அறிமுகமோ பழக்கமோ இல்லாவிட்டாலுங்கூட
சிலர் நம் மனதிலே பதிந்து விடுவார்கள். எந்த நேரமும் அவர்களைப் பற்றிய யோசனையொன்று
மனதின் ஒரு மூலையில் ஓடியபடியும் இருக்கும். சமீப காலமாக அப்படி என் கவனத்தைக் கவர்ந்தவர்களில்
ரங்கமணியும் ஒருவர். அவருடைய உண்மையான பெயர் என்னவென்று தெரியாது. ஆள் பார்ப்பதற்கு
நானே ராஜா நானே மந்திரி படத்தில்வரும் விஜயகாந்தைப்போல இருப்பார். அந்தப் படத்தில்
விஜயகாந்தின் கதாபத்திரத்திற்கு ரங்கமணி என்று பெயர்.
நாச்சிக்குட்டி மாமனின் வீட்டிற்கு
அந்த வழியாகத்தான் போகவேண்டும். பல்லடம் போய்வருவதற்கும்
மெயின் ரோட்டைத் தவிர்த்துவிட்டு பெரும்பாலும் அவ்வழியைத்தான் பயன்படுத்துகிறேன். நாச்சிக்குட்டி
என்னுடைய பைனான்சியர்களில் ஒருவர். பல்லடத்தில்தான் எங்கள் தறிகளுக்கு பாவுநூல் கொடுக்கும்
டெக்ஸ்டைல்ஸ் இருக்கிறது. மேலும் தறிச்சாமானக் கடைகளும் தறிவேலைகள் செய்யும் வொர்க்ஷாப்புகளும்
பல்லடத்தில்தான் இருக்கின்றன. இப்படியான காரணங்களால்
அடிக்கடி அந்த தார்ச்சாலையின் வழியாக போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கிறேன்.
காம்பிளி நதியின் தரைப்பாலம் தாண்டியதும்
, தார்ச்சாலையையொட்டி வலதுபுறம் ரங்கமணியின் தோட்டம் இருக்கிறது. தோட்டத்தில் மேகோடாக
வீடு இருக்கிறது. தோட்டம் முழுவதுமே தென்னை மரங்கள்தான். சுமார் முந்நூறு மரங்கள் இருக்கலாம். கான்கிரீட் வீடுதான். என்றாலும், சுவர்களுக்கு சிமெண்ட்
பூசப்படாமல் செங்கற்கள் தெரியும்படியும், கதவு ஜன்னல்களுக்கு பெயிண்ட் அடிக்கப்படாது
துருவேறியபடியும் பாழடைந்த தன்மையோடு காட்சியளிக்கும் கான்கிரீட் வீடு. புற்கள்மண்டிக்
கிடக்கும் அவ்வீட்டு வாசலின் வடகிழக்கில் தென்னைகளையொட்டி ஒரு மாமரம் இருக்கிறது. அதன்
நிழலில்தான் ரங்கமணி முதன்முதலாகக் காணக் கிடைத்தார். அதற்குப் பிறகும்கூட அந்த மரத்தடியில்தான்
அவர் பெரும்பாலும் காணக் கிடைத்தபடி இருக்கிறார்.
பகற்பொழுதின் எல்லா வேளைகளிலும்
அந்த வழியாகப் போயுமிருக்கிறேன் வந்துமிருக்கிறேன். அந்த வீட்டைக் கடக்கும்போது அனிச்சையாகத்
திரும்பும் என் கண்களுக்குப் புலனாகும் காட்சியானது எப்போதும் ஒரேமாதிரியானதுதான்.
மரத்துநிழலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு நண்பர்கள் புடைசூழ ரங்கமணியண்ணன் அமர்ந்திருப்பார்.
கரியநிறப் புல்லட் ஒன்றும் இன்னபிற வண்டிகளும் மரத்து நிழலின் மற்றுமொரு இடத்தில் நிறுத்தப்
பட்டிருக்கும். என்னுடைய பைக்கின் சத்தம் கேட்டு பேச்சும்சிரிப்புமாகயிருக்கும் ரங்கமணியோ
சகாக்களோ சட்டென அமைதியாகி ரோட்டுப்பக்கமாக தலையுயர்த்தி கவனிப்பதும், கணநேரம் எங்களின்
பார்வைகள் சந்தித்து விலகுவதும் வாடிக்கை. அந்தக் கண்களையெல்லாம் காணும்போது மனதிலெ
உண்டாகும் அனுமானமும்கூட எப்போதும் ஒரே மாதிரியானதுதான். இவர்கள் குடித்திருக்கிறார்கள்
அல்லது குடித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது குடிக்கப் போகிறார்கள்.
திரும்பிய பக்கமெல்லாம் அரசாங்கமே
மதுக்கடைகளைத் திறந்துவைத்திருக்கும் இந்தக் காலத்தில் யார்தான் குடிக்காமல் இருக்கிறார்கள்?
கிட்டத்தட்ட எல்லோருமே அந்தப் பழக்கம் உடையவர்கள்தான். அளவுதான் வித்தியாசம். ஆனாலும், ரங்கமணி எல்லைகளையெல்லாம்
மீறிவிட்டாரென்றுதான் தோன்றியது. முந்நூறு தென்னைமரங்களையுடைய தோப்பு என்பது சராசரியாக
ஆண்டுக்கு மூன்றுலட்சம் வருமானம் தரக்கூடியது. அதுவும் பெரிய உழைப்பென்று எதுவுமில்லாமலேயே
கிடைக்கும் வருமானம்.
இப்படியான சவுகர்யம் அமையப்பெற்ற
ஒரு மனிதன் எதற்காக எந்த நேரமும் குடித்தபடியேயிருக்கவேண்டும்? அளவாக வாரம் ஒருமுறை
அல்லது இரண்டுமுறை மட்டும் மூன்று அல்லது நான்கு பெக்குகள் என்கிற அளவில் போட்டுக்கொண்டு
சந்தோசமாகவும் ஜாக்கிரதையாகவும் இருந்துவிட்டுப் போகவேண்டியதுதானே என நினைத்துக்கொள்வேன்.
இப்படியான தோப்பும் தோட்டமும் உழைபில்லாமலேயே கிடைக்கும் வருமானமுமான பாக்கியம் எனக்கெல்லாம்
கிட்டவில்லை. நான் சோறு தின்பதற்கு கடின உடழுலைப்பைக் கோரும் தறிகளை நேரங்காலம் பார்க்காது
ஒட்டவேண்டியிருக்கிறது.
அதே வேளையாக குடித்து, கண்கள்கிறங்கி
கால்பின்ன நடப்பவர்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. எதிர்காலம் குறித்த
கவலைகளின்றி நிகழ்கணத்தில், இருத்தலை இருந்து பார்ப்பதால் உண்டாகும் தேஜஸ் அது. ஆரோக்கியம்
கெட்டு குட்டிச்சுவரான பிற்பாடு ஞானியர் முகமொத்த அந்த பொலிவு நலிவடைந்து காலப்போக்கில்
இருளண்டிப் போவதென்பதும் நடக்கக்கூடியதுதான்.
நாளை எக்கதியோ? சமகாலத்தில் ரங்கமணியண்ணன்
சவரம் செய்துகொண்ட ஞானியைப் போலவும் யோகியைப் போலவும்தான் ஒளிர்ந்தபடி இருக்கிறார்.
சீட்டுப்பணம் குடுப்பதற்காக நாச்சிகுட்டி மாமனின் வீட்டிற்குப் போயிருந்தேன். ரங்கமணியும்
நாச்சிக்குட்டியிடம் சீட்டுப் போடுகிறார் என்கிற விசயமே அன்றைக்குத்தான் தெரிய வந்தது.
முழுநேரக் குடியர்களால் சீட்டுப் பணம் கட்டமுடியாது என்றும் அவர்களை சீட்டு நடத்துபவர்கள் யாரும் சேர்த்துக்கொள்ள
மாட்டார்கள் என்றும் நீங்கள் நினைக்கலாம். அப்படியெல்லாம் கிடையாது என்பதை உணர்ந்த
நாள் அன்று.
திருமதி நாச்சிக்குட்டியிடம் காபியை
வாங்கிக் குடித்தபடி தூண்கால் சாய்ந்து திண்ணையில் அமர்ந்து திரு நாகுவிடம் (நாச்சிக்குட்டியின்
சுருக்கம்) பேசிக்கொண்டிருந்தேன். கரியநிற டீசல் புல்லட்டை நடுவாசல் வரைக்கும் கொண்டுவந்து
நிறுத்திய ரங்கமணி இறங்கிவந்து திண்ணையிலே உட்கார்ந்தார். கால்கள் பின்னவில்லை. ஆனால்,கண்களில்
கிறுகிறுப்பு இருந்தது. நாகு இருபதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரையிலான தொகையளவுகளில்
மாதாந்திர ஏலச்சீட்டுகளை நடத்தி வருகிறார். நான் நாற்பாயிரம் சீட்டில் சேர்ந்திருக்கிறேன்.
எப்போதுமே என் அளவு அதுதான். ரங்கு ஒரு லட்சரூபாயில் சேர்ந்திருப்பார்போல. எட்டாவது
ஏலத்துக்கான கழிவுபோக கட்டவேண்டிய தொகையை கொடுத்துவிட்டு சற்றுநேரம் பேசியபடியிருந்துவிட்டுக்
கிளம்பினார். அந்த சற்றுநேரத்தில் இரு விசயங்கள் புலனாகியது. ரங்கு இன்னும் அந்த சீட்டை
எடுக்கவில்லை. மழை வெய்யில் பற்றியெல்லாம் அவருடன் சகஜாமாக உரையாடிக் கொண்டிருந்த திருமதி
நாகு காபியோ தேநீரோ ரங்குவுக்கு கொண்டுவந்து கொடுக்கவில்லை. ஏதேனும் குடிக்கிறீர்களா?
என சம்பிரதாயத்துக்கும்கூட கேட்கவில்லை. காபியும் தேநீரும் போதையை கெடுக்க வல்லவை எனும்
அனுபவ உண்மையை அவர் அனுமானத்திலேயே உணர்ந்திருப்பார் போலும். கிளம்பிச் செல்கையில் ரங்கு நாகுவிடமும் திருமதி
நாகுவிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற்றார். குறிப்பிட வேண்டிய இன்னொரு விசயம் அவர் என்னைப்
பார்த்தும் தலையாட்டிவிட்டு (இப்படியான தலையாட்டலுக்கு சரி கெளம்பட்டுங்ளா என அர்த்தம்)
விடைபெற்றார் என்பதுதான்.
அதே வேளையாகக் குடித்துகொண்டு
எதிர்காலம் குறித்த சிந்தனையில்லாமல் நிகழ்கணத்தில் இருத்தலை இருந்து பார்க்கிறார்
என்கிற அளவில் ரங்குவின்பொருட்டு என்னுள்ளிருந்த உணர்வை ஒருவகை பரிதாபத்தின் பாற்பட்ட
கவர்ச்சி எனலாம். அதையும் தாண்டிய ஒரு பிரேமை
அவர்மேல் உண்டானது அவர் ஏன் இப்படியான குடிகாரராய் ஆனார் என்பதை தெரிந்து கொண்ட பிறகுதான்.
சாகசங்கள் புரியும் நாயக பிம்பத்தின்மீது
ரசிகமனதில் ஒரு இது உண்டாவது போலவே கோமாளித்தனங்கள் செய்யும் நகைச்சுவை பாத்திரத்தின்மீதும்
ஒரு இது உண்டாகத்தான் செய்கிறதல்லவா? அப்படியான இரண்டாவது வகை இதுதான் ரங்கு ஏன் குடிகாரரானார்
என்பதை அறியநேர்ந்தபோது எனக்கு ஏற்பட்ட பிரேமையும். அவரை தூரத்திருந்து ரசித்து மகிழும்
ரசிகனாகவே ஆகிவிட்டேன்.
சீட்டுப் படிக்கின்ற நாளில் நாகு
ஒரு விருந்து வைப்பார். ஐம்பதாயிரத்திற்கு உட்பட்ட சிறியதொகை சீட்டுகளுக்கு, இனிப்பு
மிக்சர் காபியெனவும் ஒரு லட்சம் இரண்டு லட்சரூபாய் சீட்டுகளுக்கு சிக்கன் மட்டன் சாப்பாடு
என்பதாகவும் அந்த விருந்து இருக்கும். அவர் நடத்தும் மாதாந்திர சீட்டுகளையெல்லாம் மாதத்தின்
ஒரே தேதியில் படிக்கிற பழக்கம் அவருக்கு கிடையாது. ஒவ்வொரு சீட்டுக்கும் ஒவ்வொரு தேதியை
நிர்ணயித்திருந்தார். நான் சேர்ந்திருக்கும் சீட்டுக்கு வெறும் மிக்சரும் இனிப்பும்தான்
என்றாலும் எனக்கு மட்டும் பிரத்யேகமாக அன்றிரவு கோழிக்கறி போடுவார். அதற்கு பல காரணங்களைச்
சொல்லலாம். நான் அவரிடம் சீட்டுப் போடுகிறவனாக மட்டுமின்றி கடன்வாங்கி மாதாமாதம் ஒழுங்காக
வட்டி கட்டுகிறவனாகவும் இருந்தேன். மேலும் ஆண்டாண்டு காலமாக கடனிலிருந்து விடுதலையாக
முடியாத அவரின் பரம்பரைக் கடங்காரனாகவும் இருந்தேன். மேலும் அவர் அவ்வப்போது குடிக்கும்
காரியக்குடிக்கு வில்லங்கமெதுவும் பண்ணாமல் நல்ல முறையில் கம்பனி குடுப்பவனாகவும் இருந்தேன்.
சக குடியர்கள் ஏது உளறினும் பொறுமையாக செவிமடுக்கும் பண்பும் எனக்கு இருந்தது. எல்லாவற்றையும்
தாண்டி நாகுவுக்கு என்மீது இயற்கையாகவே ஒரு வாஞ்சை இருந்தது.
ஆடிமாதமொன்றின் முன்னிரவில் நானும்
நாகுவும் அவர் வீட்டின் மொட்டை மாடியில் டம்ளரும் கையுமாக அமர்ந்திருந்தோம். பெளர்ணமிக்கு
சில நாட்கள் முந்தைய நிலவு அண்ணாந்து பார்க்கும் உயரத்திற்கு வந்திருந்தது. வரமிளகாய்களைக்
கிள்ளாமல் முழுது முழுதாகப் போட்டு தயாரித்திருந்த நாட்டுக்கோழி வறுவல் தட்டுகளில்
இருந்தது. திருமதி நாகு கொண்டுவந்து வைத்துவிட்டுப் போயிருந்த அரிசிச்சோறு மூடி வைக்கப்பட்ட
பாத்திரத்தில் இன்னும் திறக்கப்படாமலேயே இருந்தது. குளிரத்தக்க அளவில் மேகாத்தின் வேகம்
இருந்தது. குளிர் தெரியவில்லை. அது தெரியாத அளவுக்கு பானத்தின் வீரியம் இருந்தது.
’அந்த பாட்டப் போட்டுடறா மாப்ளே’ என நாகு கூறினார். ஒரு லெவலுக்கு வந்ததும் பழைய டிஎம்எஸ் பாடல்களாக கேட்பது
வழக்கமானதுதான். அந்த என குறிப்பிட்டதால் எந்த பாட்டைக் கேட்கிறார் என வினவினேன்.
‘அதான்டா மாப்ளே.. நம்ம கண்ணதாசன் மைக்கப் புடிச்சுட்டுப் பாடுவாரே.. ஒரு கோப்பையிலே
என் குடியிருப்புன்னு.. அந்தப் பாட்டப் போட்டுவுடு..’என்றார்.
கைப்பேசியை எடுத்து கீழே வைத்து பாடலை ஒலிக்க விட்டேன். ‘மனுசன்டா மாப்ளே… என்னமா எழுதீருக்காம்
பார்த்தியா? வாழ்க்கைல ஒரு நாள் வாழ்ந்தாலும் அவன மாதிரி வாழோணம்.. நாம வாழறதெல்லாம்
வாழ்க்கையா என்ன? கூறுகெட்டதனமா.. என்னமோ ஆயிரம் வருசத்திக்கி இருக்கப் போறாப்பில தொட்டுத்
தொட்டு நக்கிக்கிட்டு..’
‘கரெக்ட்டுங் மாம்சு.. ஆனா என்ன பண்றது? நம்ம சூழ்நிலைக்கு
நாம இதுக்குமேல ஆடமுடியாதே.. ஏதோ இந்த மாதிரி ஆடுனவங்க பாடுனதக் கேட்டு மனச ஆத்திக்க
வேண்டியதுதான்.’ என்றேன். பாடல் முடிந்து பரமசிவன் கழுத்திலிருந்து எனும்
கண்ணதாசனே மைக்கைப் பிடித்துக்கொண்டு பாடுகிற மற்றொரு பாடல் ஆரம்பமாகியிருந்தது. கருணையும்
இரக்கமும் மிகுந்த வெய்யிலைப் போல நிலவின் ஒளி. மேகப்பொதிகள் யானைகள் ஓடுகின்ற வேகத்தில்
நிலவைக் கடந்து போய்க்கொண்டிருந்தன. ‘நம்மாளு
ஒருத்தரு கிட்டத்தட்ட இதே ரேஞ்சுகுத்தான் வாழ்க்கையை கொண்டாடிட்டு இருக்கறாருபோல..’ என்றேன்.
“நம்ம செட்லயா.. யாருடா மாப்ளெ..
எனக்குத்தெரியாம?”
“உங்களுக்குத் தெரியாம என்ன.. நல்லாத் தெரிஞ்சவருதான் மாம்ஸ்..
உங்ககிட்ட சீட்டுங்கூடப் போட்டுட்டிருக்காரே.. புல்லட்டுக்காரரு.. ஆத்துக்கால் தோட்டம்.”
“யாரு.. அந்த வேலாயுதம்பாளையத்து மாப்ளையச் சொல்றியா? அட
ஆமாம்பா அவன் அந்த மாதிரியான ஆளுதான். ஆனா அதே வேளையாக் குடிச்சிட்டுக் கெடந்தாலும்
வரவுசெலவுல நாணயஸ்தனப்பா.. பொம்பளை விசயத்துலயும் ஸ்ரீ ராமரேதான். கட்டுன சம்சாரத்தத் தவிர வேறொரு பொண்ண கெனாவிலயுங்கூட
நெனைச்சுருக்க மாட்டான். தெரியுமா?”
.
“என்னது..? அவருக்கு கல்யாணம் ஆகீருச்சா..? பொண்ணே கெடைக்காமப்
போனதாலதான் ஆளு மனசொடிஞ்சு இப்படி மாறீட்டாருன்னல்ல நான் நெனைச்சுட்டிருக்கேன்”
“நீ வேற.. அவனுக்கு கல்யாணமாகி பத்து பன்னெண்டு வருசத்துக்கு
மேல ஆகுது. ஒரு பொட்டப் புள்ளையொண்ணுகூட இருக்குது. அநேகமா பெரிய மனுசி
ஆகீருக்கும்னு நெனைக்கறேன்”
“என்ன மாம்சு இப்படிச்சொல்றீங்க.. உங்ககூட வரவுசெலவுல தொடர்புல
இருக்கிற பார்ட்டி. அவரு பொண்ணு
வயசுக்கு வந்தா உங்களுக்குத் தெரியாமப் போயிருமா
என்ன? தெரட்டிச்சீரு மனைவெச்சு தண்ணிவாக்கறதுன்னு கூப்பிட்டிருப்பாரே..” .
“அட இங்க இருந்தா எல்லாவிவரமும்
தெரியும் மாப்ளே.. அவஞ் சம்சாரம் அவிய அய்யனூட்லயல்ல இருக்கிறா.. புள்ளப்பேறுக்காகப்
போனவ. வருசம் பன்னெண்டுக்குமேல ஆச்சு. அப்படியே இருந்துக்கிட்டா. அவம்புள்ளை கருப்பா
செவப்பா தன்னையப்போல இருக்குதா இல்ல சம்சாரத்தப்போல இருக்குதா வயசுக்கு வந்துருச்சா
இல்லை இன்னும் வர்லியாங்கிற வெவரமெல்லாம் அவனுக்கே
தெரியாது. இந்த லட்சணத்துல எனக்கெப்படி மாப்ளே தெரியும்? அது
ஒரு பெரிய கதை. கேனக் கதை மாப்ளே”
.
அன்னவாரியில் சோற்றையள்ளி இருவரது
தட்டுகளிலும் போட்டேன். நாகு குழம்பை ஊற்றினார். சுடுசோற்றில் கோழிக்குழம்பை பிசைந்து
சாப்பிடுவதைக் காட்டிலும் அந்த கேனக்கதையை அறியும் ஆவல் அதிகமாக இருந்தது. “அந்தக்
கதையைத்தான் சொல்லுங்களேன்”
.
“சொல்றன் மாப்ளே.. இந்தமாதிரி
நேரத்துல அந்தக் கூறுகெட்ட கதையைச் சொன்னா நல்லாத்தான் இருக்கும்னு எனக்கும் தோணுது.
அதுக்கு முன்னால உங்கிட்ட ஒரு கேள்வி. புருசம்பொண்டாட்டிக்குள்ள சண்டை வாரதுக்கு அந்த
சண்டை பெருசாகி நிரந்தரமாப் பிரியறதுக்கு ஆயிரத்தெட்டுக் காரணங்கள் இருக்கலாம். அந்த
ஆயிரத்தெட்டுக் காரணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட காரணம் இது. என்னனு கண்டுபிடி பார்க்கலாம்?”
”கதையைச் சொல்லுங்கன்னா காரணத்தக் கண்டுபிடி மயிரக் கண்டுபிடின்னு..
ஏம்மாம்ஸ் ஆவிய வாங்கறீங்க?”
“ கோவிச்சுக்காத மாப்ளே.. என்னதான் கவுட்டி கவுட்டியா யோசிச்சாலும்
யாராலும் யூகிக்கவே முடியாத காரணம் அது.
பாரதக்கதை கேட்டிருக்கியா? அதுல தர்மரு நடத்துன
பங்சனுக்கு விருந்துக்கு வந்த துரியோதனராசா தண்ணிக்கும் பளிங்குக்கல்லுப் படிக்கட்டுக்கும்
வித்தியாசம் தெரியாம குளத்துக்குள்ள வழுக்கிவிழுந்தான்னும் அதப் பார்த்து மேல்மாடத்துல
சோடிகளோட நின்னுக்கிட்டிருந்த நங்கையாக்காரி பாஞ்சாலி சிரிச்சுப்போட்டான்னும் அந்த
அவமானம் பொறுக்கமுடியாமத்தான் இவன் பகையை வளர்த்துக்கிட்டான்னும்
சொல்வாங்கல்லவா..? அப்படியான பகை இது”
“மாமனாரு வூட்டுக்கு விருந்துக்குப் போனப்ப இவரும் வழுக்கிவிட்டுவுழுந்து
அத இவரோட நங்கையாக்காரி மாடில நின்னுட்டிருந்தது
பார்த்து சிரிச்சுப் போட்டுதாக்கும்”
“நங்கையாக்காரி மட்டும் சிரிக்கல. பொண்டாட்டி சகலை மாமனாரு
ஏன் மாமியாருஞ் சேர்ந்து சிரித்த கதை அது. ஆனா, அவங்க சிரிச்சது இவன் வழுக்கி வுழுந்ததனாலயோ
அதப் பார்த்தோ அல்ல”
“பின்னே?”
“ இவன் புல்லட்டு பைக்க யாருக்கும் தெரியாம ஸ்டார்ட் பண்ண
முயற்சி பண்ணி கீழபோட்டு வுழுந்ததப் பார்த்து”
“என்ன மாம்ஸூ சொல்றீங்க?’
“அட ஆமாம் மாப்ளே.. அப்ப இவனுக்கு கல்யாணம் ஆன புதுசு. தல
தீபாவளிக்கு மாமனாரு வீட்டுக்குப் பொண்டாட்டியோட போயிருக்கான். இவன் கட்டுன பக்கம்
ரெண்டே பொண்ணுகதான். பெரிய பொண்ண சென்னிமலைக்குப் பக்கமா ஏதோவொரு ஊருக்கு கட்டிக் கொடுத்திருக்கிறாங்க.
அந்த பொண்ணோட மாப்ளை வயசானவரு. ரெண்டாந்தாரமாத்தான் கட்டிக் குடுத்திருக்காங்க. அது
கொஞ்சம் இவனவிடவே வசதியான எடம். இப்ப இருக்கிற தோட்டந்தோப்பெல்லாம் இவனுக்கு அப்பவே
இருந்துதுனாலும் பார்த்தா ஒண்ணுக்குமே வழியில்லாத ஏழைக் குடியானவனாட்டத்தான் இருப்பான்.
தண்ணி தவுடு பீடி சிகரெட்டுனு எந்தக் கெட்ட பழக்கமும் கெடையாது. பழைய டிவிஎஸ் பிப்டியொண்ணு
வெச்சுருப்பான். அதுலதான் புருசனும் பொண்டாட்டியும் நோம்பிக்குப் போயிருக்கிறாங்க.
சகலை இவனுக்கு நேர் எதிர். வயசான
ஆளுனாலும் நரைச்ச மீசைக்கு டை அடிச்சுக்கிட்டு மைனருக பண்ணக்கூடிய எல்லாத்தையும் பண்ணக்கூடிய
ஆளு. கருப்புக்கலர் டீசல் புல்லட்லதான் வருவாரு போவாரு. அவரு போற வர்ற கம்பீரத்தப்
பார்த்து இவனுக்கும் புல்லட்டு வண்டிமேல ஆசை வந்துருச்சு. சகலங்கிட்ட வண்டியோட்டப்
பழக்கியுடுனு கேட்டிருக்கான். அவரும் அதுக்கென்ன பேஷா பழகிக்கலாம் அதுக்கு முன்னாடி
வண்டிய ஸ்டார்ட் பண்ணி பழகிக்கோனு சொல்லிக் கொடுத்திருக்காரு. இப்பவெல்லாம் டீசல் புல்லட்டுக
சுவிட்ச்சு அமுத்துனாலே ஸ்டார்ட் ஆகறமாதிரி வந்துருச்சு. ஆனா அன்னிக்கெல்லாம் கிக்கரை
ஒதைச்சுத்தான் ஸ்டார்ட் பண்ணனும். அதுவும் டீசல் புல்லட்ட ஸ்டார்ட் செய்யறுதுங்கிறது
சின்ன வேலையல்ல. அது பல பேரால முடியாத காரியமும் கூட.
சகலை எவ்வளவோ பொறுமையா சொல்லிக்
கொடுத்தும் இவனுக்கு நேக்கு புடிபடல. சரி காலைல பார்க்கலாம் இப்போ சோத்தத் தின்னுட்டுப்
படுப்போம்னு ரண்டுபேரும் வந்து படுத்துக்கிட்டாங்க. நைட்டு மூணுமணி வாக்குல ஒண்ணுக்கு
எந்திரிச்சுப் போனவனுக்கு வாசல்ல நின்னுட்டிருந்த புல்லட்டப் பார்த்தவுடனே சபலம் தட்டீருச்சு.
ஒண்ணுக்குப் போறதையுங்கூட மறந்துட்டு புல்லட்ட செண்டர்ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி கிக்கரை
உதைக்க ஆரம்பிச்சிருக்கான். கம்பரசன் லாக்கை
மேலே தூக்கியுட்டுட்டு கிக்கரில் கால் வைத்து மெதுவா கீழே கொண்டுட்டு வரணும் .அப்படி
வரும்போது மேலே தூக்கிவிட்ட லாக் படக்குனு சவுண்டோட கீழே விழும். அப்படி விழுந்தா அதுக்குப்
பிறகு கிக்கரை கீழே அமுத்தக் கூடாது. அப்படியே கிக்கரை மேலே கொண்டாந்து நல்லா தம்கட்டி
ஒரே முதியா அடிவைரைக்கும் கிக்கரை முதிச்சு உட்டோம்னா வண்டி ஸ்டார்ட் ஆகீரும். இதுதான்
பாலபாடம். இதைதான் நம்மாளு ஒண்ணுக்குங்கூட போகாம மீண்டும் மீண்டும் டிரைப் பண்ணிப்
பார்த்துட்டே இருந்துருக்கான்.
கோழிகூப்புட எந்திருச்சுவந்த மாமியாக்காரி
இதைப் பார்த்துருச்சு. அதுமட்டுமில்லாம ஊட்டுக்குள்ளபோயி தூங்கீட்டு இருந்தவங்களையெல்லாம்
எழுப்பியுட்டு கூட்டியாந்தும் வுட்ருச்சு. பளிச்சுனு வாசல்ல லைட்டு எரியுது. பதட்டத்துல
என்ன பண்ணுனான்னு தெரீல. வண்டி கீழே சாஞ்சுருச்சு. பொண்டாட்டியுட்பட எல்லாரும் ஏதோ
பெருங்கொண்ட வேடிக்கையொண்ணை பார்க்கிறாப்புல பார்த்துகிட்டு கூட்டமா நிக்கறாங்க. ‘என்னுங்
சகலே.. என்ன பண்ணியும் வண்டி ஸ்டார்ட்டே ஆக மாண்டீங்குதேனு’ நம்மாளு அப்பாவியா கேட்ருக்கான்.
‘என்ன பண்ணுனாலும் ஸ்டார்ட் ஆகாது சகலே.. ஏன்னா வண்டிக்கு
மொதல்ல சாவி போடோணம்னு’ அந்தாளு சோப்புக்குள்ளயிருந்து சாவியெடுத்துக் காட்டீருக்கான்.
எல்லாரும் சிரிசிரின்னு சிரிச்சுருக்கிறாங்க. அதோட நிறுத்தியிருந்தாக்கூட பரவாயில்லை.
சகலன் சாவியக் கொண்டாந்து வண்டிய தூக்கி நிறுத்தி ஒரே ஒதையில ஸ்டார்ட் செஞ்சு காட்டி
ஆப் பண்ணுன பிறகு சொன்னதுதான், அதக் கேட்டு மாமனாரு மாமியாரு பொண்டாட்டி நாங்கையான்னு
எல்லாம் கெக்கெக்னு சிரிச்சதுதான் இவனுக்கு மூக்கச் சொறிஞ்சுவுட்டமாதிரி ஆகிப்போச்சு.
அந்த நிமிசமே புல்லட்ட ஓங்கி ஒதைச்சு மறுபடியும் கீழ தள்ளிப்போட்டு மொபட்டை எடுத்துக்கிட்டு
வந்தவன்தான். அதுக்குப் பிறகு அந்தப் பக்கம் எட்டியே பார்க்கலை. அன்னிக்கு உண்டான கோவம்
இன்னும் அடங்கவேயில்லை”
கதையைச் சொல்லிமுடித்த நாகு சொல்லும்
சுவராசியத்தில் அருந்த மறந்திருந்த மதுவை ஒரே தம்மில் காலி செய்துவிட்டு டம்ளரைக் கீழே
வைத்தார். தின்ன மறந்திருந்த சோற்றை குழம்பைப் பிசைந்து சாப்பிடத் துவங்கினார். தேவையான
இடங்களில் அவர் சொல்வதை ஆமோதிப்பதுபோலவும் செவிமடுப்பதுபோலும் தலையாட்டியபடியே உணவை
உண்டு முடித்திருந்தேன். கைகழுவிய தட்டை ஓரமாக
நகர்த்தி வைத்துவிட்டு லுங்கி வேட்டியில் ஈரக்கையைத் துடைத்துக்கொண்டு சிகரெட்டைப்
பற்ற வைத்தேன். “ என்ன இருந்தாலும்
விளையாட்டுக்குத்தான்னாலும் சகலன் அப்படிச் சொல்லீருக்கக் கூடாது. அதக் கேட்டுட்டு
மொத்தக் குடும்பமும் அப்படிச் சிரிச்சிருக்கக் கூடாது” என்றார்.
“அவுரு என்ன சொன்னாருன்னு நீங்க
இன்னும் சொல்லவேயில்லையே..”
“ஓ..பேச்சு சுவராசியத்துல அதைச் சொல்லாமயே விட்டுட்டனா..?
அந்தாளு வண்டிய ஸ்டார்ட் பண்ணிக் காட்டி ஆப் பண்ணுனதுக்கு அப்பறம் என்ன சொல்லீருக்கான்னா..
அதையும் இவங்கிட்டச் சொல்லல.. இவஞ் சம்சாரத்தப் பார்த்து சொல்லீருக்கான். ‘இப்படியொரு
சாமார்த்தியசாலியக் கட்டுனதுக்கு நீ பேசாம எனக்கே மூணாந்தாரமா வாக்கப்பட்டிருக்கலாம்
சாந்தாமணி..’ ன்னு சொல்லீருக்கான்.அதக் கேட்டு மாமியாக்காரியிலிருந்து
எல்லாருமே விழுந்து விழுந்து சிரிச்சதுதான் இவனுக்குப் பொறுக்கல..”
“அதுவும் வெடிஞ்சும் வெடியாத வெடியக் காத்தால பல்லுங்கூட
வெளக்காத ஊத்தவாயை வெச்சுக்கிட்டு..”
“கரெக்டாச் சொன்னே மாப்ளே..”
“இது உண்மையாவே யாரா இருந்தாலும் கோவப்படுற சிச்சுவேஷந்தான்.
ஆனா வருசக்கணக்கா அந்தக் கோவம் தீரலீங்கிறதுதான் ஆச்சர்யமா இருக்கு”
“அதையேங் கேக்கறே மாப்ளே.. அதுக்குப் பிறகு அங்கிருந்து யாராரோ
நாயத்துக்கு வந்தாங்க. மாமனாரு மாமியாரு சகலையெல்லாம் வந்து கால்லவுழுகாத குறையா கெஞ்சியும்
இவன் மனசு மாறலை. இந்த மாதிரி
வேடிக்கைக்காக யாரும் பேசறதுதான். இதையெல்லாம் பெருசா எடுத்துக்காம போய் பொண்டாட்டியை
கூட்டியாந்து பொழைக்கற வழியப் பாருன்னு நாங்களும்கூட
சொல்லிப் பார்த்தோம். ஒரே பிடிவாதமா ஆகவே ஆகாதுன்னுட்டான். புள்ளை பொறந்ததக்கூட போய்
பார்க்கலை. தெரியாமப்போயி பேத்தியைப் பார்த்துட்டு
வந்துட்டாங்கிறது தெரிஞ்சதும் இவனோட அம்மாவை வூட்டவிட்டே முடுக்கியுட்டுட்டான். அது
பாவம் ஊருக்குள்ள சும்மா கெடக்குற பங்காளி வீடொண்ணுல இருந்துக்கிட்டு நூறுநாள் வேலைக்குப்போயி
கஞ்சி குடுச்சிட்டிருக்கு. இவன் தேங்கா வருமானதையெல்லாம் குடிக்கிறது கோழி வறுக்கிறதுனு
செலவு பண்ணிகிட்டு ஏகபோகமா பொழுதோட்டீட்டு இருக்கான்”
“ பார்த்தா நல்ல டைப்பாத்தான் தெரியிறாரு. ஆனா புத்திக்கூறுதான்
போதாமப் போயிருச்சுபோல”
“அதே வேளையாக் குடிச்சாலும் இன்னிக்கும் வெளியாளுகளுக்கு
நல்ல மனுசந்தான். குடும்பத்துக்கும் அம்மாளுக்குந்தான் ஆகாதவனாப் போயிட்டான். ஆமக்கறி
செய்யறவங்க ஓட்டுலயிருந்து ஒடம்பப் பிரிக்கறதுக்காக பெரிய பாத்திரத்தில தண்ணியூத்தி
ஆமைகளையெல்லாம் அதுக்குள்ள போட்டு பாத்திரத்தை அடுப்புல வெச்சுருவாங்களாம். சில்லுனு
இருக்கற தண்ணி லேசா இளஞ்சூடா ஆகையில ஆமைக எல்லாம் உற்சாகமாகி சந்தோசமா நீந்த ஆரம்பிச்சிருமாம்.
தண்ணி கொதிக்க ஆரம்பிச்சதும் உண்டாகிற துன்பமும் வேதனையும் ரொம்பக் கொடுமையானதுதான்னாலும்
தண்ணி இளஞ்சூடா இருக்கிற கொஞ்ச நேரத்தையும் அப்படி மெய்மறந்து அனுபவிக்குமாம். நாளைக்கு
என்ன கதிக்கு ஆளாகப் போறானோ. ஆனா இன்னிய தேதிக்கு நம்மாளு இளவெந்நீர்ல நீந்தற ஆமையாட்டம்
லைப்ப செமையா என்ஜாய் பண்ணீட்டிருக்கான். ஒரு நாளைக்கு உங்க ரெண்டுபேரையும் அறிமுகப் படுத்தி வைக்கிறேன்
மாப்ளே. பழகீட்டான்னு வெய்யி.. உசுரையும் கொடுப்பான். சரக்குக்கீது போடோணம்னு தோணுச்சுனா
அவன் தோட்டத்துக்குப் போயிட்டீனாப் போதும். அஞ்சு பைசாங்கூட செலவில்லாம கோழி காடை கவுதாரின்னு
ஏதாவதொரு சைடு டிஷ்ஷோட வெளுத்துக் கட்டீட்டு வந்துருலாம்.”
அதன்பிறகு ரங்குவைப் பார்க்க நேரும்போதெல்லாம்
என் மனதுக்குள்ளிருந்த கற்பனைப் பாத்திரத்தின் இளஞ்சூடான நீரில் ஆமைகள் நீந்திக் களிக்கத்
துவங்கின. சாவதற்கு… சற்றுநேரத்திற்கு முந்தைய ஆமைகள்.
இப்போதெல்லாம் பரஸ்பரம் ஒரு பரிச்சிய
புன்னகையை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு எங்களின் நட்பு மேம்பட்டிருந்தது. சில நாட்களுக்குமுன்
ஆயில் மாற்றுவதற்காக பைக்கை மெக்கானிக்ஷாப்புக்கு கொண்டுபோயிருந்தபோது ரங்குவும் அங்கே
இருந்தார். எங்களின் பரஸ்பர புன்னகை உரையாடல்
எனும் அடுத்த கட்டத்துக்கு மிக இயல்பாக நகர்ந்தது. ஹெட்லைட் பல்ப் ப்யூஸ் போய்விட்டதாகவும்
மாற்ற வந்திருப்பதாகவும் கூறினார். வேலையை முடித்துக்கொண்டு தோட்டத்திற்குப் போய்ச்சேர்ந்த
பிறகுதான் ஆரம்பிப்பாரோ என்னவோ. ஆச்சர்யமாக ரங்குவின் கண்களில் போதையின் கிறக்கம் இல்லை.நான்
ஆயில் மாற்றும்பொருட்டு வந்திருப்பதாகக் கூறினேன்.
கிளம்பிச் செல்கையில் அந்தப் பக்கமா
நாச்சிக்குட்டி வீட்டுக்குகீது வந்தீங்னா ஒரு நாளைக்கு நம்ம தோட்டத்துக்கும் வாங்க
என்றார். இளஞ்சூடான நீரில் ஒத்தடம் குடுத்ததைப்
போல இருந்தது. கண்டிப்பா வாரனுங்கண்ணா என்றேன். இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டிய
முக்கியமான விசயம் ரங்கு டீசல்புல்லட்டை ஸ்டார்ட்
செய்த ஸ்டைல்தான். இடுப்புயரத்திற்கு நின்றிருந்த அந்த கருப்புவண்ண இரும்புக்குதிரையின்
மேல் லாவகமாக ஏறியமர்ந்தவர் அமர்ந்த நிலையிலிருந்து சற்றே மேலெழும்பி இடதுகாலை அழுந்த தரையூன்றி நின்றநிலையில்நின்று வலதுகாலால்
கிக்கரை ஒரே மிதியாக மிதித்தார். அது ப்டப்.. ப்டப்.. ப்டப்..ப்டப்.. எனும் சப்தமெழுப்பியபடி
புகையைக் கக்கிக்கொண்டு உறுமத் துவங்கிற்று. சொல்லுவதை சொல்லுவதற்கு முன்னரே கேட்டு
நடக்கும் வளர்ப்புப் பிராணியைப் போல.
வண்டி ஸ்டார்ட் ஆனதும் கியரை மாற்றி
கிளம்புவார் என எதிர்பார்த்தேன். கிளம்பவில்லை. மாறாக ஒர்க்ஷாப்பை ஒட்டியபடியே மேபுறமாக
இருக்கும் சந்தினைப் பார்த்தவாறே விட்டுவிட்டு ஹாரன் அடிக்கத் துவங்கினார். அந்த சந்துக்குள்தான்
ஒர்க்ஷாப் செயல்படும் கட்டிடத்தின் உரிமையாளர் வீடு இருந்தது. சற்று நேரத்தில் கட்டிட
உரிமையாளரின் மனைவியும் மற்றொரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்ணும் வெளிப்பட்டனர்.
நெற்றியில் நாலணா அளவிலான குங்குமத்தையும் நடுவகிடு அருகே நான்கைந்து வெண்முடிகளையும்
கொண்டிருந்த அந்தப் பெண் கட்டிடக்கார அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு வந்து ரங்குவின்
பின்பக்கம் அமர, கியரை மற்றிக்கொண்ட புல்லட் நகரத் துவங்கியது.
வீட்டுக்கு வந்ததும் நாகுவுக்குப்
போன்செய்து விசயத்தைக் கூறினேன். ‘ஆமாம் மாப்ளே.. அது அவன் சம்சாரம்தான். குடும்பம் ஒண்ணுசேர்ந்து ரண்டு வாராமாட்ட ஆகுது.
நல்ல புத்திவந்து குடிக்கிறதையெல்லாம் வுட்டுட்டு, பொண்டாட்டி புள்ளை அம்மான்னு பொட்டாட்ட
இருக்கிறான். வீடு மராமரத்து வேலைகூட நடந்துட்டிருக்குது’ என்றார். என்ன காரணம்? எனும் கேள்வி உண்டானது. ஆனாலும், கேட்கவில்லை. இப்படியாகக்
கூறிவிட்டு போனை வைத்தேன்.
‘அருமைங்க மாம்ஸ்… மிக்க சந்தோசம்.
நல்லா இருக்கட்டும்’
2 comments:
Wonderful narration
thanks
Post a Comment