தட்டி எழுப்பியதுபோல் சரியான நேரத்திற்கு
விழித்துக் கொண்டிருந்தேன். மணி ஐந்தை நெருங்கியபடியிருந்தது. ஒன்றுக்கொன்று தேய்த்து
சூடாக்கிய உள்ளங்கைகளால் முகத்தைத் துடைத்த வண்ணம் எழுந்து உட்கார்ந்தேன். நிலைப்படியில்
தலைவைத்து அம்மா படுத்திருந்த இடம் காலியாக இருந்தது. சாயுங்கால சூரியஒளி வெண்டிலேட்டரின்
வழியே கசிந்து , பொன்கம்பிகளாய் எதிர்சுவரில் பதிந்திருந்தது. வெளியே விளையாடிக் கொண்டிருந்தவர்களின்
உற்சாகமான கத்தல்கள், சற்றுநேரத்திற்கொருமுறையேன காதுகளில் விழுந்தது.
எட்டி மேஜையின் மேலிருந்த அலைபேசியை
எடுத்தேன். தவறிய அழைப்பாக கதிரின் பெயர் பதிவாகியிருந்தது. மூன்று பதினைந்துக்கு கூப்பிட்டுள்ளான்.
இனி விடுமுறை நாளானதும் சேவல்களைத் பிடித்துக்கொண்டு கட்டுக்காடுகளைத் தேடி ஓடுவதை
நிறுத்திக் கொள்ளவேண்டும்.வாரம் ஒருமுறைதான் என்றபோதிலும் மது அருந்துவதையும் தவிர்த்துவிடவேண்டும்
என நினைத்துக் கொண்டேன்.
சில மணிநேரம் ஆழ்ந்து உறங்கியதன்
காரணமாய் பார்வை குளிர்ந்திருந்தது. கண்களின் பள்ளங்கள் மேவி, கன்னங்கள் உப்பி பூரித்திருப்பதுபோல்
உணர்ந்தேன். குளித்து, பவுடர் பூசியதும் ,முகம்
பொலிவுகூடி, தன் பிராயத்தில் சில வருடங்கள் குறைந்ததுவாய் இளமையுறும் என தோன்றியது.
கருப்புசாமியுடன் அவ்வீட்டிற்குப்போக பெண் உட்பட அவ்வீட்டார் அனைவருமே இன்றைய என் முகத்தின்
ஒளிர்வில் வசீகரிக்கப் பட்டுவிடுவார்கள் என நினைத்துக் கொண்டேன்.
குளியல் முடிந்து பேண்ட் சட்டை
தரித்து வெளியே வந்தவன் கதவுசாத்தி நாதாங்கியை மாட்டினேன். வாசல்படிக்கு பக்கவாட்டில்
சுவரோரமாக என் மோட்டார்சைக்கிள் நிறுத்தப் பட்டிருந்தது. ஒன்றையொன்று பார்த்துக்கொள்ளும் கதவுகளுடன் இருபுறமும்
வீடுகளிருக்க, நடுவே நீண்டபடிபோகும் அந்த உள்வாசலில் பைக்கை பின்னோக்கி உருட்டியவாறே
தெருவாசலுக்கு கொண்டு வந்தேன். வேப்பமரத்தடியில்
அம்மாவும் மற்ற குடித்தன பெண்கள் சிலரும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். பனியன் வேஸ்ட்
துண்டுத் துணியில் நூல் பிரித்தபடியிருந்த அம்மாவிடம், கதவுக்கு வெறுமனே நாதாங்கியை
மட்டும் வைத்திருப்பதாகச் சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.
எதிரில் அமர்ந்திருந்தவரிடம் பேசிகொண்டிருந்த
கருப்பசாமி என்னைக் கண்டதும் வரவேற்றார். ” வாங்க தம்பி.. வாங்க.. கொஞ்ச நேரங்கழிச்சு
நானே கூப்பிடலாம்னு இருந்தேன் . நீங்களே வந்துட்டீங்க” என்றார். சுவரோரமாய் இருந்த
நாற்காலியைக் காட்டி உட்காரும்படி கூறினார். மேஜையின்மேல் விரித்து வைக்கப்பட்ட நிலையில்
ஜாதகம் ஒன்றும், வெள்ளைதாளும் பஞ்சாங்கமும் பேனாவும் இருந்தன. வெள்ளைத்தாளின் மேல்முகத்தில்
குருவே துணை என்றும் அதற்குக் கீழே சில கணக்குகளும் எழுதப்பட்டிருந்தது.
எதிரமர்ந்திருக்கும் அம்மனிதரின்
முகக் குறிப்பிலிருந்து என் வருகையின் தொந்தரவை உணர முடிந்தது. “இருக்கட்டும்ங்ண்ணா..
நீங்க பாருங்க.. நா அப்புறமா வர்றேன்” என சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
சூரியன் மறைந்திருந்தது. கதிர்களற்ற
அந்தியின் வெளிச்சத்தில் தெருக் காட்சிகள் ரம்மியம் பூண்டிருந்தது. வீடுகளின்முன் நீர்தெளித்துக்
கோலம் போட்டிருந்தனர். ஜோதிட நிலையத்தையொட்டியே இடமும் வலமுமாக டீக்கடையொன்றும் சிறு
மளிகைக் கடையும் இருந்தது. மளிகைக் கடையின் முன்புறமாய் வடகிழக்கில் வேப்பங்கொம்பு
வளர்ந்திருந்தது. வேரிலிருந்து மூன்றடி உயரத்துக்கு மேலே மரத்தின் தண்டுப்பகுதியில்
, சூலாயுதம் ஒன்றைப் பதித்திருந்தனர். சிவப்புப்பட்டு சுற்றப்பட்டு சந்தனமும் குங்குமமும்
வைக்கப்பட்டிருந்தது.
கடைக்கு அடுத்துள்ள வீட்டின் நடைதிறந்து
ஒரு அம்மாள் வெளிப்பட்டாள். எண்ணைப்பாட்டில் ஊதுபத்தி பஞ்சுத்திரி தீப்பெட்டி முதலியன
அவள் கைகளில் இருந்தது. தேநீரை அருந்தி முடித்திருந்த நான் சிகரெட்டை பற்றவைத்துக்
கொண்டேன். வெளிச்சம் குறைந்து கொண்டிருந்தது. வீடுகளின் ஜன்னல்கள் ஒளியுறத் துவங்கின.
நான் பார்த்த கண்மும் ஒரு ஜன்னல் வெளிச்சம்பெறத் துவங்கிய கணமும் மிகச்சரியாக ஒத்துப்போக
இரவு விழித்துக் கொண்டதாய்ப்பட்டது.
வேப்பமரத்தின் அடியில் கூண்டுபோன்ற
வடிவத்தில் சிறுசதுர வாய்கொண்ட விளக்குக்கூடம் வைக்கப் பட்டிருந்தது. அடுக்கப்பட்டிருந்த
உப்பு மூட்டைகளின் நிழல், மரத்தின் அடிப்பகுதியெங்கும் அந்த விளக்குமாடத்தின்மீதும்
அடர்த்தியாய்க் கவிந்திருந்தது. கவிந்த அடர்நிழல், வாழ்வின் புதிரான நிச்சயமற்ற தன்மையை
எதிர்கொள்ளுதல் குறித்தான மனித மனதுள் உண்டாகும் பயம் எனவும், மாடத்தினுள் ஒளிர்ந்தபடியிருக்கும்
அகலின் சுடர் , பயத்திலிருந்து மனதை விடுவித்து வழிநடத்தி அழைத்துச் செல்லும் நம்பிக்கையின்
ஒற்றை விரல் எனவும் தோன்றிற்று.
புகைத்து முடித்திருந்தேன் ஜோதிடநிலையத்தின்
முன்பகக்ம் போடப் பட்டிருக்கும் நீள மரப்பெஞ்சில் வந்தமர்ந்தேன். உள்ளே நடைபெற்றவண்னமிருந்த
உரையாடல்கள் செவிகளில் விழுந்தது.
“சரி.. வேற ஏதாச்சும் சந்தேகம்
இருந்தாக் கேளுங்க..?’
“வேற என்ன.. கறவைமாட்டு லோனு பயிர்
லோனுனு நிறைய வாங்கி வெச்சுருக்கேன். போனதடவை எலக்சன் சமயத்துல பூராக் கடனையும் தள்ளுபடி
செஞ்சாங்க. இப்பவும் தள்ளுபடி உண்டுனு பேசிக்கிறாங்க. இன்னும் நாலு மாசத்துல எலக்சன்
வரப்போகுது.. ஜாதகப்படி நமக்கு சர்க்காரு சகாயம் கெடைக்க வாய்ப்பிருக்குதுங்ளா?”
அவ்விடத்தின் நிலக்காட்சிகளை கண்ணுற்றபடி
அமர்ந்திருந்தேன். கடன், தள்ளுபடி என்ற வார்த்தைகள் கவனத்தை உள்ளே திருப்பியது. அரசாங்க
சலுகைகள் பெற்றுவிடப் போகும் ஆவலுடன் அந்த மனிதர் ஜோதிடரின் முகத்தையே பார்த்தபடியிருந்தார்.
கருப்புசாமியின் பேனா மும்முரமாய் கணக்குகளைப்
போட்டபடியிருந்தது. தலையைத் திருப்பிக் கொண்டேன்.
இருள் முற்றியிருந்தது. என் கடந்தகாலம்
இருளேபோல மனமெங்கும் கவியத் துவங்கிற்று.
பூர்வீகமாய் கொஞ்சம் நிலம் இருந்தது.
கிணறுகள் அற்ற வெறும் காடு. ஆடுகளை மேய்த்தும் மாடுகளை வளர்த்தும் அப்பா ஜீவித்தார்.
பருவமழைக் காலத்தில் மஞ்சட்சோளம் கொள்ளு நரிப்பயிறுகளை விதைத்து தீவனம் செய்து கொண்டிருந்தார்.
அப்பாரய்யனின் காலத்தில் மானாவாரிப் பயிர்கள் விளைந்த புன்செய் நிலங்கள் பலவும் , கிண்று
கண்டு, தண்ணீர் கண்டு , பம்புசெட் மோட்டார் கண்டு, முப்போகம் விளையும் நன்செய் பூமிகளாய்
அப்பாவின் காலத்தில் மாறியிருந்தது. மேலும் பல காடுகள் மாறிக்கொண்டும் இருந்தது.
நான் வளரிளஞ்சிறுவனாய் பள்ளிக்கூடம்
போய்க்கொண்டிருந்தேன்.எங்களுடைய காடும் தோட்டமாக மாறவேன்டுமென்பதே , என் அன்றைய கனவாகவும்
ஆசையாகவும் இருந்தது. விடுமுறை நாட்களில் ஆடுகளிடமிருந்து
பிரித்த குட்டிகளை மேய்த்தபடியே , நானும் அக்காவும் வேப்பமர நிழலில் கிணறுவெட்டி குண்டுமணிக்கொடியில்
கரண்ட் இழுத்து மோட்டார் வைத்து , எங்கள் தோட்டத்தின் சின்னஞ்சிறு பாத்திகளுக்கு நீர்பாய்ச்சி
விளையாடுவோம்.விளையாடிய அவ்விளையாட்டுகள் கனவுக்கு மேலும் ஈரம் சேர்த்தது.
ஒருநாள், குட்டிகளை விற்றுக் கிடத்த
பணத்துக்கு நகை வாங்குவதா.. அல்லது வேறு ஏதேனும் செய்யலாமா என அப்பாவும் அம்மாவும்
பேசிக் கொண்டிருந்தனர். நான் யோசனை கூறினேன்.
“அப்பா.. நாமளும் ஒரு கிணறு வெட்டலாமப்பா..”
“ம்.. வெட்டலாம். அக்கா கல்யாணம் முடியட்டும் . பிறகு வெட்டலாம்.”
“அக்கா இன்னும் சின்னப் புள்ளதானே.. முதலில் கிணறு வெட்டலாம்.
வெள்ளாமை எடுத்துச் சம்பாதிச்சு பிறகு அக்காவை நல்ல மாப்பிள்ளையாய்ப் பார்த்து நிறைய
நகைபோட்டு கட்டிக் குடுக்கலாம்.”
பெருமை பொங்க அப்பா என்னைப் பார்த்தார்.
“பழமை பெரிய மனுசனாட்டத்தான் பேசறே..
நாளைக்குப் பொழைக்கறதும் என்னைப் போலில்லாம பெரிய மனுசனாப் பொழச்சீனா சந்தோசந்தான்.”
கால்வயிற்றுக் கஞ்சி குடித்தாலும்
கடன் வாங்காது குடிக்கவேண்டுமென்பது அப்பாவின் கொள்கையாகவே இருந்தது. ஆடுமாடுகளின்
மூலம் கிடைத்த வருமானத்தில் குடும்பம் நடத்தி, மிச்சம் பிடித்து, சேர்த்துவைத்து அக்காவுக்குத்
திருமணமும் பண்ணினார். கிணறு வெட்ட வேண்டும் என்னும் என் கனவு நிறைவேற நீண்ட காலம்
ஆகுமெனத் தோன்றியது.
கல்லூரியில் படிக்குமளவுக்கு சிறப்பான மதிப்பெண் தகுதியோ , பொருளாதாரத்
தகுதியோ இல்லாததன் காரணமாய், பனியன் கம்பனிக்கு பஸ் ஏறினேன். சம்பாதனையைச் சேமித்தேன்.
அப்பாவின் வருமானம் குடும்பத்தைப் பேணியது. கிணறும் தோட்டமுமான என் தீரா நெடுங்கனவு
சீக்கிரமே நிறைவேறிவிடும் என தோன்றியது.
வாழ்வு ஒரு தடைதாண்டும் ஓட்டம்.
அதுவும் கண்ணைக் கட்டிக்கொண்டு ஓடவேண்டும். ஒருநாள் ஒருபொழுதில் தடுக்கிவிழுந்த அப்பாவைப்
பக்கவாதம் முடக்கியது. பட்டி ஆடுகளையெல்லாம்விற்று வைத்தியம் பார்த்தோம். காலம் குட்டிகளையும்விற்று
ஈமக்கிரியைகள் செய்ய வைத்தது
அம்மாவும் நானுமேயான குடும்பத்தில்
நான் பண்ணாட்டுக்கு வந்திருந்தேன். கையில் ஐம்பதாயிரம் இருந்தது. இருபதுமுழம் கிணறுவெட்ட
பேசி விட்டேன். பதினெட்டாவது முழத்தில் கிணறு தண்ணீரைக் கண்டது. இனி சாமிக்கு நீர்வார்த்துவிட்டுத்தான்
மேற்கொண்டு வெட்டவேண்டுமென போயமார்கள் சென்றுவிட்டிருந்தனர். சூரியன் உச்சியில் ஒளிர்ந்த்துகொண்டிருந்த
அவ்வொளி மதியத்தில் கயிறுகட்டி கிணற்றுக்குள் இறங்கினேன். ஈரம்பூசிக் கொண்டிருந்த பக்கச்
சுவர்கள் கனிந்து மினுங்க, வடிந்திருந்த நீர் வெட்டுக் குழியில் தேங்கியிருந்தது. உறங்கும்
குழந்தையென அசைவற்றிருந்த அச்சின்னஞ்சிறு நீர்த் தேக்கத்தை , தொடவும் மனமற்று காலமும்
பொழுதும் மறந்தவனாய் பார்த்தபடியேயிருந்தேன்.
கிணற்றில் தண்ணீர் ஆன செய்தியை
அக்காவுக்கு தெரியப் படுத்தியிருந்தோம். எவர்சில்வர் குடமும் பொங்கல்பானையும் புதுசாக
வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். உள்ளூரிலும் முக்கியப் பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.
எவர்சில்வர்குடம் நிறைய கிணற்றுநீர் நிரப்பிக் கொண்டுபோய் குல தெய்வத்தைக் குளிப்பாட்டினோம்.
அபிஷேக ஆராதனைகள் செய்து பொங்கலும் வைக்கப் பட்டது. பொங்கல் பொங்கி வடக்கே விழுந்தது.
‘வடக்க வுழுந்தா வரவும்பாங்க.. இனி உன் மகன் கொள்ளை கொள்ளையா சம்பாதிப்பான் பாரு’
என்று வந்திருந்தவர்கள் கூற, என் அம்மாவின் கண்கள் பெரிதுவந்து மினுங்கியது.
முதலில் பேசிவிட்ட அளவுக்கு கிணறு
இருபது முழமும் வெட்டப் பட்டிருந்தது. விவசாயம் செய்யுமளவுக்கு தண்ணீர் வேண்டுமானால்
இன்னும் இருபது முழமாவது வெட்ட வேண்டும் என்றனர். நாற்பதுமுழம் வெட்டி சைடுபோரும் நிலப்போரும்
ஓட்டிவிட்டால் எந்த வறட்சிக்கும் இரண்டு ஏக்கர் பாய்க்கலாம் எனத் தோன்றியது. கையிருப்பு
கரைந்திருந்தது. மேற்கொண்டு பணத்துக்கு என்ன செய்வதென யோசித்து வங்கிகளை நாடினேன்.
பாட்டன் முப்பாட்டன் காலம்முதல்
அப்பாவின் காலம் வரை, எவர் கைக்கும் போகாது பத்திரமாயிருந்த நிலத்தின் பத்திரங்களைக்
கொண்டுபோய், நிலவளவங்கியில் வைத்து அடமானப் பத்திரத்தில் கையெழுத்திட்டேன். நாலு தவணைகளில்
எடுத்துக் கொள்ளும் வண்ணம் மொத்தம் இரண்டு லட்ச ரூபாய்க்கு காசோலைகள் வந்தது.
முதல் ஆறு மாதத்திற்கு வட்டியை
மட்டும் கட்ட வேண்டும். பிறகு வரும் ஒவ்வொரு
வருடத்திற்கும் அசலையும் சேர்த்து, வருடத்திற்கு நாற்பத்திஐயாயிரமென ஏழு வருடங்களுக்குச்
செலுத்தி கடனை அடைக்கத் திட்டம் தந்தனர். அதுசமயம் பக்கத்துத் தோட்டத்தில் பங்காளி
ஒருவர் முப்பதே செண்ட் பரப்பில் தக்காளி நடவிட்டு, விலையும் வெள்ளாமையும் ஒத்துக்கொள்ள
ஐம்பதே நாளில் ஒரு லட்சம் கண்டிருந்தார். ஏழு வருடங்கள் என்னத்துக்கு.. இரண்டே வருடங்களில்
முழுக் கடனையும் அடைத்து, பத்திர்த்தை மீட்டுவிடலாம் எனும் நம்பிக்கையுடன் வங்கியிலிருந்து
வெளிப்பட்டேன்.
கிணற்றை நாற்பது முழம் வெட்டினேன்.
நிலப்போரும் சைடு போரும் ஓட்டினேன். மின் இணைப்பு பெறப்பட்டு மோட்டாரும் வைக்கப்பட்டது.
மேட்டுப் பகுதியாயிருந்த தெற்கு மேற்கு மூலைக்கெல்லாம் தண்ணீரைக் கொண்டு செல்ல, பை
லைனும் போட வேண்டியிருந்தது. எல்லாமும் பண்னி சாவகாசமாய்க் கணக்குப் பார்த்தேன். வங்கியில்போக
வெளியே உறவு முறை வகையிலும் ஐம்பதாயிரத்துக்குமேல் கடன் உண்டாகியிருந்தது.
முதல் வெள்ளாமையாய் அடைபயிறு போடுவதுதான்
முறை என பெரியவர்கள் கூறினர். சாலை அய்யனிடம்போக
பொன்னேர்பூட்ட உகந்த நாளை குறித்துக் கொடுத்தார்.
கம்பை வாங்கிவந்து காடெல்லாம் விதைத்தேன். காலங்காலமாய் பட்டி காத்துக் கிடந்த
காடு என்பதால், விதைகள் முளைத்து பயிர் சிலிர்த்துக்கொண்டு நின்றது. குளிர்ச்சியும்
பசுமையுமாய் தாள்கள் நீள, பச்சைக் கடலெனவும், கம்பளமெனவும் காற்றில் அலையாடியது.
அது பெரிய வெங்காயத்திற்கான பட்டமாக
இருந்தது. எல்லா தோட்டங்களிலும் வெங்காயம் நடவிட்டிருந்தனர். நிலவிய தட்பவெப்பம் வெள்ளாமைக்கு
ஒத்துப் போனது. கர்நாடகா ஆந்திர மாநிலப் பயிர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுவிட்டதாக
செய்திகள் வந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய வெக்காயம் இங்கே காட்டுக்குள்ளேயே
கிலோ பனிரண்டு ரூபாய்வரை விலைபோனது. ஒரு ஏக்கர் நடவிட்டிருந்தவர்கள்கூட முட்டுவழிச்
செலவுபோக ஒன்றரை லட்சம்வரை லாபம் பார்த்திருந்தனர்.
பொழுதுகிளம்பி வேலிக்குமேலே வந்திருந்தது.
புடைகட்டும் தருணத்தில் அறுக்கப்பட்டு அரிஅரியாய் கம்பந்தட்டுகள் பாத்திகளில் கிடந்தது. பனிப்பதம், கட்டுவதற்கு தோதாக
இருந்தது. கத்தைகளாகக்கட்டி குச்சுகளில் எடுத்து நிறுத்தியபடியிருந்தேன். கம்பங்கட்டையில்
எந்த வெள்ளாமையும் நன்றாகவரும் என்பதால் அடுத்து யாது செய்யலாம் என மனம் யோசித்தபடியிருந்தது. செட்டிபாளையத்தைச் சேர்ந்த பெரியகாட்டு முருகேசன்
வந்திருந்தான். கண்ணபுரம் தேருக்கு புடிக்கலாம்போல இரண்டு காளைகள் வளர்ப்பதாகவும்,
அவைகளுக்குப் போட கம்பந்தட்டு வேண்டுமெனவும் கேட்டான். புடைகட்டும் பக்குவத்தில் அறுக்கப்பட்ட
கம்பம்பயிர்கள் காளைகளுக்கு நல்ல திறத்தையும் மேனி மினுமினுப்பையும் தருமென்பதால்
, தேர்க்காட்டில் காளைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று சொன்னான். என்னிடமும் இரண்டு
கன்றுகள் இருந்தது. அவைகளுக்குப்போக மீதியைத் தருவதாக ஒப்புக்கொண்டேன். எங்களின் உரையாடல் மற்ற விசயங்களுக்கு வந்தது.
“இந்த தோட்டம் ஒரு மூணு ஏக்கர்
இருக்குங்களா..?”
“ம்.. கெணறு கட்டுத்தரை சாலையெல்லாம்போக மூணு ஏக்கர் சேரும்”
“ஆமா..எதுக்காக கெணத்து
நெறையத் தண்ணீய வெச்சுக்கிட்டு பூராக்காட்ல்யும் கம்பப் போட்டீங்க..?”
“புதுத் தோட்டம். மொத வெள்ளாமை. அடபயிறு போடறதுதான் நல்லதுனாங்க.
அதான்..”
“அடப் போங்கணா.. சம்பிரதாயத்துக்கு கிணத்தடீல மட்டும் கொஞ்சம்
கம்பு போட்டுட்டு மீதி பூரா வெங்காயத்த நட்ருந்தீங்கனா.. இன்னிக்கு எங்கியோ போயிருப்பீங்க.
அதுவும் உங்குளுது பட்டிகாத்து காரம் ஏறிக் கெடந்த காடு. ஏக்கராவுக்கு இருபதாயிரம்
கிலோ சுத்தமா ஆயிருக்கும். ரண்டு ஏக்கர் வெச்சுருந்தாக்கூட நாப்பதாயிரம் கிலோ எடுத்திருக்கலாம். கிலோ பன்னெண்டு
ரூபாய்னா கணக்குப்போட்டு பாருங்க.. எவ்வளவு ஆயிருக்கும்னு.. வெங்காயம் இனி இந்த வெலைக்கு
எந்தக் காலத்துல விக்கப் போகுதோ.. அப்படியே வித்தாலும் அப்ப நம்ம கெந்த்துல தண்ணி இருக்கோணம்.
வெள்ளாமை ஒத்துக்கோணம். அநியாயமா ஏமாந்திட்டீங்களேண்ணா..”
பேசாமல் வெங்காயம் வைத்திருக்கலாம்
என தோன்றிற்று. நடைமுறை சம்பிரதாயம் என கம்பைப் பயிரிட்டு பெரிய வருமானத்தை இழந்துவிட்டோமே
என ஏமாற்றமாக இருந்தது. இனி காலத்துக்கும் வெள்ளாமை எடுக்கத்தானே போகிறோம் அடுத்த வருடம்
பார்த்துக்கொள்ளலாம் என சமாதானப் படுத்திக் கொண்டேன். காட்டை தயார்செய்து நிலக்கடலையும்
தக்காளியும் பயிரிட்டேன், இரண்டிலும் ஓரளவுக்கு ஆதாயம் கிடைத்தது.
கிடைத்த வருமானத்தில் வங்கிக்கு
செலுத்தவேண்டிய ஆறுமாத வட்டியையும் ஒரே தவணையில் செலுத்தினேன். வெளிக்கடன்களுக்கான
வட்டிகளையும் பைசல் செய்தேன். மீதிப்பணத்தை குடும்பச் செலவிற்கும் அடுத்த போகத்துக்கான
முட்டுவழிச் செலவுக்கும் வைத்துக்கொண்டேன். பெரியவெங்காயப் பட்டத்திற்காக காத்திருந்தேன்.
அந்த வருடத்தில் வழக்கத்துக்கு
அதிகமான பரப்பில் பெல்லாரி வெங்காயம் நடவு விழுந்தது. முந்தைய வருடத்தில் பெரும் லாபம்
கண்டவர்கள் காடுமேடெல்லாம் போர்வெல்போட்டு தண்ணீரைக் கண்டு வெள்ளாமையை உண்டாக்கியிருந்தனர்.
விவசாயமே ஆகாதென தரிசாய்ப் போட்டுவிட்டுச் சென்றிருந்தவர்களும் கூட, திரும்பிவந்து
நிலத்தை சீர்செய்து வெங்காயம் நடவிட்டிருந்தனர். நான் இரண்டு ஏக்கர் நடவுபோட்டிருந்தேன். குறைந்தபட்சம் ஏக்கருக்கு ஒரு லட்சம் கிடைத்தாலும்கூட
, இரண்டு லட்சம் லாபம் பார்த்துவிடலாம் என மனம் கணக்குப் போட்டது.
பயிர்கள் குரம்பை கட்டும் பக்குவத்தில்
இருந்தன. மேகாற்று ஆரம்பித்திருந்தது. கோடைமழை பொய்த்திருந்தது. காற்றுக்காலத்தில்
நீர்மட்டம் குறைந்துவிடும் என முன்பே தெரிந்திருந்தும்கூட, கோடைமழை பெய்யும், சமாளித்துவிடலாம்
என பரவடியாய் நடவிட்டிருந்தவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். போர்வெல் லாரிகள் ஊருக்குள்
வரத்துவங்கின. கனத்த இரும்பு உருளைகள் நிலத்தை துளையிடும் ஓசை ஏதேனுமொரு மூலையிலிருந்து
கேட்டபடியேயிருந்தது.
பக்கத்துத் தோட்டத்திலும் 6 ½
இன்ஞ்ச் போர்வெல் வண்டியை வரவழைத்து ஆழ்குழாய் கிண்று தோண்டினர். குழி அறுநூறு அடி
வரைக்கும் போனது. அதற்குமேல் ஓட்டமுடியாத அளவுக்கு தண்ணீர் பொத்து கொப்பளித்தது. அடுத்த
ஒரே வாரத்தில் என்னுடைய கிணற்றின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. மனம் பதறியது.
ஊரெல்லாம் புகுந்து புறப்பட்ட போர்வெல் லாரி கடைசியாக என் தோட்டத்திற்குள்ளும் நுழைந்தது.
போர்போட்டு கம்பரஸர் மாட்டிய வகையில்
அந்தப் போகத்திற்கு கூடுதலாக எழுபதாயிரம் செலவாகியிருந்தது. அக்கா அவளுடைய நகைகளைக்
கழட்டிக் குடுத்திருந்தாள். கூட்டுறவு வங்கியில் வைத்து பணம் வாங்கி கூடுதல் செலவைச்
சமாளித்திருந்தேன். வெங்காய அறுவடை ஆரம்பித்திருந்தது. வடமாநிலப் பயிர்கள் மழைக்குத்
தப்பிவிட்டதாகவும், காய்வரத்து அதிகமிருப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருந்தன. நல்ல
காய்கள் காட்டுக்குள் கிலோ ஐந்து ரூபாய்வரை விலை போயின.
முட்டுவழிச்செலவுகள் போக என் கையில்
முப்பதாயிரம் எஞ்சியிருந்தது. ஒரு வருடத் தவணைத் தொகை நாற்பத்தி ஐந்தாயிரத்திற்குப்
பதில் வெறும் ஐந்தாயிரம் ரூபாயைக் கொண்டுபோய் வங்கியில் கட்டினேன். அடுத்த போக வெள்ளாமை
எடுத்து நகைகளை மீட்டுத் தருவதாக அக்காவிடம்போய் சொல்லிவிட்டு வந்தேன். உறவு வகையில்
பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக வெளிகடன்களுக்கான வட்டிகளைக் குடுத்து முடித்திருந்தேன்.
வெங்காயப்பணம் முழுவதுமாகக் கரைந்திருந்தது. குடும்பச் செலவு முட்டுவழிச் செலவு என
மேலும் செலவுகள் காத்துக் கொண்டிருந்தது. நானும் புதிய கடன்களை பெறத் துவங்கியிருந்தேன்.
நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமான
மாய விளையாட்டு ஆரம்பமாகத் துவங்கியிருந்தது.
வேளாண் விளைபொருட்களுக்கான விலை நிலையற்றதாகவும் , முன்னரே அறிந்துணரமுடியாத
புதிர்த்தன்மையுடையதாகவும் இருந்தது. ரசாயன உரங்களையும் ம்ருந்துகளையும் பயன்படுத்துவது
அதிகரித்திருந்தது. அதற்கேற்றாற்போல் நோய்களும் , புழு பூச்சிகளின் தாக்குதல்களும்
புதுசுபுதுசாக உண்டாகிக் கொண்டும் இருந்தது. வெள்ளாமை செய்பவர்களே விதைகளையும் உற்பத்தி
செய்துகொள்ளும் வழக்கம் மாறியிருந்தது. பூச்சிமருந்துக்
கம்பனிகளே விதைகளையும் தயாரித்து விதவிதமான பெயர்களையும் சூட்டி விற்பனைக்கு கொண்டுவரத்
துவங்கின. பெரும்பகுதி வருமானம் உரக் கடைகளின் வழியாக அந்தக் கம்ப்னிகளுக்கே போய்ச்
சேர்ந்துகொண்டிருந்தது.
வங்கியிலிருந்து கடிதங்கள் வந்தபடியேயிருந்தது.
தவணைத்தொகை, வட்டி, கட்டத்தவறியதன் காரணமாய்ப் போடப்பட்ட தண்டவட்டி, அபராதவட்டி, ஆகமொத்தம்
நிலுவையிலிருக்கும் கடன் தொகை என பட்டியலிடப்பட்ட பதிவுத் தபால்கள் வந்து பயமுறுத்திற்று.
நடைமுறையிலிருக்கும் சிக்கல்களைத்தாண்டி எடுத்த வருமானம், குடும்பச் செலவிற்கும் ,
தேதியானதும் வந்துநிற்கும் வெளிக் கடன்காரர்களின் வட்டிக்குமே சரியாகப் போய்க்கொண்டிருந்தது.
வங்கி வருடக்கணக்கு முடிவிற்கு வரும் கடைசி மற்றும் அதற்கு முந்தைய மாதங்களில், வங்கி
அதிகாரிகள் காரை எடுத்துக்கொண்டு நேரிலும் வரத் துவங்கினர். இல்லாத பொய்களையெல்லாம்
சொல்லி எப்படியோ சமாளித்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன்.
கண்ணுக்கு தெரியாதவிதமாகவே எல்லாப்
பாதைகளும் அடைக்கப்பட்டு திடீரென பெரும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டதைப்போல தோன்றிற்று.
உரம், பூச்சிமருந்தைப் பயன்படுத்தாமல் ஒரு சோளப்பயிரைக்கூட விளைவிக்க முடியாது என்னும்
நிலமை உண்டாகியிருந்தது. அதுவரைக்கும் ஆறுமாதம்வரை கால அவகாசம் கொடுத்து கடனுக்கு சரக்குகளை
இறக்கிக் கொண்டிருந்த மருந்துக் கம்பனிகள், திடீரென பணத்தைக் கட்டிவிட்டு பிறகு உரம்
மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் என உரக் கடைகளுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தன. அதையே
உரக்கடைக்காரர்களும் விவசாயிகளுக்கு நடைமுறைப்படுத்தினர்.
கிணற்றுப்பாசனம் ஆழ்துளைக் கிணற்றுப்
பாசனமாக மாறிப் போயிருந்தது. கிணறுகள் மழைக்காலங்களில் மட்டும் கிணறுகளாகவும், மற்றைய
காலங்களில் கம்பரஸர் மோட்டார் மூலம் போர்க்குழிகளிலிருந்து எடுக்கப்படும் தண்னீரை தேக்கப்
பயன்படும் தொட்டிகளாகவும் ஆகியிருந்தன. போர்க்குழிகளில் நீர் இருப்பினும் இல்லாவிடினும்
, இலவச மின்சாரம் கம்பரஸர் மோட்டார்களை இருபத்திநான்கு மணி நேரமும் இயங்க வைத்த படியேயிருந்தது. திடீரென ஆழ்துளைக் கிணறுகள் காய்ந்து போவதும், புதிதாகத்
தோண்டப் படுவதும் வாடிக்கையாய் ஆனது. ஒவ்வொரு போகத்திற்கு முன்பும் உழவு ஓட்டவேண்டும்
என்பதைப் போலவே, ஒவ்வொரு கோடையிலும் போர்வெல் போடவேண்டும் என்பதும் வழக்கத்திற்கு வந்திருந்தது.
மழைக்காலம் வெயிற்காலம் காற்றுக்காலமென
பருவங்கள் மாறியபடியேயிருந்தது. என் கஷ்டகாலம் மட்டும் தொடர்ந்தது. பிணம் எரிந்த சிதைமேடுகளென
சாம்பல்நிற மண்குவிந்த போர்வெல் குழிகள் மேலும்சில தோட்டத்துக்குள் உருவாக்கப்பட்டிருந்தது.
நான் கடனால் முழுவதும் பீடிக்கப்பட்டிருந்தேன். வங்கிக்கடன் அளவுக்கே வெளிக்கடன்களும்
வளர்ந்திருந்தது. பால்யத்தின் வேப்பமரநிழலில்
விளையாட்டுப் பொருளாகயிருந்து உற்சாகமூட்டிய தோட்டத்துக்கும் கிணற்றுக்கும் என்னையொரு
விளையாட்டுப் பொருளென ஆக்கி காலம் உருட்டி விளையாடியது.
விவசாயம் செய்தால் பணம் சம்பாதித்துவிடலாம்
என்பதைவிடவும், பணம் இருந்தால்மட்டுமே வேளாண்மை செய்யமுடியும் என்கிற நிலமை உண்டாகியிருந்தது.
தண்ணீர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல் , விலைகளின் நிலையற்ற தன்மை, போன்றவைகள் போதாதென்று,
ஆள் கிடைக்காமையும் பெரும்பிரச்சனையாக உருவெடுத்திருந்தது. பனியன் கம்பனிகளின் பேருந்துகள்
ஊருக்குள்ளும் மாதாரிவளவுகளின் இண்டு இடுக்குகளுக்குள்ளும் புகுந்து புறப்பட்டு ஆட்களை
அள்ளிக்கொடு போயின. வேலை முடிந்ததும் இரவு வீட்டு வாசற்படியருகிலேயே கொண்டு வந்து இறக்கியும்
விட்டன.
நிழலடி வேலையும், கூடுதல் சம்பளமும்
, ‘வாங்க போங்க’ எனும் மரியாதையான விளிச்சொற்களும் , அவர்களுக்கு புது மலர்ச்சியைக்
கொடுக்க காட்டு வேலைக்கு வர மறுத்தனர். வாடகைக்கு மினி ஆட்டோக்களையும், வேன்களையும்
அமர்த்திக்கொண்டுபோய் தூரந்தொலைவிலுள்ள ஆட்களை அழைத்துக்கொண்டுவந்து வேலைமுடிந்ததும்
திரும்பவும் கொண்டுபோய் விட்டுவிட்டு வர, முட்டுவழிச்செழவு கூடுதலாகி கனத்தது.
பாலத்தினடியே நதியோட்டம்போல காலம்
நழுவியோடிக் கொண்டிருந்தது. வங்கிக் கடனுக்கான தவணைக் காலம் முடிந்திருந்தது. சொத்தை
ஏலத்தில் விடவும், ஜப்தி செய்யவும் உரிமை வந்துவிட்டதெனவும், குறிப்பிட்ட தேதிக்குள்
ஆஜராகி கடனை முழுவதுமாக செலுத்தத் தவறினால், சட்டரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
எனவும் வங்கியிலிருந்து வக்கீல் நோட்டீஸ் வந்தது.
தொடர்ந்து கிடைக்கப்பெற்ற எதிர்மறை
அனுபவங்கள் மனதைச் சோர்வடையச் செய்தது. வெள்ளாமையெடுத்து கடனைக் கட்டிவிட முடியும்
எனும் நம்பிக்கையை இழந்திருந்தேன். மொத்தமுள்ல மூன்றரை ஏக்கரில் இர்ண்டு ஏக்கரை மட்டும்
விற்று, வங்கிக் கடனை பைசல் செய்து விடுவதெனவும், மீதமுள்ல ஒன்றரை ஏக்கரை வைத்திக்கொண்டு
வெளிக்கடன்களை சமாளித்துக்கொள்ளலாம் என்றும்
தோன்றிற்று. சுற்றி நாற்புறமுமுள்ள ஒருப்பொளிப்
பண்னையகாரர்களுக்கு தகவலைக் கூறினேன். ‘ பண்ணையம் புடிக்கற மாதிரியா நெலமை இருக்குது.
எங்க நிலமையும் கிட்டத்தட்ட உன்னுடையது போலத்தான். உனக்கு தலைக்குமேல போயிருச்சு
.. எங்களுக்கெல்லாம் கழுத்துவரைக்கும் இருக்குது. அவ்வளவுதான் வித்தியாசம்’ என்றனர்.
“மூட்டப்பூச்சிக்குப் பயந்துட்டு
யாராச்சும் வீட்டைக் காலி செய்வாங்களா.. பேங்க்லோன் யாருக்குத்தான் இல்லாம இருக்குது..
நானுங்கூடத்தான் ஐந்துலட்சம் வாங்கி டிராக்டர் எடுத்திருக்கேன். முதல் வருசம் ஒழுங்கா
டியூ கட்டுனேன். இந்த ரண்டு வருசமா ரசீதே போடல. தைரியமா இரு. வெள்ளாமை ஒத்துக்கிட்டா
ரண்டே போகத்துல எல்லாக் கடனையும் அடச்சிரலாம். அவசரப்பட்டு தோட்டத்த தொலச்சிராத.. மண்ணுப்
போனா போனதுதான். மறுபடியும் சம்பாதிக்க முடியாது “ என பக்கத்துத் தோட்டத்தைச் சேர்ந்த
சித்தப்பா ஒருவர் புத்தி கூறினார்.
“உங்களுது வேற என்னடது வேற சித்தப்பு..
என் கடனுக்கு டைம் முடிஞ்சு ஓவர்டி ஆயிருச்சு. ஆனா உங்களுக்கெல்லாம் தவணைக்காலமே இன்னும்
நாலு வருசம் பாக்கி இருக்குது. பேங்க்காரன் நெனச்சா உங்க சொத்தை என்னவேணா பண்ணலாம்னு
வக்கீலே சொல்றாரு’
“அட அப்படித்தான் சொல்லுவானுக.. சும்மா மெரட்டறதுதான். ஒரு
பத்தாயிரத்தத் தூக்கி வக்கீல் டேபிள்ல வெச்சுப்பாரு.. பேங்காரன் எதுவும் பணமுடியாதபடிக்கு
ஸ்டே வாங்கித் தாரேன்.. இன்னும் பத்து வருசத்திக்கு கடனக்கட்ட கால அவகாசம் வாங்கித்
தாரேன்னு அதே வக்கீல் சொல்வாரு. போ.. போய்த் தைரியமா இரு.. காலம் இப்படியா போயிரும்?”
காலம் அப்படியேதான் போய்க்கொண்டிருந்தது.
காருமழை பொய்த்து பின்வந்த கோடை காலத்தில் என் நிலமை மேலும் மோசமடைந்திருந்தது. கிணறும்
போர்வெல் குழிகளும் காய்ந்தே போயின. தெக்கோட்டு மூலையிலிருந்த ஒரேயொரு போர்க்குழியில்
மட்டும் கொஞ்சமாகத் தண்ணீர் இருந்தது. குடிநீருக்கும் ஓரஞ்சாரமாக வைத்திருந்த தென்னம்பிள்ளைகளுக்கு
பொய்த்தண்ணி கட்டுவதற்கும் அது சரியாகிக் கொண்டிருந்தது. ஒரு கறவைமாடு மட்டும் இருந்தது.
பால் ஊற்றுவதன் காரணமாய்க் கிடைத்த அந்த சொற்ப வருமானத்தைத் தவிர வேறு வரும்படிகள்
இல்லாதவனாகவும் அதேசமயம் எல்லாவிதமான செலவுகளையும் பண்ணவேண்டியவனாகவும் இருந்தேன்.
வெளிக்கடன்களுக்கு வட்டி கட்ட முடியாமல் தொங்கல்விழ ஆரம்பித்தது. பொழுது கிளம்பியதும்
வந்துநிற்கும் கடன்காரர்களைச் சமாளித்து அனுப்புவது வழக்கமாகவே ஆகியிருந்தது. வங்கி
அதிகாரிகள் சொத்தை ஏலத்திற்கு கொண்டுவந்துவிடுவோமென மிரட்ட, வெளிக் கடன்காரர்களோ மானம்
மரியாதையை சந்தி சிரிக்க வைத்துவிடுவோமென மிரட்டத் துவங்கியிருந்தனர். நான் பண்ணயத்தை மறுபடியும் விலை சொல்ல ஆரம்பித்திருந்தேன்.
ஒட்டுமொத்தமாக தோட்டம், கிணறு, நடுவிலிருக்கும் வீடு என சகலத்தையும் கொடுத்துவிடுவதாக
புரோக்கர்களிடம்போய் சொல்லி வரத் துவங்கினேன்
பொழுது உச்சியை நோக்கி ஏறியபடியிருந்தது.
காற்றோட்டம் நின்று வெய்யில் உக்கிரம் பெற்றிருந்தது. தவிடு வாங்குவதன் பொருட்டு கடைக்குப்
போயிருந்தவன், மூட்டையை மொபட்டில் வைத்தபடி திரும்பவும் வந்துகொண்டிருந்தேன். தோட்டத்தின்
கடவுக்குள் நுழைகையில் அம்மாவும் அக்காவும் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது
தெரிந்தது. அக்கா ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்பது சற்றே மகிழ்ச்சியைக் கொடுத்தது.
என்றாலும் அவள் காட்டுக்குள் திரிவதேபோன்ற சாதாரண சேலையில் வந்து அமர்ந்திருப்பதும்,
வாசலில் மச்சானின் மொபட்டைக் காணாததும் பயத்தையும் பீதியையும் உண்டு பண்ணியது. அவளது
நகைகளை வாங்கிவந்து அடமானத்தில் வைத்திருந்தது மீட்கப்படாமலேயே கிடந்தது. அதுவும் தவிர
கணவன் வழி உறவு வகைகளிலிருந்தும் கணிசமான தொகை பெற்றுத் தந்திருந்தாள். அந்தக் கடன்களுக்கும்
சில மாதங்களாக வட்டிகட்ட முடியாமல் போயிருந்தது. அதன் காரணமாக குடும்பத்தில் மனச்சங்கடம்
உண்டாகி கிளம்பி வந்துவிட்டாளோ என தோன்றியது. அப்படி ஏதாவது எனில் இருக்கும் ஒரேயொரு
கறவை மாட்டையும் விற்றாவது அவளது பிரச்சனைகளை தீர்த்துவைத்து விடவேண்டும் என நினைத்துக்
கொண்டபடி அவளை வரவேற்றேன்.
“வாக்கா.. வாவா.. எந்நேரம் வந்தே?”
“இப்பத்தான் கொஞ்ச நேரம் ஆச்சு”
“மச்சான்.. தினேஷ்.. எல்லாம் நல்லாயிருக்காங்கள்ல”
“ம்..”
தவிட்டு மூட்டையைத் தூக்கிக் கொண்டுபோய்
சுவரோரமாக நிறுத்தினேன். அக்காவிடம் அடுத்ததாக என்ன கேட்கலாம் என உள்ளே யோசனை ஓடிக்கொண்டிருந்தது.
அதற்குள் அம்மாவே பேச ஆரம்பித்திருந்தாள். “ கொசவன் அடுப்பு வாங்கலாம்னு காங்கயம் சந்தைக்கு
வந்திருந்தாளாமா.. வந்த எடத்துல உன்னட பேருக்கு
கிளி சோசியம் பார்த்திருக்கறா.. சீட்டு செரியில்லாம வந்திருக்குது. உடனே புள்ள பயந்துபோயி
பாத்துட்டுப் போலம்னு அப்படியே கிளம்பி வந்துட்டா..”
அக்காவின் வருகைக்கு நான் நினைத்த
மாதிரியான காரணங்கள் இல்லையென்பது சற்றே ஆறுதலைக் கொடுத்தது. தூண்காலில் சாய்ந்தபடி
திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். அம்மா மதிய சமையலுக்கான வேலைகளை ஆரம்பித்திருந்தாள். நான் அக்காவிடம் அவள் குடும்பத்தின் ஷேம சவுக்கியங்களையும்,
வெள்ளாமை விளைச்சல்களைப் பற்றியும் விசாரித்தபடியிருந்தேன். எங்களின் பேச்சு தொடர்ந்தபடியேயிருந்தது.
அவர்கள் வந்து சேர்ந்தனர்.
ஜீப்பும் வேனும் பின்தொடர கடவுக்குள்
நுழைந்த வெள்ளை அம்பாசிடர் கார் வேலா மரத்தினடியே
வந்து நின்றது. செய்வதறியாத திகைப்புடனும் அச்சத்துடனும் எழுந்துசென்று காரிலிருந்து இறங்கிய வங்கி அதிகாரிகளுக்கு வணக்கம்
வைத்தேன். பணம் புரட்ட செய்து கொண்டிருக்கும்
ஏற்பாடுகளையும் , தோட்டத்தை விற்று கடனைக் கட்ட முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லி மேலும்
சில வாரங்கள் கால அவகாசம் கேட்டேன். என் குரலில் நடுக்கம் உண்டாகியிருந்தது.
“இப்படியேதான் ஆறு மாசமா சொல்லீட்டிருக்கறே..
நீ எப்ப தோட்டம் வித்து எப்ப கடனக் கட்டறது? உன் கடனுக்கு டைம் முடிஞ்சு ஒரு வருசம்
ஆகுது. இன்னும் அஞ்சு பைசாவுக்குக்கூட ரசீது போடல. வசூல் பண்றதுக்காக என்னய்யா நடவடிக்கை
எடுத்தீங்க? என்னய்யா பண்றீங்க எல்லாம்னு மேலதிகாரிங்க எங்களை நெம்பறானுங்க.. அதனால
தம்பீ.. குறஞ்சது ஒரு இருபத்தி அஞ்சாயிரமாவது கட்டி இன்னிக்கே ஒரு ரசீதப் போடு. மூணு
மாசம் என்ன.. ஆறு மாசம் வேணும்னாலும் டைம் தர்றோம்.”
இருபது ரூபாய்க்குக்கூட வழியற்றவனாகயிருந்தேன்.
இருபத்தி ஐயாயிரத்துக்கு எங்கே போக? திரும்பவும் வங்கி அதிகாரிகளிடம் மன்றாடத் தொடங்கினேன்.
“ சார்.. பொறுத்துக்குங்க சார்.. ஒரு நாலு நாள் அவகாசம் குடுங்க சார்.. தலைய அடமானம் வெச்சாவது ஏற்பாடு பண்ணீட்டுவந்து
ரசீது போட்டர்றேன் சார்.. கொஞ்சம் இரக்கங் காட்டுக்க சார்..”
அதிகாரிகள் என் குரலை செவிமடுக்க
மறுத்தனர். அம்மாவும் என்னோடுசேர்ந்து கெஞ்ச ஆரம்பித்திருந்தாள். ஐயா என்றும் சாமி
என்றும் மவராசரே என்றுமான விளிச் சொற்களைப் பயன்படுத்தி அழும் குரலில் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
பந்தலின் காலைப் பிடித்து நின்றபடி, பிரமை பிடித்தவளைப் போல அக்கா எல்லாவற்றையும் பார்த்துக்
கொண்டிருந்தாள்.
“இங்க பாரு தம்பி.. பணம் இருந்தா
ரசீது போடு. இல்லையா பேசாத. இன்னிக்கு பணம் கட்டாத பட்சத்துல ஜப்தி பண்னச் சொல்லி எங்களுக்கு
உத்தரவு. இருக்கற பண்ட பாத்திரங்களையெல்லாம் தூக்கீட்டுப் போறோம். நீ நாளைக்கு வருவியோ.. இல்ல நாலுநாள் கழிச்சு வருவியோ.. எப்ப வேணும்னாலும்வந்து
ரசீதப் போட்டுட்டு பொருட்களையெல்லாம் மீட்டுக்க.. புரியுதா..?”
அம்மாவும் அப்பத்தாளும் வாக்கப்பட்டு
வருகையில் சீதனமாய்க் கொண்டுவந்த பித்தளை ஏணங்கள் மூலையில் அடுக்கப்பட்டிருந்தது. இரண்டுபேர்போய்
எடுத்துக் கொண்டுவந்து வாசலில் வைத்தனர். ஒருவர் பேப்பரில் குறித்துக் கொண்டிருந்தார்.
நீர்வழியும் கண்களுடன் சேலைத் தலைப்பால் வாயைப் பொத்தியபடி அம்மா புழுதிக் காட்டுக்குள்போய்
அமர்ந்து கொண்டிருந்தாள். வலது உள்ளங்கையால் நெற்றியைத் தாங்கியபடி திராணியற்றவனாய்
வாசல்படல் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் பட்டியலில் என் மொபட்டும் சேர்க்கப்பட்டிருந்தது.
பசித்த பாம்பென வெய்யில் எல்லாவற்றையும்
விழுங்கியபடியிருந்தது. பார்வை கண்களிலேயே தேங்கிக் கொள்ள , தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கும்
என் முன்னால் வந்து நின்ற அக்கா, நான் தலை நிமிரும் நேரத்திற்குள் கழுத்திலிருந்த அந்த
ஒற்றைச் சங்கிலியையும் கழட்டி என் கைகளில் திணித்தாள். ” இந்தா.. மூணு பவுனு.. என்ன வெலைக்கு போகுமோ போற வெலைக்கு வித்து ரசீதப் போட்டுரு..”
உணர்ச்சிகள் மரத்துப் போன நிலையில்
அணு அளவாய் சுருங்கி சிறுத்துப் போயிருந்த என் மனம் வெடித்தது. என்னிலிருந்து வெளிப்பட்ட பேரழுகையின் ஓலம் அதிகாரிகளை
ஸ்தம்பிக்க வைக்க அவர்கள் செய்வதறியாது நின்றனர்.
இந்த கடன் தொல்லை எனை மட்டுமல்லாது
அக்காவின் குடும்பத்தையும்சேர்த்து பாழ்பண்ணிவிடுமோ என்னும் பயம் நாளுக்குநாள் அதிகரித்தபடியேயிருந்தது.
முன்னிலும் தீவிரமாக தோட்டத்தை விற்பதற்கான முயற்சிகளில் இறங்கினேன். கொடுவாய் பேருந்து
நிறுத்தம் அருகே முடிதிருத்தகம் வைத்திருக்கும் பூபதி தன் பேச்சு சாமார்த்தியத்தின்
மூலமாக கேரளாவில் கந்துவட்டித் தொழில் செய்துகொண்டிருக்கும் ஒருவரை கூட்டிக்கொண்டு
வந்தான்.
விலை முடிந்திருந்தது. வங்கிக்கடன்
அளவுக்கான தொகையை முன் பணமாகப் பெற்றுக் கொள்வது எனவும், பேங்க் லோனை கட்டி பத்திரத்தை
மீட்டு கிரயம் எழுதித்தரும் நாளில் மீதித் தொகையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஒப்பந்தம்
கையெழுத்தானது. வரப்போகும் தேர்தலின் காரணமாக அப்போதிருந்த அரசாங்கம் விவசாயக் கடன்களுக்கான
அபராதவட்டி தண்டவட்டிகளையெல்லாம் அடியோடு ரத்து செய்தது. அந்தவகையில் எனக்கு ஒரு லட்ச
ரூபாய்க்குமேல் மிச்சமாகியது. அதுநாள்வரைக்கும் நிலுவையிலிருந்த வட்டியோடுசேர்த்து
வெளிக்கடன்களையெல்லாம் பைசல் செய்ய முற்பட, ‘நீயே பண்ணயத்த வித்து கடங் கட்டறே.. எங்களுக்கு
அசல மட்டும் குடுத்தாப் போதும் வட்டியெல்லாம்
வேண்டா’மென அவர்களும் கருணை காட்டினர். அந்த வகையில் ஐம்பதாயிரத்திற்குமேல்
மிச்சமாகியது. இவ்விதமாக மிச்சமாகிய பணத்துக்கு திருப்பூரில் ஒரு வீட்டை போக்கியத்திற்கு
பிடித்தேன். ஊர் உறங்கியபிறகு தட்டுமுட்டு சாமான்களுடன் அம்மாவையும் டெம்போவில் ஏற்றிக்கொண்டு
தோட்டத்தைவிட்டு வெளியேறினேன்.
பாட்டன் முப்பாட்டன் காலந்தொட்டு
எங்கள் வம்சத்தின் வாழ்வாதாரமாகவும் ஜீவாதாரமாகவும் இருந்துவந்த நிலத்தை இழ்ந்தது வருத்ததை
உண்டாக்கவே செய்தது. கோபப்பார்வையும் குதறும் வார்த்தைகளுமாக விடிந்ததும் வந்து நிற்கும்
கடன்காரர்களின் தொல்லைகளிலிருந்து விடுபட்டுவிட்டோம் எனும் ஆசுவாசம் அவ்வருத்தத்தை
முனைமழுங்கச் செய்து நிம்மதியைத் தந்தது. நான் பனியன் கம்பனிக்குப் போகத் துவங்கியிருந்தேன்.
வீட்டுவேலை முடிந்த ஓய்வு நேரத்தில் செக்கிங் சென்டர்களிலிருந்துவரும் பனியன்களுக்கு
பிசிர்வெட்டி குடுத்தும், வேஸ்ட்டான துண்டுத் துணிகளில் நூல் பிரித்தும், தனக்கான வருமானத்தை
அம்மா ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.
எங்களின் மொத்த வருமானத்தில் பாதிக்குமேல்
மிச்சமாகிக் கொண்டிருந்தது. பைக் ஒன்று வாங்கினேன். நம்பிக்கையான நபர்கள் நடத்தும்
ஏலச்சீட்டுகளில் சேர்ந்து சேமிக்கத் துவங்கினேன். ஊரில்நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு
அம்மாவுடன் பைக்கில் போய் இறங்க உறவுச் சனங்கள் மத்தியில் என் மதிப்பு ஏறத்துவங்கியிருந்தது.
“டவுனுக்குப் போனதுக்கப்பறம் ஆளே பாலீஷ் ஆயிட்டான் பாரு.. தோட்டந் தோட்டம்னு காட்ட
நம்பி உக்காந்துக்கிட்டு இருந்தா காலத்துக்கும் கடங்காரனாகவே கஷ்டப்பட வேண்டியதுதான்..
பண்ணயம் போனா போவுதுனு வித்து தலைமுழுகிட்டுப் போனான். அப்பவே அவனப் புடிச்ச பூடை புணியெல்லாம்
தொலைஞ்சது. இனி அவனுக்கு முன்னேத்தம்தான். நல்லா இருப்பாம் பாரு..” இவ்விதமாக மற்றவர்களின் கருத்துக்களை அறிய நேர்கையில் மகிழ்ச்சியும் பூரிப்பும்
அதிகமாகியது. நாளும் பொழுதும் நல்லவிதமாய் நகர்ந்து கொண்டிருக்க என் ஜாதகத்தை புரோக்கர்களிடம்
கொடுத்து பெண் தேடத் துவங்கினேன்.
சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்திருந்தது.
தண்டவட்டி அபராத வட்டிகளையெல்லாம் ரத்துசெய்து மக்களிடம் ஆளுங்கட்சி பெற்றிருந்த நன்மதிப்பை,
தங்கள் பக்கம் திருப்பவேண்டும் என்பதற்காக விவசாயக் கடன்களையெல்லாம் அடியோடு ரத்து
செய்வதாக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்த எதிர்க்கட்சி இப்போது ஆளுங்கட்சியாக அரியணை
ஏறியது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் நிலவள வங்கிகளில் தரப்பட்ட விவசாயக் கடன்கள்
ரத்து செய்யப் படுவதாக அரசாணை வெளியாகியது. இருபத்தி ஐயாயிரத்துக்கு குறைவான கறவைமாட்டுக்
கடன் , பயிர்க் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப் பட்டிருக்கும் எனவும், பெரிய அளவிலான
விவசாயக் கடன்களை கட்டித்தான் ஆகவேண்டுமெனவும் பேசிக் கொண்டனர். ஆனால் உண்மை வேறாக
இருந்தது. விவசாயம் என்ற பெயரில் தரப்பட்டிருந்த எல்லாவிதமான கடன்களும் தொகை வித்தியாசமில்லாமல் அடியோடு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
உழவுப்பணிகளுக்காய் என கடன் வாங்கி
டிராக்டர் எடுத்திருந்த நிறையப்பேர் தங்களின் டிராக்டர்களை கட்டிடப் பணிகளுக்கும் கட்டுமானப்
பணிகளுக்கும் வாடகைக்கு விட்டு, மணிக்கு முந்நூறு முதல் ஐநூறு ரூபாய்வரை சம்பாதித்துக்
கொண்டிருந்தனர். லட்சக்கணக்கில் நிலுவையிலிருந்த போதிலும் அவர்களின் கடன்களும் அடியோடு
ரத்து செய்யப்பட்டிருந்தது. இதே கூட்டுறவு வங்கிகளில் தோட்டங்காட்டுப் பத்திரங்களை
அடமானம் வைத்து, விசைத்தறிக்கூடம் அமைக்கவும், தேங்காய்க் களங்கள் போடவும், கயிறு திரிக்கும்
குடோன்கள் அமைக்கவும் கடன் பெற்றிருந்தவர்கள் தாங்களும் தொழிலுக்கு என்பதாக அல்லாமல்
விவசாயம் என்ற பெயரில் கடன் வாங்கியிருந்தால் தள்ளுபடி பெற்றிருக்கலாமே என புலம்பத்
துவங்கினர். சிறிய விவசாயக் கடன்களைப் பெற்று தள்ளுபடிப் பயனடைந்த பயனாளிகள் , பெரிய
கடன்கள் பெறாது போன துரதிர்ஷடம் எண்ணி அங்கலாய்க்கத் துவங்கினர். காட்டை விற்றாவது
கடன் முழுவதையும் கட்டி முடித்திருந்த என் போன்றவர்களின் நிலமைதான் கேலிக்குரியதாகவும்
மிகவும் பரிதாபத்துக்கு உரியதாகவும் மாறிப் போயிருந்தது.
”தம்பீ.. தம்பீ.. யோசனை
ரொம்ப பலமா இருக்கே.. எந்திரிச்சு உள்ள வாங்க” நினைவுகளில் மூழ்கி
ஆழ்ந்திருந்த என்னை , ஜோதிடரின் குரல் மேலே இழுத்துக் கொண்டுவந்தது. ஜாதகம் பார்த்தபடியிருந்த
அந்த நபர் போய்விட்டிருந்தார். எழுந்து உள்ளேபோய் கருப்புசாமியின் எதிரே அமர்ந்தேன்.
” ம்.. சொல்லுங்க தம்பி.. அப்புறம் என்ன விசேஷம்?”
“விசேசம் என்னண்ணா.. உங்களப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன். தெரிஞ்ச
எடத்துல பொண்ணு ஒண்ணு இருக்குது, இன்னிக்குப் போய் பார்த்துட்டு வரலாம்னு சொல்லியிருந்தீங்க..”
”வாஸ்தவம்தான் தம்பி.. சொல்லியிருந்தேன். ஆனாப் பாருங்க அதுல
ஒரு சின்ன சிக்கல் ஆயிருச்சு”
”ஏண்ணா.. என்னாச்சு?”
”அந்த பொண்ணோட அப்பாகிட்ட பேசுனேன் தம்பி. பையன் நல்ல பையன்.
பனியன் கம்பனில பவர்டேபிள் கான்ராக்ட் எடுத்து நிறைய சம்பாதிக்கிறாரு. பைசாகூட கடன்
இல்லை. கைவசம் காசு வெச்சுருக்காரு. ஜாதகம் நல்லா பொருந்தி வருது. அப்பிடீன்னல்லாம்
எனக்கானளவு எடுத்துச் சொன்னேன் தம்பி. மனுசன் புடியே குடுக்கமாட்டேங்கறாரு.”
“என்னதான் சொல்றாரு..?”
“எல்லாம் சரிங்க சோசியரே.. தோட்டம் தோப்புனு இருக்கற ஜாதகமெல்லாம்
எம்பொண்னுக்கு வந்துட்டிருக்குது. நீங்க சொல்ற பையனுக்கு ஊர்ல நிலபுலமெல்லாம் எவ்வளவு
இருக்குதுனு கேட்டுச் சொல்லுங்க. பிறகு பேசிக்கலாம்கிறாரு..”
“எதுவும் பேசத் தோன்றாதவனாய் உட்கார்ந்திருந்தேன். ஏமாற்றத்தின்
துக்கத்திலிருப்பதாய் ஜோதிடர் நினைத்துக் கொண்டார்போலும். ஆறுதல் படுத்தும் விதமாக
அவரே பேசினார்.”
“சரி விடுங்க தம்பி, வேறு ஏதாவது பாத்தா போகுது. இதுவே எங்க
காலமா இருந்தா உங்களை மாதிரி
பையன்களுக்கெல்லாம் க்யூ வரிசையில
பொண்ணு குடுக்க நிப்பாங்க. ஆனா, காலம் இன்னிக்கு அநியாயத்துக்கு மாறிப்போச்சே. அதுவும்
உங்க சாதில பொண்ணுங்களுக்கு தட்டுப்பாடு ரொம்பவே
அதிகமா இருக்குது. ஒரு பொண்ணு
ஜாதகம் வந்தா ஒம்போது மாப்பிள்ளைக ஜாதகம் வருது. நிலமை இப்படி இருக்கறதாலதான் பொண்ணுவீட்டுக்காரங்க
ஓவரா கிராக்கி பண்றாங்க. கவலய வுடுங்க தம்பி. நெலம எப்படியிருந்தாலும் இன்னும் ஒரு
மாசத்துக்கப்பறம் உங்க ஜாதகத்துல களஸ்திரஸ்தானாதிபதி புத்தி நடைமுறைக்கு வரப்போகுது.
அந்த சமயத்துல கல்யாண காரியம் நிச்சயமா கைகூடியே தீரும். தைரியமா போயிட்டு வாங்க..”
ஜோதிட நிலையத்தைவிட்டு வெளியே
வந்தேன். நேரம் இரவு ஒன்பதுக்குமேல் ஆகியிருந்தது. சேவல் கட்டுக்கு போய் திரும்பி வந்திருக்கும்
கதிர் , இந்நேரம் தன் அறையில் இன்றைய ஆட்டத்தின் வெற்றியை அல்லது தோல்வியை மது அருந்தியபடி
கொண்டாடிக் கொண்டிருப்பான் எனத் தோன்றியது. அவனைப் போய் பார்த்து சற்றுநேரம் பேசியிருந்துவிட்டு
பிறகு வீட்டிற்குச் செல்லலாம் என நினைத்துக் கொண்டேன். சாவியைப் பொருத்தி மோட்டார்
சைக்கிளை ஸ்டார்ட் செய்யும் தருணத்தில் பார்வை அனிச்சையாய்த் திரும்பி, வேப்பமரத்தினடி
விளக்கு மாடத்தினுள் ஒளிர்ந்தபடியிருந்த அகலின் சுடரைத் தேடியது. வெறும் இருட்டே நிறைந்திருந்தது.
No comments:
Post a Comment