராகவும் இருந்தார். கொஞ்சநாளில் ராமசாமியண்ணனுக்கு திருமணம் நடந்து அவர் திருப்பூருக்கேபோய் செட்டிலாகிவிட்டார். பிறகு அந்த விருந்துக் குழுவினர்கள் சந்திப்பது அரிதாகிவிட்டது. அதுவும் சாதாரண பேப்ரிகேஷன் ஆபரேட்டரான சுப்ரமணி  பிரபல ஜோதிடர் மிஸ்டிக் சுப்ரமணியாக பிஸியாகிவிட்ட பிறகு பழைய காலத்து பழக்கவழக்கங்களையெல்லாம் நினைப்பதும்கூட அரிதாகிவிட்டது.   

 

 

 

இந்த பத்துவருச காலத்துல இப்பதான் பேரு பரவி பெரியபெரிய மில்லுமுதலாளிகள் கம்பனி முதலாளிகள் அதிகாரிகள் அரசியல்வாதிகள் எனத் தேடிவர ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படியான நேரத்துல  பைசா வருமானத்துக்கும் உத்திரவாதமில்லாமல், ஒரு ஒதுக்குப்படலை எங்க வெக்கறதுன்னு சொல்றதுக்காகவெல்லாம் நாலு கிலோமீட்டருக்கு பைக்க எடுத்துட்டுப் போறதெல்லாம் நம்ம இமேஜை நாமளே குழிதோண்டி புதைச்சுக்கிறமாதிரி. இந்த மாதிரி துண்டு துக்கடா வாஸ்து கிராக்கிகளையெல்லாம் அவாய்ட் பண்றதுதான் நல்லது. அப்படியே போனாலும் உடனே போயிரக் கூடாது. இன்னிக்கு நாளைக்குன்னு இழுத்துட்டு பில்டப் பண்ணி அப்புறமாத்தான் போகணும் என்றும் நினைத்துக் கொண்டார்.  

 

ஒரு நாள் வருமானமில்லாவிட்டால் ஒண்ணும் குடிமுழுகிப் போய்விடாதுதான். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் ஜோதிடராக ஆவதற்கு முன்னர், மிஸ்டிக் சுப்ரமணி வெறும் சுப்ரமணியாக திரிந்துகொண்டிருந்த காலத்தில் பனியன் கம்பனிக்கு தறிக்குடோனுக்கு ஸ்பின்னிங் மில்லுக்கு வெல்டிங் பட்டறைக்கு என  எத்தனையோ வேலைகளுக்கு போயிருக்கிறார்தான். இன்றைக்கும் அந்த மாதிரி வேலைகளுக்கெல்லாம் எத்தனையோபேர்கள் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். மேலுமொரு உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அந்தமாதிரி வேலைகளுக்குச் செல்வோரின் ஒரு வாரம் முழுவதற்குமான வருமானமும், மிஸ்டிக்கின் ஒருமாதம் முழுவதுமான சம்பாத்தியத்தை முப்பதால் வகுக்கக் கிடைக்கும் ஒருநாள் சராசரியும், கிட்டத்தட்ட ஒன்று. ஆனாலும் ,வாடிக்கையாளர்கள் யாரொவரும் வராதநாளில் எந்தவிதமான ஒப்பீடுகளும் மனதுக்கு சமாதானத்தை அளிப்பதில்லை. எவ்வளவோ கதைகளை எழுதிக் குவித்திருந்தாலும் புதிதாக ஒன்றை எழுத கரு எதுவும் கிடைக்காத நாளில்  இனிமேற்கொண்டு எதையுமே எழுதமுடியாதா?  இனி அவ்வளவுதானா?என்றெல்லாம் குழப்பங்கள் உண்டாகி எழுத்தாளர்களில் சிலர் அப்செட் ஆகிவிடுவதுண்டு இல்லையா? அப்படியான ஒரு சீதோஷ்ணநிலைதான் மிஸ்டிக்கின் மனநிலையிலும் நிலவியபடியிருந்தது.

 

வேறு வழியில்லை இந்த தரித்திரம் அண்டிய புலம்பல் மனநிலையிலிருந்து மீளவேண்டுமென்றால் காம்பிலிநதிக் கடைக்குப்போய் ஒரு குவார்ட்டரை வாங்கி சாத்தினால்தான் ஆச்சு என்னும் முடிவுக்கு வந்தார். இனிமேலும் இந்த வாசற்படியில் இப்படியே உட்கார்ந்து கொண்டிருப்பது வேறுசில சிக்கல்களையும் கொண்டுவந்துவிடும் என்றும் தோன்றியது. இன்றைக்கு யாரும் வரவில்லை என்பதை மகாலட்சுமியும் கவனித்தபடியேதான் இருந்திருப்பாள். ‘ காலையிலயிருந்து சும்மாதானே உட்கார்ந்துட்டிருக்கிறீங்க..? இப்பவாச்சும் வந்து ரண்டு மாட்டை பால்கறந்து குடுத்தா என்ன? ` என்றபடி இன்னும் சற்று நேரத்தில் அவள் இங்கே வந்துவிடவும் கூடும். என்றைக்கு சோசியகாரராக ஆனாரோ அன்றைக்கு முதலே சுப்புவுக்கும் சரி, சுப்புவின் யாக்கைக்கும் சரி,  இந்த குனிந்து நிமிர்ந்து உட்கார்ந்து எந்திரிக்கும் வேலைகளெல்லாம் மறந்தேபோய் விட்டிருந்தது.

 

மணி ஐந்து பத்து ஆகியிருந்தது. அட்சாம்சம் 11-20 வடக்கிலும், தீர்க்காம்சம் 77-45 கிழக்கிலும் இருக்கின்ற காங்கயம் தாலூக்காவில் இன்றைக்கு சூரிய அஸ்தமனம் மாலை 06-43க்குத்தான். அதற்குப் பிறகும் வெளிச்சம் அடங்க இருபது நிமிடங்கள் ஆகிவிடும்.  முகம் தெரியாத வண்ணம் இருட்டுவதற்கு இன்னும் மூணேமுக்கால் நாழிகைகள் இருக்கிறது அதுவரைக்கும் என்ன செய்வது எங்கேபோய் பொழுதை ஓட்டுவது எனும் யோசனையிலிருக்க சட்டைப் பைக்குள்ளிருந்த செல்போன் விட்டுவிட்டு அதிரத் துவங்கியது. பெயர் பதிக்கப்படாத புதிய நெம்பர்.      

 

“வணக்கம்… சொல்லுங்க…

 

அண்ணா இங்க செங்காட்டுப்பாளையத்திலிருந்து மொட்ரப்பாளையத்து முத்துக்குட்டி பேசறனுங்க… காலைல வந்திருந்தனே… சாயந்திரமா கூப்புடச் சொல்லீருந்தீங்க..

 

ஓ.. மறந்தே போயிட்டேன்.. சொல்லுங்ண்ணா..”

 

இன்னிக்கு புதங்கிழமைங்கிறதால கூட்டம் மம்மாணியா வந்திருக்கும்.. நிச்சயமா  மறந்திருப்பீங்கன்னு நெனச்சுட்டுத்தான் மறுபடியும் ஞாபகப்படுத்தலாம்னு கூப்புட்டேன். நான் நெனச்சது செரியாப்போச்சு.

 

அதையேங் கேக்கறீங்க… மத்தியானச் சாப்பாட்டுக்குக்கூட போக முடியலை. இப்பதான் ப்ரீயானேன்.. சொல்லுங்ண்ணா..

 

இப்ப வரமுடியுங்ளாண்ணா…? வந்தீங்ன்னா நல்லாருக்கும்.

 

எதுக்குங்ண்ணா… வாஸ்து பார்க்கிறதுக்கா? காலைலயிருந்து ஒரே பிஸிங்கிறதால ரொம்ப டயர்டா இருக்குதுங்ண்ணா.. இன்னுமொரு ரண்டுமூணுநாள் கழிச்சு பார்த்துக்கலாமாங்ண்ணா…

 

எப்படியாச்சும் இன்னிக்கே பொழுதுக்குள்ள வந்திட்டீங்னா புண்ணியமாப் போவுமுங்ண்ணா.. படலுக்கட்ற சேமலை நாளைக்கு வேலையில்லீன்னான்.. நீங்கவந்து எடம்பார்த்துச் சொன்னீங்ன்னா நாளைக்கே நானும் அவனும் படலக்கட்டி ஒதுக்கை போட்ருவோம். நாளைக்கு வுட்டுட்டா அப்பறம் சேமலையான பத்து நாளைக்குப் புடிக்க முடியாதுங்ண்ணா..

 

காம்பிலிநதிக்கரை டாஸ்மாக்கிற்குப் போகும் வழியில் இடதுபுறம் பிரிந்துபோகும் பாதையின் இரண்டாவது கிலோமீட்டரில்தான் செங்காட்டுப்பாளையம் இருக்கிறது. ஊரைத்தாண்டி மேலும் ஒரு கிலோமீட்டருக்குப் போனால் முத்துக்குட்டியின் தோட்டம் வரும். என்னதான் ஆயிரத்தெட்டு சமாதானங்கள் சொல்லிக் கொண்டாலும் விடிந்தும் விடியாத அதிகாலை நேரத்தில் வந்துநின்ற ஒரு மனிதனை ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பியதுதான் இன்றைய நாள் வருமானமற்றுப் போனதற்குக் காரணமோ எனும் சந்தேகம் மட்டும் நீங்கியபாடில்லை. எதற்கு வம்பு? டாஸ்மாக்கிற்குப் போகிறவழியில் அப்படியே முத்துக்குட்டியின் தோட்டத்துக்கும்போய் அந்த ஒதுக்குப் படல்களை எங்கே வைப்பது என்பதையும் சொல்லிவிட்டுப் போய்விடலாம் என்று தோன்றியது. நிச்சயமாகப் போய்ச் சொல்லிவிடலாம். ஆனால், அதற்கு முன்பு சின்னதாக ஒரு பில்ட்டப்பைக் கொடுத்துவிடுவோம் என்றும் மிஸ்டிக் சுப்ரமணிக்கு எண்ணமோடியது.  எந்தவொரு வியபாரமாக இருந்தாலும் மார்க்கெட்டிங் என்பதும் முக்கியம்தானே?

   

மத்தியானம் மில்லுப்பார்ட்டி ஒருத்தரு சாயந்தரம் ஆறுமணிக்குமேல வந்தாலும் வருவேன்ங்கிறமாதிரி சொல்லியிருந்தாருங் முத்துக்குட்டி… அதான் யோசனையாயிருக்கு..

 

அண்ணா…

 

செரிங் முத்துக்குட்டி… நீங்க இவ்வளவுதூரம் வற்புறுத்தியும் நான் வர்லீன்னு சொன்னா அது நல்லாருக்காது.  அந்த பார்ட்டிகிட்ட போன் பண்ணி நாளைக்கு வரச் சொல்லிடறேன். இப்ப உங்க வேலையை முடிச்சுடலாம். ரெடியா இருங்க.. கொஞ்ச நேரத்துல வந்தர்றேன்.

 

ரொம்ப சந்தோசங்ண்ணா.. நான் ரெடியாயிருக்கேன். வாங்க…

 

கைகால் முகமெல்லாம் அலம்பிவிட்டுவந்து லேசாக பவுடர்பூசி துலக்கமாக திருநீறை இட்டுக்கொண்ட சுப்பு கதர்வெள்ளைச் சட்டையின் கசங்கிய பகுதிகளையெல்லாம் நீவி விட்டுக்கொண்டார். காவி வண்ண சாயவேட்டியை அவிழ்த்து உதறி திருத்தமாகக் கட்டிக்கொண்டார்.

 

ருப்பெருத்த சூரியன் நிறம் சிவந்து இறங்கிக் கொண்டிருந்தது. மேற்குவானின் உச்சியில் குன்றுகுன்றாக குவிந்து கிடந்த மேகப்பொதிகளின் ஓரங்களெல்லாம் தீ எரியத்துடிக்கும் தணலென செந்நிறம் பூண்டிருந்தன. முத்துக்குட்டியின் ஓலைக்கொட்டகை வீட்டின் நீள்சதுரமான தகரக்கதவு சாத்தப்பட்டு பூட்டும் போடப்பட்டிருந்தது.  பைக்கைவிட்டு இறங்கிய சுப்புவைக் கண்டதும் வீட்டையொட்டி தென்புறமிருந்த ஊஞ்சமரத்தடியில் கட்டப்பட்டிருந்த வெள்ளைநாயொன்று எழுந்து நின்று குரைக்கத் துவங்கியது. சாணிமெழுகிய சல்லிமண் வாசலின் வடகிழக்கு மூலையில் முழங்கால் உயர பக்கச்சுவர்களுடன் தென்வடல் நீளவாக்கில் தண்ணீர்தொட்டி இருந்தது. தோட்டத்தின் மறுகோடியிலுள்ள கிணற்றிலிருந்து பைப்பின் வழியாக  வந்துவிழுந்த மோட்டார் தண்ணீர் தொட்டியை நிரப்பி மடவாய் வழியாக விழுந்து வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்தது.

 

சத்தம்போட்டால் கேட்காத  தொலைவினில்  சின்னவெங்காயக் காட்டுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த முத்துக்குட்டி மண்வெட்டியை கீழே வைத்துவிட்டு ஓட்டமும் நடையுமாகப் போய் மோட்டாரை நிறுத்திவிட்டு வந்துகொண்டிருந்தார்.  சேலைக்கு மேலே அணிந்த முழுக்கை பனியனும் தலைமுண்டுமாக வெண்டைக்காய்களை பறித்துக் கொண்டிருந்த அவரின் மனைவி சம்பூர்ணம் வெண்டைகாய்ச் சாக்கினை தலையில் வைத்தபடி வரப்பை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார். தொட்டியடினில் பிரஷர்குக்கரும் கொழம்புச் சட்டியும் சாப்பாட்டுத் தட்டுகளும் கழுவப்படாமல் கிடந்தன.

 

வாஸ்து பார்ப்பதற்குப் போனால்  முதலில் அந்த நிலம் என்ன அம்சத்திலிருக்கிறது என கணித்து-கண்டு கொள்ளவேண்டும் என்பது குருநாதரின் முக்கியமான அறிவுரை. கற்பனையில் கழுகு பறக்கும் உயரத்திற்குப் பறந்துபோய் மனிதப்பார்வையில் அந்த நிலத்தைப் பார்வையிட வேண்டும் என்பார். அப்படிப் பார்க்கும்போது அதுவொரு ரூபங்காட்டும். அந்த ரூபமானது மனிதவுடலின் ஏதாவது ஒரு பாகத்தையோ உறுப்பையோ ஞாபகப்படுத்தும். பிறகு அந்தப் பாகத்தை உறுப்பைப் பார்த்தவுடன் உடனடியாக ஞாபகத்திற்கு வரக்கூடிய தொன்மையான விசயம் என்ன?  நவகோள்களில் அவற்றின் அதிபதி யார் ? அந்தக் கோளானது சம்பந்தப்பட்ட நில உடமையாளரின் ஜாதகத்தில் ஜனன லக்கினத்திற்கு என்னவாக வருகிறார்? என்ன அமைப்பில் இருக்கிறார் என்பதையெல்லாம் கணக்கிட்டு அதற்குத் தகுந்தாற்போல் வாஸ்து ஆலோசனைகளை சொல்ல வேண்டுமென்பார்.

 

 

திருமண வயதில் இரண்டு மகன்களையுடைய நிலக்கிழாரின் தோட்டமொன்றுக்கு ஜோதிடமாமணி பழனிச்சாமியோடு சுப்புவும் போயிருந்தார். இரண்டு பையன்களும் திருமணத்திற்குப் பிறகும் ஒரே குடும்பமாக ஒரே வீட்டில்தான் இருக்க விரும்புகிறார்கள். அதற்கான ஒரு வீட்டை இந்த தோட்டத்தில் கட்டலாமென்றிருக்கிறோம். எந்த இடத்தில் கட்டலாமெனப் பார்த்துச் சொல்லுங்கள் என்றார்கள். தனக்குள்ளிருந்த மானுடவிழிக்கழுகை மேலே பறக்கவிட்ட பழனிச்சாமி அது திரும்பி வந்து மனமமர்ந்ததும் கூறினார். இந்தத் தோட்டம் மனிதத் தொடையைப் போலவே தோற்றங் காட்டுகிறது. தொடையென்றால் துரியோதனன். துரியோதனனென்றால் பங்காளித் தகராறு பங்குச் சண்டை குல நாசம். இந்த இடத்தில் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாய் இருக்க முடியாது. தயவுசெய்து இருவருக்கும் சேர்த்து ஒரே வீடு கட்டாதீர்கள். முத்துக்குட்டியின் தோட்டம் மிஸ்டிக் சுப்ரமணியின் மானுடவிழிக்கழுகுக்கு தொப்புளெனத் தோற்றங் காட்டியது. தொப்புள் என்றால் ரத்த உறவு. கடும் பற்று. ஊழ் முடிச்சு.   

 

முத்துக்குட்டியுடன் சென்று சுப்ரமணி கட்டுத்தரையைப் பார்வையிட்டார். வீட்டிற்கு தென்கிழக்குமூலைக்கு அப்பாலிருந்த காலியிடத்தில் மாட்டுக்கட்டுத்தரை கிழமேல்நீளியாக போடப்பட்டிருந்தது. கட்டுத்தரைக்கு முன்னால் வடபுறத்தில் பெரிய வெள்ளைவேலா மரமொன்று குடை விரித்திருந்தது. மூன்று மாடுகளும் ஒரு கிடாரிக் கன்றும் கட்டப்பட்டிருந்தது.

 

வேலாமரத்தை உள்ளடக்கி கட்டுத்தரையின் நாற்புறமும் தென்னையோலைப் படல்களால் காம்பவுண்ட் செய்யப்பட்டிருந்தது. சாணிகளைக்கொட்டும் குழி காம்பவுண்டுக்குள் தென்கிழக்கு மூலையிலிருந்தது. சாணிக்குழியையொட்டியே மேபுறமாக மழைபெய்தால் ஒழுகாத அளவுக்கான அல்லைகள் தடுக்கப்படாத கூரைச்சாளை இருந்தது. தவிடு புண்ணாக்கு மூட்டைகளை வைப்பதற்கும் இளங்கன்றுகளை கட்டுவதற்குமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சாளையைப் பிரித்து கட்டுத்தரையின் தென்மேற்கு மூலையில் போடுமாறு கூறினார். தட்டுப்போர் வடகிழக்கு மூலையிலிருந்தது. ‘ஈசான்யத்தில் வெயிட் ஏத்தக்கூடாது.. காலியாத்தான் இருக்கணும்.. தட்டுப்போரைத்தூக்கி வடமேற்குல போட்ருங்க என்றார். கடைசியாக தென்மேற்கிலிருந்த கட்டுத்தரை நுழவுவாயிலை வடக்கேதள்ளி நடுச்சென்டராகப் போடச் சொன்னார்.

 

முத்துக்குட்டிக்கு திருப்தியாக இருந்தது. கட்டுத்தரையை வேறு இடத்திற்கு மாற்றுவதைவிடவும் இருக்கும் இடத்திலேயே ஜோதிடர் சொன்ன சீர்திருத்தங்களையெல்லாம் செய்வதென்பது மிகவும் சுலபமானதுதான். இனிமேற்கொண்டு மாடுகள் சினைப் பிடிக்காமல் ஆட்டங்கட்டாது. கன்றுக்குட்டிகள் சாகாது. பால்மடி வீங்கி அதன் காம்புகள் புண்ணாகாது என்றெல்லாம் அவருக்கு நம்பிக்கைகள் உண்டானது. நம்பிக்கை. அதுதானே எல்லாம்.?

 

நடுவாசலில் பிளாஸ்டிக் நாற்காலிகளைப் போட்டு உட்கார்ந்தபடி பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு சம்பூர்ணம் தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள். இருவரும் வாஸ்துபற்றிய பேச்சுக்களையெல்லாம் முடித்துக்கொண்டு வேறு விசயங்களுக்கு வந்திருந்தனர். ராமசாமியண்ணன் முயல்கறி விருந்துகள் பற்றியெல்லாம் பழமைகள் போய்க்கொண்டிருந்தது. ஓரமாக அமர்ந்து அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சம்பூர்ணம் புதிய மனிதர்களைப் பார்க்கும்போது உண்டாகும் சங்கோஜம் நீங்கி சகஜ நிலைக்கு வந்திருந்தாள். சுப்புவைப் பார்த்து “ஏனுங்ண்ணா… போனவாரம் நல்லகாளி பாளையத்துக்கு எலக்டிரிக்கல் கடைக்காரரு தோட்டத்துக்கு வாஸ்து பார்க்க போயிருந்தீங்களாக்கு? என்றார்.

 

   

ஆமாங்க்கா.. போயிருந்தேன். தோட்டத்துல புதுசா வீடு கட்றதுக்கு வாஸ்து பார்க்க வரச்சொல்லீருந்தாரு… உங்குளுக்கு எப்படித் தெரியும்?

 

எங்கய்யந்தான் சொன்னாங்களுங்… நம்ம சின்னப்பன் தோட்டத்துல பெருசா மாடியூடு கட்டப்போறானாமா.. உங்க ஊருக்குப் பக்கத்துல இருக்கற வஞ்சிபாளையத்துச் சோசியருதான் வந்து வாஸ்துபார்த்துட்டுப் போனாருன்னு சொன்னாங்களுங்..

 

ஓ.. உங்க அய்யனூரு அந்தூருதானுங்ளா?

 

அந்தூரேதானுங்.. நீங்க வாஸ்து பார்க்கப்போன தோட்டம் எனக்கு சொந்த சித்தப்பன் தோட்டமேதானுங்.. அதுக்கு மேவறத்தல்லைல இருக்கற தோட்டம்தான் எங்க அய்யனோட தோட்டமுங்..

 

உங்க கூடப் பொறந்தவங்க எத்தன பேருங்க்கா..

 

தம்பியொண்ணு தங்கச்சியொண்ணுங்… தம்பி சின்ன வயசுலயே பூச்சி தொட்டு போயிட்டானுங்.. இப்ப நானும் எந்தங்கச்சியும் மட்டும்தான் இருக்கறம்னு வெய்யிங்களேன். தங்கச்சி குடும்பம் அய்யங்கூடத்தான் இருக்கறாங்களுங்..

 

அங்க அய்யனுக்கு பூமி எவ்வளவு இருக்குதுங்க்கா..

 

எலக்டிருக்குகடை சின்னப்பன் அளவேதான் எங்க அய்யனோட பாகமும்.. முழுசா பத்தேக்கர் வருமுங்க.. எல்லாத்தையும் தங்கச்சி குடும்பம்தான் வெள்ளாமை செஞ்சுக்கிட்டு இருக்கறாங்களுங்க..

 

அப்போ அந்த பத்தேக்கர்ல உங்களுக்கும் அஞ்சு ஏக்கர் வரும்னு சொல்லுங்க.

 

வரும் என்ன வரும்ங்கிறது..? அதெல்லாம் எப்பவே வந்தாச்சுங்க.. எந்தங்கச்சியும் அவ வூட்டுக்காரரும் அவிய ஊர்ல பொழைக்கறதுக்கு வழியில்லீன்னு அய்யங்கிட்டப் போயி நின்னப்பவே எங்க அய்யன் நாளைப் பின்னே தகராறு வந்தரக்கூடாதுன்னு இருக்கிறத சரிசமமாப் பங்கி ஒரு பாகத்தை தங்கச்சி பேருக்கும் இன்னொரு பாகத்தை எம்பேருக்கும் எழுதி வெச்சுட்டாங்களுங்க.. நம்முளுக்கு இங்கிருந்து அவ்வளவு தூரத்துக்குப் போயி பண்ணயமோட்றதுக்கு தோதுப்படாதுக்கிறதால எங்க பாகத்தையும் அவியளயே ஓட்டச் சொல்லீருக்கறமுங்க.. 

 

என்னுங்க்கா இது? அப்பேர்ப்பட்ட தண்ணிச்செல்வாக்குள்ள தோட்டத்தை  உட்டுப்போட்டு இங்க இந்த வறக்காட்டுல வந்து ஓலையூட்ல உக்காந்துட்டுக் கெடக்கறீங்களே… போயிப் பண்ணயம் ஓட்டாட்டியும் போகுது. திருப்பூரு பெருசாகி பெருசாகி  உங்க ஊருவரைக்குமே வந்துருச்சு. இன்னிய தேதிக்கு அங்கியெல்லாம் ஏக்கரொண்ணு ஒரு கோடிக்குப் போகுதுங்கிறாங்க.. உங்களோட பங்கு அஞ்சேக்கர்ல கடைசிக்கு ஒரு ஏக்கர வித்துட்டு வந்தீங்கன்னாக்கூட அந்தக் காசுக்கு இங்க வூடுகீடெல்லாம் ஜம்முனு கட்டி மிச்சத்தை பேங்ல போட்டுட்டு ராஜா மாதிரி இருக்கலாமே..?

 

முத்துக்குட்டிக்கு மனைவி வகையில் கோடிக்கணக்கில் சொத்து இருப்பது பற்றி சுப்ரமணிக்கு மிகுந்த ஆச்சர்யமாகயிருந்தது. ஆனால், இப்படியான பேச்சுகளில் முத்துக்குட்டிக்கு விருப்பமில்லை போல. அமைதியாகக் உட்கார்ந்திருந்தார். இது அதைவிடவும் ஆச்சர்யமாக இருந்தது.  

 

நானும் அதையேதான் இவீயகிட்ட காலமுள்ள காலத்திலிருந்து படிச்சு படிச்சு சொல்லீட்டேயிருக்கறேன்… கேட்டாத்தானே? சித்த நீங்கெல்லாமாவது எடுத்துச் சொல்லுங்க..சம்பூர்ணத்தின் குரலில் ஒருவிதமான தீவிரமும் ஆவேசமும் வேரோடத் துவங்கி விட்டதைப்போல தோன்றியது. காலங்காலமாக கிடைக்காமலேயே போய்க்கொண்டிருக்கும் விருப்பமொன்று கைக்கெட்டும் தூரத்தில் வந்துநிற்க பற்றிக்கொள்ளத் துடிக்கும் ஆவேசம். தீவிரம்.

 

அங்க இவிய ஊர்லயிருந்த பூர்வீகத்தை வித்துட்டபொறகு இங்க இந்த வறக்காட்டை வந்து புடிக்கலாமுங்போதே சொன்னேன். இந்த பூமி அமைப்பே செரியில்லை. பாக்கறதுக்கு என்னமோ தலையுமில்லாம முண்டமுமில்லாம ஒரு வாய் மட்டும் பொழந்து கெடக்கறமாதிரியே தெரியுது. என்ன பாம்பாடு பட்டாலும் அஞ்சு காசு மிச்சமாகாது.. எல்லாத்தையும் முழுங்கிப்போடும்.. எந்தக் காலத்திலயும் நம்மள மேலுக்கே வுடாது.. பேசாம எங்க அய்யனூருக்கே போயிருவோம்..  ஆளுபேரு தெரியாத இந்த ஊர்லவந்து இந்த வறக்காட்டைப் புடிக்கிற காசுக்கு அங்கபோயி தனியா ஒரு ஊட்டைக் கட்டிக்கிட்டு என்ற பாகத்துக்கு வந்த தோட்டத்தை உழுதுட்டு நல்ல முறையா இருப்போம்னு எவ்வளவோ சொன்னேன்.. காதிலயே போட்டுக்கல..

 

சம்பூரணம் எந்த நேரத்திலும் உடைந்து அழ ஆரம்பித்துவிடலாம் என்னும் நிலமையில் இருந்தாள். முத்துக்குட்டியிடம் எந்த சலனமுமில்லை. இருட்டுக் கட்டியபடியிருக்கும் வாசல் தரையையே அவர் பார்வை வெறித்துக் கொண்டிருந்தது.

 

 

“இந்த ஊருக்குவந்து இநதப் பாங்காட்டுல குடிசையைப் போட்டு உக்காரும்போது பெரியவளுக்கு ஏழு வயசு. சின்னவளுக்கு அஞ்சு வயசு. எந்தச் சந்துலயிருந்து எந்தக் கருமம் ஊரீட்டு வந்துடுமோங்கிற பயத்துலயே லைட்டை தூண்டியுட்டுட்டு தூங்கீட்டிருக்கற புள்ளைக தலமேட்டுல அரத்தூக்கமும் முழிப்புமாவே உக்காந்திருப்பேன்.

 

சின்ன வயசுல தம்பி பாம்பு தொட்டு போயிட்டானுங்கிறதால அதுபத்துன பயமில்லாம ஒரு ராத்திரியும் நிம்மதியா தூங்குனதில்ல. இங்க வந்ததுக்கு அப்புறம் இந்த மனுசனுக்கு குடிப்பழக்கமும் அதிகமாயிருச்சு. குடி மீறிப்போன நாள்ல ராத்திரிக்கி இங்க வூட்ல படுக்கறதில்லே. நம்ம தோட்டத்துக்கு நடுவாண்ட தெக்குவடக்கா ஒரு சிறு பள்ளமா போகுது பார்த்தீங்களா..? அந்தப் பள்ளத்துக்கு நடுவாண்டயிருக்கிற எலந்தமரத்துக்கடியில போயிப் படுத்துக்கிறது. இங்க வந்த நாள்லயிருந்து மாசத்துக்கு ஒண்ணுரண்டு ராத்திரியிலயாவது இந்தக் கூத்து இன்னமுங்கூட நடந்துட்டெதானிருக்கு.

 

அட கூறுகெட்ட மனுசா.. மப்பு மீறிப்போச்சுனா போயிட்டுப்போவுது. நல்லமொறையா வூட்ல படுக்கறதுக்கென்ன? அங்கேம்போயி பூச்சிபொட்டு ஒலாத்தற எடத்துல படுத்துக் கெடக்கிறேன்னா அதுக்கு ஒண்ணுமே பேசறதில்ல.. நாம என்னதான் காட்டுக்கத்து கத்துனாலும் கல்லுளிமங்கனாட்ட காதுலயே போட்டுக்காம போயிடறது.. நானு இங்க புள்ளைகளுக்கு காவலிருப்பனா? இல்லே மப்புமீறிப்போயி நடுக்காட்டுல பதவுளுக்குள்ள எலந்தமரத்தடிய படுத்துக் கெடக்கிற புருசனுக்குக் காவலிருப்பனா? நீங்களே சித்த யோசனபண்ணிப் பாருங்ண்ணா.. அந்த மாதிரி ராத்திரியீலெல்லாம் நானு என்ன பாடு பட்ருப்பேன்னு?

 

எப்படியோ புள்ளைகளை ஆளாக்கி கட்டியும் குடுத்துட்டோம். நாங்க எங்க கட்டிக் குடுத்தோம். அவுளுகளே அவியவியளுக்கு புடிச்ச மாப்ளையாப் பார்த்து கட்டிகிட்டுப் போயிட்டாளுக. எப்படா இந்த சனியம்புடிச்ச காட்டையும் இந்த கீத்துக்குச்சையும் விட்டுப் போவோம்னே இருந்திருப்பாளுகபோல.. கல்யாணத்துக்கப்பறம் எண்ணி ஒரு நாள்கூட மக்களும் மருமக்களும் இங்கவந்து தங்குனதில்ல. ஒரு நோம்பிநொடின்னாக்கூட புள்ளைகளையெல்லாம் கூட்டீட்டு பழைய சோத்துநேரமாட்ட வருவாங்க. மத்தியானச் சோத்த தின்னுபோட்டு சாயந்திரமா பொழுதிருக்கவே கெளம்பிப் போயிருவாஙக. ஏனுங்ண்ணா நீங்களே சொல்லுங்க. பள்ளிக்கூடம் லீவு வுட்டா பேரம்பேத்திகளையெல்லாம் கூப்டாந்து வாரக்கணக்குல வெச்சுக்கிட்டு கேக்கறதையெல்லாம் செஞ்சுபோட்டு பாக்கோணம்னு ஆசையெல்லாம் எனக்கு இருக்குமா? இருக்காதா? இந்த வூடு இருக்கிற லட்சணத்துல குழந்தைகளையெல்லாம் அவிய எந்த நம்பிக்கையில வுட்டுப்போட்டுப் போவாங்க.?.

 

 

இதையெல்லாம் கொட்டித் தீர்ப்பதற்கு ஒரு ஆள் கிடைக்காதா என்றே சம்பூர்ணத்தம்மாளும் காத்துக் கிடந்திருப்பாள்போல. பேசப்பேச அவளது குரலில் ஆங்காரம் கூடியபடியேயிருந்தது. முத்துக்குட்டி சிலைபோல சமைந்திருந்தார். சுப்ரமணிக்கு அவரது அமைதியின் தீவிரத்தைப் பார்க்கபார்க்க இதற்குப் பின்னால் ஏதோ வலுவான புயலொன்று சுருண்டுசுருண்டு படுத்திருப்பதாகப் பட்டது. மேற்கொண்டும் இந்த பழமைகளை வளர்த்துக் கொண்டிருந்தால் அந்தப் புயல் சீறிக்கொண்டு கிளம்பிவிடும் எனத் தோன்றியது. மேலும் , சம்பூர்ணத்தம்மாளின் ஆங்காரமும் எதிர்கொள்ள முடியாத ரெளத்திரமாக மாறிவிடலாம்.

 

 

 

 

 

“செரிங்க்கா… பின்னொரு நாள் இதைப் பற்றி செளகரியமா உக்காந்து பொறுமையாப் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வருவோம். இப்போ கொஞ்சம் அர்ஜெண்டா வேலையிருக்குது.. அப்ப நான் கிளம்பட்டுங்ளா?என்று சம்பூர்ணத்தம்மாளிடம் விடைபெற்றுக் கொண்ட சுப்ரமணி முத்துக்குட்டியையும் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு நாற்காலியைவிட்டு எழுந்து கொண்டார்.

 

இன்னிக்கு ஒரு குவார்ட்டரெல்லாம் கட்டுபடியாகாது.. ஒரு ஆப்பாவது அடிச்சால்தான் தூங்க முடியும் எனத் தோன்றியது. பைக்கை ஸ்டார்ட்செய்து கியரை மாற்றும் சமயம் முத்துக்குட்டி கூப்பிட்டார். “அண்ணோவ் கொஞ்சோ நில்லுங்ண்ணோவ்என்றபடியே வாய்ப்பகுதி கட்டப்பட்ட கனத்த கட்டைப்பை ஒன்றை தூக்கிவந்தவர் “சின்ன வெங்காயம் வெண்டகாயி அவரக்காய் கொஞ்சம் இருக்குதுங்ண்ணா.. கொண்டுட்டுப்போயி வூட்ல அக்காகிட்ட குடுத்துருங்க..

 

காசு கிடைக்காட்டியும் போச்சாது… காய்கறிகளாவது கிட்டியதே.. என அவரது வியபாரமூளையை திருப்திபடுத்தும் விதமான வாக்கியமொன்று மனதின் ஏதோவொரு மூலையிலிருந்து உற்பத்தியாகியது. அதே வேளையில், பின்சீட்டின் வலப்புறமிருந்த கொக்கியில் கட்டைப்பையை பொருத்தியபடியிருந்தார் முத்துக்குட்டி. வண்டியிலமர்ந்தபடியே ஒருகணம் முத்துக்குட்டியை உற்றுநோக்கியவர் “அண்ணோவ் உக்காருங்ண்ணா போயி ஒரு கட்டிங்கைப் போடுவோம்.என்றார்.

 

நீரில்லாத காம்பிலிநதியின் மத்தியில் நீரோடிய காலங்களிலுண்டான வழுவழுப்போடு மண்ணோடுமண்ணாக புதைவுற்றிருந்த நிலப்பாறையொன்றின்மேல் முத்துக்குட்டியும் சுப்ரமணியும் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தனர். பனையுயரத்திற்குமேல் வந்திருந்த திரயோதசி நிலவின் வெளிச்சம் குளிர்ந்தநீர்ஆவியென வெளியெங்கும் நிரம்பியிருந்தது.

 

விட்டால் கரைந்து விடுவார்போல. தொட்டால் உடைந்துவிடக் கூடிய குரலில் முத்துக்குட்டி பேசத் துவங்கினார். “ நீங்க நெனைக்கிற மாதிரியெல்லாம் இல்லீங்ண்ணா.. என் மாமனாருஞ்செரி.. மாமியாத்தாளுஞ்செரி… தங்கமானவங்க. அவுங்கமெலயெல்லா எனக்கு எந்தக் கோவமும் கெடையாது. என்ற சகலையும் கொழுந்தியாளுங்கூட அப்படித்தான். எம்பட வூட்டுக்காரி உங்க முன்னால அத்தன பேச்சு பேசுனாளுங்களே… நீங்களும் பார்த்துட்டுத்தானே இருந்தீங்க? நானெதாச்சு ஒரு வார்த்த எதுத்துப் பேசீருப்பனா..? இன்னிக்குன்னு இல்லீங்ண்ணா.. என்னிக்குமே இப்படித்தான். என்னத்தையோ பேசீட்டுப் போறான்னு வுட்ருவேன்.

 

நீங்க யோசனை சொன்னமாதிரி அங்கிருக்கிற பண்ணையத்துல ஒரு ஏக்கர வித்தாலே ஒரு கோடிக்குப் போகும்தான். வித்துப்போட்டுவந்து இங்க ஒரு மாடியூடு கட்டிக்கிட்டு மிச்சத்தப் பேங்குல போட்டுக்கிட்டு ராஜா மாதிரி இருக்கவேண்டீதுதானேனீங்க? நானெதுக்கு ராஜா மாதிரி இருக்கோணம்? ராஜா மாதிரி இருக்கிறதுக்கு நானொண்ணும் ராஜா இல்லியே? எம்பட மாமனாரோ அவுங்க அய்யனோ கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஆண்டு அனுபவிச்ச பண்ணயம். அவுங்க நல்லாருக்கும்போதே அவுங்க கண்ணு முன்னாலயே நானெதுக்கு அதையப்போயி விக்கோணம்? இருந்துட்டுப் போகுது. எம்புள்ளைக ரண்டும் நாளைக்குத் தின்னுட்டுப் போகுது. என்னடது எல்லாக் காரியமும் ஆச்சுங்ண்ணா.. எம்புள்ளைக ரண்டுக்கும் கல்யாணமாகி – எம்பொண்டாட்டி சொன்ன மாதிரி ரண்டுபேருக்கும் நாங்க பார்த்து கட்டிவெக்கலீன்னு வெய்யுங்க..

 

 

 

 

அதனாலென்ன? இப்ப பிரியமுஞ் சந்தோசமுமா கொழந்தையுங் குட்டியுமா நல்லாத்தானே இருக்கறாங்க? எது எப்படியோ எம்பொண்ணுக ரண்டுபேரும் ஊடும்குடும்பமுமா ஆயிட்டாங்க.. ஆனா என் சகலையோட புள்ளைகளெல்லா இன்னும் பொடுசுங்ண்ணா.. அதுகெல்லா உருப்படியாகற வரைக்கும் அவன் என் சம்சாரத்து பங்கையுந்தான் ஓட்டீட்டுப் போறான். அதனாலென்ன?   என்னால முடியலீங்ண்ணா.. இந்தக் காட்டவுட்டுப் போறதுக்கு என்னால முடியாதுங்ண்ணா.. எம்பொண்டாட்டி சொன்னாளுங்ளே.. மொதமொதலா வந்து பார்த்தன்னிக்கு பொழந்த வாயி மாதிரித் தெரிஞ்சுதுன்னு.. மொதமொதல்ல பார்த்தப்ப எனக்கு எப்படித் தெரிஞ்சது தெரியுங்ளா? இப்ப இந்த நிமிசம் வரைக்கும் எப்படித் தெரிஞ்சிட்டிருக்குது தெரியுங்களா..?எங்க அம்மா மடி மாதிரி.

 

பச்சச்சீலையக் கட்டிக்கிட்டு சம்மணங்கால் போட்டுட்டு எங்கம்மா ஆசாரத்து தூண்காலுக்கு முதுகைக் கொடுத்துட்டு உக்காந்திருக்கிறா.. அவளோட மடிஞ்ச ஒரு முழங்காலுமேல தலையை வெச்சுட்டு இன்னொரு மடிஞ்ச முழங்காலுமேல காலுரெண்டையும் நீட்டீட்டு அவமடீல நான் படுத்துக்கிட்டு ரப்பருபோட்ட பாட்டல்ல பாலு குடிச்சிட்டிருக்கிறேன். அன்னிக்குதான் எங்கம்மாவை நான் கடைசியா பார்த்தது. கொஞ்ச நேரத்திக்கு முன்னால நீங்களுங்கூட தொப்புளு மாதிரி தெரியுதுனீங்க.. ஊழ்வினை பற்றுகிற்றுன்னு என்னெனமோ சொன்னீங்க.. நீங்க படிச்சவரு சாஸ்தரமெல்லாந் தெரிஞ்சவரு.. நீங்க சொன்ன செரியாத்தான் இருக்கும்னு வையுங்க.. செரியா இருக்கறதுனாலதானே தெனமும் இத்தனபேரு தேடிவர்றாங்க? உங்களுக்கு எம்பட வூட்டுக்காரிக்கெல்லாம் எப்படித் தெரியுதோ தெரிஞ்சுட்டுப் போகுட்டுமுங்ண்ணா.. நீங்கலெல்லாஞ் சொல்றமாதிரி என்ன நடக்குமோ நடந்துட்டுப் போகுட்டுமுங்ண்ணா..  எனக்கு அது எங்கம்மா மடிதான்.

 

ஒரு குழந்தைய யாரு அடிச்சாலும் அது அம்மா மடிக்குள்ளதானே ஓடிப்போயி புகுந்துக்கும்? அதைய அந்த அம்மா மடிதானே காபந்து பண்ண வேணும்?. பண்ணுனாலுஞ்செரி பண்ணாட்டியுஞ்செரி நானு இப்படியே இருந்துட்டுப் போறேன். என்னைய இப்படியே இருக்க வுட்ருங்ண்ணா.   

 

றுநாள் காலை. குளியலாதிகளையெல்லாம் முடித்துக் கொண்டு அலுவலகத்திலிருக்கும் ராஜ அலங்கார முருகனுக்கு மிஸ்டிக் சுப்ரமணி ஊதுபத்தி காட்டிக் கொண்டிருந்தார். அவருடைய பையன் நாட்ராயசாமி அழைப்பது கேட்டது. ஊதுபத்திகளை ஸ்டேண்டில் பொருத்திவிட்டு வெளியே வந்தார். “நைட் நீ கொண்டுட்டுவந்த வெங்காய மூட்டையில இருந்துதுன்னு அம்மா குடுத்துட்டுது அப்பா.  என்றபடியே வலது கரத்தை நீட்டியவன் உள்ளங்கையை விரித்தான்.

 

அவன் கையில் கசங்கிய இரண்டு வெற்றிலையும் சில பாக்குகளும் ஐநூறு ரூபாய்த் தாளொன்றும் இருந்தது.

 

 

 

                                                                           ------------       

 

 

 

 

  

 

 

 

31,                     பல்லி­-1

 

என் அறையிலிருந்த மூன்று

பல்லிகளில் இரண்டை

விரட்டியடித்து விட்டேன்

 

பயமற்ற மூன்றாவது பல்லி

எங்கே ஒளிந்திருக்கிறது என்பதை

கண்டுபிடிக்க முடியவில்லை

 

என் தைரியங்களையெல்லாம் திரட்டி

மூன்றாவது பல்லியை

தேடியபடியிருக்கிறேன்

 

மிகுந்த பயத்தோடு.

 

 

 

 

 

 

32,                          பல்லி-2

 

எப்போதும் யாருடனாவது

இருந்தபடியேயிருக்கும் நானும்

 

எப்போது பார்த்தாலும் தனியாகவே

இருந்தபடியிருக்கும் பல்லியும்

 

இப்போது சந்தித்துக் கொண்டோம்

 

பல்லி சொனனது “ நீ விரும்பினால்

என்னைக் கொன்றுவிட முடியும்

 

நான் கூறினேன் “ நீ விரும்பினாலும்

என்னைக் காப்பாற்றிவிட முடியாது

 

 

 

33,                                          பல்லி -3

  பல்லியே… உனக்கு இங்கென்ன வேலை

என்றேன்

மவுனமாக இருந்தது

 

“ஏ பல்லியே.. இந்த இடத்தில் நீ இருக்கலாகாது

ஓடிப்போய்விடுஎன்றேன்

மவுனமாக இருந்தது

 

“ஏ பல்லியே… உன்னைக் கொன்றே போடுவேன்

என்றேன்

மவுனமாகவே இருந்தது

 

ஆமாம்.. என்னால் ஏன் மவுனமாகவே

இருக்க முடியவில்லை?

 

34,                       கோப்பைத் தவளை

 

ஒட்டுமொத்த நீளத்தில்

இச்சுட்டுவிரலின் நீளமெல்லாம்

நீளமா என்ன

 

ஒட்டுமொத்த உயரத்தில்

இச்சுட்டுவிரலின் உயரமெல்லாம்

உயரமா என்ன

 

ஒட்டுமொத்த ஆழத்தில்

இச்சுட்டுவிரலின் ஆழமெல்லாம்

ஆழமா என்ன

 

நீள உயர ஆழத்திற்கெல்லாம்

அளவு என்பது ஏது?

ஒட்டுமொத்தம் என்பதும்தான் ஏது?

 

இச்சுட்டுவிரலின் நீளமே நீளாதிநீளமாய்

இச்சுட்டுவிரலின் உயரமே உயராதியுயரமாய்

எத்தனையெத்தனையோ நகர்ந்தபடியிருக்கலாம்

எத்தனையெத்தனையோ பறந்தபடியுமிருக்கலாம்

 

கழிவறைக் கோப்பையின் நீரினுள்

சுட்டுவிரல் ஆழமேகொண்ட அதன் ஆழாதியாழத்தில்

நீந்திநீந்திக் களிக்குமிந்த தலைப்பிரட்டைகளைப்போல.

 

 

 

 

 

 

 

 

35,                                            கீகாத்துமேகாத்துசமேதர…

 

கதவின் வழியாக வந்தால் கீகாத்து

சன்னலின் வழியாகவென்றால் மேகாத்து

கதவுக்கும் சன்னலுக்கும் நடுவே

உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்

 

சற்றுமுன்பு மேகாத்து வீசியது

சற்று முன்பிற்கும்முன்பு கீகாத்து விசியது

தற்போதோ கீகாத்தும் வீசுகிறது

மேகாத்தும் வீசுகிறது

 

சற்று முன்பிருந்த நானும்

சற்று முன்பிற்குமுன்பிருந்த நானும்

கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம்

 

தற்போதைய என்னை. 

 

 

36,                     மனோகாரகன்

 

நீ உத்திரட்டாதி

நான் மிருகசீரிடம்

நீ பசுமாடு

நான் சாரைப் பாம்பு

 

அன்றைக்கு வெள்ளிக் கிழமை

வெள்ளிக்கு அதிபதி யாரென்றால்

களத்திரகாரகனும்

பாலுணர்வுகளைத் தூண்டிவிடக்

கூடியவனுமாகிய சுக்கிரன்

 

அன்றைக்குப் பார்த்து

மனோகாரகனும் கற்பனைகளுக்கு

அதிபதியுமாகிய சந்திரன்

பெண் எருமைமேலே போய்க் கொண்டிருந்தான்

அதாவது, அஸ்தநட்சத்திர வெளியிலே

சஞ்சரித்தபடியிருந்தான்

 

நாம் சந்திக்க நேர்ந்தது

 

அஸ்தம் உனக்கு சாதக தாரை

அதாவது நல்வாய்ப்பு

எனக்கோ பரம மைத்திரம்

அதாவது சகித்துக்கொள்ளவே முடியாத பேரன்பு

 

அப்புறமெனது காதல் எக்கதிக்கு

ஆளாகியது என்பதுதான் உனக்கும்

தெரியுமே

 

பிறகு நம்கண்கள் கடைசிகடைசியாகப்

பார்த்துக் கொண்டபோது

என் அம்மாவை டிவிஎஸ்50ன் பின்சீட்டில்

அமரவைத்தபடி நல்ல வெயிலில்

போய்க் கொண்டிருந்தேன்

நீ பேருந்துநிறுத்த நிழற்குடையில்

அமர்ந்திருந்தாய்

 

அன்றைக்கு சனிக்கிழமை

அமாவாசயுங்கூட

சனி என்பவன் நீதிமான்

அவரவர்க்கான பாவபுண்ணியங்களை

அனுசரித்து

அவரவர்க்கான நல்லது கெட்டதுகளைப் பண்ணுகிறவன்

 

 

 

மனோகாரகனும் கற்பனைகளுக்கு

அதிபதியுமாகிய சந்திரன்

அன்றைக்கு எந்த பிராணியின்மேலே

எந்த நட்சத்திர வெளியிலே

சஞ்சரித்தபடியிருந்தான் என்பதையெல்லாம்

கேட்காதே

 

அதைப்பற்றி எனக்கென்ன.

 

37,                              மற்றதும்தீதே

 

நேற்று பகல்

பதினொரு நாழிகைக்கு

அர்ச்சுனன் தன் வித்தைகளையெல்லாம் காட்டினான்

சும்மா சொல்லக்கூடாது

வில்வித்தையில் அர்ச்சுனன் ஒரு மாஸ்டர்தான்

 

அவனுக்கு நிகர் யாருமில்லையென

கூத்தாடிக் கொண்டிருந்த கணத்தில்தான்

தெற்குத்திசையைக் கிழித்தபடி ஒருவன் வந்து நின்றான்

கர்ணன் என்றார்கள்

அர்ச்சுனன் செய்த வித்தைகளையெல்லாம்

அவனும் செய்து காட்டினான்

சும்மா சொல்லக்கூடாது கர்ணனும் ஒரு மாஸ்டர்தான்

ஆனாலும் துரியோதனனைத்தவிர யாரும் அங்கீகரிக்கவில்லை

 

உண்மை என்னவெனில் துரியோதனன் போலொரு

நல்லவர் யாருமேயில்லை

கர்ணனனைப் போலொரு வில்வீரனும் யாருமேயில்லை

இருவருமே தோற்கடிக்கப் பட்டார்கள்

 

பேருண்மை என்னவெனில்

தர்மமும் கவ்வும்                       

 

 

38,                       வஞ்சினமுரைத்தல்

 

தெற்கிருந்து வடக்கே

வந்து கொண்டிருந்தேன்

 

இரண்டு வேப்பங்கொம்புகளை

பின்புலமாகக்கொண்ட சிறு பசும்புல்வெளியில்

மூன்று கற்களைக்கூட்டிப் பற்றவைத்த தற்காலிக அடுப்பில்

தன்னந்தனியாக ஒரு முதுகிழவி சமைத்துக் கொண்டிருந்தாள்

 

மேற்கிருந்து கிழக்கே

சென்று கொண்டிருந்தேன்

 

இடப்பக்கம் இந்திரா காலனியையும் வலப்புறத்தே

கிளுவைவேலியையும் கொண்டமைந்த சிறு தார்ச்சாலையில்

குறுக்கிட்ட பூனைக்குட்டியொன்று செய்வதறியாது திகைத்து

நடுரோட்டிலேயே ஸ்தம்பித்தமர்ந்து விட்டது

சீறியபடி அங்கிருந்து ஒரு நான்கு சக்கரம் வந்தது

இங்கிருந்துவொரு இரண்டு சக்கரம் சென்றது

இரண்டு சக்கரத்தின் பின்னிருக்கையில்தான் நானும்

அமர்ந்து கொண்டிருந்தேன்

 

அப்போது அதுசமயம் பூனைக்குட்டிக்குள் புகுந்து

அந்த கண்களிரண்டினால்

நீங்கள் பார்த்திருக்க வேண்டும்

மயிரிழை இடைவெளிக்குள்தான் எவ்வளவு

மகத்தான சக்தி இருக்கிறது

மயிரிழை இடைவெளிக்குள்தான் எவ்வளவு காணாத தூரமும் இருக்கிறது

 

குத்துப்பட்ட காயங்களுக்கெல்லாம்

மதுவைத் தொட்டு மருந்திட்டபடி இப்போது என் அறையில்

அமர்ந்திருக்கிறேன்

 

குற்றவாளிக் கூண்டாகிய மேல்மாடத்தில் வழக்கம்போல்

உங்களில் பலரை நிறுத்தி

வழக்கம்போல் கீழே நின்றபடி தொடைகளைத் தட்டித்தட்டி

கைகளை நீட்டிநீட்டி

சூளுரைக்கவும் முயற்சித்தேன்

 

வழக்கத்திற்கு மாறாக எனக்கும் கீழே அம்முதுகிழவி

வந்து நிற்கிறாள்

அந்த பூனைக்குட்டியோடு

தொடைகளைத் தட்டியபடி

கைகளை நீட்டியபடி.

 

 

39,                       தத்ரூபம்

 

ஐந்தாம் வகுப்பு முழுப்பரிட்சை லீவில்

தூரத்து டவுனிலே இருக்கின்ற

சித்தியின் வீட்டிற்கு சென்றுதிரும்பிய சிவானந்தம்

மூன்று புகைப்படங்களைக் காட்டிக்காட்டி

பெருமையடித்துக் கொண்டிருந்தான்

 

படிக்காதவன் ரஜினியோடு அவன்

நிற்பது மாதிரியும்

விக்ரம் கமலஹாசனோடு அவன்

நிற்பது மாதிரியும்

என் தங்கைக் கல்யாணி டிஆரோடு

அவன் நிற்பது மாதிரியும் மூன்று புகைப்படங்கள்

 

அவ்வளவு தத்ரூபமாக இருந்தன

 

அதெப்படி? பொருட்காட்சியின் நிற்கவைத்த

அட்டைகளோடு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

அவ்வளவு தத்ரூபமாக இருக்க முடியும் என

இன்றளவும் சந்தேகம் இருந்துகொண்டேயிருக்கிறது

 

ஆனாலும் அப்புகைப்படங்கள்

அவ்வளவு தத்ரூபமாகவேதான் இருந்தன.