Sunday, 8 January 2017

கயிறு

வனபூஜை சீரோடும் சிறப்போடும் நடந்து கொண்டிருந்தது. சுத்துபத்து பதினெட்டு ஊர்களிலிருந்தும் சனங்கள் வந்தபடியேயிருந்தனர்.மெயின் ரோட்டிலிருந்து கோயிலுக்குப் போகும் மண்பாதையின் இரு புறங்களிலும் தற்காலிகக் கடைகள் விரிக்கப்பட்டிருந்தன.கும்பிட்டு வெளிவந்த பக்தகோடிகள் நுகர்வோர்களாகி பேரம் பேசியபடியிருந்தனர்.ஸ்டேண்டில் வண்டியை நிறுத்தி டோக்கனைப் பெற்றுக்கொண்ட லோகநாதன்,வெளியே வந்தான். மனைவி காத்திருந்தாள்.இருவரும் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தனர்.

ஒதைச்சங்கிலிக்கூட இல்லாமல், வெறும் தாலிக்கயிறு மட்டுமே பூண்ட கழுத்துடன் மனைவி உடன் வந்துகொண்டிருப்பதை நினைக்க, லோகுவுக்கு மனம் என்னவோ செய்தது, அவளின் உறவுக்காரர்கள் யாரேனும் பார்த்து விட்டால், தன்னை இளப்பமாக நினைத்துக் கொள்வார்களே என்ற அச்சம் உண்டானது.யார் கண்ணிலும் பட்டுவிடாமல் சீக்கிரமே சாமி கும்பிட்டுவிட்டு கிளம்பிவிடத் திட்டமிட்டான்.

நேற்று, முருங்கைக் காய்களை சாக்கில் போட்டுத் தைத்துக் கொண்டிருக்கும்போது மனைவியிடம் கூறினான். “ நீயும் கெளம்பு வேணி.. திருப்பூர் போயிட்டு வரலாம்.

நான் எதுக்கு..? முருங்கக்காய் விக்க ஒரு ஆள் பத்தாதா..?
நீயும் வந்தா.. அப்படியே கவரிங் கடைக்குப் போய், உனக்கொரு சங்கிலியும் வாங்கிக்கலாம்னு பார்த்தேன். கோயில் விஷேசத்துக்குப் போகணுமில்ல..

கவரிங்கெல்லாம் வேண்டாம். கார்த்திகை மாசம் சொன்னபடி, வெங்காயம் வித்ததும் எனக்கு அடகுல இருக்குற நகையெல்லாம் மீட்டுக் குடுத்துருங்க..

கண்டிப்பா மீட்டுரலாம் . வெலை சம்பல்ங்கிறதால ஏவாரிக இப்ப வர்றேன், அப்ப வர்றேன்னு இழுத்துட்டு இருக்கறாங்க.நிலமையைப் பார்த்தா இன்னும் ஒரு வாரத்துக்கு இப்படியேதான் இருக்கும்போல இருக்குது.பட்டறையில் கெடக்கும் வெங்காயம் காட்டைவிட்டுப் போனதும், நகையை திருப்பிரலாம்.

கவரிங் நகைக்கு ஒப்புக்கொண்டால், அடகிலிருப்பது மீட்கப்படாது என நினைத்தோ என்னவோ, நீலவேணி தீர்மானமாக மறுத்தாள்.அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நாளைக்கு கோயில் விசேசத்துக்கு இப்படியே வந்துக்கறேன். வெங்காயம் வித்ததும் நீங்க என் நகைய மீட்டுத்தந்துருங்க.. போதும்.
சாமி சந்நிதி இருக்கும் உட்பிரகார நுழைவு வாயில்முன் பெண்கள் கூட்டமாக நின்றிருந்தனர். உள்ளே பெண்கள் நுழைய அனுமதி இல்லை. மறு வருடம் இதே விசேஷத்துக்கு , கழுத்து நிறைய நகைகளை அணிவித்து , மனைவியைக் கூட்டிவர விரும்புவதாகவும், அதற்கு அருள்புரிய வேண்டுமெனவும் வேண்டிக் கொண்டு வெளியே வந்தான்.
முன்பு நீலவேணி நின்றிருந்த இடத்தில் இப்போது வேறு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான். நீலவேணியின் முகம் எங்கும் தட்டுப்படவில்லை.ஒருவேளை குகைச்சாமி சந்நிதிக்குப் போயிருக்கலாம் எனத் தோன்றியது. தெற்கே நடக்கத் துவங்கினான்.

அன்னதானப் பந்தலுக்கு மேபுறத்தே வட்டப்பாறையருகே , நீலவேணி நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அவள் யாருடன் நின்று பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது புத்திக்குப் புலனாகியது. லலிதாதான். சட்டென்று கூட்டத்துக்குள் தன்னை மறைத்துக் கொண்டான். அவ்விதமாகவே வந்து சாவடித் திண்ணையில் அமர்ந்தான்.

‘ கருமம் புடிச்சவள். இவள் எங்கே இங்கு வந்து தொலைத்தாள்..? வெறுங்கழுத்தோடு கோயிலுக்கு வந்திருக்கும் நீலவேணி அவள் சொந்தக்காரர்களின் கண்களில் பட்டிருந்தாலாவது பரவாயில்லை. போயும்போயும் இந்த திமிர் பிடித்தவளின் கண்களில் பட்டுவிட்டாளே…

நினைத்திருப்பாள். ‘நல்லவேளை தப்பித்தோம். இல்லையென்றாள் நம் பொழப்பும் இப்படித்தான் ஆகியிருக்குமென..லலிதா, இந்நேரம் நகைகள் மினுங்கும் தன் கழுத்தையும், வெறும் சரடு மட்டுமே தொங்கிக் கொண்டிருக்கும் நீலவேணியின் கழுத்தையும், மாறிமாறிப் பார்த்தபடி நினைத்துக் கொண்டிருப்பாள்.

திக்பிரமை பிடித்திருந்தவன்போல் அமர்ந்திருந்தான். மனதின் அடியாழத்திலிருந்து நீர்க்குமிழிகளைப் போல, தவிர்க்கவே முடியாதபடி லலிதாவின் ஞாபகங்கள் மேலெழும்பி வரத்துவங்கின.

அது தமிழ் சினிமாவில் நாயகர்களும் நாயகிகளும், பார்த்துக் கொள்ளாமலும் ,பேசிக்கொள்ளாமலும், காதலித்துக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்த காலம். லோகு அப்பொழுது காபித்தூள் வியபாரம் செய்து கொண்டிருந்தான்.

காபிக் கொட்டைகளை வாங்கி அரைத்து, சிக்கரி கலந்து பேக் பண்ணி, ஊர் ஊராகப் போய் வீடு வீடாகப் பொட்டலங்களைப் போட்டுக்கொண்டிருந்தான். அப்படி வியபார நிமித்தம் போய்வந்த வீடுகளில் லலிதாவின் வீடும் ஒன்றாக இருந்தது. லலிதா பதின் பருவத்துக் குமரியாக, கொடுவாய் அரசு பள்ளிக் கூடத்தில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவியாக இருந்தாள். சந்தர்ப்பம் இருவரையும் காதலரென்றாக்கியது. சந்தர்ப்பவாதம் அக்காதலை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது.

விஷயம் கேள்விப் பட்டதும் துடித்துப்போன லோகு, லலிதாவை தனியாகச் சந்தித்துப் பேச முயற்சித்தான். முடியாமல் போனது. மாப்பிள்ளை பெரிய இடம் என்றும், திருப்பூரில் பனியன் கம்பனி முதலாளி என்றும், அங்கே பாலாறும் தேனாறும் பல்கிப் பெருகி ஓடுவதாகவும் சொன்னார்கள். வெறுத்துப்போன லோகநாதன் காறித்துப்பினான். பிறகு லலிதாவின் நினைவு வரும்போதெல்லாம் காறித்துப்புவது அவன் வழக்கமாகவே ஆனது.

பகலும் இரவும் வந்து வந்து போனது. நீலவேணி மனைவியானாள். வியபாரத்தை விடுத்து லோகு விவசாயம் பார்க்கத் துவங்கினான். மனைவியின் ஊருக்குப் போகும் நேர்வழிப்பாதை லலிதாவின் ஊர் வழியாகச் சென்றது. நேர் வழியைத் தவிர்த்து மனைவியின் ஊருக்குப் போய்வர சுற்றுவழிப் பாதையையே பயன்படுத்தினான். ஏன் என்று கேட்ட நீலவேணியிடம் ஒருநாள் உண்மையைச் சொல்லிக் கரைந்தான்.

“பரவாயில்லை விடுங்க.. இதெல்லாம் சாதாரண விஷயம்…என்று அணைத்துக்கொண்ட நீலவேணி , பின் சாதாரணமாகக் கூறினாள். “ லலிதா, என் கிளாஸ் மேட்தான்..!

டேய் மாப்ள… இங்க வந்து ஏன் உட்கார்ந்துக்கிட்டே..?தறிக்குடோன் பழனிச்சாமியின் குரல் லோகுவை சுய நினைவுக்குக் கொண்டு வந்தது. அவரிடமே கெஞ்சும் தொனியில் கேட்டான்…
நீலவேணி குகைச்சாமி கோயில்லயோ.. அன்னதானப் பந்தல்லயோ இருப்பா.  சீக்கிரமா வரச்சொல்லுங்க. வெங்காய ஏவாரி தோட்டம்வந்து வெயிட் பண்ணீட்டு இருக்கறாராமா… இப்பத்தான் போன் பண்ணுனாரு… நான்போய் வண்டிய எடுத்துட்டு நிக்கறேன். அவள நேரா ஸ்டேண்டுக்கே வரச்சொல்லீருங்க…

அதுக்கென்ன மாப்ளே.. எங்கிருந்தாலும் தேடிப்புடிச்சுச் சொல்லிடறேன்..


தோட்டம் வந்து சேர்ந்தனர். வெங்காய வியபாரியைக் காணாத நீலவேணி லோகுவிடம் கேட்டாள். “ ஏவாரி ஆளுகளோடவும் , லாரியோடவும் தோட்டத்துல காத்துட்டிருக்கறதாச் சொன்னீங்கன்னு அவர் சொன்னாரே…?

பொய் சொன்னேன்..

சீறினாள். “என்னது? பொய்யா?

ஆமா.. வெறுஞ் சரட்ட மட்டும் தொங்கவுட்டுட்டு, நீ கோயில்ப்பூராஞ் சுத்திவந்து, கண்டவங்களோடயெல்லாம் பல்லிளிச்சுப் பேசிக்கிட்டு, என் மானத்த வாங்கறது புடிக்கல.. அதான் சீக்கிரமா வந்து தொலையட்டும்னு பொய் சொன்னேன்.

வட்டப் பாறையருகே ,லலிதாவோடு நின்று பேசிக் கொண்டிருக்கையில், தெற்கே வந்து கொண்டிருந்த லோகு, தங்களைப் பார்த்ததும் சட்டென கூட்டத்துக்குள் பதுங்கி மறைந்துகொண்ட காட்சி நீலவேணிக்கு ஞாபகம் வந்தது. அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஏய்.. இப்ப எதுக்கு இப்படிச் சிரிக்கறே..?

சிரிக்காம என்ன செய்யறது..? நீங்க் நினைக்கற மாதிரியெல்லா ஒண்ணும் இல்ல..

குழப்பத்துடன் பார்த்தான். நீலவேணி புன்னகைத்தபடியே கூறினாள்.

“நீங்க நினைக்கற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லே.. அவ கழுத்திலேயும் வெறும் கயிறுதான் தொங்கீட்டிருந்தது. 




Saturday, 7 January 2017

வெயிலின் ஒளி…

அரசு மேல்நிலைப் பள்ளியைத் தாண்டியதும் வலது புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில் வண்டியைத் திருப்புமாறு ரத்னவேல் பண்டாரம் கூறினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் கைகாட்டிய திசைகளிலெல்லாம் மோட்டார் சைக்கிளை விட்டபடியிருக்கிறேன். நாங்கள் போய்ப் பார்க்கும் வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. இல்லையேல் நாங்கள் தேடிப்போன நபர்மட்டும் இல்லாததுவாய் ,வேறு உறுப்பினர்களைக் கொண்டதுவாய் இருந்தது. நாங்கள் கடைசியாய்ப் போய்ப் பார்த்த இடத்தில் மேல்சட்டையணியாத ஒரு சிறுவன் சணல் சாக்கு மூட்டையிலிருந்த வேலாங்காய்களை, பந்தற்காலில் கட்டியிருந்த வெள்ளாட்டுக் குட்டிக்கு  போட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய அம்மா ஒரு சடங்கு வீட்டிற்கு வேலைக்குப் போயிருப்பதாகவும் அதே தெருவில் வசிக்கும் ஒரு சமையல்காரரின் பெயரைச்சொல்லி, அவர்வந்து கூட்டிப்போய்விட்டதாகவும் கூறினான். ஏமாற்றமும் சலிப்புமடைந்த ரத்னவேல் பண்டாரம் மேல் துண்டினால் வேர்வை வழியும் முகத்தையும் புறங்கழுத்தையும் துடைத்தபடியே , “ ஈஸ்வரங்கோயிலுக்கிட்ட ஒருத்தன் இருக்கான்.. அவனாவது இருக்கானோ என்னவோ.. போய்ப்பார்க்கலாம் வாங்கஎன்றார்.

இருபுறமும் கடைகளையுடைய அந்தப் பாதையில் சற்று தூரம் சென்றதும் அதன் வலப்பக்கமாக கிராம நிர்வாக அலுவலகமும், ஊராட்சிமன்றக் கட்டிடமும், வீதியானது வலதுபுறமாகத் திரும்பிச் செல்லும் அந்த வளைவில், அரசு ஆரம்பப் பள்ளிக்கூடமும் இருந்தது. வளைவில் திரும்புகையில் வண்டியை நிறுத்தச்சொன்ன ரத்னவேல் பண்டாரம் இறங்கி பள்ளிக்கூடத்தின் வாயிற்கதவை நோக்கி நடக்கலானார். அந்த இடம் சிறு மைதானம் போலவும் அதன் வடக்கு மற்றும் கிழக்கு மூலைகளில் இரண்டு கோயில்களை உடையதாகவும் இருந்தது. கோயிலின் கோபுரக் கலசங்களையெல்லாம் தாண்டி மேலே உயரத்திற்கு வந்திருந்த சூரியனின் ஒளி மைதானமெங்கும் சலனமற்றதுவாய்த் தேங்கியிருந்தது. பள்ளியின் முன்புறச் சுற்றுச்சுவரையொட்டி வளர்ந்திருந்த வேப்பமரம் அதன் அளவுக்கு தரையிலும் காம்பவுண்டு சுவற்றின் மீதும் வடிவமற்றதொரு வடிவத்தில் தன் நிழலைப் படரவிட்டிருந்தது. ஒருவன் உட்கார்ந்துகொண்டிருந்தான். கறுப்பும் வெள்ளையுமான நிறத்தில் ஒரு நாய் படுத்துக் கிடந்தது.

சற்று நேரத்திற்கு முன்னர் வேப்பமர நிழல் படர்ந்திருக்கவேண்டும் என அனுமானிக்கக்கூடிய இடத்தில், பள்ளியின் வாயிற்கதவையொட்டி அதன் சுற்றுச் சுவரில் சாய்ந்தபடி அந்தப் பெண் அமர்ந்துகொண்டிருந்தாள். பாவாடையும் தாவணியும் அணிந்திருந்தாள். தாவணியின் மாராப்பு கயிறுபோல் சுருண்டு நெஞ்சுக்கூட்டின் மேலேறிச்சென்று இடது தோளின் மறுபுறம் கீழிறங்கியிருந்தது. ஜாக்கெட்டில் மார்பகங்களுக்கென்று வடிவமைக்கப் பட்டிருக்கும் அந்தப் பகுதி உப்பிப் பருத்திருபதற்குப் பதில் வற்றிப்போயிருந்த அவளின் நெஞ்சுக்கூட்டை வெறுமனே போர்த்தி, உள்ளீடற்றதுவாய் கசங்கியும் சுருங்கியுமிருந்தது. சூம்பிய கால்கள் பாவாடைக்குள் முடங்கிக்கிடக்க , அழுக்குமெண்ணெய்ப்பிசுக்குமேறிய பழைய தலையணையை சுவரொட்டி நிறுத்தி வைத்திருப்பதைப்போல அவளின் உருவம் இருந்தது. ரத்னவேல் பண்டாரத்தைக்கண்டதும் தரையில் ஊன்றப்பட்ட இரண்டு கைகளுக்கு நடுவே மடித்த நிலையிலிருக்கும் சூம்பிய கால்களையுடைய உடல் தரைபடாமல் ஊஞ்சலாட சற்றே முன்னகர்ந்து வந்தாள்.

“லட்சுமி ஏன் இங்கவந்து உட்கார்ந்துக்கிட்ட…?

புள்ளக்கி மதியச்சாப்பாடு கொண்டுட்டு வந்தேன்.தலை திருப்பி சுவரடியிலிருந்த ஒயர்க்கூடையைக் காட்டிய லட்சுமி “ அய்யன் எதுக்கு வந்திருக்குது ஏதாச்சும் சோலியா?என்றாள்.

“சோலிதான். பங்காரு வூட்லயா? பெரிய காரியம் ஒண்னு. கூட்டீட்டுப் போகலாம்னு வந்தேன்.

“வூட்லதான். காலைலகூட எஸ்வி புரத்தாளு வந்து கூப்புட்டான். நாந்தான் வேண்டாம்னு நிப்பாட்டிப்புட்டேன்.
ஏம்மா… பங்காரு உடம்புக்கு சுகமில்லையா..?
அதெல்லாம் ஒண்ணுமில்லை அய்யன் . போனவாரம் அந்தாளு கறிவிருந்து ஒண்ணுக்கு வேலைக்குக் கூட்டீட்டுப் போனான். குடிகாரக் கம்மனாட்டிக குடிச்சுப்போட்டு நாய் பீ திங்கறாப்ல தின்னுபோட்டு எச்செல எடுக்கிறவந்தானேனு இந்த மனுசன ரொம்ப கேவலமா நடத்தீருக்காங்க. ராத்திரிவந்து ஓன்னு அழுகை. சோறுங்கூட திங்காம சுருண்டு படுத்துக்குச்சு. அவனுக அப்படிப் பேசுனப்பவே அந்தாளு போயி தட்டிக் கேட்டுருக்கணுமா கூடாதா? அவந்தானே கூட்டீட்டுப் போனான். அவன நம்பித்தானே என் ஊட்டுக்காரன அனுப்பி வெச்சேன். எதுவுமே தெரியாதவம்மாதிரி கம்முனு இருந்துக்கிட்டானாம். எனக்கு மட்டும் கால் நல்லா இருந்திருந்தா அப்பவே கிளம்பிப்போயி எகத்தாளம் பேசுனவன் சங்கையெல்லாம் கடிச்சுத் துப்பீருப்பேன். நாந்தான் கால் இருந்தும் இல்லாத மொண்டியாப் போயிட்டனே.. மரியாதை குடுக்காதவன் எவன் வந்தாலும் அனுப்பறதில்லீனு காறித்துப்பீட்டன். அதான் இன்னிக்கு வந்து கூப்பிட்டப்ப வாரதுக்கில்லீனு முடிவாச் சொல்லிவிட்டேன்என்றாள்.

பங்காரு வீட்டிலிருக்கிறான் வேலைக்கு எங்கும் செல்லவில்லை என்பதே ரத்னவேல் பண்டாரத்திற்கு ஆசுவாசத்தையும் நிம்மதியையும் கொடுத்திருக்க வேண்டும். மிகவும் தன்மையான குரலில் லட்சுமியிடம் பேசினார். “இது பாரு லட்சுமி யாரோ எப்படியோ போகட்டும். இதுவரைக்கும் உன் ஊட்டுக்காரன நான் எத்தனை எடத்துக்கு வேலைக்கு கூட்டீட்டுப் போயிருக்கறேன்.? எங்கியுமே யாருமே ஒரு எடத்துல கூட மனசு நோகறமாதிரி பேசுனது கெடையாது. பேசறதுக்குத்தான் நான் உட்ருவனா என்ன? பங்காருவ மட்டுமல்ல. எங்கூட வேலைசெய்யிற எந்தத் தொழிலாளியையுமே , விஷேசத்து வூட்டுக்காரங்களோ காரியத்து வூட்டுக்காரங்களோ தப்பா பேசறதுக்கு நான் அனுமதிச்சது கெடையாது. அப்படி யேதாச்சும் நடந்துச்சுனா பாதியிலேயே அடுப்ப அணச்சுப்போட்டு வெளியே வந்துருவேனேயொழிய அவனுக மாதிரிய்ந்ல்லாம் கண்டுக்காம இருக்க மாட்டேன்.என்னப்பத்தி உனக்குத் தெரியும்தானே?

உங்களப்பத்தித் தெரியாதா அய்யன்?இதுவரைக்கும் உங்ககூட அனுப்பினதுல எந்தச் சங்கடமும் உண்டானதில்ல. இனிமேலும் சங்கடம் வந்திரக்கூடாதுனுதான் முன்னெச்சிரிக்கையாச் சொல்லிவெச்சேன். நீங்க தாராளமாக் கூட்டீட்டுப் போங்க , இருங்க உடனே வரச்சொல்றேன்.”  என்றவள் வேப்பமரத்து நிழலில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்து “ யேய்… அது வூட்ல இருக்கும், நாஞ்சொன்னேன்னு வரச்சொல்லு…  கிராக்கி வந்திருக்குது போகணும்னு உடனே வரச்சொல்லு.. ம் சீக்கிரம் போ.என்று ஏவினாள்.

மேற்படியான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் நான் எதுவும் பேசாதவனாய் அந்தப் பெண்ணையே கவனித்துக் கொண்டிருந்தேன்.  எதிரே இருப்பவர்கள் ஆண்கள் என்றும், அவர்கள் முன் இருக்கும் தான் ஒரு பெண் என்றும் ,  தன் மாராப்பு விலகியுள்ளது என்பது பற்றிய பிரக்ஞையும் அவள் இல்லாதவளாய் இருப்பது ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. பொருட்படுத்தப்படாமையும் புறக்கணிப்பும் வசீகரிக்கும் வனப்புகளேதுமற்ற அந்த உடலின் மேல் புழுதிபோல் படிந்து அவளின் உணர்வுகளை மரத்துப்போகச் செய்துவிட்டதோ எனத் தோன்றியது. யாரையும் கவர்ந்துவிடக்கூடிய அழகோ  வசீகரித்துவிடக்கூடிய வனப்போ அற்றதுவாய் அந்த உடல் இருக்கும் அதே வேளையில் , யாராலும் கவர்ந்துவிட முடியாததாய் எந்த அழகினாலும் வசியம் செய்துவிட முடியாததாய் அவளிடம் ஒரு தன்மை இருக்கிறது எனவும் தோன்றிற்று.

நிழலில் உட்கார்ந்திருந்தவன் எழுந்து வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு நடக்கத்துவங்கினான். கொஞ்ச தூரம் வடக்கே நட்ந்து கோயிலையொட்டிய திருப்பத்தில் திரும்ப அவனின் உருவம் பார்வையிலிருந்து மறைந்தது. வெயிலின் ஒளி திரையென விரிந்து கிடக்கும் அப்பாதையின் திருப்பத்தில் , இன்னும் சற்று நேரத்தில் தோன்றப்போகும் பங்காருவைக் காணும் ஆவல் கூடிக்கொண்டேயிருந்தது.