Wednesday, 1 March 2017

ஈஷோபதேசம்

அந்த செவ்வாய்க் கிழமை பிற்பகலில் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு ஸ்ட்ரைக் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. மறுநாள் காலை நேரமே ஈஸ்வரண்ணனைப் பார்க்கப் போனேன். போகும் வழியிலேயே திலோத்தமை டீ ஸ்டாலில் அவர் நின்றுகொண்டிருந்தார். அந்த டீக்கடைக்காரரின் சம்சாரம் நல்ல அழகி. அதன் காரணமாக திலோத்தமை என பெயர் வைத்திருந்தேன். எத்தனை காலத்துக்குத்தான் நல்ல அழகிகளை ரம்பா ஊர்வசி மேனகை என்றே சொல்லிக்கொண்டிருப்பது?


என்னைக் கண்டதும் ஈசுவரண்ணனுக்கு முகம் சுணங்கிவிட்டதுபோலத் தோன்றியது. மூன்றடுக்கு டிபன் கேரியரும் அதை வைக்கும் காதறுந்த ஒயர்கூடையும் போய் அதற்குப் பதிலாக ஒற்றை டிபன் பாக்சும் அதை வைக்க ஜிப்புவைத்த அழகான லெதர்பேக்குமாக அவருடைய மதிய உணவுப்பை நாகரீகம் பெற்றிருந்தது. அதனை பக்கத்திலேயே வைத்தபடி தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். ஜீன்ஸ் பேண்ட் என்ன? சர்ட் என்ன? அவரும்கூட ஆளே மாறிப்போயிருந்தார். முகமெல்லாம் பாலீஷாகி புதுமெருகு ஏறியிருந்தது.


“ஸ்ட்ரைக் முடிஞ்சுதா..? நேத்தே கேள்விப் பட்டேன். செரி, எடையில என்ன பண்றது? நின்னா சம்பளம் தரமாட்டாங்க. இந்த வாரம்பூராப் போய் சம்பளம் வாங்கீட்டு.. திங்கக்கெழமையிலிருந்து வேணா பாக்கலாம்” என்றார்.


வருகிறேன் எனச் சொல்லாமல் பார்க்கலாம் எனக் கூறியது எனக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. கவலையும் குழப்பமும் மனதை ஆட்கொண்டது. “ பாக்கலாம் என்ன பாக்கலாம்.. திங்கக்கெழமை கண்டிப்பா வர்றீங்க.. புரியுதா?” என சற்றே கடுமையுடனும் அதே சமயம் அவருக்கு என்மேல் பரிதாபம் உண்டாகும்படியும் கூறிவிட்டு அவருடைய பதிலுக்குக் கூட காத்திராமல் மொபட்டை ஸ்டார்ட் செய்தேன்.     


ஒரு ஷிப்டுக்கு ஒரு ஆள் இருந்தாலே போதும்படியான சிறிய தறிக்குடோன் எங்களுடையது. இரவு பகல் எனும் இரண்டு ஷிப்ட் வேலை முறைமையில், ஒரு ஷிப்ட்டை ஆள்காரர் ஓட்ட மற்றொரு ஷிப்ட்டை நான் ஒட்ட தொழில் நடந்து கொண்டிருந்தது`. ஒரு ஆள்தான் என்றாலும் அந்த ஒரு ஆளைப் பிடிப்பதற்கும் பிடித்த ஆளைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் நான் படாத பாடெல்லாம் படவேண்டியிருந்தது. என்னாலான சாம தான பேத தண்டங்களையெல்லாம் பிரயோகித்துக் கொண்டிருந்தேன்.



தறிக்குடோனுக்குள் புதிதாக வருபவர்களுக்கு ‘ இது சாதரண வேலையல்ல.. எல்லோராலும் முடியாது. தறியோட்டிப் பழகுவதற்கு பெரிய சாமார்த்தியமும் திறமையும் வேண்டும் ‘ என்பது போலெல்லாம் தோன்றும். ஆரம்பத்தில் எனக்கும் அவ்விதமே தோன்றியது. போகப்போக மேலும் ஒரு உண்மையைப் புரிந்து கொண்டேன். அந்த உண்மை இதுதான். ‘ தறியோட்டிப் பழகுவதற்கு எப்படி சாமார்த்தியமும் திறமையும் வேண்டுமோ, அதுபோலவே ஒருவர் தறியோட்டியாகவே தொடர்ந்து இருப்பதற்கு, தான் சாமார்த்தியமும் திறமையும் உடையவர் என்பதை உணராதவராகவும் இருக்க வேண்டும்.’


இந்த உண்மையைக் கண்டறிந்த பிற்பாடு அப்படிப்பட்ட ஆட்களாகத் தெரிவுசெய்து வேலை கற்றுக்கொடுத்து தறியோட்ட வைத்துக் கொண்டேன். இரட்டைத் தம்பிகளான ராசு லட்சு மற்றும் சம்பத்தான் மணியானெல்லாம் என்னிடம் இப்படி இருந்தவர்கள்தான். இந்த உலகத்தில் எதுவும் சாஸ்வதமல்லவே..? எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு ஏற்படும்தானே? அப்படியான முடிவு நாளில் இறக்கை முளைத்த கிளிகள் பறந்து போய்விடும். எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவனாக நானும் அடுத்த ஆளை, தன் பலத்தை தானுணராத ஆஞ்சநேயரைத் தேடத் துவங்குவேன். இப்படியாக என் காலத்தையும் என் தறிகளையும் ஒட்டிக்கொண்டிருந்தேன்.


பிரகாசும் ஈசண்ணனும்தான் ஏற்கனவே தொழில் பழகிய நிலையில் என்னிடம் வேலைக்கு வந்தவர்கள். பிரகாஷ் மூலமாகத்தான் ஈசுக்குட்டி பழக்கமானார். வேன் டிரைவராகும் லட்சியத்துடன் பிரகாசன் வெளியே போய்விட ( இப்போது அவன் கோயமுத்தூரில்,  பொறியியற் கல்லூரியொன்றில் பேருந்து ஓட்டுனராக இருக்கிறான்). அந்த இடத்தை ஈசு நிரப்பினார்.


’எருமைமேல மழபேஞ்ச மாதிரி..’ என்று சொல்வார்களல்லவா? அப்படியான இயல்பு ஈசண்ணனுடையது. அப்பா இல்லை. அம்மாவும் அவரும் மட்டும்தான். ‘ வெச்சா செமக்கத் தெரியும்.. போட்டாத் திங்கத் தெரியும்.. அதுக்குமேல உனக்கொண்ணுந் தெரியாது’ என அவருடைய அம்மாவே அடிக்கடி சான்றிதழ் கொடுக்கும்படியான சுபாவம் அவருடையது. தறியோட்ட இந்த மாதிரியான சுபாவிகளே மிகவும் பொருத்தமானவர்கள்.


இரண்டு வருடங்கள்போல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போனது. என்னாலான சுகசெளகரியங்களையெல்லாம் செய்துகொடுத்து ஈசுவை சொந்த அண்ணனைப் போலவே வைத்துக்கொண்டேன். அதேசமயம் தறித்தொழிலை விட்டா நமக்கு வேறு தொழில்கள் செட்டாகாது.. பிறகு சோத்துக்கே வழியில்லாமல் போய்விடும் என்பதுமதிரியான மனநிலையிலேயே அவர் தொடர்ந்து இருக்கும்படியும் பார்த்துக்கொண்டேன்.  
     
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டுதானே? கூலியுயர்வு கேட்டு எங்களுடைய கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்தது. சீக்கிரமே ஒப்பந்தம் ஏற்பட்டு ஸ்ட்ரைக் முடிந்துவிடும் என எதிர்பார்த்தோம். முதல் இரண்டு வாரங்களுக்கு செலவுக்குக் காசுகொடுத்து ஈசண்ணனை என்னுடனேயே வைத்துக் கொண்டேன். சங்கக் கூட்டங்களுக்குப் போவது, சினிமாவுக்குப் போவது, வெளிச்சோலிகள் என இருவரும் ஒன்றாகவே சுற்றினோம்.


ஸ்ட்ரைக் இப்போதைக்கு முடியாது மாசக்கணக்கில் நீடிக்கும் என்றார்கள். “ வெட்டியா எத்தனை நாளைக்குத்தான் சுத்தறது? சும்மா வெச்ச்சுக்கிட்டே நீங்களும் எத்தனை நாளைக்குத்தான் காசு கொடுப்பீங்க? பனியன் கம்பனிக்குக் கூப்பிடறாங்க.. ஸ்ட்ரைக் முடிஞ்சதும் வந்தர்றேன்என ஈசு கூறினார். பனியன் கம்பனிவேலை  பிடிபட்டுவிட்டால் பிறகு தறியோட்ட வரமாட்டாரே என்ற பயம் எனக்கு உண்டானது. வருமானமின்மை, வட்டிவாசிகள்  ஏலச்சீட்டுகள் (அனைத்துமே எடுத்த சீட்டுகள்) மற்றும் அன்றாடச் செலவுகள் என விழி பிதுங்கிக்கொண்டிருக்கும் சூழலில் மேலும் முன்பணம் கொடுப்பதும் முடியாத காரியமாகத் தோன்றியது. ஈசுவின் சுபாவத்திற்கு பனியன் கம்பனிகள் நிச்சயமாக ஒத்துவராதவை என என்னை நானே தேற்றிக்கொண்டு “ சரி.. அப்படித்தான் கொஞ்ச நாளைக்குப் போங்கண்ணா.. ஸ்ட்ரைக் முடிஞ்சதும் வந்துருங்க..” என அனுப்பி வைத்தேன்.

ஸ்ட்ரைக் முடிந்த பிற்பாடு வந்த வியாழன் வெள்ளி சனி ஆகிய மூன்று நாட்களும் நான் ஒருவனே தறியோட்டினேன். நேராநேரத்திற்கு சாப்பாடும் இல்லை. தூக்கமும் இல்லை. ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடிகளோடு வேலைநிறுத்தத்தினால் விளைந்த புதிய சுமைகளும் சேர்ந்துகொள்ள ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தறிகளை ஓட்டியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளாகியிருந்தேன். எப்படா ஞாயிற்றுக்கிழமை வரும் ஈசண்ணனைப் பார்ப்போம் என்று இருந்தது.


ஞாயிறு மாலை ஐந்து மணி சுமாருக்கு ஐநூறு ரூபாய்போல ஏற்பாடு செய்துகொண்டு ஈசுவின் வீட்டிற்கு மொபட்டில் கிளம்பினேன். “இந்நேரம் வரைக்கும் இங்கதான் இருந்தான். இப்ப எங்க போனான்னு தெரியலையே.. எதுக்கும் கடைவீதில போய்ப் பாரு..” என அவருடைய அம்மா கூறினார். இங்கே அங்கே அலைந்து கடைசியாக வெற்றி ஒயின்ஸ் சாக்னாக் கடையில் ஆளை கண்டுபிடித்தேன்.

டீ சர்ட்டும் லுங்கி வேட்டியுமாக ஈசு பளிச்சென்று இருந்தார். பாதியளவுக்கு மதுவோடு குவார்ட்டர் பாட்டில், அதன்மேல் குப்புற கவிழ்த்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர், ஒரு தட்டில் வேர்க்கடலை, மற்றொன்றில்  ஆம்லெட் என அவர் மேஜை இருந்தது.

”வாங்க.. வாங்க.. நல்ல நேரத்துலதான் வந்திருக்கீங்க..” என்றார். ” உங்களத் தொளாவீட்டுப் போகாத எடமில்ல.. கடைசீல பார்த்தா இங்க உக்காந்திருக்கீங்க..” என்றேன். இப்படியாக எங்களின் உரையாடல் வளர்ந்தது. ஒரு கட்டத்தில் “ காலைல ஷிப்ட்டுக்கு வந்துருங்கண்ணோவ்.. சொல்லீட்டுப் போகலாம்னுதான் வந்தேன்” என்று கூறினேன்.

ஈசு இவ்வளவு விவரமாகவும் கட்டுறுதியாகவும் பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் பேசினார். “இங்க பாரு வெங்கிட்டு.. நீங்க நம்மாளு.. என்ன வேணும்னாலும் கேளுங்க.. செய்றேன். ஆனா தயவுசெய்து வேலைக்கு மட்டும் கூப்ட்றாதீங்க.. தறியோட்றதப்பத்தி நெனச்சாலே அவ்வளவு வெறுப்பா இருக்குது.. இதே நீங்க பனியன் கம்பனி வெச்சிட்டுவந்து வேலைக்கு வா னு கூப்புடுங்க.. அடுத்த செகண்டே ஒடியாறேன். என்ற சார்பா இன்னும் பத்துப்பேர வேணும்னாலும் கூட்டீட்டு வாரேன். ஆனா தறிக்குன்னா ஆகாது. அம்பது செம்பளியாட்ட வாங்கியுட்டுட்டு மேய்க்கலாம் வா னு கூப்புடுங்க.. உங்க மூஞ்சிக்காக வர்றேன். ஆனா தறியோட்றதுக்கு மட்டும் வரச்சொல்லாதீங்க.. அந்த கெரகம் புடிச்ச தொழிலே ஆகாது.. இந்த ஜென்மத்துக்கும் மட்டுமில்ல.. எந்த ஜென்மத்துக்குமே ஆகாது.” என்றார்.


நான் மவுனமாக அமர்ந்திருந்தேன். இனி என்ன சொன்னாலும் வேலைக்காகாது எனத் தோன்றியது. வேறு யாரைப் போய்ப் பார்க்கலாம் என்னும் யோசனை உள்ளுக்குள் ஓடத்துவங்கியிருந்தது. கடைப் பையனைக் கூப்பிட்ட ஈசு, மேலும் ஒரு குவார்ட்டரும் அதற்குண்டான தொடுகறிகளையும் கொண்டுவரச் சொல்லிவிட்டு, என் பக்கம் திரும்பி, “தொழிலாங்க இது..? தெரியாமத்தான் கேக்கறேன்.. இதெல்லாம் ஒரு தொழிலா? காதே செவுடாகற சத்தத்துல தன்னப்போல பையித்தியகாரனாட்ட நாலு செவுத்துக்குள்ளயே சுத்திச்சுத்தி வாரதெல்லா ஒரு பொழப்பா..? இப்படியே இருந்தா உலகமே தெரியாமப் போயிரும். பேசாம நீங்களும் தறிய வித்துப்போட்டு பனியன் கம்பனிக்கே வந்துருங்க.. ரண்டுபேரும் ஒரே கம்பனிக்குப் போகலாம்என்றார்.   


கடைப்பையன் வைத்துவிட்டுப்போன பிராந்தியை ஊற்றிக் குடிக்கத் துவங்கினேன். மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை. சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு என்னிடமும் ஒன்றை நீட்டியபடி ஈசண்ணன் கூறினார். “ நீங்கமட்டும் பனியன் கம்பனிக்கு வந்து பாருங்க.. சும்மா என்ன மாதிரி இருக்குதுனு.. எந்தப் பக்கம் திரும்புனாலும் பொண்ணுங்கதான்.. அதுவும்  அத்தனையும் கேரளாப் புள்ளைங்க.  சும்மா சிட்டுப் பறக்கற மாதிரி பறந்துட்டே இருக்கும்பாருங்க.. பாக்கறதுக்கு ரண்டு கண்ணும் பத்தாது. வேலை செய்யற அலுப்பே தெரியாது. நேரம் போறதும் தெரியாது.


சிகரட் புகையை ஆழமாக இழுத்து நிதானமாக வெளியிட்டபடியிருந்தேன். அந்த புள்ளைகளைப் பற்றிய நினைவு ஈசுவுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துவிட்டிருப்பது புரிந்தது. “அதும் அயர்னிங் செக்‌ஷன்ல சூப்பர்வைசரா ஒண்ணு இருக்குது பாருங்க.. அழகுன்னா அழகு அப்படியொரு அழ்கு. சோறு தண்ணிகூட வேண்டீதில்ல.. நாளெல்லாம் பார்த்துட்டே இருக்கலாம் “ என்றார்.


இதற்குமேல் பொறுக்கமுடியாது எனத் தோன்றியது. கொஞ்சம் கோபமாகவே கேட்டேன். “ சும்மா சும்மா புள்ளைங்க இருக்குது.. அழகா இருக்குதுனு ஏன்ணா அதயே சொல்றீங்க..? பொண்ணுங்க இருக்கலாம். அழகாவும் இருக்கலாம். அதனால நமக்கென்ன ஆகப்போகுது? அதுகளுக்கெல்லா கணக்குப்புள்ள மேனேஜர் ஓனர்னு ஆல்ரெடி ஆளுக இருப்பாங்க.. (இந்த இடத்தில் நாமெல்லாம் என்றுதான் வாய் வந்தது. வேண்டுமென்றே தவிர்த்தேன்.) நீங்கெல்லாம் டச் சுங்கூட பண்ணமுடியாது என்றேன்.


அவருக்கு மனம் காயப்பட்டுவிட்டது போல. என்னைவிடவும் கோபமாக திருப்பி கீழ்கண்டவாறு  கேட்டார். பிறகு நான் எந்தப் பதிலும் சொல்லவில்லை. பேசாமல் எழுந்து வந்துவிட்டேன். ஏனெனில் கேள்வி அவ்வளவு கேனத்தனமாக இருந்தது. அல்லது, ஞானத்தனமாக.

“என்ன மனுசனுங்க நீங்க..? ஒரு புள்ளை அழகா இருக்குதுனு சொன்னா உடனே நம்முளுக்கு ஆகுமானு கேக்கறதா..? அழகா இருந்தா இருந்துட்டுப் போகட்டும் நம்முளுக்கெதுக்கு ஆகோணம்?



No comments: