Sunday, 16 April 2017

ஜரிகை..

தோட்டத்துச் சாளையின் வெளித்திண்ணையில் சுவர்சாய்ந்து அமர்ந்துகொடிருந்த அப்பாரையன் கூறத் துவங்கினார். சிறுவனான இவன் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான்.

லங்கையில் ராவணராசாவுக்கும் ராமருக்கும் சண்டை நடந்தப்ப ஒருநாளு ராசாவோட பையன் இந்திரசித்து, மாயாஜாலக்காரன், மாயமா மறஞ்சு மறஞ்சு சண்டை போட்டான். எங்கிருந்து அம்புவருது அஸ்திரம் வருதுனு யாருக்கும் ஒண்ணும் புரியல. தொப்பு தொப்புனு ஒவ்வொரு தலையா சாயுது. பெரும் வில்லாளிகளான ராமலட்சுமணர்களால எதுவுமே செய்ய முடியல. கடசியா அவங்களும் அஸ்திரத்துக்கு பலியாகி கீழே விழ, அவ்வளவுதான் எல்லோரும் செத்தொழிஞ்சாங்கன்னு அந்த அசுரப்பய எக்காளம் போட்டுக்கிட்டு அப்பங்கிட்டப் போயி இந்த சந்தோசத்தச் சொல்ல அரண்மனைக்கு ஓட்டமா ஓடறான்.


இங்க எல்லாரும் போயிட்டாலும் அனுமாருக்கு மட்டும் எதுவும் ஆகாது. அவருக்கு அப்படியொரு வரம் இருக்குதல்ல.அதான். அப்பறம் விபீஷணன் வந்து பாத்துட்டு இவங்கள பொழக்க வைக்கோணம்னா சஞ்சீவி மலைக்குப் போயி நாலுவகையான மூலிகைய கொண்டுவரோணம் அப்படீங்கறாரு.   துண்டு துண்டா ஆன கை கால்கள ஒட்ட வெக்கிறது, செத்துப் போனவனுக்கு உயிர்கொடுக்கறது,   இந்திரசித்துவோட மந்திரமெல்லாம் பலிக்காமப் போறதுக்குனு ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு மகிமை. அந்த நாலு வகையான மூலிகைகளின் பேரையுஞ் சொல்லி அனுமாரப்போயி கொண்டுட்டு வாங்கிறாரு.


அடுத்த நிமிசமே அனுமாரு கைலாயங்கிரிக்கு ஆகாச மார்க்கமா பறந்து போறாரு. அங்கிருக்கிற சங்சீவி பர்வதத்த பார்த்ததுமே அவருக்கு அந்த மூலிகைப் பேரெல்லாம் மறந்து போயிடுது. உடனே அவர் என்ன பண்றாருனா விசுவரூபம் எடுக்கிறாரு. அத்தாம் பெரிய மலையவே உள்ளங்கைல வெச்சுக்கிற அளவுக்கு பெரிய உருவம். மலயப் பேத்து உள்ளங்கைல வெச்சுக்கிட்டு பிறகு மறுபடியும் ஆகாச மார்க்கமாகவே பறந்துக்கிட்டு வாராரு.


சண்டக்காட்டுக்குப் பக்கத்துல வந்ததுமே மூலிகைக் காத்துப் பட்டு செத்துக் கிடந்தவங்களும் மயக்கம்போட்டுக் கிடந்தவங்களும் எந்திரிச்சு உக்காந்துக்கிறாங்க. துண்டுதுண்டாப் போன கைகாலெல்லாம் அதது அததோட வந்து தானாவே ஒட்டிக்கிது. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுக்கப்பறம், சரி எடுத்த மலையை எடுத்த எடத்திலேயே வெச்சுரலாம்னு அனுமார் பாழய எடத்துலயே மலையக் கொண்டுபோயி வெச்சுட்டு திரும்புறாரு. வர்ற வழியிலதான் அவருக்கு அந்த யோசனை வருது.  மலையத்தான் எறக்கி வெச்சாச்சுல்ல. இனியெதுக்கு இந்த பெரிய உருவம்னு ஓரெடத்துல நின்னு தன் உருவத்த பழயபடிக்கே சிறுசா ஆக்கிக்கிறாரு.




அப்படி சிறுசா மாறர்துக்கு முன்னாடி ஒடம்புல ஒட்டியிருந்த துண்டுதுணுக்கு மலைச் சிதறலையெல்லாம் ஒண்ணா தெரட்டி உள்ளங்கைல வெச்சு கீழே ஊதி உடறாரு. அதனாலதான் அந்த ஊருக்கு ஊதியூர்னும் அந்த மலைக்கு ஊதியூர்மலைனும் பேரு. கொங்கணச்சித்தர்னு ஒரு சித்தர் அங்க வெகு காலம் தவம் செஞ்சுட்டு இருந்ததாச் சொல்வாங்க. அப்பறம்தான் அவரு திருப்பதி மலைலபோயி அடக்கமானாராம். அந்த மலைல இல்லாத மூலிகைகளே கிடையாது தெரியுமா..? அப்பாரய்யன் கைகாட்டிய திசையில் எழுந்துவந்து பார்த்தான். கிழக்கே வேலிகளுக்கும் பனை மரங்களுக்கும் அப்பால் புகைத்திரட்டுப் போல அந்த மலை கண்ணில் பட்டது.


சிறிதும் பெரிதுமான குன்றுகளும் அவற்றிற்கிடையே முள்மரக்காடுகளுமாக அந்த மலை இருந்தது. இறங்குபொழுதின் வெயில் மலை முகடுகளிலும் சரிவுகளிலும் படர்ந்திருந்தது. இவன் பேருந்தைவிட்டு இறங்கி ஒருபுறம் கடைகளையும் மறுபுறம் வீடுகளையும் கொண்டிருந்த அந்த வீதியில் தெற்கே நடக்கத் துவங்கினான்.

முதுகுப் பையை இறக்கி வைத்துவிட்டு டீக்கடைப் பெஞ்சில் அமர்ந்தான். தேநீர் அருந்தினான். சிகரெட் புகைத்தான். பணம் கொடுக்கையில் ஷாம்பு மற்றும் பாக்குச் சரங்களுக்கு நடுவே தொங்கிய அந்த சிறிய ரக டார்ச் லைட்டுகள் கண்ணில் பட்டது. ஒன்றை வாங்கி சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

மலையேறும் படிக்கட்டுகள் ஆளரவமற்றிருந்தது. பாதி உயரத்திற்கு மேலே காவிவேட்டி கட்டிய ஒருவர் ஏறிக்கொண்டிருந்தார். படிக்கற்களுக்கு சுண்ணாம்பும் காவியும் பூசப்பட்டிருந்தது. குரங்குப் புழுக்கைகள் சிதறிக் கிடந்தன. பக்கவாட்டுக் குன்றின் நிழல் முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் படித்தொடரை ஆக்கிரமித்திருந்தது. பழுத்த இலைகளும் சருகுகளும் ஓரங்களில் மண்டிக் கிடந்தன.

இவனுக்கு மூச்சு வாங்கியது. திண்டினில் உட்கார்ந்தான். ஒரே தம்மாக ஏறிய காலங்கள் ஞாபகத்திற்கு வந்தது. அண்ணாந்து மேலே பார்த்தான். கோயில் வளாகத்தில் ஜனநடமாட்டம் இருந்தது. யாரும் படிகளில் ஏறாமல் வாகனங்களோடு அதன் பாதையில் வந்துவிடுவார்கள் போல.

இளைப்பாறும் மண்டபத்தின் கூரையின்மீதும் பக்கவாட்டுப் பாறைகளிலும் குரங்குகளின் நடமாட்டம் இருந்தது. அவைகளின் கண்கள் பளிங்குபோல் மினுங்கின. சரிவில் புடைத்து அந்தரத்தில் நீண்டிருந்த ஒரு பிரமாண்டமான பாறையின்மேல் ஒரு கிழ வானரம் படுத்துக் கிடந்தது. அந்திவெயில் காய்ந்தது. இவன் மறுபடியும் ஏறத் துவங்கினான்.


மலையின் முதல் குன்றின்மேல் கோவில் இருந்தது. முன்புற சமதளப் பரப்பில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மரங்களின் ஊடே மண்பாதையின் வழியாக வந்த மாருதி கார் ஓரமாக நின்றது. கையில் குழந்தையுடன் ஒரு இளம்பெண் இறங்கினாள். ஓட்டுனர் இருக்கையிலிருந்து வெளிப்பட்டவன், அவளுடைய கணவனாக இருக்க வேண்டும். அவனும் சிறிய வயதுகொண்ட இளைஞனே போலிருந்தான். இருபத்திநான்கு அல்லது இருபத்தியைந்து வயதிருக்கலாம். மிகச்சரியான பருவத்தில் திருமணம் கைகூடிய பாக்கியவான். இவன் அவர்களைப் பார்த்தபடியிருந்தான்.



அந்தப் பெண் குழந்தையுடன் சேர்ந்து பூஜைப் பொருட்களடங்கிய சிறு கூடையையும் பிடித்துக் கொண்டிருந்தாள். குழந்தை ஊஞ்ச மரத்தை நோக்கி கை நீட்டியது. மரத்தின் கிளைகளில் குரங்குகளும் குட்டிகளும் அமர்ந்தபடியும் தொங்கியபடியும் இருந்தன. காரின் கதவு திறந்த அவன் வாழைப் பழங்களை எடுத்து கீழே வீசினான். மொய்த்த குரங்குகள் ஒன்றுக்கொன்று சண்டையிடத் துவங்கின. குழந்தையின் கண்களில் காட்சிப் புதுமையின் ஒளி ஆசீர்வாதமே போல ஒளிர, இவன் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

பிரதான வாயிலருகே செருப்புகளைக் கழட்டிவிட்டு உள்ளே நுழைந்தான். நிலைப் படிகளைத் தாண்டியதும் அந்தப் பெண் எதிர்ப்பட்டாள். எதேச்சையானதொரு புள்ளியில் நான்கு கண்களும் ஒரு கணம் சந்தித்து விலகின. இவன் சட்டென தலையைத் திருப்பிக் கொண்டான். அதற்குள் அவள் முழு உருவத்தையும் கண்கள் கண்டுவிட்டிருந்தன. அரக்கு கலரில் தங்க ஜரிகையிட்ட மாம்பழ வண்ண பட்டுப் புடவையிலிருந்த அவளின், அழகிய சிவந்த மெட்டியணியாத பாதங்கள் மனதில் பதிந்து விட்டிருந்தது. எண்னங்களாக உருமாற்றம் பெறாத ஒரு ஊமைத்துயரம் உள்ளே ஊற்றெடுத்தது. இவன் கன்னிமூலை கணபதியின் சன்னதிக்கு நடக்கத் துவங்கினான்.

பொழுது மறைந்து விட்டிருந்தது. மேல்வானின் செந்தீற்றல்கள் கருக்கத் துவங்கியிருந்தன. கள்ளப் புன்னகை போன்ற வெளிச்சம் எங்கும் பரவியிருந்தது. நெற்றியில் திருநீறையிட்டபடியே , கருவறைவிட்டு முன்மண்டபம் கடந்து படிகளில் இறங்கினான். விளக்குகள் ஒளிரத் துவங்கியிருந்தன.  அந்த ஒற்றை விண்மீன் பிரகாசித்தது. ‘ அதுதான் மாப்ள சுக்ரன். வெள்ளிமீன்னு சொல்வாங்க. பெரும்பாலும் காலைல சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடியே இது உதிச்சிரும். ஆனா எப்பவாச்சும் சில காலங்கள்ல மட்டும் சூரியன் அஸ்தமிச்சதுக்கு அப்பறம் இது மேல்வானில் ஒரு பனை உயரத்துக்குமேல மின்னீட்டு இருக்கறது தெரியும். சூரியன் மறஞ்சதும் இது தெரிஞ்சா ராசிக்கட்டத்துல ஒரு ராசி சூரியனுக்குப் பின்னாடி இது இருக்குதுனு அர்த்தம். ‘ எப்பொழுதோ துரை மச்சான் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.   


“மாமா இந்தாங்க பொங்கல்..


ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள். சற்றுத்தள்ளி சர்க்கரைப் பொங்கல் விநியோகம் நடை பெற்றுக் கொண்டிருந்தது. சிறிய பாக்கு மட்டைத் தட்டு நிரம்ப இருந்த பொங்கலை அந்த சிறுமியிடமிருந்து பெற்றுக் கொண்டான். கிழக்குச் சுவரோரமாக வந்தான். கீழே ஊர் ஒளிப்பூக்கள் சூடியதுவாய் இருளைப் பூசிக் கொண்டிருந்தது. சாலையில் வாகனங்கள் விரைந்த படியிருந்தன.

குழாயருகே அந்த இளம் தம்பதியை மறுபடியும் காண நேர்ந்தது. இப்பொழுது அந்த இளைஞன் குழந்தையை வைத்துக் கொண்டிருந்தான். அவள் குனிந்து கை கழுவியபடி இருந்தாள். தெறிக்கும் நீர் பட்டுவிடாத வண்ணம் சேலைத்தலைப்பை சற்றே மேலிழுத்துச் சுருட்டி கணுக்கால்களுக்கு நடுவே சொருகியிருந்தாள். மகிழ்ச்சியான தாம்பத்யத்தின் பெருஞ்சுகம் அவள் முதுகிலும் கணுக்கால்களிலும் பிரதிபலித்து மினுங்கிற்று.

இவன் கோவிலைவிட்டு வெளியே வந்தான். இருள் மலைச்சரிவுகளில் பரவியிருந்தது. பெரும்பகுதி வாகனங்கள் போய்விட்டிருந்தன. காலணிகளை அணிந்து கொடிமரம் கடந்து வந்தான். அதன் நடுப்பகுதிக் குழாயில் கட்டியிருக்கும் ஒலிப்பெருக்கிக் குழாய்கள் கண்ணில் பட்டதும் ஊர்க்கோவிலின் ஆண்டுவிழாச சம்பவம் ஏனோ ஞாபகத்துக்கு வந்தது.


ர் நடுவேயிருந்த விநாயகர் கோவிலின் மேடையிலும் பக்கவாட்டு கல் இருக்கைகளிலும் சனம் கூடியிருந்தது . பூவரச மரக்கிளையில் கட்டப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிக் குழாய்கள் இடைவிடாது அலறின. தெற்குத்தோட்டத்து மாமனின் குரல் கணீர் கணீரென ஒலித்தபடியிருந்தது.பெருக்கப்பட்ட ஒலியில் தன் குரலைக் கேட்டதில் அளப்பறிய அதிகாரமொன்று கைவந்து விட்டதேபோல மிகுந்த உற்சாகமுடன் பெயர்களை அறிவித்தபடியிருந்தார்.

வேப்பமரநிழலில் வசூல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ரத்னசாமி மச்சான் பெயர்களையும் தொகைகளையும் நோட்டுப் புத்தகத்தில் பதிவு பண்ணிக் கொண்டிருந்தார். நடுவீட்டுக்காரர் பணத்தை எண்ணிச் சரிபார்த்து பேக்கினுள் வைத்துக் கொண்டிருந்தார். விபரம் தெற்குத்தோட்டத்து மாமனுக்குப் போய் அவர் பெயரையும் தொகையையும் சலியாத உவகையுடன் அறிவித்த படியிருந்தார்.

பெயர் அறிவிக்கப்பட்டவர்களின் முகத்திலும் அன்னாரது பெண்டு பிள்ளைகளின் முகங்களிலும் எட்டு ஊருக்கும் கேட்கும்படியான சத்தத்தில் பெயரைக் கேட்ட சந்தோசமும் பெருமிதமும் பரவியிருந்தது. இவன் ஆயிரம்ரூபாய்த் தாளை ரத்தின மச்சானிடம் நீட்டினான். நிமிர்ந்து பார்த்த அவர் கோழிப்பண்னை ராமசாமி கொள்ளுக்காட்டுத்தோட்டம் என எப்போதும் போலவே எழுதி பதிவு செய்தார். விபரம் தெக்குத்தோட்டத்து மாமனுக்குப் போனது. கோழிப்பண்னை ராமசாமி எனும் தன் பெயரை அவர் குரலில் ஒலிப்பெருக்கி கேட்க ஆவல்கொண்டவனாய் காதுகளைத் தீட்டிக்கொள்ள, மாமனின் குரல் கணீரென ஒலிக்க ஆரம்பித்தது.


அருள்மிகு விநாயகர் கருப்பண்ணசாமி கன்னிமார் கோயில்களின் ஆண்டுவிழாவை முன்னிட்டு அன்னதான நன்கொடையாக கொள்ளுக்காட்டுத் தோட்டம் கல்யாணமில்லாத ராமசாமி ரூபாய் ஆயிரம் நன்கொடை என திரும்பத் திரும்ப மூன்றுமுறை அறிவித்து அமர்க்களப்படுத்த, ஊரே கொள்ளென சிரித்தது. கைதட்டல்களும் விசில்களும் இளவட்டங்களிடமிருந்து கிளம்ப, இவன் தெற்குத்தோட்டத்துக்காரரை வேறு வழியில்லாதவனாக முறைத்தான். “ கோவிச்சுக்காத மாப்ளே.. அப்படியாச்சும் அந்த சாமிகளுக்கெல்லாம் காதுகேட்டு ஒனக்கொரு நல்லத பண்ணிவெச்சுப்புடாதானு ஒரு ஆசதான்இதையும் அவர் மைக்கிலேயே அறிவிக்க, மறுபடியும் ஒரு சிரிப்பலை அங்கே எழும்பி ஆர்ப்பரித்தது.


சமமான வயதில் ஊருக்குள் நான்கு ராமசாமிகள் இருந்தனர். குழ்ப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ராமசாமியின் பெயரோடும் ஒரு அடைமொழி சேர்ந்துவிட்டிருந்தது. கோழிப்பண்ணை இருந்ததால் இவன் கோழிப்பண்ணை ராமசாமியாக ஆகிப்போயிருந்தான்.மற்ற ராமசாமிகளுக்கெல்லாம் திருமணமாகிவிட்டதாலும் , உப்புத்தோட்டத்து ராமசாமியும் கோழிப்பண்ணை கட்ட ஆரம்பித்து விட்டதாலும், தன் பெயர் இனி கல்யாணமில்லாத ராமசாமியாக ஆகிவிடுமோ எனும் பயம் இவனுக்கு உண்டாகத் துவங்கியது.

கோவில் விளக்குகளின் வெளிச்சப் பரப்பு முடிவடைந்திருந்த இடத்திலிருந்து வனம் ஆரம்பித்தது. குத்துச் செடிகளுக்கு நடுவே போகும் ஒற்றையடிப்பாதையிலிறங்கி இவன் நடக்கத் துவங்கினான். சற்று தூரம் போனதும் சிறிய டார்ச்சை ஒளிரவிட்டான். மழைத்தண்ணீர் அரித்த பள்ளங்களுடன் அந்த ஒற்றையடிப்பாதை நீண்டும் நெளிந்தும் சென்றபடியிருந்தது. சின்னித்தலையின் வாசம் காற்றில் கலந்திருந்தது. இரவுப் பூச்சிகளின் சப்தம் கூடவே வந்தது. செல்போன் ஒலித்தது. துரை மச்சான்தான்.. 


சொல்லுங்க மச்சான்

மாப்ள கெளம்பியாச்சா

மேல போயிட்டிருக்கேன் மச்சி

அப்படியா.. ரொம்ப நல்லது. நேரத்த மறந்துராத. சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கல்ல..

இருக்கு மச்சான்

சரி, காலைல கூப்பிடறேன்

ஓகே மச்சி


ஒற்றையடிப்பாதை சற்றே விரிந்து நிலப்பாறைகளாக பரவியிருந்தது. வியர்வை பெருகி வழிந்தது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு செல்லலாம் என தோன்றியது. பையை கீழே வைத்துவிட்டு உட்கார்ந்தான். மரக்கிளைகளின் சந்துவழியே ஊரின் விளக்கு வெளிச்சங்கள் எங்கோ வெகுதொலைவில் இருப்பதுபோல் மினுங்கின. திசைமாறிய காற்றில் கலந்திருந்த சங்கம்பூவின் மணம் நாசியுள் நுழைந்தது. பேட்டரிலைட்டை இடப்புறமாக உயர்த்திப் பிடித்தான். பசிய நீள்வட்ட இலைகளையும் கூரான முட்களையுமுடைய சங்கஞ்செடிகள் புதரென மண்டிக் கிடந்தன. மணி மச்சானுடன் முதன்முதலாக பெண்பார்க்கப் போனது ஞாபகம் வந்தது.

மொபட்டின் பின்புறம் இப்போது இருப்பதைவிடவும் இளமையாக இருக்கும் இவன் மணிமச்சானை பின்னமர வைத்து சென்றுகொண்டிருந்தான். அந்த தெருவின் வலப்புறத்தில் வீடுகளாகவும் இடப்புறத்தில் சங்கம்புதர்களிலாலான வேலியாகவும் இருந்தது. மின்கம்பமும் குடிநீர்க்குழாயும் இருக்குமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் மற்றொரு வீதியில் வண்டியைத் திருப்பச் சொன்னார். சற்றுதூரம் போனதும் எதிர்ப்பட்ட குயவன் ஓடு வேய்ந்த அவ்வீட்டைக் காட்டிவிட்டுக் கூறினார். இந்த வீடுதான்.


முதலில் மணிமச்சான் சொன்னபோது இவனுக்கு தயக்கமாக இருந்தது. அந்தப் பெண் இவனைவிடவும் மூன்று மாதங்கள் மூத்தவளாக இருந்தது யோசிக்க வைத்தது. “ அதையெல்லாம் பாக்கக்கூடாது மாப்ளே.. அஞ்சாறு வருசம் மூத்ததையெல்லாம் கட்டி நெறயப் பேரு சந்தோசமா இருக்கறாங்க. பொண்ணு வூட்டுக்காரங்க ஏழெட்டு வருசமா மாப்ள தொழாவித் தொழாவி ஓய்ஞ்சு போயிட்டாங்க…  உன்னப்பத்தி எல்லா விவரமும் சொல்லீட்டேன். ஜாதகம் மட்டும் பொருந்துனாப் போதும். அடுத்த வாரமே வேணும்னாலும் முகூர்த்தத்த வெச்சுக்கலாம். அவங்க ரெடி.. யோசிக்காம பொறப்படு..என்றார்.


பொண்ணுக்கு இருபத்தியொன்பது என்பதை நம்பவே முடியவில்லை. முப்பத்தி ஐந்து சொல்லலாம்போல் முதிர்ந்திருந்தாள். வந்த வரன்களெல்லாம் தட்டிப் போயிருந்ததின் வலி அவள் இளமையை உறிஞ்சியிருந்தது. அதிகமான பவுடர் பூச்சுடன் காபியை கொண்டுவந்து நீட்டினாள். பரிதாபமான அந்தக் கண்கள் கெஞ்சுவது போல தோன்றியது. இவன் மணிமச்சானைப் பார்த்து  சம்மதம் என்பதுபோல தலையாட்டினான்.


பெண்ணின் அப்பாவுக்கு பரபரப்பும் உற்சாகமும் தொற்றிக்கொண்டது. அன்றைக்கே போய் பொருத்தம் பார்த்து தேதி குறித்து மண்டபத்துக்கும் பணம் கட்டிவிட வேண்டும் என்பதுபோல அவசரப்பட்டார். ஜாதகங்களை ஒப்பிட்ட ஜோதிடர் உதட்டைப் பிதுக்கினார். ரச்சு தட்டுது வேலைக்காகாது என்றார். “வேற ஏதாச்சும் உபாயம் உண்டானு பாருங்க.. பரிகாரம் பண்ணி பூவெச்சுக் கேட்டு வந்தா செய்யலாமா “ என பெண்ணின் அப்பா கேட்டார். 

“மத்த பொருத்தம் பத்தலைனாக் கூட நீங்க கேக்கறமாதிரி ஏதாச்சும் பண்ணலாம். மாங்கல்யப் பொருத்தமே இல்லீங்கும்போது பேசறுதுக்கு ஒண்ணுமேயில்லை. வேண்டாம் உட்றுங்க. வேற பார்த்துக்குங்க.

பெண்ணின் அப்பாவுக்கு முகம் சோர்ந்து போனது. ஒருவாரம் கழித்துவந்த மணிமச்சான் இவனை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு தினுசாகச் சிரித்தார்.

“ஏம் மச்சி.. என்னாச்சு

உனக்கு ஏதோ சக்தி இருக்குது மப்ளே.. நீ போய் கால் வெச்சுட்டு வந்த நேரம் அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ரெடியாயிருச்சு.

அதற்குப் பிறகு நிறையப் பெண்கள் , நிறைய ஜாதகங்கள், நிறைய புரோக்கர்களைப் பார்த்தாயிற்று. திருமணத் தகவல் மையங்களிலும் பணம் கட்டிப் பார்த்தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். ஜாதக நம்பிக்கை அதிகமாகிவிட்டது தான் காரணம் என்றனர். பெண்களெல்லாம் பட்டதாரிகளாயிருக்க நீ படிக்காமல் போனதுதான் காரணம் என்றனர். மற்றுசாதி இளைஞர்கள் திட்டமிட்டு நம் பெண்களை காதலித்து கல்யாணம் செய்துகொண்டு போவதன்மூலம் நம் சாதியினை அழித்து வருகின்றனர் என பலவாகப் பிரிந்து நிற்கும் சாதித் தலைவர்கள்வேறு ஆளாளுக்கு முழங்கினர்.



வீடும் கோழிப்பண்ணையும் தோட்டத்துக்குள்ளேயே இருந்தன. சிலந்திக்குப்போல் இருந்த இடத்தில் இருந்தபடியே இரைப்பையை நிரப்பிக்கொள்ள வாய்த்துவிட்டதால். வெளிப் போக்குவரத்தும் வெளிப் பழக்க வழக்கங்களும் குறைந்து போனவனாக ஆகிவிட்டிருந்தான். அக்கம் பக்கத்திலெல்லாம் பங்காளிகளே இருந்தனர். பத்தாம் வகுப்புக்குப் பிறகு காதலிக்கும் வாய்ப்பும் அமையாமலேயே இளமை மங்கிக் கொண்டிருந்தது.



குருப்பெயர்ச்சிகளும் சனிப்பெயர்ச்சிகளும் வந்துவந்து போயின. கொடுமுடியாற்றங்கரையில் ஐயர் மந்திரம் சொல்ல வாழைகன்றுக்கு தாலிகட்டி பின் அதை வெட்டினான். ராமேஸ்வரம் அக்கினி தீர்த்தக் கடலில் பிதுர் பூஜை செய்து முங்கிமுங்கி எழுந்தான். பழனிக்கும் காவடி எடுத்தான். ஒன்றும் வேலைக்காகவில்லை. வயது முப்பத்தியொன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.


எண்பதுகளில் வந்த கவிதைகளைப் பார்த்தால் அதில் நிச்சயம் ஒரு கவிதையாவது முதிர்கன்னியைப் பாடுபொருளாகக் கொண்டிருக்கும். அந்தக் காலம் மலையேறி போய் விட்டிருந்தது. கல்யாணச்செலவு முழுவதும் ஏற்றுக் கொள்வதாகவும் , நகையென எதுவுமே வேண்டாமெனவும் சில இடங்களில் சொல்லிப் பார்த்தான். அவர்களும் சம்மதித்துவிடலாம் என்பதுபோல் யோசித்தனர். அதற்குள் இவனைப் போலவே பள்ளிப் படிப்பை முடிக்காத , அதே சமயம் இவனைவிடவும் வசதியான விவசாயி மகன்கள், கூடவே தாங்கள் பெண்ணின் அப்பா அம்மாவுக்கு பேங்க்கிலும் ஒரு லட்சம் போடுகிறோம் என்பதுபோல சகட்டுமேனிக்கு சலுகைகளை அறிவித்து பெண்களைத் தட்டிக் கொண்டு போயினர்.


வெளியே தலைகாட்ட முடியவில்லை. எங்கு சென்றாலும் யாரும் கேட்கும் முதல் கேள்வியே “ அப்புறம் எப்ப சாப்பாடு போடப்போறேஎன்பதாகத்தான் இருந்தது. நீங்களே ஒரு பொண்ணப் பாருங்க, சாப்பாடு போட்டுடலாம் என்பான். பொண்ணு ஒண்ணு இருக்கு, ஆனா படிச்ச மாப்ளதான் வேணுங்கிறாங்களே என்பார்கள். அல்லது முப்பது வயசுக்குள்ள இருக்குற மாப்ளையா கேக்குறாங்கப்பா என்பார்கள். புரோக்கர்களும் ஜோதிடர்களும் பணம் புடுங்குவதிலேயே குறியாக இருந்தனர்.


ஜாதகம் ஜோதிடத்தையெல்லாம் இவன் புறக்கணிக்கத் தயாராக இருந்தான். இவன் சார்ந்த சமூகம் அதை வேதமாகவும் வேத வாக்காகவும் நம்பியது. சுத்தமாக வெறுத்துப்போன இவன் சாதியாவது வெங்காயமாவது என தூக்கியெறிந்துவிட்டு அனாதை இல்லம் ஒன்றிற்குப் போய் பெண் கேட்டான்.




இவனை நாற்காலியில் உட்காரச்சொன்ன அலுவலர் விவரங்களைக் கேட்டறிந்தார். கண்ணாடிக்குப் பின்னால் உருண்ட அக்கண்கள் இவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதை நம்ப மறுத்தது. உங்களைப் பத்தின விபரங்களையெல்லாம் எழுதி, உங்க கிராம நிர்வாக அலுவலர்கிட்ட அதுபத்தின ஒரு சான்று வாங்கீட்டு வாங்க பார்க்கலாம் என்றார். அதுகூட சாத்தியம்தான். ஆனால் விடைபெறுகையில் அவர் ஒரு விசயம் சொன்னார். ‘நாங்க பொண்ணுகளை இருபது வயசுக்கு மேல வெச்சுக்கறதில்லை. பதினெட்டு பூர்த்தியானாலே கல்யாணம் பண்ணி வெச்சுருவோம். நீங்க முப்பத்தியொன்பது ஆச்சுங்கறீங்க. சரி, எதுக்கும் நான் சொன்னதையெல்லாம் செய்யுங்க.பார்க்கலாம்என்றார்.




விதவை – விவாகரத்தான பெண்களைத் தேர்ந்தெடுக்கலாம் என தோன்றியது. அது சம்பந்தமான விளம்பரங்களைக் கவனிக்க ஆரம்பித்தான். அழகிய இளம் விதவை, மிக வசதி, ஜாதி மதம் கல்வி வசதி வயது தடையில்லை. வீட்டோடு மாப்பிள்ளைக்கு முன்னுரிமை, என்பதுபோண்ற விளம்பரங்கள். கீழே தொடர்புக்கு செல் நம்பரைக் கொடுத்திருப்பார்கள். இது மதிரியான விளம்பரங்கள் திருமணத் தகவல் மையங்களின் பெயரோடும் வெளிவந்திருக்கும். ஏற்கனவே திருமணத் தகவல் மையங்கள் குறித்த அனுபவம் இருந்ததால் வெறுமனே செல் நம்பர்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களை தொடர்பு கொண்டான்.


இங்கே பெருசுகளையும் கோழிப்பண்ணையையும் காத்துக் கிடந்து என்னத்தைக் கண்டோம். வீட்டோடு மாப்பிள்ளையாகவே போய்விடலாம் எனும் முடிவோடு அந்த நம்பர்களுக்கு போன் செய்வான். எதிர்முனையில் பேச ஆரம்பித்த பிறகே தெரிய வரும் அந்த விளம்பரங்களும் தகவல் மையங்களின் ஏற்பாடே என்பது. ‘இருக்கு சார்.. வீட்டோடு மாப்பிள்ளைதான் வேணும் சார்.. ஐயாயிரம் கட்டி பதிவு பண்ணுங்க சார்.. நாங்க அட்ரஸ் தர்றோம் என்பார்கள். பெரும்பாலும் பேசுவது இனிய பெண்குரல்களாகத்தான் இருக்கும். ‘சரி, ஐயாயிரம் குடுத்தா நீங்களே பேசி கட்டி வெச்சுருவீங்களா…?’ என வினவினால்,இல்ல சார், நாங்க அட்ரஸ் மட்டும்தருவோம். நீக்கதான் பேசிக்கணும். பிக்ஸ் ஆயிருச்சுனா எங்களுக்கு கமிசன் இவ்வளவுனு இருக்கு அத தந்தரணும்என்பார்கள்.


சேவை மனப்பான்மையுடன் இயங்குவதாகவும் இலவசப் பதிவு எனவும் ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. இவன் ஈரோட்டிற்கு பஸ் ஏறினான். ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் அந்த மையத்தை நடத்திக் கொண்டிருந்தார். ஒரு படிவம் ஒன்றைக் கொடுத்து சுயவிவரங்களை பூர்த்தி செய்து, ஜாதக நகல் ஒன்றையும் புகைப்படத்தையும் இணைக்கச் சொன்னார். இணைத்துக் கொடுத்தான்.

பெண்களின் பைல்களை இவன்முன் அடுக்கினார். விதவைகள். விவாகரத்தானவர்கள். ஒவ்வொன்றாக புரட்டிக்கொண்டே வந்தான். எல்லா பெண்களுமே பட்டதாரிகளாகவும் உத்தியோகம் பார்ப்பவர்களாகவும் இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பும் அவ்விதமாகவே இருந்தது. ஒரேயொரு இளம்விதவை மட்டும் பத்தாவது வரை படித்திருந்தாள். அவர்களின் வசதி வாய்ப்புகளை நோக்க கண்ணைக் கட்டியது. “இத்தனை வசதிகளையுடைய பெண் ஏன் பத்தாம்வகுப்போடு நின்று போனாள்என சந்தேகமாக இருந்தது. “ அதுவா ஸ்கூல் படிக்கும்போதே டிரைவர்கூட ஓடிப்போயிருச்சு. நல்லா வசதியா வாழ்ந்த பொண்னு இல்லியா.. அவங்கூட செட்டாகம ரண்டே வருசத்தில திரும்பி வந்துருச்சு”  என்ற ஆசிரியரை பைல்களை மூடிவைத்துவிட்டு ஏமாற்றமாகப் பார்த்தான்.



“என்ன தம்பி பார்த்து முடிச்சுட்டீங்களா..? இதான் தம்பி இன்னிய நெலமை. நீங்க மட்டும்தான்னு நெனச்சுக்காதீங்க. உங்கள மாதிரி ஊருக்கு பத்து பசங்க கல்யாணம் இல்லாம இருக்கறாங்க. நம்ம கொங்கு மண்டலம் அளவுக்கு கணக்குப் போட்டாலே முப்பதத் தாண்டியும் கல்யாணமில்லாத பசங்களோட எண்ணிக்கை ரண்டு லட்சத்தைத் தாண்டும். பொண்ணுக எண்ணிக்கை அந்தளவுக்கு இல்லியே.. பத்துல ஒரு பாகம்தான் இருக்கு. அதுகளும்  முக்கால்வாசி படிச்சு நல்ல வேலைல இருக்கறதுக.




ஆண்பெண் பிறப்பு விகிதம் தொன்னூறுக்குப் பிறகு ஓரளவுக்கு சரியாத்தான் வருது தம்பி. ஆனாப் பாருங்க.. எண்பதுகள்ளயிருந்து தொன்னூறு வரக்குமான பத்து வருசங்கள்ல பெண் குழந்தை பிறப்பு விகிதம் ரொம்பவே கொறஞ்சு போச்சு. ஸ்கேன் பண்ணிப்பார்த்து வயத்துல இருக்கறது ஆணா பெண்ணானு கண்டுபுடிச்சு சொன்னாங்க இல்லியா? அதுல வந்ததுதான் எல்லா வெனையும். பத்துக்கு ஏழு பெண்குழந்தை கருவிலேயே அழிஞ்சு போச்சு. அதனால இன்னிக்கு எழுபதுக்கு மேல எண்பதுக்குள்ள பொறந்த உங்கள மாதிரி பசங்களுக்கெல்லாம் பொண்ணுக்கு டிமாண்ட் ஆயிருச்சு..


அதையுந்தவிர நீங்களெல்லாம் படிக்காம வேற போயிட்டீங்க. அன்னிய சூழ்நிலை அப்படி. ஏற்கனவே படிச்சு முடிச்ச ஒண்ணு ரெண்டு பட்டதாரிகளும் சும்மா திரிஞ்சதால, உங்கள மாதிரிப் பசங்களெல்லாம் ஸ்கூல் முடிஞ்ச உடனே பனியன் கம்பனி பவர்லூம் கோழிப் பண்ணைனு தொழில் கத்துக்கப் போயிட்டீங்க. ஆனா அதுக்கப்பறம் வந்த தாராளமயமாக்கலுக்குப் பிறகு எல்லாமே தலைகீழா மாறிப்போச்சே.. பொட்டிக்கடைக மாதிரி எங்க பார்த்தாலும் காலேஜ்க.. படிச்சவங்களுக்கெல்லா வேலையுங் கெடச்சுது. படிச்சு உத்தியோகத்துல இருக்கற புள்ளைங்களெல்லாம் தங்களுக்கும் அதேபோல மாப்பிள்ளைகதான் வேணுங்குதுக. நிலவரம் என்னனு நீங்க தெரிஞ்சுக்கோணம்னுதான் இத்தனையும் சொல்றேன். சரி, போயிட்டு வாங்க. உங்களுக்கு மேட்சா ஏதாவது வந்தா தகவல் சொல்றேன்


எங்கேயாவது பெண் இருப்பதாகச் சொல்லி மணி மச்சானும் இடையிடையே வருவதும் போவதுமாக இருந்தார். கூட்டிப்போய் காட்டிய பெண்கள் அனைவருமே பலவித காரணங்களால் திருமணம் தடைபட்டு தேங்கிப்போன முதிர்கன்னிகளாகவே இருந்தனர்.இவன் சம்மதித்த போதிலும் ஏதாவது ஒரு காரணத்தால் அந்த சம்பந்தங்களும் அமையாமலேயே போய்க்கொண்டிருந்தது. கடைசியாக அவர் அழைத்துக்கொண்டு போய் காட்டிய பெண்ணைப் பார்த்ததும் மனம் சுத்தமாகவே விட்டுப் போனது. அந்தப் பெண் இவனுக்கு முழங்கால் உயரமே இருந்தாள்.


எதுவும் பேசாமல் காபியை வாங்கிக் குடித்துவிட்டு மணி மச்சானையும் பின்னால் அமர்த்திக் கொண்டு கிளம்பினான். எதிர்ப்பட்ட ஒயின்ஷாப்பில் வண்டியை நிறுத்தினான். மவுனமாக முதல் சுற்றை முடித்துவிட்டு இரண்டாவது சுற்றுக்கு ஊற்றியபடி கேட்டான்.

“மச்சா.. இது உங்களுக்கே நல்லாருக்கா..?

இவன் என்ன கேட்கப் போகிறன் என்பதை உணர்ந்துகொண்ட மணி மச்சான் கையிலிருந்ததை ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட்டு டம்ளரை டேபிளின் மேல் வைத்தார். சங்கம்புதர் பாதையின் வழியாக பெண் பார்க்க அழைத்துப்போன மணி மச்சானை விடவும் இப்போதைய மணி செழுமையான ஆளாக மாறியிருந்தார். கழுத்துச் செயினும், மோதிரமும், குழல்விளக்கு வெளிச்சத்தில் பளபளத்தன.

“ஸாரிடா மாப்ளே.. இன்னைய தேதிக்கு உன்னோட மர்க்கெட் வேல்யூ இவ்வளவுதான். இந்த மாதிரி பொண்ணைத்தான் பார்க்க முடியும்.



நிலவு உதித்து மரங்களுக்கு மேலே வந்துவிட்டிருந்தது. அஷ்டமி நிலவு. கால் அரை வட்டமாய் மஞ்சள் நிறமாய் ஒளிர்ந்தது. பின்புறத்தில் மின்னிய நட்சத்திரங்களைக் கண்ணுற்றான். அவைதான் மிருகசீரிட நட்சத்திரக் கூட்டமோ.. எழுந்து மேலே நடக்க ஆரம்பித்தான். கழுவப்பட்டது போன்ற வெளுத்த இருள் எங்கும் படிந்திருந்தது.


சுனைக்கிணற்றின் அருகே வந்து விட்டிருந்தான். சுற்றுச் சுவரின் மேலே பதிக்கப்பட்டிருந்த செம்புளி பாறைக் கற்கள் நிலவு வெளிச்சத்தில் மவுனித்திருந்தன. சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த இரும்பு வாளி சுவரின்மேல் மத்தியில் நிறுத்தப்பட்டிருந்தது. சங்கிலியின் மறுமுனை மேலேறி இரும்பு உருளைக்குள் புகுந்து குறுக்குத் தண்டவாளத்தில் பிணைக்கப்பட்டிருந்தது.


பெரும் நிலப்பாறைகளையே பக்கச்சுவர்களாகக் கொண்டிருந்த அக்கிணற்றின் பத்தடி ஆழத்துக்கு கீழே நீர் தேங்கியிருந்தது. வெயிலில் பசேலென படர்ந்திருக்கும் பாசிகள், இப்பொழுது இன்னதென வகுத்துணர முடியாத புது நிறத்தைக் கொண்டிருந்தன. சிறு கல்லொன்றை உள்ளே வீசினான். அந்த புது நிறத்துக்குள் அந்த கல்லின் அளவு கருமை பூத்து பின் வட்டமாக விரியத் துவங்கியது.

ஆந்தையொன்றின் அலறல் கேட்டது. இவன் சுனைக்கிணறுவிட்டு விலகி மேலே நடக்கத் துவங்கினான். ஒரேயொரு மொட்டைக் கோபுரத்துடன் எப்போதோ கட்டப்பட்ட கொங்கணச்சித்தருக்கான சிறிய கற்கோவிலைச் சமீபித்துவிட்டிருந்தான். நீள உருண்டையான கற்களையடுக்கி இடுப்புயரத்துக்கு கட்டப்பட்ட சுற்றுச் சுவர்களும், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த விசாலமான முன்புறப் பகுதியும் நிசப்தித்துக் கிடந்தன. உள்ளே நுழையாமல் இடப்புறமாகத் திரும்பி நடக்கத் துவங்கினான்.


உச்சியிலிருக்கும் தவக்குகைப் பாறைகள் புலப்பட்டன. பாதை செங்குத்தாக மேலே சென்றது. தவக்குகையின் கிழபுறமிருக்கும் படுக்கை கல்லை அடைந்து விட்டிருந்தான். பையை இறக்கி வைத்தான். அப்பாடா என்றிருந்தது. வழுவழுப்பான பரந்த பாறை. யாருக்காகவோ காத்திருப்பது போல குளிர்ந்து கிடந்தது. மல்லாந்த நிலையில் கைகளையும் கால்களையும் விரித்துக் கொண்டு படுத்தான். நிலவு உச்சியை நெருங்கியிருந்தது. பின்புலத்தில் மிருகசீரிட நட்சத்திரக் கூட்டம் மின்னிற்று. கண்களை மூடிக்கொண்டான். நிசப்தம் காதுகளை நிறைத்தது.



மலைப்பாதையில் ஏறிய களைப்பு நீங்கியிருந்தது. எழுந்து செல்போனில் மணி பார்த்தான்.பணிரெண்டு இருபது. இரண்டுமணிவரைக்கு இப்படியே உட்கார்ந்துகொள்ள வேண்டியதுதான். தண்ணீர் குடித்தான். சிகரெட்டைப் பற்ற வைத்தான். “சாமிக்குனு கேக்கறதால குடுக்கறேன். பாத்து சூதானமா யூஸ் பண்ணிக்க. பப்ளிக்கா அடிச்சு நீயும் சிக்கி என்னையும் மாட்டிவுட்றாத..கஞ்சாதூள் நிரப்பிய ஒரு பெரிய சுருட்டினையும், சில சிகரெட்டுகளையும் தந்தபடி கருப்பநாடார் கூறியது ஞாபகத்திற்கு வந்தது.



இதமாக இருந்தது. அந்தர ஊஞ்சலில் அமர்ந்தாடுவதேபோன்ற களிப்பும் கிளர்ச்சியும் உண்டாகி சூழலே வேறாக மாறிப் போயிருந்தது.அந்த பலகக்கல்லுமேல உட்கார்ந்தாலே கொங்கணச்சித்தரோட அருள் நம்மமேல இறங்க ஆர்ம்பிச்சிரும் மாப்ள..துரைமச்சான் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. உண்மைதான் எனத் தோன்றியது. ஆழமாக இழுத்து புகையை மெதுவாக ஊதத் துவங்கினான்.


மற்றவர்கள் இவனைப் பார்த்து ஆறுதல் பட்டுக்கொள்ள இவன் துரைமச்சானைப் பார்த்து மனதைத் தேற்றிக் கொண்டிருந்தான். இரண்டு வருடங்களுக்கு மூத்தவர். அவருக்கே இன்னும் திருமணம் அமையவில்லை நமக்கென்ன என்பது மாதிரியான சமாதானம் அவரைப் பார்க்குந்தோறும் நினைக்குந்தோறும் உண்டாகிக் கொண்டிருந்தது.


திடீரென துரைமச்சானுக்கு திருமணம் ஏற்பாடாகியது.முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களையே பெண்களும் பெண் வீட்டாரும் ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், நாற்பத்தியொரு வயதான துரைக்கு பெண் அமைந்தது மற்றவர்களுக்கெல்லாம் நம்பமுடியாத ஆச்சர்யத்தைக் கொடுத்தது.இவன் நம்பமுடியாத அதிர்ச்சிக்கு ஆளானான். வெய்யில் காயும் மொட்டைக் காட்டுக்குள் நின்ற ஒற்றை நிழல்மரமும் வேரொடு சாய்ந்து விட்டதைப்போல உணர்ந்தான். நினைத்து ஆறுதல் கொள்ள யாருமற்றவனாக அலையத் துவங்கினான்.


மறுவீடெல்லாம் போய்விட்டு வந்திருந்த துரைமச்சான் ஒரு சுற்று பெருத்திருந்தார். இவன் கண்களின் கேள்வியை உணர்ந்துவிட்டார்போல.. பரிகாரம் ஒண்ணு பண்ணுனேன் மாப்ளே.. என்றார். அதையேன் இத்தனை வருசமா பண்ணலைனு கேக்கறியா.. இப்படியொரு பரிகாரம் இருக்கற விசயமே  சமீபத்திலதான்  எனக்கு தெரிய வந்தது.

துரைமச்சானின் மூதாதையர்களுக்கு ஜோதிட ஞானம் வாய்த்திருந்தது. தலைமுறை தோறும் தொடர்ந்து வந்த அவ்வறிவு, அவருடைய அப்பாவின் அப்பா காலத்தோடு முடிவுக்கு வந்தது. மச்சானின் அப்பாவுக்கு ஜோதிட ஞானம் கைகூடவில்லை. பலன் சொல்லத் தெரியாவிட்டாலும் பஞ்சாங்கம் பார்க்க கற்று வைத்திருந்தார். நாள், கிழமை, திதி, நட்சத்திரம் , யோகமெல்லாம் ஜோராகச் சொல்லுவார். துரைமச்சானும் அவ்வாறே.



இவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்ற துரைமச்சான் பழைய சாமான்கள் போட்டிருந்த இருட்டான அறையொன்றிற்குள் கூட்டிப் போனார். கண்ணாடி ஓட்டின் வழியாகப் பாய்ந்து தரையில் நீள்சதுரமாக விழுந்திருந்த உச்சிவெயில், அவ்வறையின் இருளைப் போக்க முயற்சித்ததில் ஒளியிழந்த வெளிச்சமாக மாறி இண்டு இடுக்குகளெங்கும் தேங்கிப் போயிருந்தது. சுவரோரத்தில் இடுப்புயரத்திற்கு நின்ற அந்தக் காலத்திய கனமான இரும்புப் பெட்டியைத் திறந்தார். அதன் உள்ளறையிலிருந்து சுவடிக்கட்டு ஒன்றை எடுத்தார். அது நைந்தும் கருத்தும் போயிருந்தது. கட்டெறும்பு வரிசைகள்போல அக்கால தமிழெழுத்துகள் அணிவகுத்திருந்தது.



இது எங்க அப்பாரய்யனோடது மாப்ளே.. அவரு காலமானதுக்கப்பறம் அவரு வெச்சிட்டிருந்த புத்தகங்கள் ஓலைச்சுவடிகளையெல்லாம் இந்த பெட்டிக்குள்ள வெச்சு பூட்டுனதோட சரி. பிறகு யாரும் கண்டுக்கல. ஒருநாள் முப்பாட்டனுக பாகசாசனம் பண்ணிக்கிட்ட கறால் பத்திரம் தேவைப்படுதுனு, இந்தப் பொட்டியைத் திறந்து தேடிகிட்டிருந்தப்பதான் இந்த சுவடி கண்ணுல பட்டுது. என்னதான் எழுதியிருக்குதுனு படிச்சுப் பார்க்கலாம்னு தோணுச்சு. படிச்சேன் என்றார்.


இதுவரைக்கும் எத்தனையோ சோசியகாரர்கள் சொன்ன எத்தனையெத்தனையோ பரிகாரங்களைப் பண்ணியிருப்பினும்கூட, துரைமச்சான் சொன்ன பரிகாரம் புதுமையானதாக இருந்தது. செய்துபார்க்க ஆவல் உண்டானது. “நம்பிக்கையோட செய் மாப்ளே.. செஞ்சா பலன் கிடைக்கும்ங்கிறதுக்கு எனக்கு நடந்த கல்யாணமே சாட்சி..என்று உற்சாகம் ஊட்டினார்.

தேய்பிறை அஷ்டமி, மிருகசீரிட நட்சத்திரம், வியாழக்கிழமை, மகர லக்கினத்தில் இவன் பிறந்திருந்தான்.  மேற்படி கிழமை, திதி, நட்சத்திரமெல்லாம் ஒன்றாக வரும் தேதியை பஞ்சாங்கம் பார்த்து தேர்ந்தெடுத்த துரைமச்சான் ‘அன்னிக்கு மகர லக்கினம் நைட்டு ரண்டுலயிருந்து நாலு வரக்கும் இருக்குது மாப்ளே.. அந்த நேரத்திலதான் நீ இந்தப் பரிகாரத்தைப் பண்ண வேண்டும்என்றார். ‘அப்புறம் முக்கியமா இன்னொன்னு.. இந்த பரிகாரம் யாருக்குமே தெரியாத சித்தர் ரகசியம். நீ வெளியே யாருகிட்டயும் சொல்லக் கூடாதுஎன்றார். பேசிக்கொண்டிருந்த இவர்களுக்கு துரைமச்சானின் புது மனைவி காபி கொண்டு வந்து கொடுத்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் கொங்கணச்சித்தரின் அருளாசி எதையும் தரவல்லது எனும் நம்பிக்கை அதிகரித்தது.

ணி ஒன்று நாற்பது ஆகியிருந்தது. பனி இறங்கிக் கொண்டிருந்தது. கன்னக் கதுப்புகளும் காது மடல்களும் சில்லிட்டன. எழுந்து சோம்பல் முறித்தான். குனிந்தும் நிமிர்ந்தும் உடலுறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் பரவச் செய்தான். அஷ்டமி நிலவு மேற்கே சாயத் துவங்கியிருந்தது. பின்புறத்தில் மிருகசீரிட நட்சத்திரக்கூட்டம் பளிச்சிட்டது.

“ஒருவன் தான் ஜனித்த கிழமை, திதி, நட்சத்திரம், லக்னம் எல்லாம் ஒன்றாக வரும் வேளையில் சித்தர்களின் ஜீவ சமாதியிலோ அல்லது அவர்கள் நீண்ட காலம் வாசம்புரிந்த தவக்குகையிலோ, ஆடைகளின்றி கருவிலிருந்து வெளிப்படும் சிசுவே போல பிறந்த மேனியுடன், எள்ளெண்ணெய் நெருப்பெரிய, அந்த சுடரையே சித்தராக பாவித்து, சிவமூலிகைச்சுருட்டு, சோமபானம் படையிலிட்டு, தானும் சிவமூலிகை புகைத்து, சித்தமெல்லாம் சித்தர் நினைவே நிறைந்திருக்க, அவன் பிறந்த லக்ன நாழிகை எவ்வளவோ அவ்வளவு நேரமும் தியானிப்பானாயின், அவன் விதி மாற்றியமைக்கப்படும். இது சத்தியம்.கணீரென்ற குரலில் துரைமச்சான் ஓலைச்சுவடியைப் படித்துவிட்டு இவனைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.


பையைத் திறந்து நல்லெண்ணை டப்பா, மண்விளக்கு, மதுபாட்டில், சுருட்டு என பரிகாரத்திற்கு தேவையான பொருட்களை வெளியே எடுத்து வைத்தான். அந்த சமதளக்கல்லிலிருந்து வடக்கே நகர்ந்து பிரமாண்டமான பாறையையொட்டியே செல்லும் கரடுமுரடான ஒற்றையடிப் பாதையில் மேலே ஏறினால் குகையின் வாசல் வரும். ஒரு பாறையின்மேல் இன்னொரு பாறை கவிழ்ந்திருக்க இடைப்பட்ட சந்துதான் குகைவாயில். படுத்தவாக்கில் ஒரு ஆள் ஆழத்துக்கு கீழே சரிந்தால் விசாலமான குகையின் உள்அறை வரும்.



குகைவாயிலுக்கு வந்தவன் பூஜைப் பொருட்களை கீழே வைத்துவிட்டு உடைகளைக் களையத் துவங்கினான். அரணாக்கயிறை அறுத்து வீசினான். இடதுகை விரலில் செம்பு மோதிரம் இருந்தது. அதையும் கழட்டினான். எதுவுமற்ற நிர்வாணம் புது அனுபவமாக இருந்தது. களைந்த ஆடைகளைச் சுருட்டி மேலே ஒரு உருண்டைக் கல்லை வைத்தான். பூஜைப் பொருட்களுடன் குகையின் வாயிலை நெருங்கினான்.


பிறந்த சிசுவேபோன்ற என்னும் துரைமச்சான் சொன்ன வாக்கியம் ஞாபகம் வந்தது. அதன் தொடர்ச்சியாய் இவ்வுடலுக்கு மூலமான விந்துத் துளியின் குரொமோசோம்களிலொன்று தனக்கான சினைமுட்டையை மோதிப்பிளந்த அந்நுண்கணத்தை மனம் உணர முயன்றது. காலடியின் இருளில் மெல்லிய மினுமினுப்பாய் எதுவோ நெளிந்தது. சற்றே குனிந்து டார்ச்சை அடித்துப் பார்த்தான்.

தூக்கும் கனம்கொண்ட ஒரு பெரிய உருண்டைக் கல்லுக்கு அடியே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது அரக்குகலர் பார்டரில் தங்க ஜரிகையிட்ட மாம்பழவண்ண பட்டுப்புடவை.
    

    

Thursday, 6 April 2017

கடன் மீண்டார் நெஞ்சம்…

தட்டி எழுப்பியதுபோல் சரியான நேரத்திற்கு விழித்துக் கொண்டிருந்தேன். மணி ஐந்தை நெருங்கியபடியிருந்தது. ஒன்றுக்கொன்று தேய்த்து சூடாக்கிய உள்ளங்கைகளால் முகத்தைத் துடைத்த வண்ணம் எழுந்து உட்கார்ந்தேன். நிலைப்படியில் தலைவைத்து அம்மா படுத்திருந்த இடம் காலியாக இருந்தது. சாயுங்கால சூரியஒளி வெண்டிலேட்டரின் வழியே கசிந்து , பொன்கம்பிகளாய் எதிர்சுவரில் பதிந்திருந்தது. வெளியே விளையாடிக் கொண்டிருந்தவர்களின் உற்சாகமான கத்தல்கள், சற்றுநேரத்திற்கொருமுறையேன காதுகளில் விழுந்தது.


எட்டி மேஜையின் மேலிருந்த அலைபேசியை எடுத்தேன். தவறிய அழைப்பாக கதிரின் பெயர் பதிவாகியிருந்தது. மூன்று பதினைந்துக்கு கூப்பிட்டுள்ளான். இனி விடுமுறை நாளானதும் சேவல்களைத் பிடித்துக்கொண்டு கட்டுக்காடுகளைத் தேடி ஓடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும்.வாரம் ஒருமுறைதான் என்றபோதிலும் மது அருந்துவதையும் தவிர்த்துவிடவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

சில மணிநேரம் ஆழ்ந்து உறங்கியதன் காரணமாய் பார்வை குளிர்ந்திருந்தது. கண்களின் பள்ளங்கள் மேவி, கன்னங்கள் உப்பி பூரித்திருப்பதுபோல் உணர்ந்தேன்.  குளித்து, பவுடர் பூசியதும் ,முகம் பொலிவுகூடி, தன் பிராயத்தில் சில வருடங்கள் குறைந்ததுவாய் இளமையுறும் என தோன்றியது. கருப்புசாமியுடன் அவ்வீட்டிற்குப்போக பெண் உட்பட அவ்வீட்டார் அனைவருமே இன்றைய என் முகத்தின் ஒளிர்வில் வசீகரிக்கப் பட்டுவிடுவார்கள் என நினைத்துக் கொண்டேன்.


குளியல் முடிந்து பேண்ட் சட்டை தரித்து வெளியே வந்தவன் கதவுசாத்தி நாதாங்கியை மாட்டினேன். வாசல்படிக்கு பக்கவாட்டில் சுவரோரமாக என் மோட்டார்சைக்கிள் நிறுத்தப் பட்டிருந்தது.  ஒன்றையொன்று பார்த்துக்கொள்ளும் கதவுகளுடன் இருபுறமும் வீடுகளிருக்க, நடுவே நீண்டபடிபோகும் அந்த உள்வாசலில் பைக்கை பின்னோக்கி உருட்டியவாறே தெருவாசலுக்கு கொண்டு வந்தேன்.  வேப்பமரத்தடியில் அம்மாவும் மற்ற குடித்தன பெண்கள் சிலரும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். பனியன் வேஸ்ட் துண்டுத் துணியில் நூல் பிரித்தபடியிருந்த அம்மாவிடம், கதவுக்கு வெறுமனே நாதாங்கியை மட்டும் வைத்திருப்பதாகச் சொல்லிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.


திரில் அமர்ந்திருந்தவரிடம் பேசிகொண்டிருந்த கருப்பசாமி என்னைக் கண்டதும் வரவேற்றார். ” வாங்க தம்பி.. வாங்க.. கொஞ்ச நேரங்கழிச்சு நானே கூப்பிடலாம்னு இருந்தேன் . நீங்களே வந்துட்டீங்க” என்றார். சுவரோரமாய் இருந்த நாற்காலியைக் காட்டி உட்காரும்படி கூறினார். மேஜையின்மேல் விரித்து வைக்கப்பட்ட நிலையில் ஜாதகம் ஒன்றும், வெள்ளைதாளும் பஞ்சாங்கமும் பேனாவும் இருந்தன. வெள்ளைத்தாளின் மேல்முகத்தில் குருவே துணை என்றும் அதற்குக் கீழே சில கணக்குகளும் எழுதப்பட்டிருந்தது.



எதிரமர்ந்திருக்கும் அம்மனிதரின் முகக் குறிப்பிலிருந்து என் வருகையின் தொந்தரவை உணர முடிந்தது. “இருக்கட்டும்ங்ண்ணா.. நீங்க பாருங்க.. நா அப்புறமா வர்றேன்” என சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.


சூரியன் மறைந்திருந்தது. கதிர்களற்ற அந்தியின் வெளிச்சத்தில் தெருக் காட்சிகள் ரம்மியம் பூண்டிருந்தது. வீடுகளின்முன் நீர்தெளித்துக் கோலம் போட்டிருந்தனர். ஜோதிட நிலையத்தையொட்டியே இடமும் வலமுமாக டீக்கடையொன்றும் சிறு மளிகைக் கடையும் இருந்தது. மளிகைக் கடையின் முன்புறமாய் வடகிழக்கில் வேப்பங்கொம்பு வளர்ந்திருந்தது. வேரிலிருந்து மூன்றடி உயரத்துக்கு மேலே மரத்தின் தண்டுப்பகுதியில் , சூலாயுதம் ஒன்றைப் பதித்திருந்தனர். சிவப்புப்பட்டு சுற்றப்பட்டு சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்டிருந்தது.


கடைக்கு அடுத்துள்ள வீட்டின் நடைதிறந்து ஒரு அம்மாள் வெளிப்பட்டாள். எண்ணைப்பாட்டில் ஊதுபத்தி பஞ்சுத்திரி தீப்பெட்டி முதலியன அவள் கைகளில் இருந்தது. தேநீரை அருந்தி முடித்திருந்த நான் சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டேன். வெளிச்சம் குறைந்து கொண்டிருந்தது. வீடுகளின் ஜன்னல்கள் ஒளியுறத் துவங்கின. நான் பார்த்த கண்மும் ஒரு ஜன்னல் வெளிச்சம்பெறத் துவங்கிய கணமும் மிகச்சரியாக ஒத்துப்போக இரவு விழித்துக் கொண்டதாய்ப்பட்டது.


வேப்பமரத்தின் அடியில் கூண்டுபோன்ற வடிவத்தில் சிறுசதுர வாய்கொண்ட விளக்குக்கூடம் வைக்கப் பட்டிருந்தது. அடுக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகளின் நிழல், மரத்தின் அடிப்பகுதியெங்கும் அந்த விளக்குமாடத்தின்மீதும் அடர்த்தியாய்க் கவிந்திருந்தது. கவிந்த அடர்நிழல், வாழ்வின் புதிரான நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளுதல் குறித்தான மனித மனதுள் உண்டாகும் பயம் எனவும், மாடத்தினுள் ஒளிர்ந்தபடியிருக்கும் அகலின் சுடர் , பயத்திலிருந்து மனதை விடுவித்து வழிநடத்தி அழைத்துச் செல்லும் நம்பிக்கையின் ஒற்றை விரல் எனவும் தோன்றிற்று.


புகைத்து முடித்திருந்தேன் ஜோதிடநிலையத்தின் முன்பகக்ம் போடப் பட்டிருக்கும் நீள மரப்பெஞ்சில் வந்தமர்ந்தேன். உள்ளே நடைபெற்றவண்னமிருந்த உரையாடல்கள் செவிகளில் விழுந்தது.

“சரி.. வேற ஏதாச்சும் சந்தேகம் இருந்தாக் கேளுங்க..?’

“வேற என்ன.. கறவைமாட்டு லோனு பயிர் லோனுனு நிறைய வாங்கி வெச்சுருக்கேன். போனதடவை எலக்சன் சமயத்துல பூராக் கடனையும் தள்ளுபடி செஞ்சாங்க. இப்பவும் தள்ளுபடி உண்டுனு பேசிக்கிறாங்க. இன்னும் நாலு மாசத்துல எலக்சன் வரப்போகுது.. ஜாதகப்படி நமக்கு சர்க்காரு சகாயம் கெடைக்க வாய்ப்பிருக்குதுங்ளா?”





அவ்விடத்தின் நிலக்காட்சிகளை கண்ணுற்றபடி அமர்ந்திருந்தேன். கடன், தள்ளுபடி என்ற வார்த்தைகள் கவனத்தை உள்ளே திருப்பியது. அரசாங்க சலுகைகள் பெற்றுவிடப் போகும் ஆவலுடன் அந்த மனிதர் ஜோதிடரின் முகத்தையே பார்த்தபடியிருந்தார்.  கருப்புசாமியின் பேனா மும்முரமாய் கணக்குகளைப் போட்டபடியிருந்தது. தலையைத் திருப்பிக் கொண்டேன்.

இருள் முற்றியிருந்தது. என் கடந்தகாலம் இருளேபோல மனமெங்கும் கவியத் துவங்கிற்று.

பூர்வீகமாய் கொஞ்சம் நிலம் இருந்தது. கிணறுகள் அற்ற வெறும் காடு. ஆடுகளை மேய்த்தும் மாடுகளை வளர்த்தும் அப்பா ஜீவித்தார். பருவமழைக் காலத்தில் மஞ்சட்சோளம் கொள்ளு நரிப்பயிறுகளை விதைத்து தீவனம் செய்து கொண்டிருந்தார். அப்பாரய்யனின் காலத்தில் மானாவாரிப் பயிர்கள் விளைந்த புன்செய் நிலங்கள் பலவும் , கிண்று கண்டு, தண்ணீர் கண்டு , பம்புசெட் மோட்டார் கண்டு, முப்போகம் விளையும் நன்செய் பூமிகளாய் அப்பாவின் காலத்தில் மாறியிருந்தது. மேலும் பல காடுகள் மாறிக்கொண்டும் இருந்தது.


நான் வளரிளஞ்சிறுவனாய் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தேன்.எங்களுடைய காடும் தோட்டமாக மாறவேன்டுமென்பதே , என் அன்றைய கனவாகவும் ஆசையாகவும் இருந்தது.  விடுமுறை நாட்களில் ஆடுகளிடமிருந்து பிரித்த குட்டிகளை மேய்த்தபடியே , நானும் அக்காவும் வேப்பமர நிழலில் கிணறுவெட்டி குண்டுமணிக்கொடியில் கரண்ட் இழுத்து மோட்டார் வைத்து , எங்கள் தோட்டத்தின் சின்னஞ்சிறு பாத்திகளுக்கு நீர்பாய்ச்சி விளையாடுவோம்.விளையாடிய அவ்விளையாட்டுகள் கனவுக்கு மேலும் ஈரம் சேர்த்தது.

ஒருநாள், குட்டிகளை விற்றுக் கிடத்த பணத்துக்கு நகை வாங்குவதா.. அல்லது வேறு ஏதேனும் செய்யலாமா என அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டிருந்தனர். நான் யோசனை கூறினேன்.

“அப்பா.. நாமளும் ஒரு கிணறு வெட்டலாமப்பா..

ம்.. வெட்டலாம். அக்கா கல்யாணம் முடியட்டும் . பிறகு வெட்டலாம்.

அக்கா இன்னும் சின்னப் புள்ளதானே.. முதலில் கிணறு வெட்டலாம். வெள்ளாமை எடுத்துச் சம்பாதிச்சு பிறகு அக்காவை நல்ல மாப்பிள்ளையாய்ப் பார்த்து நிறைய நகைபோட்டு கட்டிக் குடுக்கலாம்.


பெருமை பொங்க அப்பா என்னைப் பார்த்தார்.

“பழமை பெரிய மனுசனாட்டத்தான் பேசறே.. நாளைக்குப் பொழைக்கறதும் என்னைப் போலில்லாம பெரிய மனுசனாப் பொழச்சீனா சந்தோசந்தான்.



கால்வயிற்றுக் கஞ்சி குடித்தாலும் கடன் வாங்காது குடிக்கவேண்டுமென்பது அப்பாவின் கொள்கையாகவே இருந்தது. ஆடுமாடுகளின் மூலம் கிடைத்த வருமானத்தில் குடும்பம் நடத்தி, மிச்சம் பிடித்து, சேர்த்துவைத்து அக்காவுக்குத் திருமணமும் பண்ணினார். கிணறு வெட்ட வேண்டும் என்னும் என் கனவு நிறைவேற நீண்ட காலம் ஆகுமெனத் தோன்றியது.


கல்லூரியில்  படிக்குமளவுக்கு சிறப்பான மதிப்பெண் தகுதியோ , பொருளாதாரத் தகுதியோ இல்லாததன் காரணமாய், பனியன் கம்பனிக்கு பஸ் ஏறினேன். சம்பாதனையைச் சேமித்தேன். அப்பாவின் வருமானம் குடும்பத்தைப் பேணியது. கிணறும் தோட்டமுமான என் தீரா நெடுங்கனவு சீக்கிரமே நிறைவேறிவிடும் என தோன்றியது.


வாழ்வு ஒரு தடைதாண்டும் ஓட்டம். அதுவும் கண்ணைக் கட்டிக்கொண்டு ஓடவேண்டும். ஒருநாள் ஒருபொழுதில் தடுக்கிவிழுந்த அப்பாவைப் பக்கவாதம் முடக்கியது. பட்டி ஆடுகளையெல்லாம்விற்று வைத்தியம் பார்த்தோம். காலம் குட்டிகளையும்விற்று ஈமக்கிரியைகள் செய்ய வைத்தது


அம்மாவும் நானுமேயான குடும்பத்தில் நான் பண்ணாட்டுக்கு வந்திருந்தேன். கையில் ஐம்பதாயிரம் இருந்தது. இருபதுமுழம் கிணறுவெட்ட பேசி விட்டேன். பதினெட்டாவது முழத்தில் கிணறு தண்ணீரைக் கண்டது. இனி சாமிக்கு நீர்வார்த்துவிட்டுத்தான் மேற்கொண்டு வெட்டவேண்டுமென போயமார்கள் சென்றுவிட்டிருந்தனர். சூரியன் உச்சியில் ஒளிர்ந்த்துகொண்டிருந்த அவ்வொளி மதியத்தில் கயிறுகட்டி கிணற்றுக்குள் இறங்கினேன். ஈரம்பூசிக் கொண்டிருந்த பக்கச் சுவர்கள் கனிந்து மினுங்க, வடிந்திருந்த நீர் வெட்டுக் குழியில் தேங்கியிருந்தது. உறங்கும் குழந்தையென அசைவற்றிருந்த அச்சின்னஞ்சிறு நீர்த் தேக்கத்தை , தொடவும் மனமற்று காலமும் பொழுதும் மறந்தவனாய் பார்த்தபடியேயிருந்தேன்.


கிணற்றில் தண்ணீர் ஆன செய்தியை அக்காவுக்கு தெரியப் படுத்தியிருந்தோம். எவர்சில்வர் குடமும் பொங்கல்பானையும் புதுசாக வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். உள்ளூரிலும் முக்கியப் பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எவர்சில்வர்குடம் நிறைய கிணற்றுநீர் நிரப்பிக் கொண்டுபோய் குல தெய்வத்தைக் குளிப்பாட்டினோம். அபிஷேக ஆராதனைகள் செய்து பொங்கலும் வைக்கப் பட்டது. பொங்கல் பொங்கி வடக்கே விழுந்தது. ‘வடக்க வுழுந்தா வரவும்பாங்க.. இனி உன் மகன் கொள்ளை கொள்ளையா சம்பாதிப்பான் பாரு என்று வந்திருந்தவர்கள் கூற, என் அம்மாவின் கண்கள் பெரிதுவந்து மினுங்கியது.


முதலில் பேசிவிட்ட அளவுக்கு கிணறு இருபது முழமும் வெட்டப் பட்டிருந்தது. விவசாயம் செய்யுமளவுக்கு தண்ணீர் வேண்டுமானால் இன்னும் இருபது முழமாவது வெட்ட வேண்டும் என்றனர். நாற்பதுமுழம் வெட்டி சைடுபோரும் நிலப்போரும் ஓட்டிவிட்டால் எந்த வறட்சிக்கும் இரண்டு ஏக்கர் பாய்க்கலாம் எனத் தோன்றியது. கையிருப்பு கரைந்திருந்தது. மேற்கொண்டு பணத்துக்கு என்ன செய்வதென யோசித்து வங்கிகளை நாடினேன்.


பாட்டன் முப்பாட்டன் காலம்முதல் அப்பாவின் காலம் வரை, எவர் கைக்கும் போகாது பத்திரமாயிருந்த நிலத்தின் பத்திரங்களைக் கொண்டுபோய், நிலவளவங்கியில் வைத்து அடமானப் பத்திரத்தில் கையெழுத்திட்டேன். நாலு தவணைகளில் எடுத்துக் கொள்ளும் வண்ணம் மொத்தம் இரண்டு லட்ச ரூபாய்க்கு காசோலைகள் வந்தது.


முதல் ஆறு மாதத்திற்கு வட்டியை மட்டும் கட்ட வேண்டும்.  பிறகு வரும் ஒவ்வொரு வருடத்திற்கும் அசலையும் சேர்த்து, வருடத்திற்கு நாற்பத்திஐயாயிரமென ஏழு வருடங்களுக்குச் செலுத்தி கடனை அடைக்கத் திட்டம் தந்தனர். அதுசமயம் பக்கத்துத் தோட்டத்தில் பங்காளி ஒருவர் முப்பதே செண்ட் பரப்பில் தக்காளி நடவிட்டு, விலையும் வெள்ளாமையும் ஒத்துக்கொள்ள ஐம்பதே நாளில் ஒரு லட்சம் கண்டிருந்தார். ஏழு வருடங்கள் என்னத்துக்கு.. இரண்டே வருடங்களில் முழுக் கடனையும் அடைத்து, பத்திர்த்தை மீட்டுவிடலாம் எனும் நம்பிக்கையுடன் வங்கியிலிருந்து வெளிப்பட்டேன்.


கிணற்றை நாற்பது முழம் வெட்டினேன். நிலப்போரும் சைடு போரும் ஓட்டினேன். மின் இணைப்பு பெறப்பட்டு மோட்டாரும் வைக்கப்பட்டது. மேட்டுப் பகுதியாயிருந்த தெற்கு மேற்கு மூலைக்கெல்லாம் தண்ணீரைக் கொண்டு செல்ல, பை லைனும் போட வேண்டியிருந்தது. எல்லாமும் பண்னி சாவகாசமாய்க் கணக்குப் பார்த்தேன். வங்கியில்போக வெளியே உறவு முறை வகையிலும் ஐம்பதாயிரத்துக்குமேல் கடன் உண்டாகியிருந்தது.


முதல் வெள்ளாமையாய் அடைபயிறு போடுவதுதான் முறை என பெரியவர்கள் கூறினர்.  சாலை அய்யனிடம்போக பொன்னேர்பூட்ட உகந்த நாளை குறித்துக் கொடுத்தார்.  கம்பை வாங்கிவந்து காடெல்லாம் விதைத்தேன். காலங்காலமாய் பட்டி காத்துக் கிடந்த காடு என்பதால், விதைகள் முளைத்து பயிர் சிலிர்த்துக்கொண்டு நின்றது. குளிர்ச்சியும் பசுமையுமாய் தாள்கள் நீள, பச்சைக் கடலெனவும், கம்பளமெனவும் காற்றில் அலையாடியது.


அது பெரிய வெங்காயத்திற்கான பட்டமாக இருந்தது. எல்லா தோட்டங்களிலும் வெங்காயம் நடவிட்டிருந்தனர். நிலவிய தட்பவெப்பம் வெள்ளாமைக்கு ஒத்துப் போனது. கர்நாடகா ஆந்திர மாநிலப் பயிர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய வெக்காயம் இங்கே காட்டுக்குள்ளேயே கிலோ பனிரண்டு ரூபாய்வரை விலைபோனது. ஒரு ஏக்கர் நடவிட்டிருந்தவர்கள்கூட முட்டுவழிச் செலவுபோக ஒன்றரை லட்சம்வரை லாபம் பார்த்திருந்தனர்.

பொழுதுகிளம்பி வேலிக்குமேலே வந்திருந்தது. புடைகட்டும் தருணத்தில் அறுக்கப்பட்டு அரிஅரியாய் கம்பந்தட்டுகள்  பாத்திகளில் கிடந்தது. பனிப்பதம், கட்டுவதற்கு தோதாக இருந்தது. கத்தைகளாகக்கட்டி குச்சுகளில் எடுத்து நிறுத்தியபடியிருந்தேன். கம்பங்கட்டையில் எந்த வெள்ளாமையும் நன்றாகவரும் என்பதால் அடுத்து யாது செய்யலாம் என மனம் யோசித்தபடியிருந்தது.  செட்டிபாளையத்தைச் சேர்ந்த பெரியகாட்டு முருகேசன் வந்திருந்தான். கண்ணபுரம் தேருக்கு புடிக்கலாம்போல இரண்டு காளைகள் வளர்ப்பதாகவும், அவைகளுக்குப் போட கம்பந்தட்டு வேண்டுமெனவும் கேட்டான். புடைகட்டும் பக்குவத்தில் அறுக்கப்பட்ட கம்பம்பயிர்கள் காளைகளுக்கு நல்ல திறத்தையும் மேனி மினுமினுப்பையும் தருமென்பதால் , தேர்க்காட்டில் காளைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று சொன்னான். என்னிடமும் இரண்டு கன்றுகள் இருந்தது. அவைகளுக்குப்போக மீதியைத் தருவதாக ஒப்புக்கொண்டேன்.  எங்களின் உரையாடல் மற்ற விசயங்களுக்கு வந்தது.


“இந்த தோட்டம் ஒரு மூணு ஏக்கர் இருக்குங்களா..?

ம்.. கெணறு கட்டுத்தரை சாலையெல்லாம்போக மூணு ஏக்கர் சேரும்

ஆமா..எதுக்காக  கெணத்து நெறையத் தண்ணீய வெச்சுக்கிட்டு பூராக்காட்ல்யும் கம்பப் போட்டீங்க..?

புதுத் தோட்டம். மொத வெள்ளாமை. அடபயிறு போடறதுதான் நல்லதுனாங்க. அதான்..

அடப் போங்கணா.. சம்பிரதாயத்துக்கு கிணத்தடீல மட்டும் கொஞ்சம் கம்பு போட்டுட்டு மீதி பூரா வெங்காயத்த நட்ருந்தீங்கனா.. இன்னிக்கு எங்கியோ போயிருப்பீங்க. அதுவும் உங்குளுது பட்டிகாத்து காரம் ஏறிக் கெடந்த காடு. ஏக்கராவுக்கு இருபதாயிரம் கிலோ சுத்தமா ஆயிருக்கும். ரண்டு ஏக்கர் வெச்சுருந்தாக்கூட  நாப்பதாயிரம் கிலோ எடுத்திருக்கலாம். கிலோ பன்னெண்டு ரூபாய்னா கணக்குப்போட்டு பாருங்க.. எவ்வளவு ஆயிருக்கும்னு.. வெங்காயம் இனி இந்த வெலைக்கு எந்தக் காலத்துல விக்கப் போகுதோ.. அப்படியே வித்தாலும் அப்ப நம்ம கெந்த்துல தண்ணி இருக்கோணம். வெள்ளாமை ஒத்துக்கோணம். அநியாயமா ஏமாந்திட்டீங்களேண்ணா..


பேசாமல் வெங்காயம் வைத்திருக்கலாம் என தோன்றிற்று. நடைமுறை சம்பிரதாயம் என கம்பைப் பயிரிட்டு பெரிய வருமானத்தை இழந்துவிட்டோமே என ஏமாற்றமாக இருந்தது. இனி காலத்துக்கும் வெள்ளாமை எடுக்கத்தானே போகிறோம் அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம் என சமாதானப் படுத்திக் கொண்டேன். காட்டை தயார்செய்து நிலக்கடலையும் தக்காளியும் பயிரிட்டேன், இரண்டிலும் ஓரளவுக்கு ஆதாயம் கிடைத்தது.


கிடைத்த வருமானத்தில் வங்கிக்கு செலுத்தவேண்டிய ஆறுமாத வட்டியையும் ஒரே தவணையில் செலுத்தினேன். வெளிக்கடன்களுக்கான வட்டிகளையும் பைசல் செய்தேன். மீதிப்பணத்தை குடும்பச் செலவிற்கும் அடுத்த போகத்துக்கான முட்டுவழிச் செலவுக்கும் வைத்துக்கொண்டேன். பெரியவெங்காயப் பட்டத்திற்காக காத்திருந்தேன்.


அந்த வருடத்தில் வழக்கத்துக்கு அதிகமான பரப்பில் பெல்லாரி வெங்காயம் நடவு விழுந்தது. முந்தைய வருடத்தில் பெரும் லாபம் கண்டவர்கள் காடுமேடெல்லாம் போர்வெல்போட்டு தண்ணீரைக் கண்டு வெள்ளாமையை உண்டாக்கியிருந்தனர். விவசாயமே ஆகாதென தரிசாய்ப் போட்டுவிட்டுச் சென்றிருந்தவர்களும் கூட, திரும்பிவந்து நிலத்தை சீர்செய்து வெங்காயம் நடவிட்டிருந்தனர். நான் இரண்டு ஏக்கர் நடவுபோட்டிருந்தேன்.  குறைந்தபட்சம் ஏக்கருக்கு ஒரு லட்சம் கிடைத்தாலும்கூட , இரண்டு லட்சம் லாபம் பார்த்துவிடலாம் என மனம் கணக்குப் போட்டது.


பயிர்கள் குரம்பை கட்டும் பக்குவத்தில் இருந்தன. மேகாற்று ஆரம்பித்திருந்தது. கோடைமழை பொய்த்திருந்தது. காற்றுக்காலத்தில் நீர்மட்டம் குறைந்துவிடும் என முன்பே தெரிந்திருந்தும்கூட, கோடைமழை பெய்யும், சமாளித்துவிடலாம் என பரவடியாய் நடவிட்டிருந்தவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். போர்வெல் லாரிகள் ஊருக்குள் வரத்துவங்கின. கனத்த இரும்பு உருளைகள் நிலத்தை துளையிடும் ஓசை ஏதேனுமொரு மூலையிலிருந்து கேட்டபடியேயிருந்தது.

பக்கத்துத் தோட்டத்திலும் 6 ½ இன்ஞ்ச் போர்வெல் வண்டியை வரவழைத்து ஆழ்குழாய் கிண்று தோண்டினர். குழி அறுநூறு அடி வரைக்கும் போனது. அதற்குமேல் ஓட்டமுடியாத அளவுக்கு தண்ணீர் பொத்து கொப்பளித்தது. அடுத்த ஒரே வாரத்தில் என்னுடைய கிணற்றின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. மனம் பதறியது. ஊரெல்லாம் புகுந்து புறப்பட்ட போர்வெல் லாரி கடைசியாக என் தோட்டத்திற்குள்ளும் நுழைந்தது.   


போர்போட்டு கம்பரஸர் மாட்டிய வகையில் அந்தப் போகத்திற்கு கூடுதலாக எழுபதாயிரம் செலவாகியிருந்தது. அக்கா அவளுடைய நகைகளைக் கழட்டிக் குடுத்திருந்தாள். கூட்டுறவு வங்கியில் வைத்து பணம் வாங்கி கூடுதல் செலவைச் சமாளித்திருந்தேன். வெங்காய அறுவடை ஆரம்பித்திருந்தது. வடமாநிலப் பயிர்கள் மழைக்குத் தப்பிவிட்டதாகவும், காய்வரத்து அதிகமிருப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருந்தன. நல்ல காய்கள் காட்டுக்குள் கிலோ ஐந்து ரூபாய்வரை விலை போயின.


முட்டுவழிச்செலவுகள் போக என் கையில் முப்பதாயிரம் எஞ்சியிருந்தது. ஒரு வருடத் தவணைத் தொகை நாற்பத்தி ஐந்தாயிரத்திற்குப் பதில் வெறும் ஐந்தாயிரம் ரூபாயைக் கொண்டுபோய் வங்கியில் கட்டினேன். அடுத்த போக வெள்ளாமை எடுத்து நகைகளை மீட்டுத் தருவதாக அக்காவிடம்போய் சொல்லிவிட்டு வந்தேன். உறவு வகையில் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக வெளிகடன்களுக்கான வட்டிகளைக் குடுத்து முடித்திருந்தேன். வெங்காயப்பணம் முழுவதுமாகக் கரைந்திருந்தது. குடும்பச் செலவு முட்டுவழிச் செலவு என மேலும் செலவுகள் காத்துக் கொண்டிருந்தது. நானும் புதிய கடன்களை பெறத் துவங்கியிருந்தேன்.


நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமான மாய விளையாட்டு ஆரம்பமாகத் துவங்கியிருந்தது.  வேளாண் விளைபொருட்களுக்கான விலை நிலையற்றதாகவும் , முன்னரே அறிந்துணரமுடியாத புதிர்த்தன்மையுடையதாகவும் இருந்தது. ரசாயன உரங்களையும் ம்ருந்துகளையும் பயன்படுத்துவது அதிகரித்திருந்தது. அதற்கேற்றாற்போல் நோய்களும் , புழு பூச்சிகளின் தாக்குதல்களும் புதுசுபுதுசாக உண்டாகிக் கொண்டும் இருந்தது. வெள்ளாமை செய்பவர்களே விதைகளையும் உற்பத்தி செய்துகொள்ளும் வழக்கம் மாறியிருந்தது.   பூச்சிமருந்துக் கம்பனிகளே விதைகளையும் தயாரித்து விதவிதமான பெயர்களையும் சூட்டி விற்பனைக்கு கொண்டுவரத் துவங்கின. பெரும்பகுதி வருமானம் உரக் கடைகளின் வழியாக அந்தக் கம்ப்னிகளுக்கே போய்ச் சேர்ந்துகொண்டிருந்தது.




வங்கியிலிருந்து கடிதங்கள் வந்தபடியேயிருந்தது. தவணைத்தொகை, வட்டி, கட்டத்தவறியதன் காரணமாய்ப் போடப்பட்ட தண்டவட்டி, அபராதவட்டி, ஆகமொத்தம் நிலுவையிலிருக்கும் கடன் தொகை என பட்டியலிடப்பட்ட பதிவுத் தபால்கள் வந்து பயமுறுத்திற்று. நடைமுறையிலிருக்கும் சிக்கல்களைத்தாண்டி எடுத்த வருமானம், குடும்பச் செலவிற்கும் , தேதியானதும் வந்துநிற்கும் வெளிக் கடன்காரர்களின் வட்டிக்குமே சரியாகப் போய்க்கொண்டிருந்தது. வங்கி வருடக்கணக்கு முடிவிற்கு வரும் கடைசி மற்றும் அதற்கு முந்தைய மாதங்களில், வங்கி அதிகாரிகள் காரை எடுத்துக்கொண்டு நேரிலும் வரத் துவங்கினர். இல்லாத பொய்களையெல்லாம் சொல்லி எப்படியோ சமாளித்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன்.


கண்ணுக்கு தெரியாதவிதமாகவே எல்லாப் பாதைகளும் அடைக்கப்பட்டு திடீரென பெரும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டதைப்போல தோன்றிற்று. உரம், பூச்சிமருந்தைப் பயன்படுத்தாமல் ஒரு சோளப்பயிரைக்கூட விளைவிக்க முடியாது என்னும் நிலமை உண்டாகியிருந்தது. அதுவரைக்கும் ஆறுமாதம்வரை கால அவகாசம் கொடுத்து கடனுக்கு சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்த மருந்துக் கம்பனிகள், திடீரென பணத்தைக் கட்டிவிட்டு பிறகு உரம் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் என உரக் கடைகளுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தன. அதையே உரக்கடைக்காரர்களும் விவசாயிகளுக்கு நடைமுறைப்படுத்தினர்.


கிணற்றுப்பாசனம் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனமாக மாறிப் போயிருந்தது. கிணறுகள் மழைக்காலங்களில் மட்டும் கிணறுகளாகவும், மற்றைய காலங்களில் கம்பரஸர் மோட்டார் மூலம் போர்க்குழிகளிலிருந்து எடுக்கப்படும் தண்னீரை தேக்கப் பயன்படும் தொட்டிகளாகவும் ஆகியிருந்தன. போர்க்குழிகளில் நீர் இருப்பினும் இல்லாவிடினும் , இலவச மின்சாரம் கம்பரஸர் மோட்டார்களை இருபத்திநான்கு மணி நேரமும் இயங்க வைத்த படியேயிருந்தது.  திடீரென ஆழ்துளைக் கிணறுகள் காய்ந்து போவதும், புதிதாகத் தோண்டப் படுவதும் வாடிக்கையாய் ஆனது. ஒவ்வொரு போகத்திற்கு முன்பும் உழவு ஓட்டவேண்டும் என்பதைப் போலவே, ஒவ்வொரு கோடையிலும் போர்வெல் போடவேண்டும் என்பதும் வழக்கத்திற்கு வந்திருந்தது.


மழைக்காலம் வெயிற்காலம் காற்றுக்காலமென பருவங்கள் மாறியபடியேயிருந்தது. என் கஷ்டகாலம் மட்டும் தொடர்ந்தது. பிணம் எரிந்த சிதைமேடுகளென சாம்பல்நிற மண்குவிந்த போர்வெல் குழிகள் மேலும்சில தோட்டத்துக்குள் உருவாக்கப்பட்டிருந்தது. நான் கடனால் முழுவதும் பீடிக்கப்பட்டிருந்தேன். வங்கிக்கடன் அளவுக்கே வெளிக்கடன்களும் வளர்ந்திருந்தது.  பால்யத்தின் வேப்பமரநிழலில் விளையாட்டுப் பொருளாகயிருந்து உற்சாகமூட்டிய தோட்டத்துக்கும் கிணற்றுக்கும் என்னையொரு விளையாட்டுப் பொருளென ஆக்கி காலம் உருட்டி விளையாடியது.


விவசாயம் செய்தால் பணம் சம்பாதித்துவிடலாம் என்பதைவிடவும், பணம் இருந்தால்மட்டுமே வேளாண்மை செய்யமுடியும் என்கிற நிலமை உண்டாகியிருந்தது. தண்ணீர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதல் , விலைகளின் நிலையற்ற தன்மை, போன்றவைகள் போதாதென்று, ஆள் கிடைக்காமையும் பெரும்பிரச்சனையாக உருவெடுத்திருந்தது. பனியன் கம்பனிகளின் பேருந்துகள் ஊருக்குள்ளும் மாதாரிவளவுகளின் இண்டு இடுக்குகளுக்குள்ளும் புகுந்து புறப்பட்டு ஆட்களை அள்ளிக்கொடு போயின. வேலை முடிந்ததும் இரவு வீட்டு வாசற்படியருகிலேயே கொண்டு வந்து இறக்கியும் விட்டன.

நிழலடி வேலையும், கூடுதல் சம்பளமும் , ‘வாங்க போங்கஎனும் மரியாதையான விளிச்சொற்களும் , அவர்களுக்கு புது மலர்ச்சியைக் கொடுக்க காட்டு வேலைக்கு வர மறுத்தனர். வாடகைக்கு மினி ஆட்டோக்களையும், வேன்களையும் அமர்த்திக்கொண்டுபோய் தூரந்தொலைவிலுள்ள ஆட்களை அழைத்துக்கொண்டுவந்து வேலைமுடிந்ததும் திரும்பவும் கொண்டுபோய் விட்டுவிட்டு வர, முட்டுவழிச்செழவு கூடுதலாகி கனத்தது.


பாலத்தினடியே நதியோட்டம்போல காலம் நழுவியோடிக் கொண்டிருந்தது. வங்கிக் கடனுக்கான தவணைக் காலம் முடிந்திருந்தது. சொத்தை ஏலத்தில் விடவும், ஜப்தி செய்யவும் உரிமை வந்துவிட்டதெனவும், குறிப்பிட்ட தேதிக்குள் ஆஜராகி கடனை முழுவதுமாக செலுத்தத் தவறினால், சட்டரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வங்கியிலிருந்து வக்கீல் நோட்டீஸ் வந்தது.


தொடர்ந்து கிடைக்கப்பெற்ற எதிர்மறை அனுபவங்கள் மனதைச் சோர்வடையச் செய்தது. வெள்ளாமையெடுத்து கடனைக் கட்டிவிட முடியும் எனும் நம்பிக்கையை இழந்திருந்தேன். மொத்தமுள்ல மூன்றரை ஏக்கரில் இர்ண்டு ஏக்கரை மட்டும் விற்று, வங்கிக் கடனை பைசல் செய்து விடுவதெனவும், மீதமுள்ல ஒன்றரை ஏக்கரை வைத்திக்கொண்டு வெளிக்கடன்களை சமாளித்துக்கொள்ளலாம்  என்றும் தோன்றிற்று. சுற்றி நாற்புறமுமுள்ள  ஒருப்பொளிப் பண்னையகாரர்களுக்கு தகவலைக் கூறினேன். ‘ பண்ணையம் புடிக்கற மாதிரியா நெலமை இருக்குது. எங்க நிலமையும் கிட்டத்தட்ட உன்னுடையது போலத்தான். உனக்கு தலைக்குமேல போயிருச்சு .. எங்களுக்கெல்லாம் கழுத்துவரைக்கும் இருக்குது. அவ்வளவுதான் வித்தியாசம்என்றனர்.


“மூட்டப்பூச்சிக்குப் பயந்துட்டு யாராச்சும் வீட்டைக் காலி செய்வாங்களா.. பேங்க்லோன் யாருக்குத்தான் இல்லாம இருக்குது.. நானுங்கூடத்தான் ஐந்துலட்சம் வாங்கி டிராக்டர் எடுத்திருக்கேன். முதல் வருசம் ஒழுங்கா டியூ கட்டுனேன். இந்த ரண்டு வருசமா ரசீதே போடல. தைரியமா இரு. வெள்ளாமை ஒத்துக்கிட்டா ரண்டே போகத்துல எல்லாக் கடனையும் அடச்சிரலாம். அவசரப்பட்டு தோட்டத்த தொலச்சிராத.. மண்ணுப் போனா போனதுதான். மறுபடியும் சம்பாதிக்க முடியாது “ என பக்கத்துத் தோட்டத்தைச் சேர்ந்த சித்தப்பா ஒருவர் புத்தி கூறினார்.


“உங்களுது வேற என்னடது வேற சித்தப்பு.. என் கடனுக்கு டைம் முடிஞ்சு ஓவர்டி ஆயிருச்சு. ஆனா உங்களுக்கெல்லாம் தவணைக்காலமே இன்னும் நாலு வருசம் பாக்கி இருக்குது. பேங்க்காரன் நெனச்சா உங்க சொத்தை என்னவேணா பண்ணலாம்னு வக்கீலே சொல்றாரு


அட அப்படித்தான் சொல்லுவானுக.. சும்மா மெரட்டறதுதான். ஒரு பத்தாயிரத்தத் தூக்கி வக்கீல் டேபிள்ல வெச்சுப்பாரு.. பேங்காரன் எதுவும் பணமுடியாதபடிக்கு ஸ்டே வாங்கித் தாரேன்.. இன்னும் பத்து வருசத்திக்கு கடனக்கட்ட கால அவகாசம் வாங்கித் தாரேன்னு அதே வக்கீல் சொல்வாரு. போ.. போய்த் தைரியமா இரு.. காலம் இப்படியா போயிரும்?



காலம் அப்படியேதான் போய்க்கொண்டிருந்தது. காருமழை பொய்த்து பின்வந்த கோடை காலத்தில் என் நிலமை மேலும் மோசமடைந்திருந்தது. கிணறும் போர்வெல் குழிகளும் காய்ந்தே போயின. தெக்கோட்டு மூலையிலிருந்த ஒரேயொரு போர்க்குழியில் மட்டும் கொஞ்சமாகத் தண்ணீர் இருந்தது. குடிநீருக்கும் ஓரஞ்சாரமாக வைத்திருந்த தென்னம்பிள்ளைகளுக்கு பொய்த்தண்ணி கட்டுவதற்கும் அது சரியாகிக் கொண்டிருந்தது. ஒரு கறவைமாடு மட்டும் இருந்தது. பால் ஊற்றுவதன் காரணமாய்க் கிடைத்த அந்த சொற்ப வருமானத்தைத் தவிர வேறு வரும்படிகள் இல்லாதவனாகவும் அதேசமயம் எல்லாவிதமான செலவுகளையும் பண்ணவேண்டியவனாகவும் இருந்தேன். வெளிக்கடன்களுக்கு வட்டி கட்ட முடியாமல் தொங்கல்விழ ஆரம்பித்தது. பொழுது கிளம்பியதும் வந்துநிற்கும் கடன்காரர்களைச் சமாளித்து அனுப்புவது வழக்கமாகவே ஆகியிருந்தது. வங்கி அதிகாரிகள் சொத்தை ஏலத்திற்கு கொண்டுவந்துவிடுவோமென மிரட்ட, வெளிக் கடன்காரர்களோ மானம் மரியாதையை சந்தி சிரிக்க வைத்துவிடுவோமென மிரட்டத் துவங்கியிருந்தனர்.  நான் பண்ணயத்தை மறுபடியும் விலை சொல்ல ஆரம்பித்திருந்தேன். ஒட்டுமொத்தமாக தோட்டம், கிணறு, நடுவிலிருக்கும் வீடு என சகலத்தையும் கொடுத்துவிடுவதாக புரோக்கர்களிடம்போய் சொல்லி வரத் துவங்கினேன்


பொழுது உச்சியை நோக்கி ஏறியபடியிருந்தது. காற்றோட்டம் நின்று வெய்யில் உக்கிரம் பெற்றிருந்தது. தவிடு வாங்குவதன் பொருட்டு கடைக்குப் போயிருந்தவன், மூட்டையை மொபட்டில் வைத்தபடி திரும்பவும் வந்துகொண்டிருந்தேன். தோட்டத்தின் கடவுக்குள் நுழைகையில் அம்மாவும் அக்காவும் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அக்கா ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்பது சற்றே மகிழ்ச்சியைக் கொடுத்தது. என்றாலும் அவள் காட்டுக்குள் திரிவதேபோன்ற சாதாரண சேலையில் வந்து அமர்ந்திருப்பதும், வாசலில் மச்சானின் மொபட்டைக் காணாததும் பயத்தையும் பீதியையும் உண்டு பண்ணியது. அவளது நகைகளை வாங்கிவந்து அடமானத்தில் வைத்திருந்தது மீட்கப்படாமலேயே கிடந்தது. அதுவும் தவிர கணவன் வழி உறவு வகைகளிலிருந்தும் கணிசமான தொகை பெற்றுத் தந்திருந்தாள். அந்தக் கடன்களுக்கும் சில மாதங்களாக வட்டிகட்ட முடியாமல் போயிருந்தது. அதன் காரணமாக குடும்பத்தில் மனச்சங்கடம் உண்டாகி கிளம்பி வந்துவிட்டாளோ என தோன்றியது. அப்படி ஏதாவது எனில் இருக்கும் ஒரேயொரு கறவை மாட்டையும் விற்றாவது அவளது பிரச்சனைகளை தீர்த்துவைத்து விடவேண்டும் என நினைத்துக் கொண்டபடி  அவளை வரவேற்றேன்.

“வாக்கா.. வாவா.. எந்நேரம் வந்தே?

இப்பத்தான் கொஞ்ச நேரம் ஆச்சு

மச்சான்.. தினேஷ்.. எல்லாம் நல்லாயிருக்காங்கள்ல

“ம்..

தவிட்டு மூட்டையைத் தூக்கிக் கொண்டுபோய் சுவரோரமாக நிறுத்தினேன். அக்காவிடம் அடுத்ததாக என்ன கேட்கலாம் என உள்ளே யோசனை ஓடிக்கொண்டிருந்தது. அதற்குள் அம்மாவே பேச ஆரம்பித்திருந்தாள். “ கொசவன் அடுப்பு வாங்கலாம்னு காங்கயம் சந்தைக்கு வந்திருந்தாளாமா..  வந்த எடத்துல உன்னட பேருக்கு கிளி சோசியம் பார்த்திருக்கறா.. சீட்டு செரியில்லாம வந்திருக்குது. உடனே புள்ள பயந்துபோயி பாத்துட்டுப் போலம்னு அப்படியே கிளம்பி வந்துட்டா..



அக்காவின் வருகைக்கு நான் நினைத்த மாதிரியான காரணங்கள் இல்லையென்பது சற்றே ஆறுதலைக் கொடுத்தது. தூண்காலில் சாய்ந்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். அம்மா மதிய சமையலுக்கான வேலைகளை ஆரம்பித்திருந்தாள்.  நான் அக்காவிடம் அவள் குடும்பத்தின் ஷேம சவுக்கியங்களையும், வெள்ளாமை விளைச்சல்களைப் பற்றியும் விசாரித்தபடியிருந்தேன். எங்களின் பேச்சு தொடர்ந்தபடியேயிருந்தது. அவர்கள் வந்து சேர்ந்தனர்.

ஜீப்பும் வேனும் பின்தொடர கடவுக்குள் நுழைந்த வெள்ளை அம்பாசிடர் கார்  வேலா மரத்தினடியே வந்து நின்றது. செய்வதறியாத திகைப்புடனும் அச்சத்துடனும் எழுந்துசென்று  காரிலிருந்து இறங்கிய வங்கி அதிகாரிகளுக்கு வணக்கம் வைத்தேன்.  பணம் புரட்ட செய்து கொண்டிருக்கும் ஏற்பாடுகளையும் , தோட்டத்தை விற்று கடனைக் கட்ட முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லி மேலும் சில வாரங்கள் கால அவகாசம் கேட்டேன். என் குரலில் நடுக்கம் உண்டாகியிருந்தது.


“இப்படியேதான் ஆறு மாசமா சொல்லீட்டிருக்கறே.. நீ எப்ப தோட்டம் வித்து எப்ப கடனக் கட்டறது? உன் கடனுக்கு டைம் முடிஞ்சு ஒரு வருசம் ஆகுது. இன்னும் அஞ்சு பைசாவுக்குக்கூட ரசீது போடல. வசூல் பண்றதுக்காக என்னய்யா நடவடிக்கை எடுத்தீங்க? என்னய்யா பண்றீங்க எல்லாம்னு மேலதிகாரிங்க எங்களை நெம்பறானுங்க.. அதனால தம்பீ.. குறஞ்சது ஒரு இருபத்தி அஞ்சாயிரமாவது கட்டி இன்னிக்கே ஒரு ரசீதப் போடு. மூணு மாசம் என்ன.. ஆறு மாசம் வேணும்னாலும் டைம் தர்றோம்.


இருபது ரூபாய்க்குக்கூட வழியற்றவனாகயிருந்தேன். இருபத்தி ஐயாயிரத்துக்கு எங்கே போக? திரும்பவும் வங்கி அதிகாரிகளிடம் மன்றாடத் தொடங்கினேன். “ சார்.. பொறுத்துக்குங்க சார்.. ஒரு நாலு நாள் அவகாசம் குடுங்க சார்..  தலைய அடமானம் வெச்சாவது ஏற்பாடு பண்ணீட்டுவந்து ரசீது போட்டர்றேன் சார்.. கொஞ்சம் இரக்கங் காட்டுக்க சார்..


அதிகாரிகள் என் குரலை செவிமடுக்க மறுத்தனர். அம்மாவும் என்னோடுசேர்ந்து கெஞ்ச ஆரம்பித்திருந்தாள். ஐயா என்றும் சாமி என்றும் மவராசரே என்றுமான விளிச் சொற்களைப் பயன்படுத்தி அழும் குரலில் கெஞ்சிக் கொண்டிருந்தாள். பந்தலின் காலைப் பிடித்து நின்றபடி, பிரமை பிடித்தவளைப் போல அக்கா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“இங்க பாரு தம்பி.. பணம் இருந்தா ரசீது போடு. இல்லையா பேசாத. இன்னிக்கு பணம் கட்டாத பட்சத்துல ஜப்தி பண்னச் சொல்லி எங்களுக்கு உத்தரவு. இருக்கற பண்ட பாத்திரங்களையெல்லாம் தூக்கீட்டுப் போறோம். நீ நாளைக்கு வருவியோ..  இல்ல நாலுநாள் கழிச்சு வருவியோ.. எப்ப வேணும்னாலும்வந்து ரசீதப் போட்டுட்டு பொருட்களையெல்லாம் மீட்டுக்க.. புரியுதா..?


அம்மாவும் அப்பத்தாளும் வாக்கப்பட்டு வருகையில் சீதனமாய்க் கொண்டுவந்த பித்தளை ஏணங்கள் மூலையில் அடுக்கப்பட்டிருந்தது. இரண்டுபேர்போய் எடுத்துக் கொண்டுவந்து வாசலில் வைத்தனர். ஒருவர் பேப்பரில் குறித்துக் கொண்டிருந்தார். நீர்வழியும் கண்களுடன் சேலைத் தலைப்பால் வாயைப் பொத்தியபடி அம்மா புழுதிக் காட்டுக்குள்போய் அமர்ந்து கொண்டிருந்தாள். வலது உள்ளங்கையால் நெற்றியைத் தாங்கியபடி திராணியற்றவனாய் வாசல்படல் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் பட்டியலில் என் மொபட்டும் சேர்க்கப்பட்டிருந்தது. 

பசித்த பாம்பென வெய்யில் எல்லாவற்றையும் விழுங்கியபடியிருந்தது. பார்வை கண்களிலேயே தேங்கிக் கொள்ள , தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கும் என் முன்னால் வந்து நின்ற அக்கா, நான் தலை நிமிரும் நேரத்திற்குள் கழுத்திலிருந்த அந்த ஒற்றைச் சங்கிலியையும் கழட்டி என் கைகளில் திணித்தாள். இந்தா.. மூணு பவுனு.. என்ன வெலைக்கு போகுமோ போற வெலைக்கு வித்து ரசீதப் போட்டுரு..”  உணர்ச்சிகள் மரத்துப் போன நிலையில் அணு அளவாய் சுருங்கி சிறுத்துப் போயிருந்த என் மனம் வெடித்தது.  என்னிலிருந்து வெளிப்பட்ட பேரழுகையின் ஓலம் அதிகாரிகளை ஸ்தம்பிக்க வைக்க அவர்கள் செய்வதறியாது நின்றனர்.    


இந்த கடன் தொல்லை எனை மட்டுமல்லாது அக்காவின் குடும்பத்தையும்சேர்த்து பாழ்பண்ணிவிடுமோ என்னும் பயம் நாளுக்குநாள் அதிகரித்தபடியேயிருந்தது. முன்னிலும் தீவிரமாக தோட்டத்தை விற்பதற்கான முயற்சிகளில் இறங்கினேன். கொடுவாய் பேருந்து நிறுத்தம் அருகே முடிதிருத்தகம் வைத்திருக்கும் பூபதி தன் பேச்சு சாமார்த்தியத்தின் மூலமாக கேரளாவில் கந்துவட்டித் தொழில் செய்துகொண்டிருக்கும் ஒருவரை கூட்டிக்கொண்டு வந்தான்.

விலை முடிந்திருந்தது. வங்கிக்கடன் அளவுக்கான தொகையை முன் பணமாகப் பெற்றுக் கொள்வது எனவும், பேங்க் லோனை கட்டி பத்திரத்தை மீட்டு கிரயம் எழுதித்தரும் நாளில் மீதித் தொகையை பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. வரப்போகும் தேர்தலின் காரணமாக அப்போதிருந்த அரசாங்கம் விவசாயக் கடன்களுக்கான அபராதவட்டி தண்டவட்டிகளையெல்லாம் அடியோடு ரத்து செய்தது. அந்தவகையில் எனக்கு ஒரு லட்ச ரூபாய்க்குமேல் மிச்சமாகியது. அதுநாள்வரைக்கும் நிலுவையிலிருந்த வட்டியோடுசேர்த்து வெளிக்கடன்களையெல்லாம் பைசல் செய்ய முற்பட, ‘நீயே பண்ணயத்த வித்து கடங் கட்டறே.. எங்களுக்கு அசல மட்டும் குடுத்தாப் போதும்  வட்டியெல்லாம் வேண்டாமென அவர்களும் கருணை காட்டினர். அந்த வகையில் ஐம்பதாயிரத்திற்குமேல் மிச்சமாகியது. இவ்விதமாக மிச்சமாகிய பணத்துக்கு திருப்பூரில் ஒரு வீட்டை போக்கியத்திற்கு பிடித்தேன். ஊர் உறங்கியபிறகு தட்டுமுட்டு சாமான்களுடன் அம்மாவையும் டெம்போவில் ஏற்றிக்கொண்டு தோட்டத்தைவிட்டு வெளியேறினேன்.


பாட்டன் முப்பாட்டன் காலந்தொட்டு எங்கள் வம்சத்தின் வாழ்வாதாரமாகவும் ஜீவாதாரமாகவும் இருந்துவந்த நிலத்தை இழ்ந்தது வருத்ததை உண்டாக்கவே செய்தது. கோபப்பார்வையும் குதறும் வார்த்தைகளுமாக விடிந்ததும் வந்து நிற்கும் கடன்காரர்களின் தொல்லைகளிலிருந்து விடுபட்டுவிட்டோம் எனும் ஆசுவாசம் அவ்வருத்தத்தை முனைமழுங்கச் செய்து நிம்மதியைத் தந்தது. நான் பனியன் கம்பனிக்குப் போகத் துவங்கியிருந்தேன். வீட்டுவேலை முடிந்த ஓய்வு நேரத்தில் செக்கிங் சென்டர்களிலிருந்துவரும் பனியன்களுக்கு பிசிர்வெட்டி குடுத்தும், வேஸ்ட்டான துண்டுத் துணிகளில் நூல் பிரித்தும், தனக்கான வருமானத்தை அம்மா ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.







எங்களின் மொத்த வருமானத்தில் பாதிக்குமேல் மிச்சமாகிக் கொண்டிருந்தது. பைக் ஒன்று வாங்கினேன். நம்பிக்கையான நபர்கள் நடத்தும் ஏலச்சீட்டுகளில் சேர்ந்து சேமிக்கத் துவங்கினேன். ஊரில்நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அம்மாவுடன் பைக்கில் போய் இறங்க உறவுச் சனங்கள் மத்தியில் என் மதிப்பு ஏறத்துவங்கியிருந்தது. “டவுனுக்குப் போனதுக்கப்பறம் ஆளே பாலீஷ் ஆயிட்டான் பாரு.. தோட்டந் தோட்டம்னு காட்ட நம்பி உக்காந்துக்கிட்டு இருந்தா காலத்துக்கும் கடங்காரனாகவே கஷ்டப்பட வேண்டியதுதான்.. பண்ணயம் போனா போவுதுனு வித்து தலைமுழுகிட்டுப் போனான். அப்பவே அவனப் புடிச்ச பூடை புணியெல்லாம் தொலைஞ்சது. இனி அவனுக்கு முன்னேத்தம்தான். நல்லா இருப்பாம் பாரு..இவ்விதமாக மற்றவர்களின் கருத்துக்களை அறிய நேர்கையில் மகிழ்ச்சியும் பூரிப்பும் அதிகமாகியது. நாளும் பொழுதும் நல்லவிதமாய் நகர்ந்து கொண்டிருக்க என் ஜாதகத்தை புரோக்கர்களிடம் கொடுத்து பெண் தேடத் துவங்கினேன்.


சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்திருந்தது. தண்டவட்டி அபராத வட்டிகளையெல்லாம் ரத்துசெய்து மக்களிடம் ஆளுங்கட்சி பெற்றிருந்த நன்மதிப்பை, தங்கள் பக்கம் திருப்பவேண்டும் என்பதற்காக விவசாயக் கடன்களையெல்லாம் அடியோடு ரத்து செய்வதாக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்த எதிர்க்கட்சி இப்போது ஆளுங்கட்சியாக அரியணை ஏறியது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் நிலவள வங்கிகளில் தரப்பட்ட விவசாயக் கடன்கள் ரத்து செய்யப் படுவதாக அரசாணை வெளியாகியது. இருபத்தி ஐயாயிரத்துக்கு குறைவான கறவைமாட்டுக் கடன் , பயிர்க் கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப் பட்டிருக்கும் எனவும், பெரிய அளவிலான விவசாயக் கடன்களை கட்டித்தான் ஆகவேண்டுமெனவும் பேசிக் கொண்டனர். ஆனால் உண்மை வேறாக இருந்தது. விவசாயம் என்ற பெயரில் தரப்பட்டிருந்த எல்லாவிதமான கடன்களும்  தொகை வித்தியாசமில்லாமல் அடியோடு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.


உழவுப்பணிகளுக்காய் என கடன் வாங்கி டிராக்டர் எடுத்திருந்த நிறையப்பேர் தங்களின் டிராக்டர்களை கட்டிடப் பணிகளுக்கும் கட்டுமானப் பணிகளுக்கும் வாடகைக்கு விட்டு, மணிக்கு முந்நூறு முதல் ஐநூறு ரூபாய்வரை சம்பாதித்துக் கொண்டிருந்தனர். லட்சக்கணக்கில் நிலுவையிலிருந்த போதிலும் அவர்களின் கடன்களும் அடியோடு ரத்து செய்யப்பட்டிருந்தது. இதே கூட்டுறவு வங்கிகளில் தோட்டங்காட்டுப் பத்திரங்களை அடமானம் வைத்து, விசைத்தறிக்கூடம் அமைக்கவும், தேங்காய்க் களங்கள் போடவும், கயிறு திரிக்கும் குடோன்கள் அமைக்கவும் கடன் பெற்றிருந்தவர்கள் தாங்களும் தொழிலுக்கு என்பதாக அல்லாமல் விவசாயம் என்ற பெயரில் கடன் வாங்கியிருந்தால் தள்ளுபடி பெற்றிருக்கலாமே என புலம்பத் துவங்கினர். சிறிய விவசாயக் கடன்களைப் பெற்று தள்ளுபடிப் பயனடைந்த பயனாளிகள் , பெரிய கடன்கள் பெறாது போன துரதிர்ஷடம் எண்ணி அங்கலாய்க்கத் துவங்கினர். காட்டை விற்றாவது கடன் முழுவதையும் கட்டி முடித்திருந்த என் போன்றவர்களின் நிலமைதான் கேலிக்குரியதாகவும் மிகவும் பரிதாபத்துக்கு உரியதாகவும் மாறிப் போயிருந்தது.


ம்பீ.. தம்பீ.. யோசனை ரொம்ப பலமா இருக்கே.. எந்திரிச்சு உள்ள வாங்கநினைவுகளில் மூழ்கி ஆழ்ந்திருந்த என்னை , ஜோதிடரின் குரல் மேலே இழுத்துக் கொண்டுவந்தது. ஜாதகம் பார்த்தபடியிருந்த அந்த நபர் போய்விட்டிருந்தார். எழுந்து உள்ளேபோய் கருப்புசாமியின் எதிரே அமர்ந்தேன்.

ம்.. சொல்லுங்க தம்பி.. அப்புறம் என்ன விசேஷம்?


விசேசம் என்னண்ணா.. உங்களப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன். தெரிஞ்ச எடத்துல பொண்ணு ஒண்ணு இருக்குது, இன்னிக்குப் போய் பார்த்துட்டு வரலாம்னு சொல்லியிருந்தீங்க..


வாஸ்தவம்தான் தம்பி.. சொல்லியிருந்தேன். ஆனாப் பாருங்க அதுல ஒரு சின்ன சிக்கல் ஆயிருச்சு

ஏண்ணா.. என்னாச்சு?

அந்த பொண்ணோட அப்பாகிட்ட பேசுனேன் தம்பி. பையன் நல்ல பையன். பனியன் கம்பனில பவர்டேபிள் கான்ராக்ட் எடுத்து நிறைய சம்பாதிக்கிறாரு. பைசாகூட கடன் இல்லை. கைவசம் காசு வெச்சுருக்காரு. ஜாதகம் நல்லா பொருந்தி வருது. அப்பிடீன்னல்லாம் எனக்கானளவு எடுத்துச் சொன்னேன் தம்பி. மனுசன் புடியே குடுக்கமாட்டேங்கறாரு.


என்னதான் சொல்றாரு..?”


எல்லாம் சரிங்க சோசியரே.. தோட்டம் தோப்புனு இருக்கற ஜாதகமெல்லாம் எம்பொண்னுக்கு வந்துட்டிருக்குது. நீங்க சொல்ற பையனுக்கு ஊர்ல நிலபுலமெல்லாம் எவ்வளவு இருக்குதுனு கேட்டுச் சொல்லுங்க. பிறகு பேசிக்கலாம்கிறாரு..


எதுவும் பேசத் தோன்றாதவனாய் உட்கார்ந்திருந்தேன். ஏமாற்றத்தின் துக்கத்திலிருப்பதாய் ஜோதிடர் நினைத்துக் கொண்டார்போலும். ஆறுதல் படுத்தும் விதமாக அவரே பேசினார்.


சரி விடுங்க தம்பி, வேறு ஏதாவது பாத்தா போகுது. இதுவே எங்க காலமா இருந்தா உங்களை மாதிரி
பையன்களுக்கெல்லாம் க்யூ வரிசையில பொண்ணு குடுக்க நிப்பாங்க. ஆனா, காலம் இன்னிக்கு அநியாயத்துக்கு மாறிப்போச்சே. அதுவும் உங்க சாதில பொண்ணுங்களுக்கு தட்டுப்பாடு ரொம்பவே
அதிகமா இருக்குது. ஒரு பொண்ணு ஜாதகம் வந்தா ஒம்போது மாப்பிள்ளைக ஜாதகம் வருது. நிலமை இப்படி இருக்கறதாலதான் பொண்ணுவீட்டுக்காரங்க ஓவரா கிராக்கி பண்றாங்க. கவலய வுடுங்க தம்பி. நெலம எப்படியிருந்தாலும் இன்னும் ஒரு மாசத்துக்கப்பறம் உங்க ஜாதகத்துல களஸ்திரஸ்தானாதிபதி புத்தி நடைமுறைக்கு வரப்போகுது. அந்த சமயத்துல கல்யாண காரியம் நிச்சயமா கைகூடியே தீரும். தைரியமா போயிட்டு வாங்க..


ஜோதிட நிலையத்தைவிட்டு வெளியே வந்தேன். நேரம் இரவு ஒன்பதுக்குமேல் ஆகியிருந்தது. சேவல் கட்டுக்கு போய் திரும்பி வந்திருக்கும் கதிர் , இந்நேரம் தன் அறையில் இன்றைய ஆட்டத்தின் வெற்றியை அல்லது தோல்வியை மது அருந்தியபடி கொண்டாடிக் கொண்டிருப்பான் எனத் தோன்றியது. அவனைப் போய் பார்த்து சற்றுநேரம் பேசியிருந்துவிட்டு பிறகு வீட்டிற்குச் செல்லலாம் என நினைத்துக் கொண்டேன். சாவியைப் பொருத்தி மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்யும் தருணத்தில் பார்வை அனிச்சையாய்த் திரும்பி, வேப்பமரத்தினடி விளக்கு மாடத்தினுள் ஒளிர்ந்தபடியிருந்த அகலின் சுடரைத் தேடியது. வெறும் இருட்டே நிறைந்திருந்தது.