வனபூஜை சீரோடும் சிறப்போடும் நடந்து
கொண்டிருந்தது. சுத்துபத்து பதினெட்டு ஊர்களிலிருந்தும் சனங்கள் வந்தபடியேயிருந்தனர்.மெயின்
ரோட்டிலிருந்து கோயிலுக்குப் போகும் மண்பாதையின் இரு புறங்களிலும் தற்காலிகக் கடைகள்
விரிக்கப்பட்டிருந்தன.கும்பிட்டு வெளிவந்த பக்தகோடிகள் நுகர்வோர்களாகி பேரம் பேசியபடியிருந்தனர்.ஸ்டேண்டில்
வண்டியை நிறுத்தி டோக்கனைப் பெற்றுக்கொண்ட லோகநாதன்,வெளியே வந்தான். மனைவி காத்திருந்தாள்.இருவரும்
கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தனர்.
ஒதைச்சங்கிலிக்கூட
இல்லாமல், வெறும் தாலிக்கயிறு மட்டுமே பூண்ட கழுத்துடன் மனைவி உடன் வந்துகொண்டிருப்பதை
நினைக்க, லோகுவுக்கு மனம் என்னவோ செய்தது, அவளின் உறவுக்காரர்கள் யாரேனும் பார்த்து
விட்டால், தன்னை இளப்பமாக நினைத்துக் கொள்வார்களே என்ற அச்சம் உண்டானது.யார் கண்ணிலும்
பட்டுவிடாமல் சீக்கிரமே சாமி கும்பிட்டுவிட்டு கிளம்பிவிடத் திட்டமிட்டான்.
நேற்று,
முருங்கைக் காய்களை சாக்கில் போட்டுத் தைத்துக் கொண்டிருக்கும்போது மனைவியிடம் கூறினான்.
“ நீயும் கெளம்பு வேணி.. திருப்பூர் போயிட்டு வரலாம்.”
“நான் எதுக்கு..? முருங்கக்காய்
விக்க ஒரு ஆள் பத்தாதா..?”
” நீயும் வந்தா.. அப்படியே கவரிங்
கடைக்குப் போய், உனக்கொரு சங்கிலியும் வாங்கிக்கலாம்னு பார்த்தேன். கோயில் விஷேசத்துக்குப்
போகணுமில்ல..”
“கவரிங்கெல்லாம் வேண்டாம். கார்த்திகை
மாசம் சொன்னபடி, வெங்காயம் வித்ததும் எனக்கு அடகுல இருக்குற நகையெல்லாம் மீட்டுக் குடுத்துருங்க..”
“கண்டிப்பா மீட்டுரலாம் . வெலை
சம்பல்ங்கிறதால ஏவாரிக இப்ப வர்றேன், அப்ப வர்றேன்னு இழுத்துட்டு இருக்கறாங்க.நிலமையைப்
பார்த்தா இன்னும் ஒரு வாரத்துக்கு இப்படியேதான் இருக்கும்போல இருக்குது.பட்டறையில்
கெடக்கும் வெங்காயம் காட்டைவிட்டுப் போனதும், நகையை திருப்பிரலாம்.”
கவரிங்
நகைக்கு ஒப்புக்கொண்டால், அடகிலிருப்பது மீட்கப்படாது என நினைத்தோ என்னவோ, நீலவேணி
தீர்மானமாக மறுத்தாள்.”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.
நாளைக்கு கோயில் விசேசத்துக்கு இப்படியே வந்துக்கறேன். வெங்காயம் வித்ததும் நீங்க என்
நகைய மீட்டுத்தந்துருங்க.. போதும்.”
சாமி
சந்நிதி இருக்கும் உட்பிரகார நுழைவு வாயில்முன் பெண்கள் கூட்டமாக நின்றிருந்தனர். உள்ளே
பெண்கள் நுழைய அனுமதி இல்லை. மறு வருடம் இதே விசேஷத்துக்கு , கழுத்து நிறைய நகைகளை
அணிவித்து , மனைவியைக் கூட்டிவர விரும்புவதாகவும், அதற்கு அருள்புரிய வேண்டுமெனவும்
வேண்டிக் கொண்டு வெளியே வந்தான்.
முன்பு
நீலவேணி நின்றிருந்த இடத்தில் இப்போது வேறு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். சுற்றிலும்
பார்வையை ஓடவிட்டான். நீலவேணியின் முகம் எங்கும் தட்டுப்படவில்லை.ஒருவேளை குகைச்சாமி
சந்நிதிக்குப் போயிருக்கலாம் எனத் தோன்றியது. தெற்கே நடக்கத் துவங்கினான்.
அன்னதானப்
பந்தலுக்கு மேபுறத்தே வட்டப்பாறையருகே , நீலவேணி நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அவள்
யாருடன் நின்று பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது புத்திக்குப் புலனாகியது. லலிதாதான்.
சட்டென்று கூட்டத்துக்குள் தன்னை மறைத்துக் கொண்டான். அவ்விதமாகவே வந்து சாவடித் திண்ணையில்
அமர்ந்தான்.
‘
கருமம் புடிச்சவள். இவள் எங்கே இங்கு வந்து தொலைத்தாள்..? வெறுங்கழுத்தோடு கோயிலுக்கு
வந்திருக்கும் நீலவேணி அவள் சொந்தக்காரர்களின் கண்களில் பட்டிருந்தாலாவது பரவாயில்லை.
போயும்போயும் இந்த திமிர் பிடித்தவளின் கண்களில் பட்டுவிட்டாளே…’
நினைத்திருப்பாள்.
‘நல்லவேளை தப்பித்தோம். இல்லையென்றாள் நம் பொழப்பும் இப்படித்தான் ஆகியிருக்குமென..’ லலிதா, இந்நேரம் நகைகள் மினுங்கும் தன் கழுத்தையும்,
வெறும் சரடு மட்டுமே தொங்கிக் கொண்டிருக்கும் நீலவேணியின் கழுத்தையும், மாறிமாறிப்
பார்த்தபடி நினைத்துக் கொண்டிருப்பாள்.
திக்பிரமை
பிடித்திருந்தவன்போல் அமர்ந்திருந்தான். மனதின் அடியாழத்திலிருந்து நீர்க்குமிழிகளைப்
போல, தவிர்க்கவே முடியாதபடி லலிதாவின் ஞாபகங்கள் மேலெழும்பி வரத்துவங்கின.
அது
தமிழ் சினிமாவில் நாயகர்களும் நாயகிகளும், பார்த்துக் கொள்ளாமலும் ,பேசிக்கொள்ளாமலும்,
காதலித்துக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்த காலம். லோகு அப்பொழுது காபித்தூள் வியபாரம்
செய்து கொண்டிருந்தான்.
காபிக்
கொட்டைகளை வாங்கி அரைத்து, சிக்கரி கலந்து பேக் பண்ணி, ஊர் ஊராகப் போய் வீடு வீடாகப்
பொட்டலங்களைப் போட்டுக்கொண்டிருந்தான். அப்படி வியபார நிமித்தம் போய்வந்த வீடுகளில்
லலிதாவின் வீடும் ஒன்றாக இருந்தது. லலிதா பதின் பருவத்துக் குமரியாக, கொடுவாய் அரசு
பள்ளிக் கூடத்தில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவியாக இருந்தாள். சந்தர்ப்பம்
இருவரையும் காதலரென்றாக்கியது. சந்தர்ப்பவாதம் அக்காதலை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது.
விஷயம்
கேள்விப் பட்டதும் துடித்துப்போன லோகு, லலிதாவை தனியாகச் சந்தித்துப் பேச முயற்சித்தான்.
முடியாமல் போனது. மாப்பிள்ளை பெரிய இடம் என்றும், திருப்பூரில் பனியன் கம்பனி முதலாளி
என்றும், அங்கே பாலாறும் தேனாறும் பல்கிப் பெருகி ஓடுவதாகவும் சொன்னார்கள். வெறுத்துப்போன
லோகநாதன் காறித்துப்பினான். பிறகு லலிதாவின் நினைவு வரும்போதெல்லாம் காறித்துப்புவது
அவன் வழக்கமாகவே ஆனது.
பகலும்
இரவும் வந்து வந்து போனது. நீலவேணி மனைவியானாள். வியபாரத்தை விடுத்து லோகு விவசாயம்
பார்க்கத் துவங்கினான். மனைவியின் ஊருக்குப் போகும் நேர்வழிப்பாதை லலிதாவின் ஊர் வழியாகச்
சென்றது. நேர் வழியைத் தவிர்த்து மனைவியின் ஊருக்குப் போய்வர சுற்றுவழிப் பாதையையே
பயன்படுத்தினான். ஏன் என்று கேட்ட நீலவேணியிடம் ஒருநாள் உண்மையைச் சொல்லிக் கரைந்தான்.
“பரவாயில்லை
விடுங்க.. இதெல்லாம் சாதாரண விஷயம்…”
என்று அணைத்துக்கொண்ட
நீலவேணி , பின் சாதாரணமாகக் கூறினாள். “ லலிதா, என் கிளாஸ் மேட்தான்..!”
“டேய் மாப்ள… இங்க வந்து ஏன்
உட்கார்ந்துக்கிட்டே..?” தறிக்குடோன் பழனிச்சாமியின்
குரல் லோகுவை சுய நினைவுக்குக் கொண்டு வந்தது. அவரிடமே கெஞ்சும் தொனியில் கேட்டான்…
”நீலவேணி குகைச்சாமி கோயில்லயோ..
அன்னதானப் பந்தல்லயோ இருப்பா. சீக்கிரமா வரச்சொல்லுங்க.
வெங்காய ஏவாரி தோட்டம்வந்து வெயிட் பண்ணீட்டு இருக்கறாராமா… இப்பத்தான் போன் பண்ணுனாரு…
நான்போய் வண்டிய எடுத்துட்டு நிக்கறேன். அவள நேரா ஸ்டேண்டுக்கே வரச்சொல்லீருங்க…”
“அதுக்கென்ன மாப்ளே.. எங்கிருந்தாலும்
தேடிப்புடிச்சுச் சொல்லிடறேன்..’
தோட்டம்
வந்து சேர்ந்தனர். வெங்காய வியபாரியைக் காணாத நீலவேணி லோகுவிடம் கேட்டாள். “ ஏவாரி
ஆளுகளோடவும் , லாரியோடவும் தோட்டத்துல காத்துட்டிருக்கறதாச் சொன்னீங்கன்னு அவர் சொன்னாரே…?”
”பொய் சொன்னேன்..”
சீறினாள்.
“என்னது? பொய்யா?”
“ஆமா.. வெறுஞ் சரட்ட மட்டும்
தொங்கவுட்டுட்டு, நீ கோயில்ப்பூராஞ் சுத்திவந்து, கண்டவங்களோடயெல்லாம் பல்லிளிச்சுப்
பேசிக்கிட்டு, என் மானத்த வாங்கறது புடிக்கல.. அதான் சீக்கிரமா வந்து தொலையட்டும்னு
பொய் சொன்னேன்.”
வட்டப்
பாறையருகே ,லலிதாவோடு நின்று பேசிக் கொண்டிருக்கையில், தெற்கே வந்து கொண்டிருந்த லோகு,
தங்களைப் பார்த்ததும் சட்டென கூட்டத்துக்குள் பதுங்கி மறைந்துகொண்ட காட்சி நீலவேணிக்கு
ஞாபகம் வந்தது. அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“ஏய்..
இப்ப எதுக்கு இப்படிச் சிரிக்கறே..?”
“சிரிக்காம என்ன செய்யறது..?
நீங்க் நினைக்கற மாதிரியெல்லா ஒண்ணும் இல்ல..”
குழப்பத்துடன்
பார்த்தான். நீலவேணி புன்னகைத்தபடியே கூறினாள்.
“நீங்க
நினைக்கற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லே.. அவ கழுத்திலேயும் வெறும் கயிறுதான் தொங்கீட்டிருந்தது.”